செய்திகள்

செய்திகள்

செய்திகள்

முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு.

eela-ganash.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை  நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஜேபி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் 4ஆம்  தேதி நடத்துவதாக அறிவித்துள்ள முழு கடையடைப்புக்கு பிஜேபி ஆதரவு  தருகிறது.

தற்போது பத்திரிகைகளில்  வரும் செய்திகள், இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக சமஉரிமை பெற்றுத்தரவும் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. சிலர் உணர்ச்சிவரப்பட்டு தங்களை  மாய்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். செய் அல்லது செத்து மடி என்பது ஏற்புடையதல்ல. மாறாக “வாழ்ந்து லட்சியத்தை அடைந்து காட்டு’ என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பங்குக்கு செய்ய வேண்டியவைகளை செய்தும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசின் செயல்பாடு இந்தவிஷயத்திலும் திருப்திகரமாக இல்லை. எனவே மக்கள் அனைவரும் பங்கேற்கும் ஒரு சாத்வீக போராட்டம் நடத்துவதால் மக்களுக்கு தங்களது உணர்வுகளை வெளியிட ஒரு வடிகால் கிடைக்கும். இந்த அறிவிப்பை வெற்றிகரமாக்கிட மக்கள் தானாக முன் வர வேண்டும். தங்களது ஆதரவை ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

பிஜேபியின் தொண்டர்கள் இந்த முழு அடைப்புக்கு ஒத்துழைப்பார்கள். மக்கள் தானாக முன் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தும் வாய்ப்பு இது என்பதால் கட்சியின் தொண்டர்கள் தெருவில் இறங்கி எவரையும் வற்புறுத்த மாட்டார்கள்.
இது அச்சுறுத்தி வெற்றிகரமாக்கிய போராட்டம் என்கின்ற அவப்பெயர் வராது, தானாக வெற்றி பெறுவது சிறப்பாகும்.

ஆனால் அதே நேரத்தில், மாநில அரசும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க முனைவதும் கூடாது. எந்தவிதமான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாது. அமைதி காக்கும் பணியினை அரசு செய்யட்டும். ஆனால் போராட்டம் வெற்றி பெற்றால் அதன் காரணமான அரசியல் லாபம் யாருக்குப் போகும் எனக் கணக்கிட்டு தடுக்க முனைதல் கூடாது என அரசை வற்புறுத்துகிறேன். தமிழர்கள் அனைவரும் இலங்கை தமிழர்களை காக்கவும், அவர்களுக்கு சம உரிமை பெறவும் முனையும் விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மன்னார் ஆஸ்பத்திரிக்கு 48 நோயாளர் மாற்றம்

வன்னிப் பகுதியில் விமான மற்றும் ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 48 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக 16 அம்புலன்ஸ்களில் மன்னார் வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இவர்கள் அம்புலன்ஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மன்னார் ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதுடன் பொதுமக்களும் பொது அமைப்புகளும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்துவருகின்றனர். கடந்த வாரமும் 28 நோயாளர்கள் வவுனியாவில் இருந்து மன்னார் ஆஸ்பத்திரிக்கு இடமாற்றப்பட்டிருந்தனர்.

இதேவேளை, வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு அவசர சிகிச்சையளிப்பதற்கு பேசாலை அரசினர் வைத்தியசாலை,முருங்கன் மாவட்ட வைத்தியசாலை என்பவற்றையும் தயாராக இருக்குமாறு மன்னார் சுகாதார பணிமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈராக் மாகாண சபை தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம்

iraq-elc.jpgஈராக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த தேர்தல் அலுவலகம் முழு முடிவுகளையும் அறிவிக்கப் பல வாரங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தது. புதுவகையான தேர்தல் முறை என்பதால் வாக்குகளை எண்ண பல நாட்கள் எடுக்கும். மற்றும் எண்ணுவதில் பெரும் சிக்கல்களும் உள்ளதென்றும் செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த மாகாண சபைத் தேர்தல்களில் 15 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.

440 ஆசனங்களுக்கு 14 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 400 கட்சிகள் களத்தில் குதித்தன. ஈராக்கிற்கான ஐ. நா. வின் தூதுவர் முஸ்தபாமிஸ்டிரா இதுபற்றிக் கூறுகையில் :- ஈராக்கில் இறுதியாக நடந்த தேர்தல் முடிவுகள் கணக்கிடப்பட்ட விதம் பூரண திருப்தியில்லை. விகிதாசாரம் முறையாகப் பேணப்படவில்லை.எனவே இம்முறை இந்தத் தவறுகள் இடம்பெறாமல் தவிர்க்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மீள் புனரமைப்புப் பணிகள், வெளிநாட்டு உதவிகள் என்பவற்றை மாகாண சபை முன்னெடுப்பதுடன், ஆளுநர்களையும் நிர்வாகமே தெரிவு செய்கின்றது. 2.5 பில்லியன் ரூபா புனரமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை சர்வதேசம் முழுமையாக தடைசெய்யவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை வலியுறுத்தல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை சர்வதேசம் முழுமையாக தடைசெய்ய வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஐரோப்பிய விஐயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கூறியதாவது; “எனது இந்த ஐரோப்பிய விஜயத்தின்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன். யுத்தவெற்றியைத் தொடர்ந்து வடக்கில் துரித அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக சர்வதேசத்திற்கு தெளிவு படுத்தியுள்ளேன். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் விடயத்தில் எந்த நாடும் தனித்துச் செயற்பட முடியாது. பயங்கரவாதச் சவாலை எதிர்கொள்ளும் சகலநாடுகளும் ஒருமித்துச் செயற்படவேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை உலகின் சில நாடுகள் மட்டுமே தடைசெய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் அதனைச் செய்யவில்லை. தாமதமின்றி அதனை தடைசெய்வதன் மூலம் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதை முற்றாகத் தடுக்க முடியும் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.

நோயாளர்களை அழைத்துவர எந்தவேளையிலும் அரசு தயார் – அமைச்சர் சமரசிங்க

mahinda-samarasinga.jpgபுதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரியில் சிக்கியுள்ள 500 நோயாளிகளையும் மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வருவதற்கு சகல வசதிகளும் அளிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். மேலதிக சிகிச்சைக்காக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கென 500 நோயாளர்கள் காத்திருப்பதாகவும் இவர்களை அழைத்து வருவது தொடர்பாக அரசாங்கத்துடனும் புலிகளுடனும் பேசிவருவதாகவும் ஐ. சி. ஆர். சி அறிவித்துள்ளது.

இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், வன்னியில் உள்ள நோயாளிகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வர அரசாங்கம் சகல வசதிகளும் செய்துள்ளதோடு அம்பிலன்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். கடந்த இரு தினங்களுக்கு முன் 226 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு முன்பு சில நோயாளர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்ற பின் மீண்டும் வன்னிக்குச் சென்றதாகவும் புதுக் குடியிருப்பு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் வர விரும்பினால் அதற்கு உதவ அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் உள்ள 500 நோயாளிகளுக்கும் ஐ. சி. ஆர். சி. உதவி வருவதாகவும் 100 ஐ.சி.ஆர்.சி உறுப்பினர்கள் அங்கு உள்ளதாகவும் ஐ. சி. ஆர். சி பேச்சாளர் சரசி விஜேரத்ன கூறினார்.  இவர்களை அழைத்து வருவது குறித்து அரசுடனும் புலிகளுடனும் தினமும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஈழப் பிரச்சனையில் ஆதாயம் தேடும் இயக்கங்கள்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல், அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர் என்று மத்திய அமைச்சர் வாசன் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ராஜீவ்காந்தி சிலையை வன்முறையாளர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள் மற்றும் தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பவர்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதில் மத்திய, மாநில அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில இயக்கங்கள் இலங்கை பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயல்படாமல் அதற்கு நேர்மாறாக அரசியல் லாபத்திற்காக ஆதாயம் தேடுகின்றனர். இது தமிழக மக்களிடம் ஒருபோதும் எடுபடாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் சாதனைகள் மூலம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றார்.

புலிகளுக்கு சார்பாக செயற்படும் அனைவரும் உடனடியாக நாட்டைவிட்டு துரத்தப்படுவார்கள் – அரசு எச்சரிக்கை

gothapaya_rajapaksa.jpgவிடுதலைப் புலிகள் சார்பாக செயற்படும் அனைவரும் நாட்டை விட்டுத் துரத்தப்படுவார்கள் என்று வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிற்சர்லாந்து மற்றும் ஜேர்மனியின் தூதுவர்கள் மற்றும் சி.என்.என், பி.பி.சி.செய்திச் சேவைகள், அல்ஜசீரா என்பன இவ்வாறாக ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தேசிய நாளேடு ஒன்றுக்கு வழங்கிய விஷேட பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; புலிகளை இறுதிக் கட்டத்தை அடைய வைக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளும் நேரத்தில் குறித்த ஊடகங்களின் அறிக்கைகள் பாதுகாப்பு படையினருக்கு களங்கம் விளைவிக்கின்றன. இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் போரில் வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களை விடுவிக்க அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது போல சர்வதேச சமூகம் செயற்படுவது கண்டனத்திற்குரியது.

மக்களின் உணர்வலைகளைத் தூண்டக்கூடிய வகையிலான காட்சிகளை இந்தத் தொலைக் காட்சிச் சேவை ஒலிபரப்புச் செய்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சில வெளிநாட்டுத் தூதுவர்கள் செயற்பட்டனர். விடுதலைப்புலிகளுக்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்க முயற்சிப்பதற்காக இவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.பொதுமக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர்.

இதனை வெளிநாட்டு ஊடகங்கள் பொதுமக்கள் புலிகளுக்கு ஆதரவாக அப்பகுதியிலுள்ளதாக பொறுப்பற்ற முறையில் விமர்சித்து வருகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் ஊடகவியலாளர்கள் மற்றும் உதவி அமைப்புகள் பணியாற்ற தடைசெய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடன் உறவை வளர்த்த நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்

நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் எசல வீரக்கோன் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவினால் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது இருவருட சேவைக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் திருப்பியழைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அமைச்சு வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது;

எசலவுக்கெதிராக அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் கொடுமைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியொன்றை நோர்வேயில் நடத்தும் திட்டத்தை எசல ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஒஸ்லோவைத் தவிர இலங்கைத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிகளவான ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் இக்கண்காட்சி நடைபெற்றது.நோர்வேயிலுள்ள தமிழ் மக்களுடனான உறவை வளர்ப்பதில் இவர் ஆர்வம் காட்டியதாகவும் எசல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர எசலவின் தந்தையாரான பிரட்மன் வீரக்கோன் முன்னாள் ஜனாதிபதிகள் பலரது செயலாளராக இருந்தவர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது அவரது முக்கிய ஆலோசகராயிருந்தார்.

இதன்போது விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் வீரக்கோன் முக்கிய பங்காற்றியதுடன் அதியுயர் தொழில்நுட்பத்தைக் கொண்ட தொடர்பாடல் சாதனங்களை நோர்வே நாட்டவர்கள் ஊடாக விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் – 2 வாரத்தில் அலுவலகம் செல்வார்

sing.jpgஇதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், 8 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று வீடு திரும்பினார். இன்னும் 2 வாரத்தில் அவர் வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதால், ஜனவரி 23ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் 14 மணி நேரம் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு பிரதமரின் உடல்நிலை வேகமான முன்னேறியது. 28ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  எட்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனையில் இருந்து மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். புறப்படும் முன்பு,  சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, பிரதமர் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தார்.

 டிஸ்சார்ஜ் செய்வதற்கு முந்தைய பரிசோதனைகளை மும்பை டாக்டர் ராம்காந்த் பாண்டா தலைமையிலான குழு செய்தது.  நேற்று அதிகாலை பிரதமர் எழுந்ததும் டீ குடித்தார். மருத்துவமனை வளாகத்தில் சிறிது தூரம் வாக்கிங் சென்றார். பின்னர் பத்திரிகைகள் படித்தார். சிற்றுண்டி கொடுக்க தயாரானபோது வீட்டுக்குப் போய் சாப்பிட விரும்புவதாக கூறினார். பிரதமர் நேற்று உற்சாகமாக காணப்பட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

‘இப்போது, வீட்டில் இருந்தபடியே பிரதமர் பணியாற்றுவார். 2 அல்லது 3 வாரத்தில் அலுவலகம் வந்து வழக்கமான பணிகளை கவனிப்பார். பிரதமர் பூரண குணமடையும் வரை டாக்டர் பாண்டா தலைமையிலான குழு அவரை கவனித்து வரும்’ என்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார். பிரதமரின் ஊடகத்துறை செயலாளர் தீபக் சாந்து விடுத்த அறிக்கையில், அடுத்து வரும் வாரங்களில் உணவு அளவு மற்றும் உடற்பயிற்சியை படிப்படியாக அதிகரிக்கும்படி டாக்டர்கள் ஆலோசனை கூறி உள்ளனர். தான் விரைவில் குணமடைய வேண்டி நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்ததற்காக பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் தாக்குதல்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வில்லியம்ஸ் ரோட்டில்  ஓட்டல் வளாகத்தில் இலங்கை அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்குள் இன்று மாலை திடீரென்று சுமார் 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்து. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அருகே சென்று இலங்கை ராணுவத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலக கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதில் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்து சிதறின.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பர போர்டுகளை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதைக் கண்டு அலுவலகத்துக்குள் பணியில் இருந்த ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். கண்ணாடிகளை நொறுக்கும் சத்தம் கேட்டு ஓட்டல் வளாகத்தில் இயங்கி வந்த மற்ற கடை ஊழியர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து நொடிப் பொழுதில் தப்பி ஓடி விட்டது. இது குறித்து அலுவலக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணாடிகளை உடைத்த நபர்களை தேடி வருகிறார்கள்.