செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“எந்த ஓர் கிராமத்தில்  மாணவர்கள் படிக்கிறார்கள் இல்லையோ – கல்வியில் பின்தங்கியுள்ளார்களோ அந்த பாடசாலையையே சேவைக்காக நான் தெரிவு செய்வேன்.” – சிவஜோதி ஞபாகார்த்த விருது விழாவில் திருமதி ஜெயா மாணிக்கவாசகன் !

அமரர் வ.சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் “யார் எவர் –  கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும்.

No description available.

லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி இடம்பெறும் வருடாந்த சிவஜோதி விருது வழங்கும் நிகழ்வும்  கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் –  கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும் இன்றைய தினம் (18.11.2023) லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய வளாகத்தின் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்ற பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகள் பலர் சங்கமமாகி இருந்த இன்றைய நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான சி.கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
No description available.
அமரர் சிவஜோதி அவர்களின் தந்தை சி. வயித்தீஸ்வரன் அவர்கள் நினைவுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் ஆரம்பத்தில் வண பிதா சி.யோசுவா, முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா ஆகியோரால் ஆசியுரை வழங்கப்பட்டது.
No description available.
ஆசியுரையை வழங்கிய வண பிதா சி.யோசுவா அவர்கள் கருத்து தெரிவித்த போது “ஜோதி நான் பழகிய மனிதர்களுள் அற்புதமான மனிதர். இந்த யார் எவர் என்ற ஆளுமைகளை வெளிக்கொண்டு வர ஜோதி எனும் சோதி தேவைப்பட்டிருக்கிறார். ஒரே ஒரு துக்கம் என் மனதில் இன்று வரை உள்ளது. சோதி உயிரோடு இருந்த போது நாம் யாரும் அவரை கொண்டாடத்தயாராக இருக்கவில்லை. இன்று நாம் கொண்டாடும் போது ஜோதி எம்முடன் இல்லை. இருந்தாலும் இன்று இந்த நிலை மாறியிருக்கிறது. கிளிநொச்சி இன்று அனைவரையும் உயிரோடு இருக்கும் போதே கொண்டாடும் ஓர் ஆரோக்கியமான நிலை உருவாகியிருக்கிறது. எத்தனை இடி இடித்தாலும், மழை அடித்தாலும் ஜோதி எனும் சோதி அணைந்து விடாது எம்முடன் கூடவே பயணிக்கும் ஒளியாகும்.“ என தெரிவித்திருத்தார்.
No description available.
ஆசியுரையை வழங்கிய முத்துக்குமார குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரநாத சர்மா அவர்கள் பேசpய போது “ஜோதி அவர்களுடன் பழக எனக்கும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் பக்தியான நபரும் கூட. ஆன்மீகம் சார்ந்த விடயங்களை தெளிவாக பேசுபவர். சமூக சார்ந்து ஆழ்ந்து சிந்திக்கும் ஓர் மனிதர் இன்று எம்முடன் இல்லை. ஆனாலும் கடவுள் ஒருவரை படைக்கும் போது அவருடைய கடமைகளையும் பிரித்தளித்து விடுகின்றார். கடமைகள் முடியும் போது அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இந்த நாளை காணும் போது ஜோதி தன்னடைய கடமைகளை செவ்வனே முடித்துவிட்டார் என்பதை அறிய முடிகின்றது.“ என தனது ஆசியுரையை அவர் வழங்கியிருந்தார்.
No description available.
தொடர்ந்து சி.கருணாகரன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது. தலைமையுரையில் பேசிய கருணாகரன் அவர்கள், “ சிவஜோதி நினைவுகூறும் வகையில் அவருடன் தொடர்புபட்ட எல்லோரும் இங்கு ஒன்று கூடியிருக்கின்றோம். சிவஜோதியின் பணிகளை முன்னெடுத்து செல்லவேண்டியது நம் அனைவரது பொறுப்புமாகும். ஜோதி வாழும் காலத்திலே நாம் அவரை புரிந்து கொள்ள தவறிவிட்டோம். அவரை போல வேறு எந்த ஆளுமைகளும் இறக்கும் வரை நாம் காத்திருக்காது ஆளுமைகளை வாழுங்காலத்திலேயே நாம் கொண்டாட வேண்டும். இந்த கருத்தையே சோதி என்ற ஒளி எம்மிடம் விட்டு சென்றுள்ளார் என்பதன் தொடர்ச்சியே இன்று வெளியிடப்படும் யார் எவர் என்ற நூலாகும். சிவஜோதியின் ஆளுமை பண்பு நன்கு விஸ்தீரனமானது. நமது சூழலில் உள்ள ஆளுமைகள் அனைவரையும் இனங்கண்டு அவர்களுடன் சமூக மாற்றத்துக்காக இணைந்து செயற்பட்டவர். அவர் எம்மிடையே விட்டுச்சென்ற பணிகளை நாம் முன்னோக்கி நகர்த்த வேண்டும். இளையதலைமுறையை உருவாக்குவதற்காகவும் – ஆற்றுப்படுத்தவும் செயற்பட்ட சிவஜோதியை நாம் நினைவுநாளில் மட்டுமே கொண்டாடாது எப்போதும் அவர் விட்டுச்சென்ற பணிகளை சிரத்தையுடன் செயற்படுத்த வேண்டும். இவ்வாறாக நாம் ஆழ்ந்து யோசிக்கும் ஓர் சமூகமாக உருவாதலும் அதற்காக செயற்படுதலுமே இந்த நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கும்.“ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
No description available.
தலைமையுரையை தொடர்ந்து சிவஜோதி எனும் ஆளுமை தொடர்பான நினைவுப்பேருரை கலாநிதி ந.இரவீந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது. நினைவுப்பேருரையில் பேசிய கலாநிதி ந.இரவீந்திரன் அவர்கள் “சமூக செயற்பாட்டாளருக்கான வகிபாகத்துடன் இயங்கும் ஊடகத்துறை ஆளுமை என்ற தலைப்பில் பேச நான் தீர்மானித்துள்ளேன். ஏனெனில் சிவஜோதி ஓர் சமூக ஆளுமை மட்டுமல்ல. ஓர் ஊடகவியலாளரும் கூட என்ற அடிப்படையில் இந்த தலைப்பு பொருத்தமானதாயிருக்கும் என எண்ணுகிறேன். சிவஜோதி எம்மை விட்டு நீங்கவில்லை எம்முள் இன்னுமொரு பிறப்பை எடுத்து நிற்கிறார் என்பதையே இந்த பிறந்தநாள் நினைவுதினம் எடுத்துக்காட்டுகின்றது. இன்று ஊடகத்துறை மிக வேகமாக வளர்ந்துள்ளது. இன்று பாலஸ்தீனத்தில் நடைபெறும் குழந்தைகளின் இறப்புக்களை கூட நம் வீடுகளில் கூட நடைபெற்றதை போல கவலைப்படுகின்றோம். இதற்கு காரணம் ஊடகங்கள் தான். இன்று ஜனநாயகத்தின் வழியாக மக்கள் யுகம் வளர்ந்துள்ளது. இந்த ஜனநாயகத்தை தாங்கும் தூண் ஊடகமாகும். இன்று ஊடகங்கள் சமூகப் பொறுப்புடன் இயங்குகின்றனவா என்றால் கேள்விக்குரியது. 50வருடங்களுக்கு முன்பு ஊடகங்கள் முடியுமானவரை சமூகப்பொறுப்புடன் இயங்கின என உறுதியாக கூற முடியும். யாழ்ப்பாண மண்ணில்  அன்றும் இன்றும் சாதிய வெறி தலைவிரித்தாடிக்கொண்டிருக்கின்றது. நான் யாழ்ப்பாணத்தான் என்ற மேலாதிக்கத்திமிர் யாழ்ப்பாணத்தில் இருந்த போது 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் 21  ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சாதிய ஒடுக்குமுறை தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற பதாகையின் கீழே எல்லா சாதியினரும் இணைந்து சாதிய முறைமைகளுக்கு எதிராக கோசமிட்டனர் இது தொடர்பான அனைத்து பதிவுகளும் அன்று எல்லா ஊடகங்களிலும் வெளிவந்தன. அது போல தொழிலாளர் உரிமைகள் தொடர்பான விடயங்களும் ஊடகங்களிலும் வெளிவந்தன. இவ்வாறு ஊடகங்கள் சமூகப்பொறுப்புடன் செயற்பட்டன. உலக மயமாதல் என்ற எண்ணக்கரு 1990களில் உருவாகும் வரை சோவியத்யூனியன் சமவுடமைக்கருத்துக்களை விதைப்பதில் வெற்றி கண்டிருந்தது. அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக ரஸ்யா காணப்பட்டது. எனினும் ரஸ்யா சிதைந்த பிறகு அமெரிக்கா உலகமயமாதல் என்ற கருத்தியலின் கீழ் உலக நாடுகளை போட்டு நசுக்க ஆரம்பித்தது. இதன் பின்னணியில் நமது நாடுகளில் காணப்பட்ட சுயதேவைப்பூர்த்தி பொருளாதார முறை நசுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு சார்பான நான் உருவாக்குவதை நீங்கள் வாங்குங்கள் என்ற ஓர் பொருளாதார கொள்கை ஒன்று தோன்றியது. இந்த காலத்திலேயே ஊடகத்துறையை அமெரிக்கா ஆக்கிரமித்தது. இதன் பின்பு ஊடகம் தனது சுயாதீனத்தை இழந்து கொண்டது. இன்று பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சினையிலும் இதுவே நீடிக்கின்றது. ஆனால் இன்று டொலர் தான் எல்லாமும் – அமெரிக்கா ஒற்றை மையம் என்ற கருத்து தகர்க்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஜனநாயகம் என்பது மக்களுக்கானதாக மாறியுள்ளது. எனவே ஊடகவியலாளர்களே சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.” என அவர் குறிப்பிட்டார்.
No description available.
கலாநிதி ந.இரவீந்திரனின் நினைவுப்பகிர்வை தொடர்ந்து சிவஜோதியின் சகோதரர் வயித்தீஸ்வரன் சிவப்பிரகாஷின் நினைவுப்பகிர்வு இடம்பெற்றது. அதில் பேசிய சிவப்பிரகாஷ் “ ஜோதியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். நானும் ஜோதியும் ஒரே உதிரத்தில் பிறந்திருந்தாலும் இருவரும் இருவேறு உலகத்தை சேர்ந்தவர்கள். ஜோதியின் உலகத்தை பார்க்க இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதற்காக நான் இங்கு வருகை தந்தேன். என்னுடைய வாழ்க்கையில் புதிய மனிதர்களோடு பழகினாலும் கூட கதைகளில் வருவது போல சுலபமாக ஜோதியை கடந்து போக முடியாது. ஜோதி ஒரு போராளி. சிறுவயது முதலே சமூகத்தின் ஈர்ப்பை பெற்றவர் ஜோதி.” என குறிப்பிட்டார்.
No description available.
தொடர்ந்து அமரர் சிவஜோதி தொடர்பிலும்  கிளிநொச்சி மாவட்டத்தின் சமகால  நிலை தொடர்பிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் அவர்களால்  உரையாற்றப்பபட்டது. குறித்த உரையில் பேசிய முருகேசு சந்திரகுமார் “ சிவஜோதி எனும் ஆளுமை மறைந்து 3 ஆண்டுகள் ஆனாலும் கூட அவர் ஆற்ற வேண்டிய சேவைகளை  நாம் தொடர்கின்றோம் என்பது மகிழ்வாக உள்ளது. எங்கள் மத்தியில்  இன்னம் அதிக ஆளுமைகள் உருவாக வேண்டும். ஆளுமைப்பண்பு  அனைவரிடமும் உள்ளது. அதனை வெளிக்கொண்டு வர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று பல ஊடகங்கள் ஆளுமை இல்லாதவர்களை, மக்களுக்கு எதுவுமே செய்யாதவர்களை அரசியல் தலைவர்களாக்கியுள்ளார்கள். இடதுசாரியம் ஆரம்பகால எமது உரிமைப்போராட்டத்தில் முக்கிய இடத்தை பெற்றாலும் இன்று இடதுசாரியம் பற்றி தெரியாதவர்களை எல்லாம் ஊடகங்கள் அரசியல் தலைவர்களாக்கியுள்ளார்கள். மக்களின் உரிமைப்போராட்டங்கள் பற்றியெல்லாம் இன்றைய தொலைக்காட்சி ஊடகங்களும் பத்திரிகைகளும் பேசத்தயாரில்லை.  தமக்கு லாபம் தரக்கூடிய முதலாளிகளை மட்டுமே கொண்டாடுகின்றன. இன்று தான்  ஐ.பி.சி நிறுவனத்திலும் சிவஜோதி பணியாற்றியதாக அறிந்துகொண்டேன். ஜோதி அதில் இருந்திருந்தால் இன்று நமது பல பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்திருப்பார். ஆளுமையான இளைஞர் தலைமுறையை உருவாகவும் – இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாம் செயற்பட வேண்டும். இன்று இளைஞர்கள் திசைமாற்றப்பட்டுள்ளார்கள். முன்னேறுவதை விட்டுவிட்டு எந்த ஏஜென்சி வெளிநாட்டுக்கு அனுப்புவான் என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர் பத்து வீதம் கூட இல்லை. இந்த நிலையில் வடக்கு – கிழக்குக்கான அபிவிருத்தி எவ்வாறானதாக இருக்கும் என்பதே கேள்விக்குரியதாகிவிட்டது. மிகக்குறைவான சனத்தொகையை உடைய தமிழரிடத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவிட்டதும் ஒழுக்கமற்ற சமூககட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்துவதும், வெளிநாட்டில் இருந்து காசு குடுத்து பெட்ரோல் குண்டு வீசுவதும் தான் இன்றைய ஊடகங்களின் தலைப்புச்செய்திகளாகியுள்ளன. ஆக்கபூர்வமான சமூக முன்னேற்றத்துக்கான விடயங்கள் எவையுமே ஊடக உள்ளடக்கத்தில் இல்லை. இந்த நிலையிலேயே ஜோதி பற்றி நினைக்கிறேன். அவர்கள் போன்றவர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எதிராக கட்டாயம் குரல் கொடுத்திருப்பார்கள். அப்படியானவர்களை நாம் இழந்து விட்டோம் என்பதையிட்டு கவலையடைகிறேன்.“ என குறிப்பிட்டிருந்தார்.
No description available.No description available.No description available.
No description available.No description available.No description available.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் 100 ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் கிளிநொச்சி 2023” என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. நூலின் முதற்பிரதி அமரர் சிவஜோதி அவர்களின் தந்தையால் சிரேஷ்ட சட்டத்தரணி திரு.சோ.தேவராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது.
No description available.
மேலும்  நூல் தொடர்பான வெளியீட்டுரை திருமதி பிரியன் டிலக்சனா அவர்களால் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சிவஜோதி ஞாபகார்த்த வருடாந்த விருதும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
No description available.No description available.
கிளிநொச்சி மாவட்டத்தில்   கல்விச்சேவையின் மூலம் சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசனுக்கு இந்த விருது மற்றும் பணப்பரிசு ஆகியன வழங்கப்பட்டன. இந்த விருதை கலாநிதி ந.ரவீந்திரன் அறிவிக்க சிவஜோதியின் குடும்பத்தினர் வழங்கி வைத்தனர். தொடர்ந்து லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் ஸ்தாபகரான திரு.தம்பிராஜா ஜெயபாலன் அவர்களின் வாழ்த்துச்செய்தி காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டது.
No description available.
குறித்த வாழ்த்துச்செய்தியில் “திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் அவர்கள் பொறுப்பேற்க முன்னர் கல்வி நிலையில் மிக்க பின்தங்கிய நிலையில் காணப்பட்ட  அம்பாள்குள கல்வி நிலையை முன்னோக்கி நகர்த்தியதிலும் அப்பாடசாலையை மையமாக கொண்டு அக்கிராமத்தின் கல்வி நிலையை வலுப்படுத்தியதிலும் திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் காத்திரமான பங்களிப்பை ஆற்றியதால் கிளிநொச்சி மற்றும் தமிழர் கல்விச்சூழலில் நன்கு அறியப்பட்டவராக மாற்றமுற்றார். இந்த நிலையிலையே ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் அவர்களின் கல்விப்பணியை பாராட்டி சிவஜோதி ஞாபகார்த்த விருதின் அன்பளிப்பு தொகையான இந்த ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. வழமையாக ரூபா ஒரு லட்சம் இந்த விருது அன்பளிப்பு தொகையாக வழங்கப்பட்டாலும் கூட இந்த வருடம் மட்டும் ஜெயலட்சுமி மாணிக்கவாசகன் பணிபுரியும் பாடசாலையின் இணைய வசதியை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த தொகையை நாம் வழங்குகின்றோம்.“ என தெரிவித்திருந்தார்.
சிவஜோதி ஞாபகார்த்த வருடாந்த விருது பெற்றுக்கொண்ட கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெயலட்சுமி மாணிக்கவாசன் அவர்களின் உரை இடம்பெற்றது.  குறித்த உரையில்
No description available.
“ எல்லோரும் கூறியது போல ஓர் சமூகப்போராளியாக எங்களுடைய பாடசாலையுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கட்டியெழுப்பியவர் சிவஜோதி. வழமையாக  லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தின் எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்பது போலவே இன்றைய நாளிலும் கலந்து கொண்டிருந்தேன். இருந்தாலும் இந்த விருது அறிவிப்பு பற்றி இப்போதே தெரியும். பெரும்பாலும் நான் என்னுடைய சேவைக்கான விளம்பரப்படுத்தலை எதிர்பார்ப்பதில்லை. 2011ஆம் ஆண்டு விவேகானந்தா வித்தியாலயம் சின்னதான ஒரு கொட்டில் போட்டு திரு.முருகேசு சந்திரகுமார் அவர்களால்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  எனினும் சிலர் என்னைப்பார்த்து இந்த பாடசாலையை ஆரமப்பிப்பது தேவையற்ற விடயம் பயனில்லாததது என்றார்கள். அப்போது நாம் நம்பிக்கையுடன் நகர்ந்தோம். அதன் விளைவு நாம் பெறுபேறுகள் சார்ந்தும் சமூக மாற்றம் தொடர்பிலும் பல வெற்றிகளை பெற்றுள்ளோம். தேசிய அளவில் பல சாதனைகளையும் எமது பாடசாலை பதிவு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது. GREEN AND CLEAN SCHOOL 2017 விருதினை இலங்கையின் 5 பாடசாலைகளே பெற்றிருந்தன. குறித்த விருது  சிங்கள பாடசாலைகள் நான்கிற்கும் ஒரே ஒரு தமிழ் பாடசாலைக்கும் வழங்கப்பட்டிருந்தது. அந்த தமிழ் பாடசாலை நமது பாடசாலையேயாகும். இப்படியாக பல துறைகளில் நமது பாடசாலை நிமிர்ந்துள்ளது. அண்மையில் என்னுடைய இடமாற்றம் தொடர்பில் பலரும் வினவியிருந்தனர். ஆனால் நான் ஒரு விடயத்தில்  உறுதியாக இருக்கிறேன். எந்த ஓர் கிராமத்தில்  மாணவர்கள் படிக்கிறார்கள் இல்லையோ – கல்வியில் பின்தங்கியுள்ளார்களோ அந்த பாடசாலையையே நான் தெரிவு செய்வேன். என்னுடைய சிறிய சமூக சேவையை மதித்து ஜெயபாலன் அண்ணா மற்றும் ஏற்பாட்டுக்குழுவினர் இந்த விருதினை வழங்கியமைக்காக நான் மனமகிழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எமது பாடசாலை பழைய மாணவர்கள் பொருளாதார ரீதியில் இன்னமும் வலிமையான நிலையில் இல்லாத நிலையில் இந்த தொகை எமக்கு பெரிதும் ஊக்கமானது. சிவஜோதி அவர்களுடன் பேசும் போது இணைய நூலகம் பற்றி அதிகம் பேசியிருக்கிறேன். இந்த நிலையில் இதற்காகவும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமையிட்டு பெருமகிழ்வடைகிறேன்.” என அவர் தெரிவித்திருந்தார்.
No description available.
சிறப்பு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து  அண்மையில் மறைந்த லண்டன் நாடக நடிகர் ரமேஷ் வேதா அவர்களுக்கு “நகைச்சுவை தென்றல்” விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை சி.கருணாகரன் அறிவிக்க சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் வழங்கி வைத்தார்.
No description available.
நிகழ்வுகளின் இறுதியில் வேணுகானசபா இசை நாடக மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகம் மேடையேற்றப்பட்டது.
No description available.
தொடர்ந்து லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி சிவஜோதி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.

இலங்கை அணிக்கு மீண்டும் திரும்பும் வனிந்து ஹசரங்க !

2019 மற்றும் 2023 உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டிலும் தோல்வியடைந்தமைக்காக மிகவும் வருந்துவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், எல்லா நேரங்களிலும் நாட்டுக்காக தான் விளையாடியதாக ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் கூறியுள்ளார்.

 

எல்பிஎல் போட்டிக்குப் பிறகு, தனது காயம் ஓரளவுக்கு குணமடைந்ததாகவும், ஆனால் பயிற்சி தொடங்கிய பிறகு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சத்திரசிகிச்சையின் பின்னர் 12 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் தற்போது சத்திரசிகிச்சை முடிந்து 05 வாரங்கள் கடந்துள்ளதாகவும் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

 

எதிர்வரும் வாரத்தில் இருந்து மீண்டும் சிறிய அளவில் தனது பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் வனிந்து குறிப்பிட்டுள்ளார்.

 

12 வாரங்கள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-ஜிம்பாப்வே போட்டியில் விளையாட முடியும் என, வனிந்து ஹசரங்க நம்பிக்கை வெளியிட்டார்.

கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் – கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும் அமரர் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச தொழில்கல்வி நிறுவனமாக கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் – சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் 52ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வு எதிர்வரும் 18.11.2023 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் கல்வி பண்பாட்டு மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான திரு.சி.கருணாகரன் தலைமையில் இடம்பெறும் மேற்குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் 100 ஆளுமைகளை ஆவணப்படுத்தி வெளிவரும் “யார் எவர் – கிளிநொச்சி 2023” என்ற நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன் சிவஜோதி ஞாபகார்த்த விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி !

பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணியொன்று இன்று யாழில் இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தின் பிரதி பணிப்பாளர், து.சுபோகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் திருக்குடும்பகன்னியர் தேசிய பாடசாலையின் சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சுற்றாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமலாக்கப்பட்டோருக்கான 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தல் !

எமக்கு நிதி தேவையில்லை நீதியே வேண்டும் என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினால் இன்று (15) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

அவர்களுக்கு இதுவரையில் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை, ஆனால் இலங்கை அரசு அதனை புறம்தள்ளிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 1500 மில்லியல் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், நாங்கள் நிதிக்காகபோராடவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காகவே போராடுகின்றோம்.

 

எமக்கு இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச விசாரணை ஒன்றே எமக்கான நீதியை பெற்றுத்தரும், எனவே அதை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.

சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக இம்முறை வெளியிடப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயம் கண்டனத்துக்குரியது.

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த அதிபர் ரணில் இப்போது குறித்த விடயத்திற்காக நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார் அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா? என கேள்வி எழுப்புகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.

இந்நிலையில் எங்களுடைய போராட்டத்தை சிதைக்கும் வகையில் அதற்கு இழப்பீடு வழங்குவதாகக்கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர் எனவும்” அவர் தெரிவித்தார்.

‘குண்டு வீசுவதை நிறுத்துங்கள்!’, ‘குழந்தைகளை கொல்வதை நிறுத்துங்கள்!!’ சனிக்கிழமை காலை லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


நாளை பிரித்தானிய நாட்காட்டியில் மிக முக்கியமான நாள். ‘Rememberance Day’ – ‘ஞாபகார்த்த தினம்’ உலக மாகா யுத்தம் நவம்பர் 11ம் திகதி 11 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டநாள். அதையொட்டி அந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கின்ற தினம். தற்போது முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் மட்டுமல்ல அதன் பின்னான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அதில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களையும் நினைவு கூருகின்ற மிக முக்கிய சடங்காக 11 / 11 மாறியுள்ளது.
இவ்வருடம் இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டவழித்து விடப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இன அழிப்பு, குழந்தைகள் அழிப்பு யுத்தத்திற்கு அமெரிக்க, பிரித்தானிய அரசுகளும் இராணுவ பொருளாதார பங்களிப்புகளை வழங்கி இந்த இன அழிப்பு குழந்தைகள் அழிப்பு யுத்தத்தின் பங்காளிகளாகி உள்ளனர்.இவற்றைக் கண்டித்து: குண்டு வீசுவதை நிறுத்துங்கள்! குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்!! என்று கோரி பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காக் குரல்கொடுக்கின்ற மாபெரும் மக்கள் போராட்டம் ஹைப்பாக்கில் இருந்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது.

ஒடுக்குமுறையை எதிர்க்கின்ற மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியம். பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, பாலஸ்தீனிய குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்கத் தவறினால், அதனைத் தடுக்கத் தவறினால், அதிகாரமும் இராணுவ பலமும் உடையவர்கள் தாம் விரும்பியதை எந்த விலையைக் கொடுத்தும் அடைய முடியும் என்பது உறுதிப்படுத்தப்படுவதுடன் நாளைய எதிர்காலம் மிக மோசமானதாக்கப்பட வாய்ப்பாக அமையும்.

இனவெறிக் கருத்துக்களை விதைத்து ஏழை, நலிந்த மக்களை தரக்குறைவாக மதிப்பிடும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் Rmemberance Dayயைக் காரணம் காட்டி இந்த போராட்டத்தை நிறுத்தவும் பெரு முயற்சியில் இறங்கியிருந்தார். அதனையும் மீறி மெற்றோபொலிட்டன் பொலிஸார் ஊர்வலத்தை தடை செய்ய மறுத்திருந்தனர்.

இந்த போராட்ட நாளில் ‘தமிழ் சொலிடாரிட்டி’ அமைப்பு பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்து இப்போராட்டத்தில் தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததுள்ளனர்.

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” முன்ஜன்கிளப்பாக்கில் “வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் அறிமுகம்

“தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்று வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நூலில் த ஜெயபாலன் முன்வைத்த விமர்சனம் இன்னமும் நிதர்சனமாகவே உள்ளது. லண்டன், கிளிநொச்சி, பாரிஸில் நடந்த நூல் அறிமுக விழாக்களின் தொடர்ச்சியாக ஜேர்மனியின் முன்ஜன்கிளப்பாக் நகரில் இந்நூல் வெளியீடு ஒக்ரோபர் 29 ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது. மலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் புலத் தமிழர்கள் தாயகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் உலகக் கலாச்சாரப் போக்கும் மீள் சிந்தனையும் என்ற தலைப்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

நூல் அறிமுகம், கலந்துரையாடல், விருந்துபசாரம் என்று இந்நிகழ்வு சிந்திக்கவும் சுவைக்கவும் ஏற்றாற் போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் சமூகக் கலாச்சார கல்வி அமைப்பின் தலைவி திருமிகு ஜெ கங்கா தெரிவிக்கின்றார். இந்நிகழ்வில் அரசியல் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜெ கங்கா முன்ஜன்கிளப்பாக்கில் அண்மைக்காலத்தில் நிகழ்கின்ற முதல் நூல் அறிமுக நிகழ்வு இதுவெனத் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் யுத்தம் ஏற்படுத்திய உணர்வலையின் தாக்கத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் போன்றதொரு நூல் இனிமேல் வெளிவருவதற்கு வாய்ப்பிலை என ஹொலன்டில் வாழும் அரசியல் ஆர்வலரான ஆர் சிறிகாந்தராஜா தெரிவிக்கின்றார். நாளைய நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள இவர் இவ்வாறான பக்கசார்பற்ற வரலாற்றுப்பதிவுகள் எமக்கு மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் கடந்து வந்த காலகட்டம் தொடர்பாக காத்திரமான சில பதிவுகள் மட்டுமே வெளிவந்துள்ளன. வெளிக்கொணரக் கூடிய விடயங்கள் ஏராளமானவை. யுத்தம் முடிந்து ஆண்டுகள் பலவாகியும் இந்த யுத்தத்தின் அடிப்படைத் தகவல்களே சேகரிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது” என்று த ஜெயபாலன் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை “எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் ஊனமுற்றனர்? எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர்? எவ்வளவு சொத்துக்கள் இழக்கப்பட்டது? எவ்வளவு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? போன்ற பல கேள்விகளுக்கு இன்னமும் சரியான பதில் இல்லை” என்று தனது நூலில் சுட்டிக்காட்டியுள்ள நூலாசிரியர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகள் தங்கள் மக்களுக்கு நியாயமாகவும் அரசியல் நேர்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

“இலங்கையின் இனவாத அரசு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு தலைமை வழங்குவதாக மக்களை ஏமாற்றும் தரப்பும் விமர்சனத்திற்குரியதே. தமிழ் மக்களுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாத தமிழ் தலைமைகள் எவ்வாறு அத்தமிழ் மக்களுக்கு அரசிடமிருந்து நியாயத்தைக் கோர முடியும்?” என்ற கேள்வியையும் நூலாசிரியர் முன்வைத்துள்ளார்.

விமர்சனபூர்வமான இந்நூல் கடந்தகாலம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொண்டிருப்பதாக பல விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இந்நூல் வெளியீடு பற்றிய விபரங்கள் கீழே:

காசா பகுதியிலுள்ள இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கியது இஸ்ரேல்!

இஸ்ரேலினால் காசா பகுதியிலுள்ள இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 22 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் பலியாகியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசா பகுதினர் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் காசா பகுதியிலுள்ள இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் என அனைத்தையும் துண்டித்துள்ளது.

இதனால் இஸ்ரேலில் நடக்கும் எந்த ஒரு விடயமும் உலகத்திற்கு தெரிய வராது என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இதனால் காசா பகுதியிலுள்ள 2.2 மில்லியன் மக்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவராது. மக்களின் நிலை தான்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதோடு அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை கூட வழங்க முடியாத சூழல் ஏற்படும் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானம் ஐ.நாவில் நிறைவேற்றம் !

மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் காஸாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத தாக்குதலுக்கு வௌிப்படையான கண்டனத்தை தெரிவித்திருந்த கனடா இதில் வாக்களிக்கவில்லை..

கொழும்பு துறைமுக நகரில் Cryptocurrency நிலையங்களுக்கு அனுமதி!

கொழும்பு துறைமுக நகரில் இரண்டு க்ரிப்டோகரன்சி (Cryptocurrency) பணப்பரிமாற்ற மத்திய நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு அறிவித்துள்ளது.

 

அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் கருத்தையும் அறிந்து குழுவிற்கு தெரியப்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் மட்டத்தில் காணப்படும் வணிகங்களை ஒப்பந்தம் செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை 4 வாரங்களுக்குள் குழுவிற்கு பெற்றுக்கொடுக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.