எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இடம்பெயர்ந்தோருக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க அரசு மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு

us_donates_medical_.jpgவடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க அரசாங்கம் 77 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற வைபத்தின்போது இலங்கைக்கான பிரதி அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் ஆர். மோர் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இந்த மருந்துப் பொருட்களைக் கையளித்தார். இந்த வைபத்தில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடிய கரிசனை கொண்டுள்ளார். விடுவிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் இப்பொருட்களை புலிகள் சூரையாடுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன எனக் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கியமைக்காக அமெரிக்க அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க பிரதித் தூதுவர், விடுவிக்கப்படாத பிரதேசங்களில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டினார் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

“ஏ9′ வீதியூடாக வாகனத் தொடரணி குடா நாட்டில் பொருட்களின் விலை வீழ்ச்சி

a9-food.jpgஏ9 பாதையூடாக தனியார் துறையினரும் பொருட்களை எடுத்துவர அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளமையால், குடாநாட்டில் பொருட்களின் விலை வெகவாக வீழ்ச்சியடைந்துள்ளன.  கடந்த வியாழக்கிழமை யாழ். மாவட்டத்துக்கு உப உணவுப்பொருட்கள் பழவகைகள் மென்பானங்கள், பிஸ்கட், பட்டர், மாஜரின், மருந்துவகைகள் என்பன பதினெட்டு லொறிகளில் எடுத்துவரப்பட்டமையால், கடந்த மூன்று வருடங்களின் பின்னர் நாற்பதுசதவிகித விலை வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

ஒன்றரை லீற்றர் மென்பானம் முன்னர் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் இதனை 160க்கு வாங்கமுடிகின்றது. மருந்துவகைகள், பிஸ்கட், மாஜரின், பட்டர், போடப்பட்டவிலையில் ஐந்துசதவீத அதிகரிப்பில் விற்பனையாகின்றன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களான சீனி, பருப்பு, அரிசி, டின்மீன், நவதானியம் என்பன கொழும்பு விலைக்கு விற்பனையாகின்றன. கொழும்பிலிருந்து குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

கப்பல்களில் பொருட்கள் வராவிட்டால் பதுக்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளும் அதனைக் கைவிட்டு பதுக்கிய பொருட்களை சந்தைக்கு விடத்தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்வரும் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு ஏ9 பாதையூடாக பொருட்களை எடுத்துவர பல வர்த்தகர்கள் அத்தியாவசிய தேவைகள் ஆணையாளருக்கு விண்ணப்பித்துள்ளனர். சுமார் 100 லொறிகளில் சித்திரை புத்தாண்டுக்கு அத்தியாவசிய பொருட்களை அரசு அனுப்பவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பில் உள்ள சில தனியார் நிறுவனங்களும் தமது உற்பத்தி பொருட்களை குடாநாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துவருகின்றன. உடு பிடவைகள், பாதணிகள், வீட்டு உபகரணங்கள் போன்றவையும் குடாநாட்டுக்கு ஏ9 பாதையூடாக எடுத்துவரப்படவுள்ளன.

இன்று ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் ஜனாதிபதி சந்திப்பு

euro_comm_.jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஆணைக் குழுவின் தூதுவர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி மீது துப்பாக்கிச்சூடு – 11 பேர் உயிரிழப்பு 40 க்கும் மேற்பட்டோர் காயம்

pakistan_attack.jpg பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் லாகூர் நகருக்கு அண்மித்த பிரதேசத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் மீது இனம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் 40 க்கும்  மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலின் போது துப்பாக்கிப் பிரயோகம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரை துப்பாக்கி நபர்கள் பணயக் கைதிகளாக எடுத்துச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய எல்லைப்புரத்துக்கு அருகிலுள்ள இந்த மனாவான் பொலிஸ் பயிற்சி நிலையத்தை நோக்கி நாலா புரத்திலிருந்தும் அந்தக்குழுவினர் முதலில் கைக்குண்டுத்  தாக்குதல் நடத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 

புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பதை விமானப்படை நிராகரிப்பு

விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு இலகு ரக விமானம் இருப்பதாக வெளியான செய்திகளை விமானப் படையினர் நிராகரித்துள்ளனர்.  விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு விமானம் இருப்பது தொடர்பாக தங்களுக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லையென விமானப் படை பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வன்னியில் புலிகளின் விமானமொன்று குடிசையொன்றில் நிறுத்தப்பட்டிருப்பதாக அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் தெரிவிப்பதாகக் கூறி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்த நிலையிலேயே விடுதலைப்புலிகள் வசம் மற்றொரு இலகு ரக விமானம் இருப்பதான செய்தியை விமானப் படையினர் மறுத்துள்ளனர்.

விமானப் படை பேச்சாளரின் தகவல்படி, கடந்த இரு வருடங்களில் புலிகளின் நான்கு விமானங்கள் படையினரால் அழிக்கப்பட்டுள்ளன. வடக்கில் தற்போது நடைபெறும் படை நடவடிக்கையின் போது புலிகளின் ஏழு விமான ஓடு பாதைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், தற்போது புலிகள் வசமிருப்பதாகக் கூறப்படும் விமானமானது, அவசர தேவை ஏற்படும் போது புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் செல்வதற்காக பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகப் பிரதிநிதிகளோடு காத்திரமானதொரு பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைத்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டும் இராணுவ நடவடிக்கைகளின் காரணமாகவும் புலிகளது பயங்கரவாத நடவடிக்கைளாலும் சிதைவடைந்துள்ள வடமாகாணத்தை மீள் கட்டமைப்பதற்கான பொருளாதாரத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நாட்டிலுள்ள சமூகங்கள் மத்தியில் இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களது பங்களிப்பைப்  பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்துடனான இந்த முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய இராச்சியம், கனடா, , அவுஸ்திரேலியா, நோர்வே, ஜேர்மனி, சுவிச்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பங்குபற்றியுள்ளனர்.

இச்சந்திப்பின்போது வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்தல் போன்ற அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. புலிகளது பலம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வலுவிழந்துபோயுள்ள நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமது பங்களிப்பை வழங்குவதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக இதனை அவர்கள் கருதுகின்றார்கள்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதலாவது அமர்வுக்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அவர்கள் தலைமை தாங்கியதோடு விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,  அரசியல்யாப்பு விவகார அமைச்சர் டியூ குணசேக்கர ஜனாதிபதியின் சிரோஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் திரு.லலித் வீரதுங்கா,  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹனவும் கலந்து கொண்டனர். தமிழ் பிரதிநிதிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி நொயெல் நடேசன் பங்குபற்றினார் என அறிவிக்கப்பட்டுள்ளது

சாலை மோதலில் 26 கடற்புலிகள் பலி! தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம்

gunboat.jpgமுல்லைத்தீவு சாலையில் நேற்று கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கடற்புலித் தலைவர்களுள் ஒருவரான மாறன் உட்பட 26 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சாலை கடற்பிரதேசத்தில் நேற்று இரவு புலிகளின் 4 படகுகளை அவதானித்த கடற்படையினர் அவற்றின் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். இன்று காலை வரை தொடர்ந்த கடற்படையினரின் தாக்குதல்களால் புலிகளின் 4 படகுகளும் நிர்மூலமாக்கப்பட்டதாக ஊடக நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

தந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை வட,கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகள்

thanthai-selva.jpgதந்தை செல்வாவின் 111 ஆவது பிறந்த தினம் நாளை செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. வவுனியா மணிக்கூட்டுச் சந்தியிலுள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெறவுள்ளன.

தந்தை செல்வா நூற்றாண்டு குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆலயங்களில் விஷேட பூஜைகளும் நடைபெற தமிழர் விடுதலைக் கூட்டணி வவுனியா மாவட்ட கிளை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதேபோல, யாழ்ப்பாணத்திலும் தந்தை செல்வா உருவச்சிலை அருகில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அகதிகளை ஏற்றிவந்த கப்பல் துப்பாக்கிச் சூட்டில் சிக்குண்டது

green-ocean.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதிக்கு நோயாளர்களை ஏற்றச் சென்ற செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிட பிரதிநிதி உட்பட பணியாளர் இருவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னர் அக்கப்பல் மூலம் 512 பேர் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட நோயாளாகளில் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்காலிக தாக்குதல் நிறுத்தம்: நிபந்தனைகளுடன் பரிசீலிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு

krambukkela.bmpஇலங்கையின் போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் மனிதாபிமான நலனுக்கான தற்காலிக தாக்குதல் நிறுத்தம் ஒன்று தேவை என்ற ஐ.நா. மன்றக் கோரிக்கை தமது நிபந்தனைக்கு அமைய பரிசீலிக்கப்படும் என்று இலங்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா.மன்ற கோரிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய இலங்கை அரசின் பாதுகாப்பு விவகரங்களுக்கான பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல,  நிஜமான பலன் ஏற்படும் என்றால் மட்டுமே அப்படி ஒரு தாக்குதல் நிறுத்தம் பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களை வெளிவர விடாமல் தடுத்துவைத்திருக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே அரசாங்கம் வழங்கிய 48 மணிநேர அவகாசத்தை அவர்கள் பயன்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கில ஊடகமொன்று இது தொடர்பாக கூறுகையில் இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இருபது சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் புலிகள் மனிதக் கேடயமாக வைத்திருக்கும் சிவிலியன்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் ஐ.நா.பாதுகாப்புச் சபையும்,  மற்றும் சர்வதேச சமூகமும் தெரிவிக்கும் ஆலோசனையான மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் என்னவகையான மாதிரிகள் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் எதுவும் குறிப்பிடாதபோதிலும் களநிலைமைகளுக்கு ஏற்ப அவை நேரத்துக்கு நேரம் மாற்றமடையும் என்று கூறியுள்ளார்.

மோதல் இடம்பெறும் பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில்,  அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஒத்தாசையுடன் ஐ.நா. பாதுகாப்புச் சபை மனிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கு அறிவுறுத்தியிருந்ததுடன்,  புலிகளையும் குற்றம் சாட்டியிருந்தது.

இதேவேளை, எதிர்காலத்தில் அரசாங்கம் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே மோதல் இடைநிறுத்தம் பரிசீலிக்கப்படுமே தவிர,  வேறுவகையான செல்வாக்கின் அடிப்படையிலோ அன்றேல் அழுத்தத்தின் அடிப்படையிலோ அமையமாட்டாது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பு பிரதேசம் பாதுகாப்பு தரப்பினரை கொல்லும் பிரதேசமாக மாறியுள்ளது.

அதனால், அவர்கள் காயமடைந்து வருகின்றனர். சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர்கள் திருப்பித் தாக்குவதில்லை. நாங்கள் எதிரிக்கு எதிராக விமானத் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துதல் போன்வற்றை நிறுத்தி விட்டோம். காரணம் சிவிலியன்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால்தான். ஆனால், புலிகள் இதனை வாய்பாகக் கொண்டு மக்களுக்கு பின்னால் மறைந்திருந்து படையினரைத் தாக்குகின்றனர்.

இந்தக் கட்டத்தல் யுத்த நிறுத்தத்துக்கு அரசாங்கத்துக்கு எவ்வித ஆர்வமும் கிடையாது. சிவிலியன்கள் பாதுகாக்கப்பட்ட பின்னர் புலிகளை படையினர் அழித்தொழிப்பார்கள் என்றார். 

மக்கள் வெளியேற புலிகள் அனுமதித்தால் தற்காலிக மோதல் நிறுத்தம் சாத்தியம் – இலங்கைக்கான ஐ.நா.நிரந்தர பிரதிநிதி பளிகக்கார

இலங்கையில் வடக்கு பகுதியில் மோதலை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை வலி யுறுத்திவரும் நிலையில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கு விடுதலைப்புலிகள் அனுமதியளித்தால் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த இணங்குவது சாத்தியமென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இந்தமக்களை (தமிழ்பொதுமக்கள்) வெளியேற புலிகள் அனுமதியளிக்க தயாரெனில் குறைந்தது அவர்களில் ஒரு பகுதியினரையாவது செல்வதற்கு அனுமதியளித்தால் தற்காலிக சண்டைநிறுத்த அனுசரணையை வழங்க அரசாங்கம் இணங்கக்கூடும் என்று ஐ.நா. விலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி எச்.எம். ஜி.எஸ் பளிகக்கார கூறியுள்ளார்.

இதனை குறுகியகால இடைநிறுத்தம் என்றோ அல்லது அரசு முன்னர் வழங்கிய 48 மணிநேரம் என்றோ கருதமுடியும் என்று நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் வைத்து அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.

புலிகள் அவர்களை வெளியேறவிடவில்லை என்பதே இந்த விடயமாகும். அவர்களை மனிதக்கேடயங்களாக வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என்று பளிககார கூறியுள்ளார்.

புலிகள் ஊடுருவியுள்ள பாதுகாப்பு வலயம் முழுமையாக சுற்றிவளைப்பு. மக்களை பாதுகாப்பாக விடுவிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்கிறார் இராணுவப் பேச்சாளர்

srilanka_army1.jpgபுலிகளின் சகல செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முடக்கியுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகள் ஊடுருவியிருக்கும் பாதுகாப்பு வலயத்தை அண்மித்துள்ள அதேசமயம், சகல முனைகளிலும் சுற்றிவளைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகள் எந்த விதத்திலும் தப்பிச் செல்ல முடியாத வகையிலும், தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத விதத்திலும் கடற்பரப்பிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார்.கடற்படையினர் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் கடற்பரப்பிலும் புலிகள் தப்பிச் செல்ல முடியாத விதத்தில் நான்கு தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஐ. சி. ஆர். சி. யின் ஒத்துழைப்புடன் இதுவரை புலிகளின் பிடியிலிருந்து பதினைந்து தடவைகள் சுமார் ஆறாயிரம் வரையிலான பொதுமக்களை கடற்படையினர் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். புலிகளின் சகல செயற்பாடுகளும் 21 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், தற்பொழுது புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரிகேடியர் உதய நாணக்கார மேலும் தகவல் தருகையில்,புலிகளின் பிடியிலிருந்து இதுவரை 59,441 பொது மக்கள் தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் செய்து கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தப்பிவரும் பொது மக்களின் வருகையை தடுக்கும் வகையில் புலிகள் பல்வேறு வழிவகைகளை பயன்படுத்துகின்றனர். பல சந்தர்ப்பங்களில் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை நடத்திய போதிலும் தப்பி வரும் பொதுமக்களின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எஞ்சியுள்ள பொது மக்களையும் எவ்வாறாவது பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது. படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத புலிகள் தமது சகல வளங்களையும், பலத்தையும் நாளுக்குநாள் முழுமையாக இழந்து வருகின்றனர். புலிகள் சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதுடன் பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடுருவியுள்ளனர். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்ற போதிலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு படையினர் பதில்தாக்குதல்களை நடத்துவதை தவிர்த்துள்ளனர் என்றார்.

புதுமாத்தளன் வடபகுதியில் நிலைகொண்டுள்ள கிராமத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர், பிரசன்ன டி சில்வா தலைமையிலான படையிலும், இரணைப்பாலைக்கு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், புதுக்குடியிருப்புக்கு கிழக்கே நிலைக் கொண்டுள்ள இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையிலான படையினரும் தமது நிலைகளை நாளுக்குநாள் விஸ்தரித்துவருவதுடன் புலிகளின் மண் கரண்களையும் கைப்பற்றிவருகின்றனர்.

மூன்று படைப்பிரிவுகளுக்கும் உதவியாக கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான இராணுவத்தின் எட்டாவது விசேட படைப்பிரிவும் களமுனையில் ஈடுப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் தினங்களில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் படையினர் நம்புவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.