செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தொழிலாளர் ஐக்கியம் பிளவு படாமலிருக்க இம் மேதினத்தில் உறுதியெடுப்போம் -ஐக்கிய தோட்ட தொழிலாளர் சங்கம்

may-day.jpgஉலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உயிர்ப்புத் தினமும் உரிமைத் தினமுமான உன்னத மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் இன்னல்களையும் எதிர்ப்புகளையும் கண்டுவரும் காலகட்டத்திலேயே மீண்டுமொரு மே தினம் இன்று வந்துள்ளது.

இவ்வாறு ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.பி.கணபதிப்பிள்ளை விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

திசைமாறிப்போகும் மேதினம் களியாட்டங்களுக்கு கைகொடுக்கின்றதே தவிர, தொழிலாளரின் அவஸ்தைகளை தூரவைத்தே பார்க்கின்றது. உழைப்புக்கேற்ற ஊதியமில்லாத நிலையில், விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும் அமைதியற்ற சூழலும் தொழிலாளர் நசுக்கப்படுவதை நிரூபணமாக்கிறது. அரசியல்மயப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே தொழிலாளரின் ஒற்றுமை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன. தொழிலாளரின் சீர்குலைவானது அவர்களைச் சுரண்டும் கம்பனிகாரர்களுக்கு மாத்திரமல்லாமல் அரசுக்கும் கூட இலாபமாக அமைகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிந்து அடுத்த கட்ட நகர்வு என்னவென்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வு கிடைக்கவென போராடியும் வீண்வாத பிரதிவாதங்களால் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் ஐக்கியம் பிளவுபடாமல் போவதையும் தடுத்து நிறுத்த இம் மே தினத்தில் உறுதிபூணுவோமாக. தொழிலாளர் வர்க்கத்திற்கும் அவர்களது போராட்டத்திற்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள்.

ஷெல் – 191/=, லாஃப் – 238/= சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.  “ஷெல்” சமையல் எரிவாயுவின் விலை 191 ரூபாவாலும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை 238 ருபாவாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன்படி 1309 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட “ஷெல்” சமையல் எரிவாயு நேற்று நள்ளிரவு முதல் 1500 ருபாவுக்கும் 1069 ரூபாவுக்கு விற்கப்பட்ட “லாப்” சமையல் எரிவாயு 1307 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது. உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றமே இவ் அதிகரிப்புக்கு காரணமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது.

சமையல் எரிவாயு விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஒரு வருடத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒர தடவையாக ஆறு முறை அதன் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதனடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி வரையான காலப் பகுதியில் “ஷெல்” மற்றும் “லாப்” சமையல் எரிவாயுவின் விலை அடுத்தடுத்து குறைவடைந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் 358 அமெரிக்க டொலர்களாகவிருந்த ஒரு மெற்றிக் தொன் உலக சமையல் எரிவாயுவின் விலை தற்போது 480 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மேமாத்துக்கான விலைதிருத்தத்தில் தவிர்க்க முடியாத அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

“ஷெல்” நிறுவனம் 337 ரூபா வரையிலும் “லாப்” நிறுவனம் 250 ரூபா வரையிலும் விலையதிகரிப்பு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் பாவனையாளர்கள் நன்மை கருதி முறையே 191 ரூபா மற்றும் 238 ரூபா விலையதிகரிப்பை மேற்கொள்ளவே நுகர்வோர் அதிகார சபை அனுமதித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு சீனி, பருப்பு ஆகியவை ஆகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன.

அதற்கான சுற்று நிருபமும் நேற்று நள்ளிரவு முதல் காலாவதியாகியிருப்பதால் மீண்டும் அவை பழைய விலைக்கே விற்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். பால்மா, சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்து விநியோகிப்பதற்காக உலகச் சந்தையில் ஆகக் குறைந்த விலைகளில் அவற்றை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முடியாத உறுதிமொழிகளைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது

parameswaran_.jpgபிரித் தானியாவில் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் என்ற மாணவனினால் 25-வது நாளாக முன்னெடுக்கப்பட்ட பட்டினிப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மதியம் நாடாளுமன்ற உறுப்பினர் Simon Huges பழச்சாறு கொடுக்க முடிவுக்கு வந்துள்ளது.  பிரித்தானியா அரசு தனக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறுத்தியுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் தன்னுடைய போராட்டம் தொடரும் எனவும் தெரித்தார்.

பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய சில வெளியிடப்பட முடியாது உறுதி மொழிகளை அடுத்தே இவரது பட்டினிப் போராட்டம் முடிவுக்கு வருவதாக சுப்பிரமணியம் பரமேஸ்மரனினால் விடுக்கப்பட்ட ஊடகச் செவ்வியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்கு சில நிர்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் சில விடயங்களை கூறமுடியாது உள்ளது. எனினும் எமது மக்களுக்கு சில விடங்களை தெரியப்படுத்த வேண்டிய கடமை உள்ளது.

பட்டினிப் போராட்டத்தைத் தொடர்வதன் ஊடாக எமக்கு கிடைத்த சில சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போகின்றன. அந்த வகையில் இரண்டு மூன்று முக்கிய சந்தப்பங்கள் இப்போது கிடைத்துள்ளன.

பட்டினிப் போராட்டத்தை கைவிடுவதன் ஊடாகவே இச் சந்தப்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்டுள்ள சில நிர்பந்தங்களால் அவற்றை வெளிப்டையாகக் கூறமுடியாது உள்ளது.

எனினும் எமது மக்களுக்கு அவற்றைத் தெரியப்படுத்தக் கடமைப்பட்டுள்ளேன். பிரித்தானியாவில் இரண்டு அல்லது மூன்று உயர் முக்கிய சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதுவும் பட்டினிப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே இச்சந்திப்புக்கான வாய்ப்புகள் கிடைக்கும் என உத்தவாரம் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தாது போனால் தீர்வுகளும் கிடைக்காமல் போய்விடும். எமக்கான தீர்வினை அறுவடை செய்ய வேண்டும் என்றால் அதற்காக சில காலம் பொறுத்திருக்க வேண்டும். சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இன்னும் சிறுதி காலத்தில் என்ன நடந்தது என்பதை அனைவரும் தெரியப்படுத்துவோம்.  அது எமது தலையாய கடமை என்பதைக் கூறி எனது பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்கின்றேன் என பரமேஸ்வரன் ஊடகச் செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.

பரமேஸ்வரனின் உடல்நிலை மிகவும் தளர்ந்த நிலையில் அவரை பிரித்தானியா அவசர சிகிச்சை பிரிவினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின் நாடாளுமன்றத்தில் அவர் சில சந்திப்புகளை தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரனின் 24 நாள் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மாணவர்களால் சுழற்சி முறையிலான உண்ணாநிலை போராட்டம் தொடர்கின்றது.

பரமேஸ்வரனின் உண்ணாநிலை இடை நிறுத்தப்பட்டாலும் தங்களுடைய போராட்டம் மக்களின் ஆதரவுடன் தொடரும் என மாணவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டம் தமிழ் மக்களால் பரமேஸ்வரனின் கூடாரத்தில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

‘ஈழத் தாய்’ ஜெயலலிதா- ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம்

j-j-j.jpgதனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு புலம் பெயர்ந்து வாழும் ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.

தனி ஈழம் அமைப்போம் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தென்துருவத் தமிழ் சங்க சம்மேளனம் தலைவர் சிற்றம்பலம் ராகவன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்ற இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். ஆறுதல் அடைகிறோம்…

அண்மையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவல நிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.

இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது. இதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அதிமுக கட்சிக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர ஈழமே. இதனை வலியுறுத்தி தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகிறோம்.

இவை சம்பந்தமாக தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கம் எம்.பி.யை நாடுகடத்துங்கள் – காங்கிரஸ் : இந்திய சட்டத்தை நான் மீறவில்லை -சிவாஜிலிங்கம்

sivajilingam0.jpgதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கத்தை நாடு கடத்த வேண்டும் என தமிழகக் காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்தவர் சிவாஜிலிங்கம், இவர் தற்போது யாழ்ப்பாணப் பகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் தமிழகம் வந்திருந்த இவரை மத்திய அரசு உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம், பிரதமர் மன்மோகன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.

அதில், இலங்கை எம்.பி.சிவாஜிலிங்கம் இந்திய அரசியல்வாதிகளைப் போல தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இது தவறானது. சர்வதேச கடவுச்சீட்டு விதிகளின்படியும் வேறுநாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றொரு நாட்டு அரசியலில் தலையிடக்கூடாது. ஆனால், சிவாஜிலிங்கம் இந்த இரண்டு விதிமுறைகளை மீறிவிட்டார். அவர் தற்போது தென்சென்னை பா.ஜ.க.வேட்பாளர் இல.கணேசனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றியும், மத்திய மற்றும் தமிழக அரசுகள் பற்றியும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனது பிரசாரம் செய்து வருகிறார்.

அவரது நடவடிக்கை கடுமையான தண்டனைக்குரியதாகும். எனவே, இந்திய அரசியலில் குழப்பம் விளைவிக்க முயன்றுள்ள சிவாஜிலிங்கத்தின் கடவுச்சீட்டை உடனடியாக ரத்துச் செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என தந்தியில் சுதர்சனம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் சிவாஜிலிங்கம். காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகார் மனுக் குறித்து அவர் கூறுகையில்;

“தேர்தலில் பிரசாரம் செய்து, குறிப்பிட்ட கட்சியை வெற்றிபெற வைப்பது எனது நோக்கமல்ல. அழிக்கப்பட்டு வரும் எனது இன மக்களைக் காக்க எந்தெந்த தலைவர்களை சந்திக்க முடியுமோ, ஆதரவைக் கேட்க முடியுமோ அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன். அதேபோன்று, பா.ஜ.க.தலைவர்கள் அத்வானி,  இல.கணேசன் ஆகிய இருவரும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு நன்றி தெரிவிக்கவே சென்றேன். இந்தியா சட்டம் மற்றும் சர்வதேச கடவுச்சீட்டு சட்டம் எதையும் நான் மீறவில்லை. இதை அரசியல் ஆக்குவது சுதர்சனத்துக்கு நல்லதா கெட்டதா என்பதை அவரே முடிவு செய்யட்டும். உள்ளூர் அரசியல் சர்ச்சைகளில் நான் ஈடுபடவில்லை’ என்றார்.

இடம்பெயர்ந்த மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்ற யுனிசெப் தொடர்ந்தும் செயற்படும்

fily-ap.jpgவிமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 50 தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று கொழும்பில் இறக்கப்பட்டதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இவை கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக நீடித்த கடும் சண்டையால் இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் துரிதமாக வடபகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்தப் பொருட்களில் போஷாக்குப் பண்டங்கள், நீர் சுத்திகரிப்புக் கருவிகள், உடலில் இருந்து நீரிழப்பை தடுக்கும் உப்பு, மருந்துவகைகள் போன்றவை உள்ளடங்கும். தொடர்ந்து மேலும் பல பொருட்களை விமானம் மூலம் எடுத்து வரப்படவுள்ளன.

யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப்பே துவாமெல்லே இதுதொடர்பாக தெரிவித்துள்ளதாவது; “துரித பதில் நடவடிக்கைகளை கோரி நிற்கக்கூடிய மனிதாபிமான நெருக்கடியொன்றை இலங்கை எதிர்கொள்கிறது’. “சுமார் இரண்டரை இலட்சம் பேருக்கு உதவி தேவையெனவும், அந்த உதவி துரிதமாக தேவை எனவும் நாம் மதிப்பிட்டுள்ளோம்.’

கடந்த வாரம் யுனிசெவ் ஸ்தாபனம் இடம்பெயர்ந்த மக்களுக்கு அதிசக்தியுள்ள 50 மெட்ரிக் தொன் பிஸ்கட்டுகளை அனுப்பி வைத்திருந்தது. அதற்கு முன்னதாக, போஷாக்கின்மையைப் போக்குவதற்காக 130 மெட்ரிக் தொன்னுக்கு மேலான போஷாக்குப் பதார்த்தங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்தக் காலப்பகுதியில் பிள்ளைகளுக்குரிய கற்றல் உபகரணங்களை விநியோகித்ததுடன் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பல்லாயிரக்கணக்கான தொகுதிகளையும், பல நூற்றுக்கணக்கான நீர்த்தாங்கிகளையும், மலசலகூடங்களையும் பெற்றுக் கொடுத்ததுடன், வவுனியா பொது வைத்தியசாலையில் குழந்தை நல மற்றும் மகப்பேற்று வார்ட் ஒன்றை நிர்மாணிக்கவும் உதவியது.

வடக்கின் நிலைவரம் சிறுவர்களுக்கு பேரனர்த்தத்தை விளைவிப்பதாக அமைந்துள்ளது என்பதை வலியுறுத்துவதுடன், இங்கு பெருமளவு சிறுவர் சிறுமியர் அடங்கலாக பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் சிக்கியிருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

இருதரப்பு துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு மத்தியில் சிக்குவது மாத்திரமன்றி, இந்த மக்கள் போதிய உணவு, குடிநீர் மற்றும் மயக்கமருந்துகள், நுண்ணுயிர்க்கொல்லிகள் போன்ற அடிப்படை மருந்துப்பொருட்கள் போதியளவில் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

நெருக்கடிப் பிரதேசத்தில் இருந்து தப்பிய மக்கள் பெரும்பாலும் சோர்வடைந்தவர்களாகவும் பட்டினி மிக்கவர்களாகவும் , அனேக தருணங்களில் காயமடைந்தவர்களாகவும், போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் சனநெரிசல் மிக்க முகாம்களை வந்தடைகிறார்கள்.

இந்த மக்களின் சுகாதார, போஷாக்கு, குடிநீர், மலசலகூட, பாதுகாப்பு, கல்வித் துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாக அவசியப்படுகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவது அத்தியாவசியம் : நியூயோர்க்கில் ஜோன் ஹோம்ஸ்

UN_Logoமோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்தத்தினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் மாத்திரமன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியூயோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்கு இல்லை. அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினர் எல்ரிரிஈயினரின் கடைசி பகுதியை அண்மித்துள்ளனர் – பாதுகாப்பு அமைச்சு

navy.jpgஇரட்டை வாய்கல் தெற்கு பகுதியில் 7 சதுரக்க கி.மீ.பரப்புக்குள் எல்ரிரிஈயினரை முடக்கியுள்ள இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈயினர் பதுங்கியுள்ள இடங்களை அண்மித்துள்ளதாகவும் எல்ரிரிஈயினர் கடைசி சண்டைக்கு எதிர்பார்த்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

58வது டிவிசன் படையினருக்கு பக்கமாக படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 53வது டிவிசன் படையினர் முள்ளிவாய்கல் மேற்கு பகுதியில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 15,000 -20,000 வரையான சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரையமுள்ளிவாய்கல் பகுதியில் கண்ணிவெடிகளையும் அகற்றிக்கொன்டு பயங்கரவாதிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் நுளைந்துள்ளனர்.இதன்போது 15 எல்ரிரிஈயினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

ஒரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றுவதே தேர்தல் கால வாக்குறுதிகளின் உண்மையான நிலையாகும் – அநுர பிரியதர்ஷன

anura_priyadarshana_yapa.jpgஇலங்கையில் தனி ஈழம் அமைத்துத் தருவேன் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி  ஜெயலலிதா தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள தேர்தல் வாக்குறுதிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் தகுந்த பதிலளித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலலிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில், எந்தவொரு நபருக்கும் வேறு ஒரு நாட்டைத் துண்டாட உதவியளிப்பதாகக் கூறமுடியாது. இந்தியவைத் துண்டாட வெளிநாட்டவர் ஒருவர் உதவுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளுமா? என்றும் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

எனவே கேள்வியும் அவர்களுடையதே. பதிலும் அவர்களுடையதே. இதில் தலையிடவேண்டிய அவசியம் எமக்கில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கருணாநிதியும் ஜெயலலிதாவும் மோதிக் கொள்கின்றனர். இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஓரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றுவதே தேர்தல் கால  வாக்குறுதிகளின் உண்மையான நிலையாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

“நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால்,  இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக வாக்களப் பெருமக்களைக் கவரும் விதத்தில் தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை

keheliya_rambukwella.jpgவெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான தேசியக் கொள்கை ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்பரி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் தொடர்பான தேசியக்கொள்கை ஒன்று குறித்து விளக்கமளிக்கவும் வெளிநாட்டுச் செலாவணி மற்றும் மாற்று வழிகளில் வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு அளிக்கின்ற பங்களிப்பை வரவேற்பதும் இதன் நோக்கமாகும்.