இன்று மு.ப. 10.40 மணியளவில் மாத்தறை அகுரஸ்ஸை கொடபிட்டிய எனுமிடத்தில் போர்வை முஸ்லிம் ஜூம்ஆப் பள்ளிவாசல் அருகே குண்டு வெடிப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இருக்கும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரி ஒருவருடன் தேசம் நெற் தொடர்பு கொண்ட போது இத்தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தேசம் நெற்க்கு உடனடியாகத் தெரிவித்தார். இத் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் 14பேர் உயிரிழந்துள்ளதுடன் 46 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் அமைச்சர் மகிந்த விஜயசேகர பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளார். மாத்தறை வைத்திய நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவல் படி அமைச்சர் மஹிந்த விஜயசேகர உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, அமீர் அலி, மகிந்தயாப்பா உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் இன்றாகும். இன்றைய தினத்தை அரசாங்கம் தேசிய ரீதியில் வைபவமாகக் கொண்டாடுவதுண்டு. இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மீலாதுன் நபி விழா விழாக் கொண்டாடங்கள் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ கொடபிட்டிய எனுமிடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.
அமைச்சர்கள் விழாவில் பங்கு கொள்ள ஊர்வலமாக வருகை தந்திருந்த நேரத்தில் சைக்கிளில் வந்த குண்டுதாரர் ஒருவர் மூலமாக குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேசிய வைத்தியசாலை ஹெக்டர் வீரசிங்க தகவல் தருகையில் கொழும்பிலிருந்து விசேட பயிற்சி பெற்ற டாக்டர்கள் குழுவொன்று மாத்தறை வைத்தியசாலைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புகைப்படங்கள் lankadeepa.lk இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.