வன்னியில் பொதுமக்களின் வளர்ப்புக் கோழிகள் பல கடந்த சில நாட்களாக திடீரென இறந்துள்ளன. மீள்குடியேற்றபட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழிலாக கோழி வளர்ப்பினையும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் கோழிகள் வன்னிப் பகுதிகளில் முற்றாக அழிந்து போயின. இதனால் வேறு பிரதேசங்களிலிருந்து கோழிகளை வாங்கி மீளக்குடியமர்ந்த மக்கள் வளத்து வருகின்றனர்.
வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலிருந்து வியாபாரிகள் கோழிகளை வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கொண்டு வரப்பட்ட நோயுற்ற கோழிகளால் நோய் பரவி ஏனைய கோழிகளும் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. கோழியின் விலை தற்போது அதிகரித்துள்ளதால் இவ்வாறு இறந்த கோழிகளால் மீள்குடியமர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக நட்டமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.