செய்திகள்

செய்திகள்

செய்திகள்

4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு – தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது

assembly-tamil-nadu.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசிசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. வேலை நிறுத்தத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மனிக்பாம்’ பாடசாலை இன்று ஆரம்பம்

school2701.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களின் பிள்ளைகளுக்கு இன்று இரு தற்காலிக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்கள் இங்கு மீண்டும் தமது கல்வியை தொடர உள்ளனர்.

மனிக்பாமில் இரு தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்கள், சீருடைத் துணிகள், பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளுக்கு தேவையான தளபா டங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

இரு பாடசாலைகளும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வவுனியா கல்வி வலயம் திட்ட மிட்டுள்ளது.

இதே வேளை வன்னியில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்பதற்கென புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அரச அதிபர் கூறினார். எதிர்வரும் தினங்களில் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வர உள்ள மாணவர்களுக்கும் மனிக்பாம் பகுதியில் கல்வி கற்க வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.

வன்னியில் இருந்து மேலும் 85 ஆயிரம் மாணவர்களும் 2500 ஆசிரியர்களும் வவுனியாவுக்கு வருவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

சுதந்திர தின பிரதான விழா காலி முகத்திடலில் 4 ஆம் திகதி

flag_logo_sl.jpg61வது சுதந்திர தின விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 4ஆம் திகதி காலை காலி முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது.  ‘சமாதானத்தினூடாக சுபீட்சம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலுக்கு வருகை தரவுள்ளதோடு பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்படுவதோடு விழா ஆரம்பமாகும். முப்படையினரால் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.

சுதந்திர தின விழாவில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை ‘பேண்ட்’ வாத்தியங்கள் என்பனவும் இடம்பெற உள்ளதோடு விமானப் படை மற்றும் கடற்படையினரின் கண்காட்சிகளும் இடம்பெறவுள்ளன. 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் முப்படையினரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு காலி முகத்திடலுக்கு செல்லும் வீதிகள் 30 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழா மற்றும் ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி என்பனவற்றை முன்னிட்டு கொழும்பிலுள்ள 20 பாடசாலைகள் 28 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி 4 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியின் முதல் நாள் பாதுகாப்பு தினமாகவும் இரண்டாவது நாள் கலாசார தினமாகவும் மூன்றாவது நாள் நலன்புரி தினமாகவும் நான்காவது நாள் அபிவிருத்தி தினமாகவும் இறுதிநாள் ஊடகவியலாளர் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபபகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு கொழும்பில்

_hindi_victory.jpgகிரிக்கெட் வீரர் ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘விக்டரி’ என்னும் இந்தி திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு வெள்ளிகிழமையன்று கொழும்பில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 60 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த திரைப்படத்தில் தோன்றியுள்ளனர். இந்த திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் படத்தில் தோன்றிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச்சில்

ballot-box.jpgமேல் மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவினால் இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்படும் திகதியிலிருந்து 5 முதல் 7 வாரத்திற்குள் தேர்தல் நடாத்தப்படும்.

மேல் மாகாண சபை தேர்தல் மார்ச் நடுப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல் திணைக்கள உயரதிகாரி ஒருவர் கூறினார். மேல் மாகாண சபையின் பதவிக்காலம் ஆகஸ்ட் 4ஆம் திகதி நிறைவடைய உள்ள நிலையில் மாகாண சபை கடந்த வாரம் கலைக்கப்பட்டது.

வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை செஞ்சிலுவை தொண்டர்கள் பராமரிக்கின்றனர்

redcross-2801.jpgவன்னியில் காயமடைந்து வவுனியா அரசினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு, வார்ட்டுகளில் உதவி செய்து பராமரிப்பதற்கு உதவியாளர்கள், உறவினர்கள் இல்லாமல் காயமடைந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருவதாக ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காயமடைந்துள்ள சிறுவர்களே இந்த உதவியாளர்கள் இன்றி பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனினும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளை அதன் 29 தொண்டர்களை வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களுக்கு உதவும் பணிக்கு நியமித்துள்ளது. இத்தொண்டர்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் காயமடைந்தவர்களை பராமரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் காயமடைந்துள்ள சிறுவர்களின் உறவினர்களையாவது அவர்களுடன் ஆஸ்பத்திரியில் தங்கி பராமரிக்க அனுமதிக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்களைப் பராமரிப்பதற்காக வியாழக்கிழமை வந்த உறவினர்கள் நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் வாழ்வில் அமைதியை உருவாக்க அரசு துரித நடவடிக்கையெடுக்க வேண்டும்’

வன்னியில் அவதியுறும் தமிழ் மக்களின் வாழ்வில் அமைதியான வாழ்க்கையை உருவாக்க அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு வடக்கு ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான சீ.பி.வை.ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் தமிழ் மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழும் சூழலை பாகுபாடின்றி மகிந்த ராஜபக்ஷ, ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணக்கப்பாட்டோடு வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் இன்று இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ள முடியும். விஷேடமாக கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தொழிலுக்காக தங்கியுள்ளவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வருவோர் தமது தேவைகளை தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும்.

சுதந்திரமாக அச்சமின்றி நடமாடும் உரிமைகளையும் வழங்கி அங்கலாய்ப்பின்றி அமைதியாக வாழும் உரிமைகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களும் இலங்கையர்களே என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட வேண்டும். விஷேடமாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இனங்களிடையே நல்லுறவு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அரசின் தேவையாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நம்பிக்கையோடு வாழும் நிலைமையை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா வழங்கிய பொருட்களை வன்னிக்கு அனுப்பமுடியாத நிலை

vanne.jpgவன்னியில் அகதிகளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக உலக உணவுத்திட்டத்துக்கு அமெரிக்கா வழங்கிய 6.9 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்குவதை காலவரையரையின்றி இடை நிறுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலய ஊடகப்பேச்சாளர் கோர்டன்வைஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் பணிகளில் ஈடுபடமுடியாத நிலையே இதற்கான முக்கிய காரணமாகும் .2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் அங்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கும் கூடதலானோர்போர்முனைப்பகுதியில் சிறையுண்டிருப்பதால் அந்த மக்களுக்கு எந்தவித உணவு நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கோர்டன் வைஸ் தெரிவித்தார்.

கடந்த 27 ஆம் திகதி அமெரிக்கா வழங்கிய நிவாரணப்பொருட்களும் தம்மிடமுள்ள மனிதாபிமான உதவிகளும் களஞ்சியப்படுத்தப் பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததால் மாத்திரமே நிவாரண உதவிகளை அங்கு கொண்டு சென்று விநியோகிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை படம் எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை

வன்னிப் பகுதியில் இடம்பெற்று வரும் அகோர ஷெல் தாக்குதல் படுகாயங்களுக்கு உள்ளாகி வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும் பொதுமக்களை புகைப்படங்கள், வீடியோ படங்கள் எடுப்பதற்கு பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கு தடைவிதித்துள்ளனர். மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவினால் ஊடகவியலாளர்களுக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் தொடர்பான படங்கள், விபரங்கள் வெளியுலகுக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா ஆஸ்பத்திரியில் தங்கியுள்ள காயமடைந்த வன்னி மக்களை வவுனியாவில் உள்ள அவர்களின் உறவினர்களும் சந்தித்துப் பேசுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன

தமிழகம் முழுவதும் காலவரையின்றி கல்லூரிகள் மூடல் – விடுதிகளையும் காலி செய்ய உத்தரவு

college.jpgதமிழகம் முழுவதும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார், அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளை மூட அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் சில கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், விடுதிகளை மறு உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு நேற்று இரவு தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.