மோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்தத்தினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் மாத்திரமன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியூயோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
தற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்கு இல்லை. அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.