எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 60 ஆக உயர்வு : கபே

caffe.jpgமேல் மாகாண சபைக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஏப்ரல் 02ஆம் திகதி வரையில் 60 வன்முறைச் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளன என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  கபே நிலையம் அறிவித்துள்ளது.

பதியப்பட்டுள்ள சம்பவங்களில் கூடுதலான பாரிய சம்பவங்கள் கடுவெல தேர்தல் தொகுதியிலேயே பதிவாகியுள்ளன. ஏப்ரல் 02ஆம் திகதி வரையான 60 சம்பவங்களில் 20 பாரிய சம்பவங்களும் 40 சிறியளவிலான சம்பவங்களும் அடங்குகின்றன.

தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கும் வேளையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ள தேர்தல் கண்காணிப்புக்கான நிலையம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும், ஐ.தே.கவுக்கு எதிராக 07 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேவேளை, ம.வி.மு. (ஜே.வி.பி.) எதிராக எவ்விதமான முறைப்பாடுகளும் பதியப்படவில்லை. அத்துடன், அடையாளப்படுத்தப்பட முடியாத 39 சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து மேலும் பலர் புல்மோட்டைக்கு வருகை

taking-to-green-ocean.jpgஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து காயங்களுக்கு இலக்கானோர் நோயாளர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் உறவினர்கள் உள்ளிட்ட 490 பேர் நேற்று கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டோரில் வயதானவர்களே அதிகமாக உள்ளதாக தள வைத்தியசாலை பகுதியில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

இதே வேளை வெள்ளிகிழமை கப்பல் மூலம் புல்மோட்டைக்கு கொண்டுவரப்பட்டோரில் இதுவரை மூவர் மரணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் தூக்குமேடை ஏறவும் தயார் – ஜனாதிபதி

mahinda.jpgகடனை மீளச் செலுத்தக்கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் இருப்பதாலேயே சர்வதேச கடன்களைப்பெற தீர்மானித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் வெற்றிகரமான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கடனை மீளச் செலுத்தும் உறுதிப்பாடும் எமக்குள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டைப் பாதுகாத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போராட்டத்தில் ஒரு தூக்குமரமல்ல பத்துத் தூக்குமரத்தைச் சந்திக்கவும் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் நிகழ்வு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனாதிபதித் தேர்தலின் போது நான் மக்கள் ஆணையை வேண்டுகின்ற போது இந்தநாட்டு மக்கள் அனைவருமே நாடு துண்டாடப்படுவதைத் தடுத்து நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துமாறு என்னைக் கோரினர்.

இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்த தலைவர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே கூற முடியும். நாட்டைப் பகுதியாகப் பிரித்து புலிகளுக்கு நிர்வாகம் வழங்கியவர் அவர். இன்று வன்னிப் பகுதியில் படையினர் மீட்டெடுக்கும் பாரியளவு ஆயுதங்களை நாம் தொலைக் காட்சி மூலமாகப் பார்க்கிறோம். இது வடக்கையும், கிழக்கையும் பாதுகாக்கவென புலிகள் வைத்திருந்த ஆயுதமென நீங்கள் நினைக்கிர்களா? இன்னும் சில மாதங்கள் தாமதமாகியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். மக்கள் அன்று நாட்டைப்பற்றி சிந்திக்காமல் தவறான தீர்ப்பை தேர்தலில் வழங்கியிருந்தால் புலிகள் கனவுகண்ட தமிழஈழம் சுலபமாகக் கிடைத்திருக்கும். நீர்கொழும்பிலிருந்து பதுளை வரையிலான பகுதிகள் நாட்டிலிருந்து துண்டாடப்பட்டிருக்கும் ஈழம் அமைக்கப்பட்டிருக்கும். புலிகளின் எதிர்பார்ப்பு அதுவே.

தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆதரவும் ஆணையும் எனக்குக் கிடைத்ததால்தான் நாடு பாதுகாக்கப்பட்டது. எமது அர்ப்பணிப்புடனான தீர்மானத்தைக் கண்டே மக்கள் எமக்கு ஆதரவு வழங்கினர். இதற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கவில்லையெனில் தாய் நாட்டைப் பாதுகாக்கும் இப்பயணத்தைத் தொடர்திருக்க முடியாது. அனைத்துப் பிரசாரங்கள் அழுத்தங்களையும் எதிர்கொள்ள மக்கள் ஆதரவே உறுதுணையாகியது.

நாட்டைப் பாதுகாப்பதற்காக நாம் தற்போது கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றோம். யுத்தம் புதிதாக முளைத்ததல்ல. முப்பது வருடகாலம் பழமையானது. ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் புலிகளுக்கு வழங்கியது மட்டுமல்லாமல் உளவுப் பிரிவினரைக் கொல்லவும், பொதுமக்கள் பலியாகவும் காரணமானவர். என தெரிவித்த ஜனாதிபதி சகல சவால்களையும் வெற்றிகொள்ளும் இப்பயணத்தை மேலும் சக்திப்படுத்த மேல் மாகாணத் தேர்தலில் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்து மாமன்ற சமய விவகாரக் குழுவின் தலைவர் இராஜபுவனேஸ்வரன் காலமானார்

rajapuwaneswaran.jpgகொழும்பு விவேகானந்த சபையின் பொதுச் செயலாளரும், அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவரும், இந்து மாமன்ற சமய விவகாரக் குழுவின் தலைவருமான கே. இராஜ புவனேஸ்வரன் காலமானார். யாழ்ப்பாணம் சுதுமலையில் 1942ம் ஆண்டு பிறந்த இவருக்கு இறக்கும் போது வயது 67 ஆகும்.

சிறந்த சமயத் தொண்டரும், தீவிர இறைபக்தியாளருமான சிவஞானச் செல்வர் இராஜ புவனேஸ்வரன், இலங்கை வங்கியில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், இந்நாட்டில் சைவசமய வளர்ச்சிக்காக உழைத்த சிவத்தொண்டராவார். இவர் சிவத்தொண்டர் அணி ஊடாக நாடு முழுவதும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

பாடசாலைகளில் தவக்கால வழிபாடு: கல்வி அமைச்சு சுற்று நிருபம்

பரிசுத்த வாரத்தில் பாடசாலைகளில் தவக்கால வழிபாடுகளை மேற் கொள்ள கல்வியமைச்சு அங்கீகாரமளித்துள்ளது. கத்தோலிக்க மாணவர்கள் 15 பேர் இருப்பார்களானால் அங்கு இவ் வழிபாடுகளை முன்னெடுக்கலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க மக்கள் அனுஷ்டிக்கும் தவக்காலத்தின் பரிசுத்த வாரம் இன்று குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பமாகிறது. இதனையொட்டி மேற்படி அங்கீகாரத்தை கல்வியமைச்சின் செயலாளர் எம். எம். என். டீ. பண்டார வழங்கியுள்ளார்.

கல்வியமைச்சின் கத்தோலிக்க சமய ஆலோசனைச் சபையின் அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இணங்கவே இவ் வங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2009/08 ஆம் இலக்கமுடைய சுற்று நிருபத்தினையும் இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

நிவாரண கிராமங்களுக்கு தொலைபேசி வசதி: ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி நன்றி தெரிவிப்பு

ஈ. பி. டி. பி.யின் கோரிக்கைக்கு அமைய வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் 26 கோரிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார். இது தொடர்பாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில், வவுனியா அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் வவுனியா இணைப்பாளர், தேசநிர்மாண அமைச்சின் வவுனியா இணைப்பாளர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர். இந்த நிலையில் தனது கோரிக்கையை ஏற்று நிவாரணக் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி செய்து கொடுத்தமைக்கு இடம்பெயர்ந்த மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதே போல, ஏனைய கோரிக்கைகளையும் ஜனாதிபதி செயற்படுத்துவாரென்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று தன்னைச் சந்தித்த பொதுமக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

நேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளர் டென்மார்க் பிரதமர்

nato_hq.jpgநேட்டோ அமைப்பின் அடுத்த செயலாளராக டென்மார்க் பிரதமர் அண்டர்ஸ் ஃபோக் ரஸ்முஸன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்கவுள்ளார்.

இவருடைய நியமனத்திற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. டென்மார்கில் நபிகள் நாயகம் குறித்து கேலிச்சித்திரம் வெளியானது மற்றும் டென்மார்கில் குர்து இன ஆதரவு தொலைக்காட்சி நிலையம் செயற்படுவது போன்ற விடயங்களில் இவர் மீது துருக்கிக்கு அதிருப்தி உள்ளது.

எனினும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து துருக்கியின் கவலைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக தற்போதைய நேட்டோ செயலாளர் தெரிவித்துள்ளார்.

G20 உச்சி மகாநாட்டின் நிலைப்பாடுகளும் மூல உபாயங்களும்: (The G20- Part 2) : வி வசந்தன்

g20-1.jpgபங்குபற்றும் நாடுகளின் நிலைப்பாடுகள்

இந்த உச்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கு என்று தாமே தயாரித்த தாம் விரும்பிய நிகழ்ச்சி நிரலுடன்தான் வரவிருப்பதாக புலப்படுகிறது. ஓவ்வொரு நாடும் வேறு வேறான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற போதிலும் அந்நாடுகள் அக்கறை காட்டும் முக்கிய பிரச்சினைகள் பலவற்றுக்கு வேறு சில நாடுகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனவே ஒவ்வொரு நாடும் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து இம்மகாநாட்டில் பங்குபற்றுகிறது என்பதை கவனிக்க வேண்டிய அத்தியாவசியம் எழுகிறது. இம்மகாநாட்டில் பங்குபற்றும் ஒவ்வொரு நாட்டினதும் நிலைப்பாட்டை கீழே பார்க்கலாம்.

•உலக நிதி முறைமையை சீரமைப்பதும், புதிய விதிகளை உருவாக்கி கட்டுப்பாட்டுக்குட்படுத்துவதும்.

•வரி ஏய்ப்புப் புகலிடங்களை ஒழிப்பது.

•உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்குமுகமாக வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்வதை தடுப்பது.

•உலக நாணய நிதியத்தை (IMF) புனரமைப்பதும் மிகவும் பெரிய அளவில் அதன் முதலாக்கத்தை (Capitalisation) அதிகரித்தல்.

•சந்தைகளை சீரமைப்பது.

•ஏனைய நாடுகளின் கையிறுப்பு பணம் தொடர்ந்தும் அமெரிக்காவின் நாணயமான டொலரில் வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது.

•உலகபொருளாதார ஊக்கிப் பொதிகளை விஸ்த்தரிப்பதும் அதிகரிப்பதும்.

•உருப்படாத வங்கிகளை மூடுதல்.

•வங்கிகள் கடன்களை வழங்குதற்கு தடையாக விளங்கும் நச்சுச் சொத்துக்களை தனிமைப்படுத்த கையாளும் வரைமுறையை உருவாக்க ஆதரவு வழங்குவது.

•உலக நாணய நிதியத்தில் (IMF) வளர்ச்சியடையும் நாடுகளுக்கான வாக்குரிமைகளை அதிகரிக்க அழுத்தம் கொடுப்பது.

•கடன் பெறுவோரது தகமைகளை பரிசீலிக்கும் முகவர்களை சீரமைத்து எதிர்காலத்தில் உருவாகக்கூடிய நிதி நெருக்கடிகளை முன்மதிப்பிட்டுரைப்பதற்காண திறன்களை வளர்ப்பது.

•மேழும் அதிகளவில் வளர்ச்சியடையும் நாடுகளுக்கு ஆதரவுவளிப்பது.

•சூழல் பாதுகாப்பு.

•வங்கிகளின் உயர்நிலை ஊழியர்களின் ஊதியங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் உலகபொருளாதார ஊக்கிப் பொதிகளை விஸ்தரிப்பதும் அவற்றை ஏனைய நாடுகளும் பின்பற்றி அமுல்ப்படுத்துவதுமே மிக முக்கியம் என கருதுகிறது. இந்த நிலைப்பாட்டை ஜப்பான், இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா போன்ற நாடுகளும் ஆதரிக்கின்றன. அதே வேளையில் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக நிதி முறைமையை சீரமைப்பதும் புதிய விதிகளை உருவாக்கி கட்டுப்பாட்டுக்குட்படுத்துவதும் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான அடிப்படைத் தேவைகள் என வாதாடுகின்றன. இந்த நிலைப்பாட்டை இத்தாலி, கனடா, ஒல்லாந்து, போன்ற நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரிக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்கா உடன்பாட்டிற்கு வர மறுத்தால், ஜேர்மனி, பிரான்சு ஆகிய இவ்விரு நாடுகளும் வெளிநடப்புச் செய்யத் தயாராக இருப்பதாக அவ்விரு நாடுகளின் தலைவர்களும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், வரி ஏய்ப்புப் புகலிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் சீனா தயங்குவதற்கு கொங்கொங், மக்கவு போன்ற இடங்களில் சீனாவுக்கு இருக்கும் நலன்கள்தான் காரணம் என பிரான்சின் அதிபர் பத்திரிகையாளர் மகாநாட்டில் விசனப்பட்டுள்ளார்.

இந்தியாவும் சீனாவும், உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்குமுகமாக வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்வதை தடுப்பது, உலக நாணய நிதியத்தை (IMF) புணரமைப்பது, வளர்ச்சியடையும் நாடுகளுக்கான வாக்குரிமைகளை அதிகரிப்பது போன்ற நோக்கங்களில் மிகவும் தீவிரமாக இருப்பதாக காணப்படுகிறது.

சீனா தனது மேலதிக அந்நியசெலாவணி 2,000,000,000,000 (2 திறில்லியன்) டொலர்களை அமெரிக்காவின் வெளிநாட்டு முறிகளில் (Treasury Bond) முதலீடு செய்துள்ளது. இன்றய பொருளாதார நெருக்கடிகளினால் அமெரிக்க டொலர்களில் செய்யப்பட்ட சீனாவின் முதலீடுகள் பாதிக்கப்பட்டு வெளிநாட்டுச் சொத்துக்கள் அதன் பெறுமதியை இழக்கலாம் என சீனா கவலைப்படுவதாகத் தெரியவருகிறது. அண்மையில் சீன மத்திய வங்கியின் ஆளுநர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், உலக நாணய நிதியம் (IMF) அதன் அங்கத்துவர்களுடைய விசேட உரிமைகளை அதிகரிப்பது மட்டுமல்லாது, புதிய மேன்மையான இறைமையுள்ள கையிறுப்பு நாணயம் (Super Sovereign Reserve Currency) ஒன்றை உருவாக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

பல வங்கிகள் அறவிட முடியாத வீடுகள் வாங்க கொடுக்கப்பட்ட கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கடன்களை வங்கிகளின் நச்சு சொத்தென அழைக்கப்படுகிறது. இவ்வாறான கடன்களை பட்டுவாட செய்த அமெரிக்க வங்கிகள் மூலதனப் பற்றாக் குறையால் உள்நாட்டு பிற நாட்டு வங்கிகளினிடம் பெரும் தொகையான கடன்களைப் பெற்று அவற்றை திரும்ப செலுத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட பணஓட்டத் தட்டுப்பாடே, இன்றய பொருளாதார நெருக்கடிகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இவ்வாறான நச்சு சொத்துக்களை சுததிகரித்து அப்புறப்படுத்தாவிடில் இன்று ஏட்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் இனி வரும் பல தலைமுறைகளுக்கு நீடிக்கப்படுமென உலக நாணய நிதியத்தின் (IMF) முகாமை இயக்குனர் டொமினிக் ஸ்றவுஸ் கான் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு பல உள் முரண்பாடான நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் இந்த கூட்டமைப்புக்கு, இன்றைய மாபெரும் பொருளாதார நெருக்கடியானது எதிர்காலத்தில் பெரும் பொருளாதார மந்த நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்படும் அபாயம் உள்ளதை உணர்ந்திருப்பதும்; இப்பிரச்சினைக்கு நாடுகள் இணைந்து தீர்வு காண வேண்டிய அவசியத்தையும் ஏற்றுக்கொண்டே இம்மகாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

பிரித்தானியப் பிரதமர் பிரவ்ண் தலைமையில் நடாத்தப்படும் இவ்வுச்சி மகாநாட்டிற்கு அவர் தனது நேரம், செல்வாக்கு, அந்தஸ்த்து, அறிவாற்றல் அனைத்தையும் முதலீடு செய்திருந்தார். வங்கிகளின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து மீள ஏனைய நாடுகளை ஒரு புதிய சமூக பொருளாதார ஏற்பாட்டிற்க்கு (Global New Deal) பங்கு பற்றும் ஏனைய நாடுகளிடம் ஆதரவு கேட்டு கோரிக்கை விட்டிருந்தார். அவரது இந்த ஏற்ப்பாடு பின்வரும் அம்சங்களை கொண்டிருக்கும் என்றார்:

உலக பொருளாதாரம் மீள்வது மட்டுமல்லாது வங்கிகள் சிறந்த விதிகளுக்கு உட்பட்டு நடாத்தப்படும்.
வெளிநாட்டு பொருட்களையும் சேவைகளையும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்காமல் மும்முனை மூல உபாயங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தை மீளக்கட்டுதல்.

g20-21.jpgமூல உபாயங்களாவன:

1) குடும்பங்களும் வர்த்தக தாபனங்களும் பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள நிதிக்கான சந்தையை திட்டநிலைக்கு கொண்டு செல்ல எது தேவையோ அதனை செய்வது.

2) உலக நிதிச் சந்தையின் நம்பகத்தன்மையை மீளப்பெற அதனை மறுசீரமைத்து பலப்படுத்துவது.

3) உலக பொருளாதாரத்தை மீட்டு நீண்ட கால வளச்சிக்காக வழிவகைகளை அமைத்தல்.

இந்த உச்சிமகாநாட்டில் பங்குபற்றிய ஒவ்வொரு நாடும் தமது நோக்கங்களுக்கும் நிலைப்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்ததை பார்க்கும் போது மகாநாட்டின் இறுதியில் மக்களுக்கு நன்மை தரும் முயற்சிகளை எங்கே விட்டுவிடுவார்களோ என்ற எண்ணம் பலருக்கு தோன்றியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியிருந்தும் கூட நிதி நெருக்கடியின் மிகவும் ஆக்ரோசமான தாக்கம் அவர்களை ஒரே மேசையைச் சுற்றி அமரச் செய்துள்ளது.

கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து அமுலாக்கி வந்த வோசிங்டனின் கருத்து (Washington Consensus) என்பது பொதுவாக வளர்ச்சியடையும் நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்படாவிடினும், உலக நாணய நிதியம் (IMF), உலக வங்கி (World Bank) அமெரிக்காவின் திறைசேரி (US Treasury Department) போன்ற பலம்மிக்க நிதி தாபனங்களால் வளர்ச்சியடையும் நாடுகள் மீது திணிக்கப்பட்ட நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே (Neoliberal Policies). மற்றய காரணிகளை கருத்தில் எடுக்காது, திட்டநிலை (Stability) தனியார் மயமாக்கல் (Privatisation), தாராளமயமாக்கல் (Liberalization) என்னும் மூன்று பொருளாதார கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டதே இந்த வோசிங்டனின் கருத்து. இந்த கொள்கைகளால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடையும் நாடுகள் பல. இந்த உச்சிமகாநாடு வோசிங்டனின் கருத்துக்கு எதிராக மாற்றுக்கருத்தை வைக்க முடியுமா என்னும் சர்ச்சையை ஆரம்பித்துள்ளது.

உச்சி மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவ்ண் இறுதி அறிக்கையில் “இன்று நாம் வாக்குறுதி கொடுத்திருப்பது எதற்கென்றால் எவற்றை அத்தியாவசியமாக செய்ய வேண்டுமோ அவற்றை செய்து:

1.நம்பிக்கை, பொருளாதார வளர்ச்சி, தொழில் வாய்ப்புகளை புதுப்பிப்பது.

2.நிதி முறைமையை மீள் சீரமைத்து கடன் வழங்களை மீண்டும் ஆரம்பிப்பது.

3.நிதி தொடர்பான விதிகளை பலப்படுத்தி மீள நம்பிக்கை ஊட்டுவது.

4.இந்த நிதி நெருக்கடி மீண்டும் உருவாகாமலிருக்க சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதுடன் இவ்நிறுவனங்களை மறுசீரமைத்தல்.

5.இறக்குமதிக்கெதிராக தடை விதிப்பதை நிராகரிப்பதுடன் உலக வர்த்தகத்திற்கும் முதலீடுகளுக்கும் ஊக்கமளித்து வளத்தை பெருக்குதல்.

6.சகலரையும் உள்ளடக்கிய, சுற்றாடலை பேணும்தக்க வைக்க வல்ல பொருளாதார மீட்சியை உருவாக்குதல் போன்றவைகளாகும்.

தீர்மானங்களும் அமுலாக்கல்களும்

மேலே குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய பல வகையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. அவையாவன:

1.உலகநாணய நிதியத்தின் ஊடாகவும் (IMF) மற்றய சர்வதேச நிதி நிறுவனங்கள் ஊடாகவும் சுமார் 1.1 திரில்லியன் டொலர்களை உதவி வேண்டும் நாடுகளுக்கு கடனாக விநியோகிப்பது.

2.நிதி திடநிலை சபை (Financial Stability Board) ஒன்றை ஸ்தாபித்து நிதி முறைமையை பலப்படுத்துவது.

3.சர்வதேச நிதி நிறுவனங்களை பலப்படுத்துமுகமாக அவற்றிற்கு போதிய மூலதனத்தைப் பெற ஏற்பாடுகளை செய்து கொடுத்தல். இதுவரை காலமும் உலக நாணய நிதியம் (IMF) கடன் கொடுப்பதில் காட்டிய கடும் போக்கினை தளர்த்தி தேவையின் நோக்கமறிந்து கடன் உதவிகளை செய்வதற்கேட்ப மறுசீரமைக்கப்படுகிறது.

4.இறக்குமதிக்கெதிராக தடை விதிப்பதை தவிர்ப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொள்வதுடன், உதவும் நோக்கத்துடன் வர்த்தகம் மேம்பட 250 பில்லியன் டொலர்களையும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டோகா அபிவிருத்தி சுற்றுப் பேச்சு வார்த்தைகளையும் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளப்படுகிறது.

5.நீதியானதும் தக்கவைக்க கூடியதுமான பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவும்முகமாக பழைய திட்டங்களை பலப்படுத்துவதுடன் புதிய திட்டங்களும் அமுல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக 6 பில்லியன் டொலர்கள் கடன் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

6.வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தமது ஊழியருக்கு வழங்கும் ஊதியம், ஊக்கத்தொகை தொடர்பான வெளிப்படையான காலத்திற்கு காலம் வெளியிட நிர்பந்திக்கப்படுவர்.

7.வரி ஏய்ப்பு புகலிட நாடுகள் தொடர்பாக உருப்படியான பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

8.கணக்கியல் துறையில் கோட்பாடுகள் தொடர்பாக தேவையான மாற்றங்களை செய்வது.

9.கடன் பெறுவோரது தகமைகளை பரிசீலிக்கும் முகவர்களை கண்கானிப்பதற்கான தேசிய அளவில் அதிகார சபைகளை உருவாக்குதல்.

இந்த உச்சிமகாநாடானது பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு ஆக்கபூர்வமான பல திட்டங்களை முன் வைத்ததுமல்லாமல் அதற்கான அரசியல் ஆதரவையும் முக்கிய நாடுகளிடமிருந்து பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டங்களெல்லாம் இன்றைய நிதி நெருக்கடியை தீர்த்து வைத்து பொருளாதார தேக்கத்தை அல்லது மந்தத்தை போக்கும் என்று திட்டவட்டமாக கூறுவது கடினம். அதே வேளை மகாநாட்டின் வெற்றியை மனதில் கொண்டு பல முரண்பாடுகள் மூடி மறைக்கப் பட்டிருக்கலாம். இவ்வாறன முரண்பாடுகள் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு அரசியலைப் பொறுத்தே தங்கியுள்ளது.

சில கேள்விகளுக்கு இன்னும் விடை கிடையாது.

1.இரண்டு திரில்லியன் பெறுமதியுடைய நச்சு சொத்துக்களை என்ன செய்வது?.

2.உலக நாணய நிதியம் (IMF) பல வளர்ச்சியடையும் நாடுகளால் விரும்பப்படாத ஒரு சர்வதேச நிதித்தாபனம். வோசிங்டன் கருத்தை” மிக மோசமான வழிகளில் ஈவு இரக்கமின்றி அமுல்படுத்தி பல நாடுகளில் மக்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியதில் உலக நாணய நிதியத்திற்கு பெரும் பங்குண்டு. இத்தாபனம் மறுசீரமைக்கப்பட்டாலும் தனது பழைய சிந்தனையிலிருந்து புதிய பாதைக்கு வருமா என்பது கேள்விக்குறியே.

3.உலக நாணய நிதிற்கு (IMF) பணமாக்குவதற்கான அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறான அதிகாரங்கள் எவ்வாறான பக்கவிளைவுகளை எதிர் காலத்தில் உருவாக்கும் என்பதில் தெளிவில்லை.

4.நிதி சார்பு முறைமைகள் கட்டுமானங்கள் ஆகியவற்றில் அடிப்படையானதும் முழுமையானதுமான மாற்றங்களை ஏற்படுத்தாமல் இன்று உருவாக்கியிருக்கும் நிதி நெருக்கடி எதிர்காலத்தில மீண்டும் உருவாகாது என உறுதியாக கூற முடியாது.

5.இன்று நிதி நெருக்கடியையும் பொருளாதார தேக்கத்தையும் அகற்ற மேற்கொள்ளப்படும் இம்முயற்சிக்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. இதனை வட்டியும் முதலுமாக மீட்கப்போவது எதிர் கால சந்ததியினர். எமது பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விளைவுகளை சுமக்கப் போவது அவர்களே.

எது எப்படியிருப்பினும் பிரித்தானியா பிரதமர் கோர்டன் பிரவ்ன் தனது முடிவுரையில் கூறியது போல “வோசிங்டன் கருத்து” மேலாதிக்கம் செய்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது

இன்றைய வளரும் சந்தைகளைக் கொண்ட பிரேசில், ரஸ்சியா, இந்தியா, சீனா (BRIC) போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது இதுவரை காலமும் கண்டிராத அதிகார அதிர்வுகளையும் நகர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்குலக நாடுகள் தம்மிடமிருந்த பொருளாதார பலம் படிப்படியாக மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த பல வருடங்களாக நகருவதை உணர்ந்த பொழுதிலும் அதற்கு ஏற்ற அங்கீகாரம் இந்த நாடுகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் கடந்த கார்த்திகை மாத உச்சி மகாநாடும் சித்திரை இரண்டாம் நாள் நடந்தேறிய மகாநாடும் இந்த நாடுகளுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. இவ்வாறான அங்கீகாரங்கள் அடுத்த கட்ட அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும்.

‘லக்றூ’ தொலைக்காட்சி சேவை நாளை முதல் ஆரம்பம்

television.jpgஇலங்கை தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமாகவுள்ள புதிய ‘லக்றூ’ தொலைக்காட்சி அலைவரிசையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாளை முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொலைக்காட்சி வரலாற்றில் புதியதோர் அனுபவத்தைப் பெற்றுத் தரும் இந்த லக்றூ தொலைக்காட்சி சேவையை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் திரைப்படப் பிரிவு தேசிய தகவல் தொலைத் தொடர்புத் துறையின் முன்னோடியான ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் இணை நிறுவனமான எஸ்.எல்.ரீ. விஷன் கொம் உடன் இணைந்து வழங்குகிறது.

சர்வதேச புகழ் பெற்ற இலங்கையின் திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களின் 90ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே நாளை இந்த தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்படுகின்றது.

கப்பல் மூலம் நேற்றுமாலை 480 பேர் புல்மோட்டையை வந்தடைந்தனர்.

taking-to-green-ocean.jpgமுல் லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி மக்கள் கப்பல் மூலம் புல்மோட்டையை நேற்று மாலை வந்தடைந்துள்ளனர்.
 
காயமடைந்த மற்றும் அவர்களைப் பராமரிக்கும் அவர்களது உறவினர்கள் உட்பட 480 பேர் ‘கிறீன் ஓஷன்’  கப்பல் மூலம் செஞ்சிலுவைச் சங்க வழித்துணையுடன் 17வது தடவையாக வந்துள்ளனர்.