செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மேல் மாகாண சபை: வேட்புமனு ஏற்பு – 19 முதல் 26 வரை

dayananda_dissanayake_1.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் குறிப்பிட்ட திகதி களில் ஏற்றுக் கொள்ளப் படும். 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்பு நிறைவுபெறும். சுயேச்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுயேச்சை வேட்பாளரும் தலா 2000 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

பொதுமக்களின் தரிசனத்திற்கு புத்தரின் தந்தம்

புத்தபெருமானின் புனித தந்தம் இன்று 6ம் திகதி முதல் 16ம் திகதி வரை கண்டி தலதாமாளிகை யில் காட்சிக்கு வைக்கப் படவுள்ளது. இதனையிட்டு கண்டி பொதுச்சந்தையிலுள்ள இறைச்சிக் கடைகளும், மதுபானக் கடைகளும் பூட்டப்படவு ள்ளன.

புனித தந்தத்தைப் பொது மக்கள் தரிசனத்திற்குத் திறந்து வைக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலதாமாளிகை தியவதன நிலமே நிலங்க தெல பண்டார தெரிவித்தார். இதன் ஏற்பாடுகள் குறித்து கண்டி கச்சேரியில் நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்தார்.

இறுதியாக ஐந்து வருடத்திற்கு முன்னர் 2003ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. நாட்டின் சுபீட்சத்திற்காகவும், சமாதானம் ஏற்பட்டு ஜனநாயகம் ஏற்படவும், 25 வருடகால யுத்தம் நீங்கவும் வேண்டியே இத்தரிசனத்தினை ஏற்பாடு செய்வதாகவும், மல்வத்த, அஸ்கிரிய பெளத்த பீடங்களின் மாநாயக்க தேரோக்களின் பூரண ஆசீர்வாதத்துடன் இத்தரிசனம் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

சார்க் மாநாடு : பிரணாப் இலங்கை வருகை

pranab.jpgசார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் . வருகிற பிப்ரவரி 26 ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு தொடங்குகிறது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதில் இந்தியா சார்பில் கலந்து கொள்வதற்காக பிரணாப் முகர்ஜி வரும் 26ம் தேதி கொழும்பு வருகை தரவுள்ளார்.

வடக்கில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசு தெற்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த 17 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும்

வடக்கில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கம் தெற்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரியுள்ளதுடன். பொலிஸார் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது; மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தோல்வியை தழுவுமெனத்தெரிந்துள்ள நிலையில் அங்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களை கைது செய்யும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.

அதாவது நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களான திகாம்பரம் மற்றும் முருகையா ரவீந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை கைது செய்யுமாறு அங்குள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பக்ஸ் அனுப்பப்பட்டுள்ளது. தோட்ட மக்கள் பெருமளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களின் வருமானம் 50% வீதத்தால் விழ்ச்சிகண்டுள்ளது. தேயிலை விலை வீழ்ச்சியினால் தொழில் இல்லை. மலையக இளைஞர்கள் கொழும்பு உட்பட ஏனைய நகரங்களுக்கு சென்று பணிபுரிகின்ற போது கைது செய்யப்படுகின்றனர். தோட்டப்புற மக்கள் இவ்வாறு சகல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு நன்மைகளை பெற்றுக் கொள்ளும் ஒரேமார்க்கமான மாகாண சபைத் தேர்தலில் அம்மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை, குழப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கம் வடக்கில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கொண்டு தெற்கில் ஜனநாயகத்தை இவ்வாறு மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையடுத்து கவலையடைகின்றோம். அதாவது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் ஊடகமும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். மாகாண சபைகளை ஒன்றாகக் கலைத்து தேர்தலை நடத்தாது பிரித்து தனித்தனியே தேர்தலை நடத்தி தனது இலாபத்துக்காக தான்தோன்றித்தனமாக மக்களின் பணத்தை நாசம் செய்கின்றது. எனவே அரசாங்கம் ஜனநாயகத்தை மீறும் வகையில் செயற்படக் கூடாது. முதலில் 17 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம். இதன் மூலம் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்படும்.

இதன் மூலம் பொலிஸ் மற்றும் தேர்தல் உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் அமைக்கப்படும் இவ்வாறு அமைக்கப்படுமாயின் மோசமான சம்பவங்கள் தடுக்கப்படும். எனவே இதனை அமுல்படுத்துமாறு அரசிடம் கேட்கின்றோம். இதேவேளை மத்திய மாகாணத்தில் அமைச்சர்கள் அரச சொத்துகளையும் வளங்களையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைகளை மூடி ஆசிரியர்களை தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்பது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும். மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர்களாக சரத் ஏக்கநாயக்கவுள்ள நிலையில் சுவரொட்டிகளில் ஜனாதிபதியின் படமே உள்ளது. இந்நிலையில் சரத் ஏக்கநாயக்கா தேர்தல் வேற்றிக்காக செயற்படவில்லை என்பது தெரிய வருகின்றது.

பாலித ரங்கபண்டார தனது தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு வாடகைக்காரை அமர்த்தியுள்ளார். அக்காரின் இலக்கத்தகட்டிலுள்ள இலக்கமும் வேறு ஒரு வாகனத்தின் இலக்கமும் ஒன்றாகவுள்ள நிலையில் இது தொடர்பில் ரங்கபண்டாரவை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டுள்ளனர். இதையடுத்து இவ்வாகனத்தின் உரிமையாளர் பொலிஸில் சென்று இது தொடர்பில் தெரிவித்துள்ளார். இவரைக் கைது செய்ய அவரது மெய்ப்பாதுகாவலரொருவரை அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு கேட்டுள்ளதுடன் அச்சுறுத்தியும் உள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளோம். தற்போது இவ்வாறு இடம்பெறுவதற்கு காரணம் பொலிஸார் அரசியல் மயப்படுத்தப்படுவதே காரணமாகும். எனவே 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றோம். இதன் மூலம் பொலிஸார் சுயாதீனமாக செயற்பட வழிவகுக்குமென்றார்.

அரசின் தவறான பயணத்தால் மிகவிரைவில் முழுநாடுமே அகதி முகாமாக மாறப்போகின்றது

பாதுகாப்புப் படையினர் விடுதலைப்புலிகளை முல்லைத்தீவுக் காட்டுக்குள் சிறைப்படுத்தியதாக கூறும் அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளை எந்தக் காட்டுக்குள் மறைக்க முடியுமெனக் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசின் தவறான பயணத்தால் மிகவிரைவில் முழுநாடுமே அகதிமுகாமாக மாறும் அபாயம் தெரிவதாக எச்சரித்துள்ளார். நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய, வடமத்திய மாகாண சபைகளின் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாரம்மலையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

விடுதலைப்புலிகள் முல்லைத்தீவு காட்டுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அங்கு 1500 அல்லது இரண்டாயிரம் புலிகள் ஒளிந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு அந்தக் காட்டிலும் கிழக்கு மாகாணத்திலும் யால காட்டிலும் ஒளிந்திருக்கும் புலிகளை விரட்டியடித்து விரைவில் இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் காட்டுக்குள் சென்று ஒளிந்திருக்க முடியும். ஆனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை காட்டுக்குள் மறைக்க முடியுமா? பங்கருக்குள் சிறைப்படுத்த முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றோம்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் தப்பிச் செல்ல முடியாது. மக்களை ஏமாற்ற முடியாது. இன்று வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர் கொள்கிறார்கள். விலைவாசி அதிகரிப்பு கிராமப்புற மக்களை பெரிதும் பாதித்துள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை பொறுமை காக்குமாறு அன்று ஜனாதிபதி கூறினார். இன்று யுத்தம் முடிவடைந்துள்ளதாக அவரே கூறுகின்றார். அப்படியானால் மக்களுக்கு சலுகைகள், நிவாரணங்கள் பொருளாதார வளர்ச்சிக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக மேலும் சிறிது காலம் இடுப்பை வரிந்து கட்டிக் கொள்ளுமாறு ஜனாதிபதி கூறுகிறார்.

ஆட்சித் திறமையற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதுவரை காலமும் யுத்தத்தின் பின்னால் மறைந்திருந்து நாட்டையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி வந்தார். இனியும் அவரால் இந்த ஏமாற்று நாடகத்தை மேடையேற்றிக் கொண்டிருக்க முடியாது. பொருளாதார வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை இந்த அரசால் அதிலிருந்து மீட்டெடுக்க முடியாது. இந்த அரசிடம் அதற்கான கொள்கைத்திட்டம் கிடையாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டிய மற்றொரு சந்தர்ப்பம் மீண்டும் உருவாகியுள்ளது. யுத்தத்தால் மட்டும் நாட்டைப் பாதுகாப்பதால் பிரச்சினை தீரப்போவதில்லை. முழுநாடும் இன்று பாரிய சவாலை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தச் சவாலை நாம் வெற்றி கொண்டாக வேண்டும். அராஜகம் தலைவிரித்தாடுகின்றது. ஜனநாயகம் அச்சுறுத்தலுக் குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். இதனைச் செய்யக்கூடிய, வெற்றி கொள்ளக் கூடிய ஆயுதம் மக்கள் சக்தியொன்றே ஆகும்.

இன்று நாம் இன, மத, மொழி, கட்சி பேதம் பார்த்துக் கொண்டிருக்க நாட்டின் பொது எதிரியை முறியடிக்க அனைத்து மக்கள் சக்தியும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பமாக இந்த மாகாண சபைகளின் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். அரசு செல்லும் பாதை தவறானது என்பதைக் காட்டுவதற்கு இத் தேர்தலின போது ஒரு பாடத்தைப் புகட்ட வேண்டும். நாட்டில் மீண்டும் நல்லாட்சியை மலரச் செய்வதற்கு வடமேல் மாகாண மக்கள் பணியை ஆரம்பிக்க வேண்டும். மத்திய, வடமேல் மாகாண சபைகளின் வெற்றியானது முழுநாட்டு மக்களைத் தட்டியெழுப்பக் கூடியதாக அமைய வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுடன் போட்டியிடுவார்கள் – எஸ்.பி.திஸாநாயக்க

சுற்றுலாத் துறையும் ஏனைய ஏற்றுமதித்துறைகளும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளதுடன் எமக்கு வருகின்ற அந்நியச் செலாவணியும் சகல வழிகளிலும் முடங்கிக் கிடக்கின்றன எனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க, நாடு பொருளாதார சிக்கலில் மூழ்கித்தத்தளிக்கின்றது எனவும் கூறினார். இராகலை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்; இந்த அரசிடம் முறையான அபிவிருத்தித்திட்டம் இன்மையாலும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கையாலும் நாடு பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கடன் வழங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. நாட்டை மீட்டெடுக்க முதற்கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அணிதிரண்டு வாக்களியுங்கள்.

மத்திய மாகாணசபையை கலைக்கும் வரை நான் போட்டியிடுவது அரசுக்கும் ஜனாதிபதிக்கும் தெரியாது. அறிந்திருந்தால் மாகாணசபையை கலைத்திருக்கமாட்டார்கள். நான் போட்டியிடுவதைத் தடுக்கப் பல வழிகளிலும் முயற்சித்தனர். முடியாது போனதால் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது பல சட்டவல்லுநர்களை அனுப்பி வைத்து என்னை அகற்ற முயற்சி செய்தனர் . ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போது கண்டியில் முகாமிட்டு அரச பயணத்தில் அனைவருக்கும் உணவும் , பெண்களுக்கு சாறியும் , ஆண்களுக்கு சாரமும் , பாடசாலை உபகரணங்களும் வழங்கி வாக்கு வேட்டையில் இறங்கியுள்ளனர். இவை அனைத்தும் எனதும் ஐ.தே.க.வினதும் வெற்றியின் உறுதியைக் கண்டு கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு உள்ளது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் உண்டு. அரசியல் சாசனத்திலேயே உள்ளது. இங்குதான் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. அரசுக்கு எதிரானவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஊடகத்தை சேர்ந்தவர்களும் கொலை செய்யப்படுகின்றனர். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதையே விரும்புகின்றோம். அனைவரையும் அரவணைத்தே தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

ஜனாதிபதியோடு தொண்டமானும் சந்திரசேகரனும் இணைந்துள்ளனர். இங்கு அவர்களுக்கு மரியாதை கிடையாது. அடிமட்டத்தில் தான் இவ்விருவரையும் நடத்துகின்றார். இரண்டரை வருடமாக மலையக மக்கள் படும் அவலத்திற்கு இவ்விருவரும் என்ன செய்தனர்? நான் இவ்விருவரையும் இத்தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு அழைத்தேன். அதற்கு அவர்கள் இத்தேர்தலில் வரமுடியாது. பொதுத் தேர்தலுக்கு வருகின்றோம் என்கின்றனர். மக்களுக்கு சேவை செய்ய சௌமியமூர்த்தி தொண்டமான் ஒருவரால் தான் முடியும். ஆறுமுகனால் முடியாது.

இம்முறை திறமையான தமிழ் வேட்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் வெற்றிபெற்று நல்ல சேவை செய்வார்கள். கண்டியில் 13 ஆசனமும் ஐ.தே.க. வசமாவது உறுதி. அதே போன்று நுவரெலியாவிலும் மாத்தளையிலும் எமது வேட்பாளர்கள் வெற்றிபெற்று மத்திய மாகாணசபையைக் கைப்பற்றுவோம். இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பேன். உலக நாடுகளிடமிருந்தும் உதவிகளை இம்மாகாணசபைக்குப் பெற முடியும். பெற்றுப் புதிய முயற்சிகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்பு, மின்சாரவசதி, பாடசாலை அபிவிருத்தி ,பாதை அபிவிருத்திகளை மேற்கொள்வோம்.

இக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வேட்பாளர்களான ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் செயலாளர் சதாசிவம் , ஜகத் சமரஹேவா, ரவீந்திரன் ஆகியோரும் உரையாற்றினர்.

சாலைப்பகுதித் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி மரணம்

வன்னியை விடுவிக்கும் நடவடிக்கையின் மிக முக்கிய இலக்கை அடைந்துள்ள படையினர் சாலைப்பகுதியில் நடத்திய தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி உட்பட 4 பேரை நேற்று (பெப்:04) கொல்லப்பட்டதாக படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  நேற்று பிற்பகல் 1.45 மணிமுதல் 2.00 மணிவரை தாக்குதல் நடத்திய 55 வது படைப்பிரிவினர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளத்தை கைபற்றினர். இத் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதியான வினாயகம் கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்ட போது எல்ரிரிஈயினருக்கு இவர்கள் இறந்த உடல்களை தேடமுடியாமல் படையினரின்  தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை பூநகரி கடற்புலிகளின் பொறுப்பாளர் காதர் எனும் பஹலவனும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என மேலும் கடற்புலிகளின் விசேட தளபதியான சின்னக்கன்னன் நேற்றுக் காலை 8.50 மணியளவில் நடந்த பிறிதொரு தாக்குதலில் இப்பகுதியில் வைத்து கொல்லப்பட்டுளார். இவர் கொல்லப்பட்ட பின் அவர்களின் சொந்தப்பானியில் லெப்டினன் கேனல் பதவி உயர்வும் வழங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர். இம்மோதல்களில் 8 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதும் ஊர்ஜீதம் செய்துள்ளனர்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் புலிகளின் கடல் மூழ்கிப்படகு

dayata_kirula.jpgதேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (பெப்:04) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் திறந்து வைத்தார்.

இலங்கையின் வரலாறு அதன் கௌரவம் பற்றிய அறிவு, மஹிந்த சிந்தனையின் பிரகாரம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டம் என்பன பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவதாகும். கண்காட்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும் இதில் இராணுவத்தினால் அன்மைக்காலத்தில் வெற்றி கொண்ட ஆயுதங்கள் படைக்கலங்கள் என்பனவும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களும்  சிரந்தி ராஜபக்கக்ஷ அவர்களும்  எல்ரிரிஈ யினரிடமிருந்து கைபற்றிய கடல் மூழ்கிப்படகை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்

800 மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

wanni-civilans.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து  800 க்கு மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பிரதேசங்களுக்கு வந்துள்ளரென பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முரளிதரன் ‘ஒரு நாள் போட்டியி’லும் உலகசாதனை

_murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதியவர் என்ற உலக சாதனையை இன்று (05.02.2009) ஏற்படுத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது கௌத்தம் கம்பீரின்  விக்கெட்டை கைப்பற்றிய முரளிதரன் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் அவர்களின் சாதனையான 502 விக்கெட்டுகள் என்கிற இலக்கைத் தாண்டி 503  விக்கெட்டுகள் பெற்று  புதிய உலக சாதனை சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று தனது 328 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய போதே முரளிதரன் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற பெருமையும் முரளிதரனையே சாரும். 125 டெஸ்ட் போட்டிகளில் அவர் 769 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

Top-Five Bowlers 

Player                  Team          Matches       Wkts 

M Muralitharan      SL                 328                   503 
Wasim Akram         Pak               356                   502 
Waqar Younis         Pak                262                   416 
C Vaas                      SL                  322                   401 
SM Pollock               SA                 302                   391