வடக்கில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசு தெற்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த 17 ஆவது திருத்தத்தை அமுலாக்க வேண்டும்

வடக்கில் பயங்கரவாதத்தை அழிக்கும் அரசாங்கம் தெற்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்த 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரியுள்ளதுடன். பொலிஸார் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது; மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு தோல்வியை தழுவுமெனத்தெரிந்துள்ள நிலையில் அங்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களை கைது செய்யும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.

அதாவது நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. வேட்பாளர்களான திகாம்பரம் மற்றும் முருகையா ரவீந்திரன் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை கைது செய்யுமாறு அங்குள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பக்ஸ் அனுப்பப்பட்டுள்ளது. தோட்ட மக்கள் பெருமளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களின் வருமானம் 50% வீதத்தால் விழ்ச்சிகண்டுள்ளது. தேயிலை விலை வீழ்ச்சியினால் தொழில் இல்லை. மலையக இளைஞர்கள் கொழும்பு உட்பட ஏனைய நகரங்களுக்கு சென்று பணிபுரிகின்ற போது கைது செய்யப்படுகின்றனர். தோட்டப்புற மக்கள் இவ்வாறு சகல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு நன்மைகளை பெற்றுக் கொள்ளும் ஒரேமார்க்கமான மாகாண சபைத் தேர்தலில் அம்மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனை, குழப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்கம் வடக்கில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கொண்டு தெற்கில் ஜனநாயகத்தை இவ்வாறு மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையடுத்து கவலையடைகின்றோம். அதாவது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் ஊடகமும் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். மாகாண சபைகளை ஒன்றாகக் கலைத்து தேர்தலை நடத்தாது பிரித்து தனித்தனியே தேர்தலை நடத்தி தனது இலாபத்துக்காக தான்தோன்றித்தனமாக மக்களின் பணத்தை நாசம் செய்கின்றது. எனவே அரசாங்கம் ஜனநாயகத்தை மீறும் வகையில் செயற்படக் கூடாது. முதலில் 17 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம். இதன் மூலம் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்படும்.

இதன் மூலம் பொலிஸ் மற்றும் தேர்தல் உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களும் அமைக்கப்படும் இவ்வாறு அமைக்கப்படுமாயின் மோசமான சம்பவங்கள் தடுக்கப்படும். எனவே இதனை அமுல்படுத்துமாறு அரசிடம் கேட்கின்றோம். இதேவேளை மத்திய மாகாணத்தில் அமைச்சர்கள் அரச சொத்துகளையும் வளங்களையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலைகளை மூடி ஆசிரியர்களை தேர்தல் பிரசாரத்துக்கு அழைப்பது தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும். மத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர்களாக சரத் ஏக்கநாயக்கவுள்ள நிலையில் சுவரொட்டிகளில் ஜனாதிபதியின் படமே உள்ளது. இந்நிலையில் சரத் ஏக்கநாயக்கா தேர்தல் வேற்றிக்காக செயற்படவில்லை என்பது தெரிய வருகின்றது.

பாலித ரங்கபண்டார தனது தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு வாடகைக்காரை அமர்த்தியுள்ளார். அக்காரின் இலக்கத்தகட்டிலுள்ள இலக்கமும் வேறு ஒரு வாகனத்தின் இலக்கமும் ஒன்றாகவுள்ள நிலையில் இது தொடர்பில் ரங்கபண்டாரவை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டுள்ளனர். இதையடுத்து இவ்வாகனத்தின் உரிமையாளர் பொலிஸில் சென்று இது தொடர்பில் தெரிவித்துள்ளார். இவரைக் கைது செய்ய அவரது மெய்ப்பாதுகாவலரொருவரை அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யுமாறு கேட்டுள்ளதுடன் அச்சுறுத்தியும் உள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ளோம். தற்போது இவ்வாறு இடம்பெறுவதற்கு காரணம் பொலிஸார் அரசியல் மயப்படுத்தப்படுவதே காரணமாகும். எனவே 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோருகின்றோம். இதன் மூலம் பொலிஸார் சுயாதீனமாக செயற்பட வழிவகுக்குமென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *