செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பைபாஸ் ஆபரேஷன் வெற்றி – நலமாக இருக்கிறார் இந்திய பிரதமர்

pm-india.jpgஇதயக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்ய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று நடந்த பைபாஸ் ஆபரேஷன் வெற்றி பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பிரதமர் மாற்றப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இருதவியல் நிபுணரான டாக்டர் ரமாகாந்த் பான்டா தலைமையில் பெர்சனல் மருத்துவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி, டாக்டர் விஜய் டி சில்வா, டாக்டர் பிரதியோத் குமார் ராத், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நரேந்திர கரச் உள்ளிட்ட 11 பேர் கொண்ட மருத்துவர் குழு இன்று காலை ஏழே கால் மணிக்கு அறுவைச் சிகிச்சையை தொடங்கியது. தொடர்ந்து நடந்து வந்த அறுவைச் சிகிச்சை மாலை 4 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது.

முதல் கட்ட அறுவைச் சிகிச்சை மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. அடுத்து அதேபோல இரண்டு நடைமுறைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டன. இத்தகவலை ஆசிய இருதவியல் கழக டாக்டர் சுதிர் வைஷ்ணவ் தெரிவித்தார். முதல் அறுவைச் சிகிச்சைக்குத்தான் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பிடித்தது.

பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு விஜயம்

flag_uk.jpg
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்புக்கு நேற்று விஜயமொன்றை மேற்கொண்ட பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பீற்றர் ஹெய்ன்ஸ் மாவட்ட மறைமாவட்ட ஆயர், மாவட்ட அரச அதிபர் உட்பட உயரதிகாரிகளையும் சந்தித்து அங்குள்ள தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் அவர் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

லங்கா ஈ நியூஸ் பிரதம ஆசிரியர் 4ஆம் மாடியில் நேற்று தீவிர விசாரணை

லங்கா ஈ நியூஸின் பிரதம ஆசிரியர் சந்துருவன் சேனாதீர நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் (சி.ஐ.டி.) தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் முறைப்பாடொன்றையடுத்தே இவர் சி.ஐ.டி.யினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டையிலுள்ள சி.ஐ.டி.யினரின் தலைமையகமான நான்காவது மாடிக்கு வரவழைக்கப்பட்டே ஆறு மணிநேரத்துக்கும் மேலாக நேற்று தீவிர விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தி ஒன்று தொடர்பாகவே இவரிடம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்தச் செய்தி தொடர்பாக முன்னரும் லங்கா ஈ நியூஸ் அலுவலகத்துக்கு வந்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்
 

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடி தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பாரிய முகாம்கள் கண்டுபிடிப்பு

_army.jpgமுல்லைத் தீவு புதுகுடியிருப்புக்கு மேற்கில் அமைக்கப்ப ட்டிருந்த புலிகளின் கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உட்பட பாரிய முகாம் தொகுதி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் இரண்டாவது செயலணியினர் உடையார் கட்டுக்குள காட்டுப்பகுதியில் புதுகுடியிருப்புக்கு மேற்கே அமைந்துள்ள இந்த முகாமை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் படைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் இரண்டாவது செயலணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார தலைமையிலான படையினர் அங்கு பாரிய தேடுதலுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்ணிவெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டளை பணியகம் பாதுகாப்பான பதுங்கு குழிகள், மண் அரண்கள் மற்றும் சில களஞ்சியசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாரிய முகாம் தொகுதியாகவே இது அமையப் பெற்றுள்ளது.

அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலம் 3 வழி மின்சாரம் வழங்கப்பட்டுள்ள இந்த முகாமிலிருந்து ரி – 55 ரக சேதமடைந்த யுத்த தாங்கி – 01, பெருந் தொகையான கண்ணிவெடிகள், வெடிமருந்துகள், 81 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், 61 மி. மீ. ரக மோட்டார் குண்டுகள், பெருந்தொகையான பிளாஸ்டிக் கலன்கள், இரும்பு போலைகள், பற்றரிகள், பெருந்தொகையான சிலிண்டர்கள், மற்றும் வயர்களையும் மீட்டெடுத்துள்ளனர். இது தவிர பெருந்தொகையான பி. வி. சி. குழாய்கள் மற்றும் இரும்பு குழாய்களையும், களஞ்சிய பகுதியிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்தின் 57 வது படைப்பிரிவினர் தமது பாதுகாப்பு முன்னரங்குகளை மேலும் விஸ்தரித்துள்ளனர். அத்துடன் 574 வது படையினரின் கட்டளைத்தளபதி லெப்டினன்ற் கேர்ணல் சேனக விஜேசூரிய தலைமையிலான குழுவினர் நெத்தலியாறு பிரதேசத்தை ஊடுறுத்து விசுவமடுவின் மேற்கு எல்லை புரத்திற்குள் பிரவேசித்துள்ளனர். புதுகுடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் ஆறு சடலங்களையும் பெருந்தொகையான ரி – 56 துப்பாக்கிகளையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றம்

saudi-0301.jpg
கொழும்பிலுள்ள சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகம் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் 43 ஹோட்டன் பிளேஸ் கொழும்பு – 07 எனும் முகவரியில் செயற்படும் என்று தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஐ. எல். எம். மாஹிர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் கொழும்பு தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள போதிலும், தூதரகத்தின் அனைத்து அலுவல்களும் வழமைபோல் இடம்பெறுவதுடன் பழைய தொலைபேசி இலக்கங்கள் தொடர்ந்தும் பாவனையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலுள்ள புலிகளின் 3 இலக்குகள் மீது தாக்குதல்

jet-1301.jpgமுல்லைத் தீவிலுள்ள புலிகளின் அடையாளங் காணப்பட்ட மூன்று இலக்குகள் மீது விமானப் படையினர் நேற்று கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் ரக போர் விமானங்கள் மற்றும் எம் – ஐ 24 தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களும் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு நகருக்கு தென் பகுதி விசுவமடுவுக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் மற்றும் மண் அரண்கள் மீதே விமானப் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது, 59வது படைப் பிரிவினர்கள் மற்றும் இரண்டாவது செயலணியினர் ஆகியவற்றுக்கு உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனக நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

வன்னிச் சிறுவர்களின் நிலை ராதிகா குமாரசாமி கவலை

rathika-kumarasamy.jpgவன்னியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இடைநடுவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமை குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் விவகாரத்திற்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி விசனமும் கவலையும் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்திருக்கும் சிறுவர்கள் மற்றும் புலிகளால் போருக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக கவலை அடைந்திருப்பதாக ராதிகா குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

2008 இன் பின் அரையாண்டுப் பகுதியில் வட இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அதேசமயம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார்.

இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்படும் எந்தவொரு முகாமும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாகவிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உள்ளூர் மனிதாபிமான பணியாளர்களுடன் இலங்கை இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார். அத்துடன் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ராதிகா வேண்டுகோள்விடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வைய் பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பான பேச்சுக்களில் அரசாங்கம் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ள ராதிகா அதிகாரிகளும் மனிதாபிமான நடவடிக்கையிலீடுபடுவோரும் இந்த சிறுவர்களை தத்தமது குடும்பங்களுடன் சேர்ப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சிறுவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்களே அடுத்த தலைமுறையினராகும் சாத்தியமான அளவுக்கு அவர்கள் பாதுகாக்கப்படவேண்டியது அவசியம் என்றும் ராதிகா கூறியுள்ளார்.

நாளை மறுதினம் சூரியகிரகணம் – வெற்றுக் கண்களால் பார்க்காதீர்கள்!

lanka-map-02.jpgசூரிய கிரகணம் நாளை மறு தினம் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) இலங்கையில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகப் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில் நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்றுத் தெரிவித்தார்.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நேரடியாகவோ, சாதாரண கண்ணாடிகள் ஊடாகவோ, புகையூட்டப்பட்ட கண்ணாடிகள் மூலமோ, வர்ண புகைப்பட நெகடிவ்கள், எக்ஸ்ரே படமெடுக்கப்பட்ட நெகடிவ்கள் என்பவற்றைக் கொண்டோ பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான வழிகளின் ஊடாக சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் கண்பார்வை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், திங்களன்று சூரிய கிரணம் இலங்கையில் தென்படும். பிற்பகல் 1.59 மணி முதல் காலி பிரதேசங்களிலும், பிற்பகல் 2.03 மணி முதல் மாலை 4.12 மணி வரை கொழும்பிலும், பிற்பகல் 2.14 முதல் மாலை 4.10 வரை யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணம் தென்படும். இதனை கொழும்பில் பிற்பகல் 3.12 மணிக்கும், யாழ்ப்பாணத்தில் பிற்பகல் 3.15 மணிக்கும் முழுமையாகப் பார்க்கலாம். இச் சமயம் சூரிய கிரகணத்தில் 23 சதவீத முதல் 30 சத வீதம் வரை இலங்கையரால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

சூரிய கிரகணத்தை மொரட்டுவ கட்டுபெத்த ஆதர் சி கிளார்க் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விசேட முகாமிலிருந்த படியும், குருணாகல் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை விண்வெளி காட்சியத்திலிருந்த படியும் பொது மக்கள் பார்க்கலாம். அத்தோடு www.actimt.ac.lk  என்ற இணையதள முகவரியில் நேரடியாகவும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொறுத்துனர்கள் (welders)  பயன்படுத்தும் பாதுகாப்பு கண்ணாடியைப் பாவித்து சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம். சூரியனுக்கும், பூமிக்குமிடையில் நீல் வட்டப் பாதையில் வலம் வரும் சந்திரன், சூரியனுக்கும், பூமிக்கும் நேரெதிரே வருவதால் தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வருடம் இரண்டு சூரிய கிரகணங்களும், நான்கு சந்திர கிரகணங்களும், இலங்கையில் தென்படும். இவ்வருடம் தென்படுகின்ற முதலாவது சூரிய கிரகணமே 26 ஆம் திகதி தென்படவிருக்கிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி இங்கு தென்படும் என்றார். 

கற்பிட்டி சுற்றுலா வலய ஆரம்பப் பணிகளை ஆறு மாதத்திற்குள் ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்பு

president.jpgபுத்தளம் மாவட்டத்திலுள்ள கற்பிட்டி பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் எதிர்வரும் 06 மாத காலத்தினுள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கற்பிட்டியினை சுற்றுலா வலயமாக பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் (22) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

நான்காயிரம் ஏக்கர் பரப்புக் கொண்ட பிரதேசம் சுற்றுலா வலயமாக பிரகடனம் செய்யப்படவுள்ளது. உள்நாட்டவர்களையும், வெளிநாட்டவர்களையும் கவரும் வகையில் இதற்கான சூழல் அமைக்கப்படும். நவீன வசதிகளைக் கொண்ட நான்காயிரம் அறைகளுடன் கூடிய உல்லாச ஹோட்டல் ஒன்று இங்கே அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலா வலயத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை மேற்கொள்ளும் போது இப்பகுதியைச் சேர்ந்த அநேக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகெல்லாகம, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே. ஏ. பீ. ஜோர்ஜ் மைக்கல் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தம்மிக்க பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கென 30 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

bus.jpgசிசு செரிய” பாடசாலை பஸ் சேவை திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கென 30 பஸ்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதன் மூலம் நாடளாவிய ரீதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாடசாலை பஸ்களின் தொகை 522 ஆக உயர்கிறது. பாடசாலை பஸ் சேவை ஆரம்பிப்பது தொடர்பான வைபவம் 27 ஆம் திகதி காலை 10 மணிக்கு அனுராதபுரம் சீ. டீ. சீ. மண்டபத்தில் நடைபெற உள்ளதோடு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க உட்பட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு தனியார் துறையுடன் இணைந்ததாக மேற்படி “சிசு செரிய” பாடசாலை பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட முடிவுக்குள் ஆயிரம் பஸ்களை பாடசாலை பஸ் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அலஹப்பெரும கூறினார்.