செய்திகள்

செய்திகள்

செய்திகள்

13ஆவதி திருத்தத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை – இந்தியா உறுதி

இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே கொண்டிருந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (21.08) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது தமிழ்மக்களின் கரிசனைகள், குறிப்பாக நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பின்னரான தமிழ்மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது. கூட்டமைப்புடனான சந்திப்புக் குறித்து இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் கூறியிருப்பதாவது:

இந்திய உயர்ஸ்தானிகரைக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்திருந்ததுடன், இதன்போது அண்மையில்  நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வெற்றிக்கு உயர்ஸ்தானிகர் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டல் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில்ஸ இந்தியாவின் நிலைப்பாட்டை இதன்போது உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ரணிலை நாடாளுமன்றம் அனுப்ப முயற்சி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலர், ரணில் விக்கிரமசிங்கவிடம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்தது. ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றவில்லை. எனினும் தேசிய பட்டியல் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. அதற்கான நபரை பெயரிடுவதில் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. புதிய பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரின் பெயர், இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தேசிய பட்டியல் உறுப்பினரை அறிவிக்க, ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் 7 நாள் அவகாசம் கோரியுள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப செயற்குழு உறுப்பினர்கள் சிலர் ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவன் கைது! மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மனைவி புகார்

பொய்யான குற்றச்சாட்டில் எனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குழுவில் நேற்று முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் நகரப் பகுதியில் நேற்று காலை  முச்சக்கர வண்டியில் பயணித்த சிவில் உடையில் இருந்த பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதி தன்னை தாக்கியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவன் பொலிசாரால் திட்டமிட்டு பழிவாங்கும் பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார்.முச்சக்கர வண்டியில் பயணித்தமைக்கான பணத்தினைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு தன்னை தாக்கியதாக பொய்யான முறைப்பாட்டை பதிவு செய்து தனது கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக் கொறடாக்களாக ஐவர்

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதி மற்றும் உதவி கொறடாக்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதி கொறடாகவாக பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆளும் கட்சியின் உதவி கொறடாக்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்மகுமார, மொஹமட் முஸ்ஸமில் மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த பதவிகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் ஜயந்த கெடகொட ஆகியோர் ஆளும் கட்சியின் பிரதம கொறாடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பிரித்தானியாவில் ஒரு வேலைக்கு 1000 பேர் விண்ணப்பம்! அரசியல், பொருளாதார, கல்விக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்!!!

பிரித்தானியாவின் ஒரு பகுதியில் ஒரு வெற்றிடத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மார்ச் 2020இல் கொரோனா பன்டமிக் ஆரம்பித்த வேளையில் பிரித்தானியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வேலையற்றவர்களின் எண்ணிக்கை 1.35 மில்லியன்களாக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதகாலத்தில் யூனில் வேலையில்லாமல் அரசு உதவிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 2.7 மில்லியன் பேர் வேலை இழந்தவர்களுக்கான அல்லது வருமான போதாமைக்கான உதவிகளைப் பெற்று வந்தனர். மார்ச் முதல் யூலை வரையான காலத்தில் மட்டும் 730000 பேர் சம்பளம் வழங்கப்படுவதில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்து இருந்தது.

கிழக்கு லண்டனில் உள்ள எனது நண்பரின் முடிதிருத்தும் நிலையத்துக்கு எப்போது சென்றாலும் காத்திருந்து முடிதிருத்த வேண்டும். அல்லது முன்னரே அவரிடம் நேரத்தை பதிவு செய்து செல்வது வழமை. மூன்று பணியாளர்கள் இருந்தாலும் 2 தொடக்கம் 5 பேர்வரை காத்திருப்பார்கள். சில தினங்களுக்கு முன் கார் MOT எடுக்கச் சென்றபோது சலூனில் மூன்று பணியாளர்கள் இருப்பதைப் பார்த்தேன். MOT எடுத்துவிட்டு அண்ணளவாக ஒரு மணிநேரத்திற்குப் பின் மீண்டும் முடி திருத்தச் சென்றேன். பணியாளர்களைத் தவிர யாரும் இல்லை. மார்ச் மாதமளவில் பொறுப்பாய் இருந்த நண்பரோடு உரையாடிய போது தானும் ஒரு சலூன் திறக்கப்போவதாகச் சொல்லி இருந்தார். புதிய சலூன் திறப்பது பற்றிக் கேட்டேன். ‘பயமாக இருக்குது அண்ணா’ ஆட்கள் வரவே பயப்படுகிறார்கள். எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது என்று சலிப்போடு கூறினார்.

அத்தியவசிய தேவைகளில் ஒன்றான முடிதிருத்தும் நிலையத்தின் நிலையே இப்படி என்றால் மற்றைய வேலைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிரித்தானியாவில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்கள் எத்தினை பேரை வேலையால் நிறுத்துகின்றனர் என்ற விபரம் வெளிவந்த வண்ணமே உள்ளது. வீடுகளில் மிக அறியப்பட்ட நிறுவனங்களான பிபி – BP, பிரிடிஸ் ஏயர்வெய்ஸ், M&S – எம் அன் எஸ், ஜோன் லூயிஸ், பிஸா கட், தி கார்டியன், ஈவினிங் ஸ்ராண்டட் பத்திரிகைகள் என்று இந்தப் பட்டியல் மிகநீளமானது. ‘வைட் கொலர் ஜொப்’ என்று பிரித்தானியர்கள் பெருமைப்படுகின்ற பல தொழில்கள் தற்போது ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறுவனங்கள் தொடர்ந்தும் வேலையில் பணியாளர்களை வைத்திருப்பதற்காக வழங்கும் பேர்லோ திட்டம் ஒக்ரோபரில் முடிவுக்கு வரும் போது, வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலை நீக்கம் என்பது வெறுமனே கொரோனாவினால் ஏற்பட்டது மட்டுமல்ல. கொரோனாவிற்கு முன்னரேயே பிரித்தானிய வேலைமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்பதை நிறுவனங்கள் மிகத் திட்டமிட்டு தகுந்த நேரத்திற்காக காத்திருந்தன. கொரோனா வின் தாக்கம் இந்த மாற்றத்தை சடுதியாக துரிதப்படுத்தி உள்ளது.

பிரித்தானிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்துவருவதால் கூடுதல் லாபத்தை காண முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்படத் தொடங்கிவிட்டன. மனித வலுவுக்காக ரொபேட்களை கணணிகளைப் பயன்படுத்தும் முறை தற்போது தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மனிதர்கள் செய்யும் பணிகளை கணணிகளும் ரோபேட்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ரீற்றெயில் செக்ரரை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வருமானம் அதிகரித்தே உள்ளது. ஆனால் அவர்கள் ஒன்லைன் மூலமாக வருமானமீட்டுவது மிகையாக அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் தங்களுடைய கல்லும் சீமேந்தும் கொண்டு கட்டப்படும் வியாபார நிலையங்களின் எண்ணிக்கையை மிக விரைவில் குறைத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் வங்கிகள் எமது ஹைஸரீற்றில் இருந்து காணாமல் போய்விடும். அடுத்த ஆண்டு முதல் பிரித்தானியா ஓட்டிகள் இல்லாத வாகனங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு அனுமதிக்க உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரக்ஸிகளும் ஊபர் ட்ரைவர்களும் வேலை இழக்க வேண்டி ஏற்படலாம். தற்போது நாங்கள் செய்கின்ற பல நடைமுறை வேலைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரலாறு ஆகிவிடும்.

தற்போதைய பொருளாதாரமானது மிக வேகமாக அறிவியல் பொருளாதாரமாக மாறி வருகின்றமையால் வேலைவாய்ப்பிற்கான சந்தையில் தங்களை விற்க விரும்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் கூட வெறும் சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு வேலைழயப் பெற்றுவிட முடியாது. அவர்கள் கடுமையான போட்டியயை சந்திக்க வேண்டி நேரிடும். சான்றிதள்கள் மட்டுமே அறிவாகி விடாது. ஏனைய திறன்களும் பரீட்சிக்கப்படும்.

பழையன கழிவதும் புதியன புகுவதும் இயல்பானாலும், இழக்கப்படும் வேலைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பம் புதிய வேலைகளை உருவாக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே மனித வலுவைக் குறைத்து அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தைக் குறைத்து அதீத லாபம் மீட்டுவது மட்டுமே.

அதனால் அரசு புதிய தொழில்சார் சட்டங்களை இயற்றி வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தை உயர்த்தி, அரச உதவித் திட்டங்களை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வாரத்திற்கு 40 மணிநேர வேலைக் கணக்கு தற்போது தொழில்நுட்பம் அதன் உச்சத்தை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானது. அதன் பலனை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

மக்கள் தனிமனிதர்களாக மட்டும் சிந்திக்காமல் சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய அரசியல் சூழலில் நாம் வாழ்கின்றோம். மக்கள் கூட்டத்தை தனிமனிதர்களாக்கி தனிமனிதர்களிடையே போட்டியயை உருவாக்கி சமூக அக்கறையை இல்லாமல் செய்து வெறும் போட்டியயையும் பொறாமையயையும் உருவாக்கும் தற்போதைய அரசியல் பொருளாதார கல்விக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தங்களுடைய பட்டப் படிப்பிற்காக £50000 வரையான கடன் சுமையைப் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களதும் யுவதிகளதும் எதிர்காலம் அரசின் கொள்கைவகுப்பிலேயே தங்கியுள்ளது. பெருநிறுவனங்கள் லாபமீட்டுவதற்காக தங்களைத் தயார்படுத்தும் இந்த இளைஞர் யுவதிகளின் கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும்.

‘தகுதியானவர்களைத் விரட்டி அடியுங்கள்!’ – தமிழ்ச் சூழல்; ‘தகுதியானவர்களை துரத்திப் பிடியுங்கள்!’ – சர்வதேசச் சூழல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களில் ஓப்பீட்டளவில் தகுதியான பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரட்டியடிக்க அக்கட்சிக்குள் பல்வேறு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் ஊடகங்களும் புலம்பெயர் தமிழ் சமூகவலைத்தள கனவான்களும் படாத பாடுபட்டனர். அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தவர் மணிவண்ணன். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவரை ஓரம்கட்டுவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காய்நகர்த்தி வருகின்றார். எங்கே மணிவண்ணன் தனக்கு போட்டியாகி விடுவாரோ என்பதற்காக தனக்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போடக் கூடிய ‘குதிரை’ கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுகிறது.

அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு வெளியேயும் குறிப்பாக அதிகாரத்தில் உள்ள அல்லது அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் யாழ்ப்பாணத் தமிழன் இவ்வாறுதான் சிந்திக்கின்றான். போராட்டகாலங்களில் கூட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்கள்: வே பிரபாகரன், உமா மகேஸ்வரன் போன்றவர்கள் கூட எங்கே தங்களிலும் பார்க்க திறமையானவர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தனர். இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கூட ஒரு நேர்மையான, ஆளுமைமிக்க ஒருவர் துணைவேந்தராக வரக்கூடாது என்பதில் யாழ் பல்கலைக்கழக சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அதனால் தான் அவர்கள் பாலியல் வல்லுறவு புரிந்தவர்களைக் கூட இன்றும் பேராசிரியர்களாக வைத்துள்ளனர். துணைவேந்தர்களாக வருவதற்கு சிபாரிசு செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் முற்றிலும் மாறாக சர்வதேசம் இயங்குகின்றது. அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பின்புலம் கொண்ட ஒருவர் போட்டியிடுவதாக கொண்டாடும் நாம் அதன் பின்னணியைச் சற்று நோக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியில் துணைவேட்பாளராகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவர். இவர் ஜோ பைடனுக்கு எதிராக பலத்த சவாலை விடுத்ததுடன் ஒரு விவாதத்தின் போது ஜோ பைடனை நிலைகுலைய வைத்தார். ஜோ பைடனுக்கு அந்நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அவரது ஆதரவை சற்று தடுமாற வைத்தவர்.

இருந்தாலும் ஜோ பைடனின் மகன் உப ஜனாதிபதித் தெரிவில் கமலா ஹாரிஸை தெரிவு செய்தார். அவருடைய திறமைக்காகவும் அவருடைய அரசியல் கொள்கைகள் தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு சமாந்தரமாக இருப்பதாலும் ஜோ பைடன் கமலா ஹாரிஸை தனது உபஅதிபராகத் தேர்வு செய்துகொண்டார். ஜோ பைடன் (77 வயது) யைக் காட்டிலும் மிக இளமையான கமலா ஹாரிஸ் (வயது 55) தனக்குப் பின் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு ஏற்ற வகையிலேயே இத்தேர்வு இடம்பெற்றுள்ளது. மேலும் ஜோபைடன் ஜனாதிபதி ஆனாலும் கமலா ஹாரிஸே கூடுதல் ஆதிக்கம் செலுத்தவார் என்றும் நம்பப்படுகின்றது. 2024இல் தவறினால் 2028இல் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடலாம் என்று நியுயோர் ரைம்ஸ் எதிர்வு கூறியுள்ளது.

தற்போதைய அதிபர் டொனால் ட்ரம்மின் முதலாவது எதிரியாக கமலா ஹாரிஸே இருக்கப் போகின்றார். அவர் ஒரு குடிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் பொது மருத்துவச் சேவைக்கு ஆதரவானவராகவும் இருப்பதால் டொனால் ட்ரம்மின் முதல் தாக்குதல் இலக்கு கமலா ஹாரிஸாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

தமிழ் சமூகம் இந்த சர்வதேச அரசியலில் இருந்து ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது.

பிரித்தானியா: ஜசிஎஸ்சிஈ மற்றும் ஏலெவெல் பெறுபேறுகளும் அரசின் குளறுபடிகளும்!! மருத்துவக் கற்கை நெறியில் அதன் பிரதிபலிப்புகளும்!!!

இன்று (Aug 20, 2020) வெளியான 16 வயது மாணவர்களின் தரம் 11ற்கான ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகள் இன்று வெளியாகியது. இந்த ஜிசிஎஸ்ஈ முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் நல்ல பெறுபேறுகளுடன் வந்திருப்பதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேறுகள் 10 வீதத்தால் அதிகரித்து உள்ளது. மேலும் உயர்சித்தி பெற்றவர்களின் வீதம் 25 சத விதத்தால் அதிகரித்து உள்ளது. ஆனால் ஜிசிஎஸ்ஈ பெறுபேறுகளுக்கு சமனான பிரெக் தொழிற்பயிற்சி பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதை நேற்று (ஓகஸ்ட் 19, 2020) பெறுபேறுகளுக்கு பொறுப்பான அலுவலகம் ஓப்குவால் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பிரெக் பாடங்களை எடுத்த மாணவர்கள் குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

இப்பெறுபேறுகள் பற்றிய குழறுபடிகள் கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட போதும் கல்வி அமைச்சு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனக் குற்றமசாட்டப்படுகிறது. இவ்வளவு குழறுபடிகளுக்கும் யார் காரணம் என்பதற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கல்வி அமைச்சுச் செயலாளர் கவின் வில்லியம்சன் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியதாகவும் அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் அரச விதிமுறைகளை மீறிய டொமினிக் கம்மிங்கை பதவி விலக்கக் கோரிய போதும் பொறிஸ் ஜோன்சன் அதனை ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பொறிஸ் ஜோன்சன் செயற்திறனற்ற பிரதமராக இருப்பது மட்டுமல்லாமல் வெறும் விசுவாசிகளை வைத்து நாட்டை நிர்வகிக்க முறல்கின்றார் என்ற குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய தலைவர் கியர்ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி இன்னமும் ஸ்தீரனமான நிலையில் ஆளும்கட்சிக்கு சவால் விடாமல் உள்ளது.

கடந்த வாரம் வெளியான ஏலெவெல் பரீட்சைப் பெறுபேறுகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டது. ஆசிரியர்கள் எதிர்வுகூறிய பெறுபேறுகளை மாற்றி அல்கோரிதம் ஒன்றைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேறுகள் குறைக்கப்பட்டது. அதனால் சமூகமட்டத்தில் கீழ்நிலையில் இருந்த மாணவர்களின் பெறுபேறுகளே மேலும் கீழிறக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஆனாலும் பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் பல மாணவர்கள் தங்களுடைய முதல் தெரிவான கற்கைக்கோ முதல் தெரிவான பல்கலைக்கழகத்திற்கோ செல்வதற்கான வாய்ப்பு இந்தக் குழறுபடிகளால் பறிபோயுள்ளது. பல ஆண்டுகள் மாணவர்கள் செய்த உழைப்பை அரசு தனது செயற்திறன் இன்மையால் உதாசீனம் செய்துள்ளது.

பிரித்தானிய கொன்சவேடிவ் அரசு மீண்டும் மீண்டும் தன் இயலாமையை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தி விருகின்றது. கொரோனா ஒரு பெரும் உயிர்க்கொல்லி நோய்க்கிருமி என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தும் பொறிஸ் ஜோன்சனின் அரசு எவ்வித முன்நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது எழுபதினாயிரத்திற்கு அதிகமானோர் பிரித்தானியாவில் கொல்லப்பட்டனர். அதற்கு எவ்வித பொறுப்பையும் அரசு ஏற்கவில்லை. ஐரோப்பாவில் கொரோனாவில் கொல்லப்பட்டோர் அதிகமான நாடாக பிரித்தானியா உள்ளது. இந்த கொரோனா பேரழிவின் பின் என்எச்எஸ் இற்கு வாரா வாரம் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக மாயாஜாலம் போட்ட அரசு, பல்கலைக்கழகங்களில் மருத்துவதுறைக்கு விதிக்கப்பட்டு இருக்கும் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை தளர்த்த மறுத்துவருகின்றது. ஏனெனில் ஒவ்வொரு புதிய மருத்துவரை உருவாக்கவும் அரசு அம்மருத்துவர்களை உருவாக்க அரசு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அதனைச் செய்யத் தயாரில்லாததால் மருத்துவ படிப்பை மேற்கொள்வதில் எண்ணிக்கைக் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

இது இம்முறை தகுதிபெற்ற பல மாணவர்களையும் தங்களது கனவுத் தொழலாக உள்ள மருத்துவத்துறைக்குள் நுழைவதற்கு தடையாக உள்ளது. அல்கோரிதம் காரணமாக சமூகத்தின் பிற்பட்ட தளத்தில் இருந்து மருத்துவத்துறைக்கு சென்ற மாணவர்களின் கனவுகளில் அரசு மண்ணைவாரி விசியது. அதனால் ஆசிரியர்களின் எதிர்வு கூறலின் அடிப்படையில் மருத்துவத்துறைக்கு தெரிவானவர்கள், அரசின் அல்கோரிதத்தினூடாக அவர்களின் பெறுபேறுகள் கீழிறக்கப்பட்டு மருத்துவத்துறையில் கற்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை இழந்தனர். தற்போது அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போதும், பல்கலைக்கழகங்கள் மருத்துவத்துறைக்கான இடங்களை ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டதாலும், கல்வியில் சமூகஇடைவெளி பேணப்பட வேண்டி இருப்பதாலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பிய மருத்துவத்துறையில் கற்றுகும் வாய்ப்பை இழக்கின்றனர். அரசு கூடுதல் நிதியயை முதலிட்டு மருத்துவக் கல்விக்கான எண்ணிக்கையைத் தளர்த்தினால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.

பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு முக்கியமான காரணம் போதிய மருத்துவர்களும் மருத்துவ தாதிகளும் இல்லாமையே. இன்றும் பிரித்தானிய சுகாதார சேவைகளில் பல்லாயிரக்கணக்காண வெற்றிடங்கள் உள்ளது. கொரோனா போன்ற உயிர்க்கொல்லிகள் தாக்கினால் அதனைக் கையாள்வதற்கு வேண்டிய மருத்துவ மனிதவலு பிரித்தானியாவில் இல்லை. அதனால் மருத்துவத்துறைக் கல்விக்கான எண்ணிக்கையை தளர்த்துவது அவசியம். வெறும் கைதட்டி ஆதரவு தெரிவிப்பதாக பொறிஸ் ஜோன்சன் அரசு நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் காத்திரமான உதவிகளை செய்யத் தயாராகவில்லை. மாறாக இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் உருவாக்குகின்ற மருத்துவர்களையும் மருத்துவத்துறை சார்ந்தவர்களையும் கவர்ந்து இழுத்து தங்களது சுகாதார சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகின்றனர். இதன் மூலம் வளர்ந்துவரும் நாடுகளில் சுகாதார சேவைகள் பாதிப்படைகின்றது. இந்நாடுகள் உருவாக்கும் மருத்துவர்களால் பிரித்தானியா நன்மையயைப் பெற முயற்சிக்கின்றது.

விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்பட சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்படுமாறு விளையாட்டுதுறை  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் விளையாட்டுத்துறையை சிறந்த முறையில் செயற்படுத்துவது தொடர்பாக, விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக  குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்  இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர், 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் விளையாட்டுகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சங்கக்கார மற்றும் ஜெயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக  பங்காற்றிவரும் தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸை அடுத்து தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் !

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19.08.2020) அதிகாலை 03.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக கரையோர பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிலிப்பைன்சிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

டோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் !

கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, டோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று டோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே தலைவர், கேப்டன் கூல் , ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தாக விளங்கியவர் என்ற பெருமைக்குரியவர் தோனி. கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, அவரின் தனிப்பட்ட செயல்பாடுகளிலும் சரி டோனி தேர்ந்தெடுக்கும் வழி, முடிவுகள் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அதுதான் அவருக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய டோனி, கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் தனது ரன் அவுட்டில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பின் தோனியால் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய மனது வரவில்லை. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமல் இருந்த தோனியின் நிலை குறித்து பல்வேறு கேள்விகள், ஓய்வு குறித்த ஊகங்கள் எழுந்தன.

ஆனால், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி நேற்று மிகவும் எளிமையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

நீல நிற ஜெர்ஸியில் மீண்டும் வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு தோனியின் அறிவிப்பு பேரிடியாக இருந்தது. தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் உணர்வுப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்(ட்விட்டர்)

“இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் பங்களிப்பு அளப்பரியது தோனி. 2011 உலகக்கோப்பையை ஒன்றாகச் சேர்ந்து வென்ற தருணம் வாழ்வில் மறக்கமுடியாதது. 2-வது இன்னிங்ஸ் உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்”

சர்வதேச கிரிக்கெட்டில் சாம்பியனாக விளங்கும் விராட் கோலியை அரவணைத்து வளர்த்துவிட்டது தோனி என்றால் மறுக்கலாகாது. தோனியிடமிருந்து பலவிஷங்களை கோலி கற்றுக்கொண்டார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து “ ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பயணத்துக்கும் ஒருநாள்முடிவு உண்டு. ஆனால், நீங்கள் அறிந்த ஒருவர் மிகவும் நெருக்கமாக அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகமான உணர்ச்சிகளை உணர்வீர்கள்.

நீங்கள் இந்த தேசத்துக்கு செய்தவை எப்போதும் ரசிகர்களின் இயத்தில் நீங்காமல் இருக்கும். ஆனால், உங்களிடம் இருந்து நான் பெற்ற மரியாதையும், அன்பும் எப்போதும் என மனதில் நிற்கும். உங்களின் சாதனைகளை உலகம் பார்த்துள்ளது, நான் தள்ளிநின்று பார்த்துள்ளேன். அனைத்தையும் விட்டுச் செல்வதற்கு நன்றி, என் தொப்பியை எடுத்து நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி (ட்விட்டர்)

“ கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. நாட்டுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் கிடைத்த என்ன மாதிரியான அற்புதமான வீரர் தோனி. அவரின் தலைமைப்பண்புகள் வேறுவிதமானவே. அதை எதோடும் ஒப்பிடுவது கடினமான ஒன்று.

அவரின் இளமைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் திறமை உலகத்தை உற்றுப்பார்க்க வைத்தது, அவரின் திறமை, புத்திசாலித்தனத்தை கவனிக்க வைத்தது. ஒவ்வொரு நல்ல விஷயங்களும் ஒருநேரம் முடிவுக்கு வரும், அதுபோலத்தான் தோனியின் ஓய்வும். களத்தில் எந்தவிதமான வருத்தமில்லாமல் தோனி சகாப்தம் முடிந்துள்ளது”

இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி(ட்விட்டர்)

தோனியின் கிரிக்கெட் திறமை என்றென்றும் பேசப்படும். அவரின் மிகப்பெரிய இடத்தை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டதில் பெருமையையும், சிறப்பையும் பெருகிறேன். உங்களின் சிறந்த தொழில்முறை கிரிக்கெட்டைக் கண்டுவியந்திருக்கிறேன். சிறந்த கிரிக்கெட் வீரருக்கு எனது சல்யூட். வாழ்க்கையை அனுபவியுங்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்”

வீரேந்திர சேவாக்(ட்விட்டர்)

“ மகி போல ஒருவீரர் இருக்கவே வாய்ப்பில்லை. வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால், இவரைப் போல் அமைதியாக இருக்கமாட்டார்கள். பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதோடும், குடும்பத்தோடும் இணைந்திருந்து ஓர் உறுப்பினராகவே இருந்தார்.

இர்பான் பதான் (ட்விட்டர்)

ஒவ்வொரு லெஜென்டும் ஒருநாள் ஓய்வு பெறுவார்கள். இன்று மகியின் நாள். மகியுடன் இணைந்து விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன், நண்பராக எனக்கு பல்வேறு வழிகாட்டல்களை களத்தில் கூறியுள்ளார். கிரிக்கெட் வாழ்வை மிகச்சிறப்பாக தோனி முடித்துள்ளார்.

வி.வி.எஸ். லட்சுமண்(ட்விட்டர்)

சிறிய நகரிலிருந்து வந்து, மேட்ச் வின்னராக உயர்ந்தார் தோனி. உலகக் கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கத்தக்க வீரராக, மறக்கமுடியாத வீரராக தோனி இருக்கிறார். சிறந்த நினைவுகளை அளித்தமைக்கு தோனிக்கு நன்றி. உங்களுடன் விளையாடியதை பெருமையாகக் கொள்கிறேன் மகி, உங்களுடன் விளையாடியதையும், நாம் பகிர்ந்து கொண்ட விஷயங்களும் எப்போதும் பசுமையாக இருக்கும்

மைக்கேல் வான்(ட்விட்டர்)

2011 உலகக்கோப்பை சச்சினுக்கு பிரியாவிடையாக இருந்தது, ஆனால், தோனிக்கு மாஸ்டர்பீஸ். என்ன ஒரு அற்புதமான சர்வதேச கிரிக்கெட் வீரர் வாழ்க்கை. ஒருநாள், டி20 போட்டியில் மிகச்சிறந்த கேப்டன்,பினிஷர் தோனி என்று எப்போதும் கூறலாம்.

பாக். முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா(ட்விட்டர்)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு. சிறந்த தலைவர், மிகப்பெரிய சாதனைகள், அனைவரையும் மகிழ்விக்கும் ஒப்பற்ற வீரர், டிஆர்எஸை கணிக்கும் உலகில் சிறந்த கேப்டன், ஆனால், இவை அனைத்தும் தோனி குறித்தும், இந்திய கிரிக்கெட் குறித்தும் மறக்கமுடியாத நினைவுகள்

பாக். முன்னாள்வீரர் ஷோயப் அக்தர்(ட்விட்டர்)

தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது

ரவிச்சந்திர அஸ்வின்(ட்விட்டர்)

லெஜென்ட் எப்போதும் தங்களுக்கே உரிய வழியில் ஓய்வு பெறுகிறார்கள். தோனி நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். சேம்பியன்ஸ் கோப்பை, 2011 உலகக்கோப்பை, சிஎஸ்கேவுக்காக ஐபிஎல் கோப்பை என அனைத்தும் என் நினைவில் நிற்கும். உங்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்(ட்விட்டர்)

கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன்களில் தோனி ஒருவர். உங்களுடன் நான் சிறப்பான தருணங்களை செலவழித்துள்ளேன். உங்களின் அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்