செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழர் படுகொலையில் நம்பியார்கள் சதி- நடவடிக்கை கோரும் ராமதாஸ்

03-satish-nambiar-vijay-nambiar.jpgதமிழர் களை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சதிக்கு பின்னணியில் இருந்த விஜய் நம்பியார், அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

உங்களுக்கு இருக்கும் திறமையையும் அனுபவத்தையும் கொண்டு அரசு நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும், கொள்கைகளை வகுப்பதிலும் புதிய தரத்தை ஏற்படுத்துவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். இப்போது எங்களுக்கு இருக்கும் கவலையெல்லாம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்துதான். இலங்கையைப் பொறுத்தவரையில் நமது வெளியுறவுக் கொள்கை பெருங்கேடு விளைவித்து வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது இரண்டு முதன்மையான காரணங்களுக்காகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

வன்னிப் பகுதியில் அண்மையில் முடிவடைந்துள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஜெர்மனியும் வேறு 16 நாடுகளும் விடுத்த வேண்டுகோளை விவாதிப்பதற்காகக் கடந்த மே 26ம் தேதி சிறப்புக் கூட்டம் ஒன்றை ஐ.நா. மனித உரிமை மன்றம் கூட்டியிருந்தது. தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அஞ்சிய இலங்கை அரசு, எதிர் நடவடிக்கை எடுத்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் துணையுடன் இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் ஒப்புதலுடன் தானே உருவாக்கிய தீர்மானம் ஒன்றை இலங்கை சுற்றுக்கு விட்டது.

இலங்கை அரசின் இந்தத் தீர்மானமும், ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் இந்தியத் தூதரான ஏ.கோபிநாதன் இத்தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசியதும், ஐ.நா. மனித உரிமை மன்றம் ஒரு பிற்போக்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு வழிவகுத்தது. இத்தீர்மானம் உலகம் முழுவதும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. இப்போது இருள்படிந்த அமைப்பாக மாறிவிட்ட ஐ.நா. அமைப்பு வரலாற்றில் மிகவும் கோட்பாடற்ற, வெட்கமற்ற முறையில் நிறைவற்றப்பட்ட ஒரு தீர்மானம் இதுவாகத்தான் இருக்கும்.

வெறுக்கத்தக்க இத்தகைய தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு அது நிறைவேற வழிவகுத்திருப்பது இந்தியாவுக்கும் அதன் வெளியுறவுக் கொள்கைக்கும் பெரும் இழிவை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் இப்போது ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனின் தலைமை செயலாளராக இருப்பவருமான விஜய் நம்பியார் இந்த இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கடுமையாகக் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. விஜய் நம்பியாரின் சகோதரரும், ஊதியம் வாங்கிக் கொண்டு இலங்கைப் படைக்கு கருத்துரையாளராக இருப்பவருமான ஓய்வுபெற்ற இந்தியப் படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார் தான் `தமிழர்களை அழித்தொழிக்கும்’ இந்த சதி முழுவதற்கும் பின்னணி என்று கூறப்படுகிறது.

இந்த விஷயம் குறித்து உடனடியாக விசாரணைக்கு ஆணையிடுமாறு உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். அதற்கிடையே, இப்போதுள்ள முதன்மையான பொறுப்புகளில் இருந்து இந்த அதிகாரிகள் அனைவரையும் நீக்க வேண்டும். ஐ.நா.வில் பணியாற்ற விஜய் நம்பியாருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தைத் திரும்பப்பெற வேண்டும்.

இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக ஓய்வுபெற்ற லெப்டினனட் ஜெனரல் சதீஷ் நம்பியாருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசின் ஆவணங்களில் இருந்து இந்த இழுக்கும், கறையும் அகற்றப்படாத வரையில், இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிப்படி நல்லாட்சியை, பொறுப்பான ஆட்சியை வழங்குவது உங்களால் இயலாத ஒன்றாகிவிடும்.

இவ்வாறும். ராமதாஸ் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து அரசியல் தீர்வு ஒன்றை எட்ட முன்வரவேண்டும் – எஸ்.பி.திஸநாயக்கா

s-b-d.jpgதமிழர் களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுடனும் அரசுடனும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்  இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி. திஸநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

புலிகள் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் இப்போது முடிவுற்றுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வின் தேவை அதிகரித்துள்ளது. தமது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிகாரப் பகிர்வைக் கோருகின்ற தமிழ் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமையால்தான் தமிழீழக் கோரிக்கை தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டது.

அந்தத் தமிழீழக் கோரிக்கையை அடிப்படையாக வைத்து உருவான புலிகள் அமைப்பு இன்று முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் வழிமுறையான அரசியல் தீர்வின் தேவை இல்லாது செய்யப்படவில்லை. அரசியல் தீர்வின் தேவை இப்போதுதான் வலுவடைந்துள்ளது. இந்தத் தீர்வைப் பெறுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடனும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுடனும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதிருக்க வேண்டும் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது இந்தக் கோரிக்கையை ஏற்றுச் செயற்பட வேண்டும்  என்றார். 

இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் சபாநாயர் – முதல் தலித் பெண் சபாநாயகர்

0-meera-kumar-india.jpgஇந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மூத்த காங்கிரஸ் தலைவர் மீரா குமார் இன்று போட்டியி்ன்றி தேர்வு செய்யப்பட்டார். அதே போல பா.ஜ.க.வின் மூத்த தலைவரான கரியா முண்டா துணை சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

15ஆவது மக்களவையின் சபாநாயகியுள்ள மீரா குமார் காங்கிரஸ் சார்பில் 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பையும் முதல் தலித் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நேற்றைய தினம் மீரா குமார் பெயரை முன் மொழிந்தும் வழி மொழிந்தும் ஆளும் காங்கிரஸ், எதிர்க் கட்சியான பா.ஜ.க மற்றும் பலவேறு கட்சிகளின் சார்பில் 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மீரா குமார் இன்று போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி இன்று வெளியிட்டார்.

அதே போல துணை சபாநாயகராக கரியா முண்டாவும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்.மீரா குமார், கரியமுண்டா இருவரும் இன்று தங்களது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அனைத்துக் கட்சி எம்பி்க்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

 03-meira-kumar.jpg

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு

uno.jpgஇலங் கையில் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுடன் வெள்ளிக்கிழமை விவாதிக்கவுள்ளனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனையாகும். இத் தகவலை ஐ.நாவுக்கான துருக்கியின் தூதர் பகி இல்கின் தெரிவித்துள்ளார். 15 நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பு இப்போது துருக்கியிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை , இலங்கை விவகாரத்தில் அண்டை நாடுகளோ, சர்வதேச சமுதாயமோ தலையிடக் கூடாது என்று சீனா மீண்டும் கூறியுள்ளது. உள்நாட்டுப் பிரச்சனையை இலங்கை அரசே கவனித்துக் கொள்ளும். சர்வதேச சமுதாயம் வேண்டுமானால் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளைத் தரலாம் என்று சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதில் சீனாவும் ஒன்று. இந்த நாடுகளிக்கு வீடோ அதிகாரம் உண்டு. அதன்படி ஐ.நா. பாகாப்பு சபையில் எடுக்கப்படும் எந்த முடிவையும் வீடோ அதிகாரத்தைக் கொண்டு சீனாவால் ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சபையில் உள்ள மற்ற 10 நாடுகள் சுழற்சி முறையில் தாற்காலிக உறுப்பினர்களாகவே இருக்க முடியும்.

யாழ், வவுனியா தேர்தல்களில் அ. இ. மு. காங்கிரஸ் போட்டி

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ளது.

வடக்கில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதி எடுத்திருக்கின்ற நடவடிக்கைகளுள் ஒன்றாக உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற இவ்வேளையில், கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக வடக்கில் இருந்து புலம் பெயர்ந்து வாழுகின்ற முஸ்லிம்கள், தமது தாயக மண்ணில் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

சமூக வியாபாரிகளும் அந்நிய சக்திகளின் தரகர்களும் இம்மக்களின் வாக்குகளில் சவாரி செய்ய எத்தனிக்கின்ற இவ் வேளையில் இம்மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய பொறுப்பு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கின்றது. எனவே இத்தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போட்டி யிட்டு தமது மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும்.

600 அநாதை சிறுவர்களை பொறுப்பேற்கிறது சிங்கப்பூர் பெளத்த சங்கம்

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களிடையே உள்ள 600 அநாதைப் பிள்ளைகளை பொறுப்பேற்று அவர்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் மகாகர்ணா பெளத்த சங்க மத ஆலோசகர் வண. அலவ்வே குணரத்ன தேரர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குச் சகலரும் இன, மத, பேதமின்றி சகல உதவிகளும் வழங்க வேண்டும். இந்த மக்களுக்கென சிங்கப்பூரில் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பன திரட்டியுள்ளோம். அவை கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளன. வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 10 வயதுக்குக் குறைவான பெற்றோரை இழந்த 350 பிள்ளைகளையும் 250 உயர் வகுப்பு மாணவர்களையும் நாம் பொறுப்பேற்க உள்ளோம்.

வடபகுதி மக்களுக்கு உதவுவதற்காக 100 பேர் கொண்ட சிங்கப்பூர் பிரஜைகள் குழுவொன்று இலங்கை வர உள்ளது. அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல உதவிகளும் வழங்கி வருகின்றனர். நாம் வருடாந்தம் பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்தில் அன்னதானம் வழங்கி வருகிறோம். இம்முறை மெனிக்பாமிலுள்ள தமிழ் மக்களுக்கு அன்னதானம் வழங்க அரசின் அனுமதியை கோரியுள்ளோம்.

வடக்கில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் எதிபார்க்கின்றது

yappa.jpgவடக்கில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த உள்ளதாகவும் அதன் ஓர் அங்கமாக அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அராசங்கம் தீர்மானித்ததாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்த ஏன் அவசரம் என ஜே. வி. பி. கேள்வி எழுப்பியுள்ளது. அங்கு இடம்பெயர்ந்த மக்களோ ஆயுதக் குழுக்களோ கிடையாது இப்பகுதிகளில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் முன்பு ஆயுதக் குழுக்களின் பிரச்சினை காணப்பட்டது. இன்று எதுவித வெளிப்பிரச்சினைகளும் கிடையாது. அதனாலே தேர்தல் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது.

2008 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்ட சகலரும் வாக்களிக்கலாம். சகல கட்சிகளுக்கும் எதுவித தடையுமின்றி போட்டியிட சந்தர்ப்பம் உள்ளது. எஞ்சிய உள்ளூராட்சி சபைகள் வடக்கு மாகாண சபை என்பவற்றுக்கும் தேர்தல் நடத்தி விரைவாக 13வது திருத்தச் சட்டத்தை வடக்கில் முழுமையாக அமுல்படுத்த உள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு 19 லொறிகளில் கல்வி உபகரணங்கள்

susil_prem_minister.jpgவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு 19 லொறிகளில் 130 மில்லியன் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் கல்வி அமைச்சிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வமாக இதனை உரிய அதிகாரிகளிடம் கையளித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை,  கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு அரசாங்கத்தினால் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மாணவ மாணவிகளுக்கான ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடைய தற்காலிகச் சீருடை,  மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மேசை, கதிரை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் 75 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள்,  அப்பியாசப் புத்தகங்களும்  இதிலடங்குவதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையான உபகரணங்களை நலன்புரி நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளைக் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்படும் தற்காலிக சீருடைகள் நலன்புரி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் அங்குள்ள ஆசிரியைகளுக்கு வழங்குவதற்காக 2,000 சேலைகளும் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். நேற்று எடுத்துச் செல்லப்பட்ட கல்வி உபகரணங்கள் நாளை மறுதினம் 5ம் திகதி அங்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

பிரித்தானிய தூதராலய இணையத்தளம் மாலைதீவில் ஆரம்பிக்கப்பட்டது

பிரித்தானிய தூதராலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று திங்கட்கிழமை மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
www.uinmaldives.fco.gov.lk எனும் இவ் இணையத்தளத்தை மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் நசீட் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்டிங் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகரின் இவ் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் பிரித்தானிய மற்றும் மாலைதீவிற்கான அரசியல் உறவுகள் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் இவ்விஜயத்தின் போது மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட், வெளிவிவகார அமைச்சர் அஹமட் சாகீட், பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல், வீடமைப்பு, சுற்றாடல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மொஹமட் அஸ்லம், பொலிஸ் ஆணையாளர் அஹமட் பாஸிஷ் உட்பட பலரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர்;

இவ் இணையத்தளமானது மாலைதீவு மக்கள் பிரித்தானியா பற்றிய தகவல்களை இலகுவில் பெற வழிவகுக்கும். அத்துடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சேவையை மாலைதீவிற்கு நெருக்கமாக்குமென்றும் தெரிவித்தார்.

மாலைதீவிற்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயம் கொழும்பிலேயே உள்ளது.

மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளம் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பணிகள், உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், பிரித்தானியா பற்றிய மேலதிக விபரங்கள், பிரித்தானிய கடவுச்சீட்டு மற்றும் விசாவிற்கு விண்ணப்பித்தல், அங்குள்ள கம்பனிகளில் முதலிடல் மற்றும் அவற்றிற்கு ஏற்றுமதி செய்தல், உயர்ஸ்தானிகராலயப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேராசிரியர் கிருஷ்ணராஜாவின் மறைவுக்கு தமிழ்ச்சங்கம் அனுதாபம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜாவின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்;

தமிழ் மொழியில் மெய்யியல் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு பலவழிகளிலும் தொண்டாற்றியவர் பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜா. மெய்யியலிலும் இந்துத் தத்துவத்திலும் பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழியலை நவீனப்படுத்துவதற்கு அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடம், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இயங்குவதற்கு துணைவேந்தருடன் இணைந்து பெரும் பணியாற்றி, தமிழ் மாணவர்களின் சட்டக்கல்வி வளர்ச்சிக்கும் பேராசிரியர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களுக்கும் அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.  அன்னாரின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.