எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளியோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டை முழுமையாக மீட்டு அதனை முழுமையாகப் பாதுகாக்கும் பொறுப்பு எமக்குண்டு. இலங்கையை துண்டாடப்பட்ட நாடாக எமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் இந்நாட்டில் வாழும் சகல இனங்களுக்கும் தாய் நாடாகும். இந்நாட்டின் மீதான உரிமை சகலருக்கும் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பல ஆண்டுகளுக்குப் பின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திர இலங்கையில் சகல மக்களும் ஐக்கியமாக தமிழ், சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

‘ரன்பிம’ காணி உறுதி வழங்கும் வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரங்களைக் கையளித்து உரை நிகழ்த்திய ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

புலிகள் இன்று யுத்த பாதுகாப்புப் பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையொன்றிலேயே காணி உறுதி வழங்கும் இந்நிகழ்வு இடம்பெறுகிறது. நாட்டை நேசிக்கும் அரசாங்கங்கள் போலவே நாட்டை நேசிக்காத அரசாங்கங்களும் இந்த நாட்டை ஆண்டுள்ளன. இதனால் காணிப் பிரச்சினைகளில் நாம் எதிர்பார்த்த இலக்கை அடைந்து விட்டோமா என்பது சந்தேகமே. மக்கள் தமது சொந்தக் காணிகளுக்கு உறுதியைப் பெற முடியாத நிலையும் காணிகளுக்கான நட்டஈட்டைக் கூட பெறமுடியாத நிலையே கடந்த காலங்களில் இருந்துள்ளன. நிறுவனங்களுக்கு அரச காணியை விற்றவர்கள், குறிப்பாக சில நிறுவனங்களுக்கு 20,000 ஹெக்டயர் காணிகளை வழங்கியவர்களும் உள்ளனர். தற்போது அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையில் அமைச்சரவை உப குழு அமைத்து ஆராயப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிப்பதென உறுதியளித்த போதும் தற்போது ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட காணிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட வேண்டும். இந்நாட்டு மக்களுக்கு அவர்களுக்கான காணி உறுதியை வழங்குவதுடன் நாட்டை முழுமையாகப் பாதுகாக்கவும் எமக்கு பொறுப்பு உள்ளது. இன்று தாய் நாட்டைப் பாதுகாக்க தம்முயிரைப் பணயம் வைத்துச் செயற்படும் படையினரில் பெரும்பாலானோருக்கு ஒரு அங்குலம் காணி கூட சொந்தமாக இல்லாதுள்ளது. படையினர் தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வகையில் இந்நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் படையினருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

துண்டாடப்பட்ட நாட்டை நாம் இன்று மீட்டுள்ளோம். மீண்டும் இந்த நாடு துண்டாட இடமளிக்க முடியாது. கடந்த காலங்களில் இந்த நாடு துண்டாடப்பட்டு உடன்படிக்கை செய்து கொடுக்கப்பட்டது. அதனை வைத்துக்கொண்டே புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்டார்கள். சர்வதேசத்திற்குச் சென்று தமது பலத்தைக் காட்டி தனிநாடு கோரவும் புலிகளுக்கு அது உறுதுணையானது. உலகைப் பொறுத்தவரை முப்படைகளையும் விமானங்களையும் பாரிய ஆயுதங்கள் பெருந்தொகையைக் கொண்ட அமைப்பென புலிகளையே கூற முடியும்.

அண்மைக் காலங்களில் நாம் தொலைக்காட்சியைப் பார்த்தால் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பற்றி அறியலாம். இது வடக்கு, கிழக்கை பாதுகாக்கவென வைத்திருந்த ஆயுதமல்ல. நீர்கொழும்பிலிருந்து பதுளை வரை நாட்டைத் துண்டாடும் நோக்கம் கொண்டவை என்பதை சகலரும் உணர வேண்டும்.

தற்போது நடப்பது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்ல. புலிகளிடம் அகப்பட்டுள்ள தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான யுத்தம் இது. மக்களையும் நிலங்களையும் மீட்பதே இதன் நோக்கம். நாம் மேற்கொண்ட திட்டமிட்ட செயற்பாடுகளே பயங்கரவாத யுத்தத்தையும் பொருளாதார யுத்தத்தையும் எதிர்கொள்ள வழி சமைத்துள்ளது. யுத்தத்தை காரணம் காட்டி எத்தகைய அபிவிருத்தியையோ மக்களுக்கான நிவாரணங்களையோ அரசாங்கம் நிறுத்தவில்லை.நாட்டையோ அரச வளங்களையோ விற்று அல்லது ஈடு வைத்து நாம் ஆட்சி நடத்தவில்லை. ரணில் விக்கிரமசிங்க தமது ஆட்சிக் காலத்தில் நாட்டை ஈடு வைத்தே கடன் பெற்றார்.

நாம் எமது நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே சர்வதேசத்தில் கடன் பெறவுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஈ.எல்பி. ஹுருள்ளே காலமானார்

சிரேஷ்ட அரசியல் வாதியும் முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஈ.எல்.பி. ஹுருள்ளே நேற்று மாலை காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 90 ஆகும். மாலினி கலகொட ஹுருள்ளே (86)யின் கணவரான இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை யாவார்.

ஹொரவப்பத்தானை தேர்தல் தொகுதியிலிருந்து 1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இவர், 1970ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 1977ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.

1965 இல் போக்குவரத்து அமைச்சராகவும் 1977 இல் கலாசார அமைச்சராகவும் ஈ.எல்.பி. ஹுருள்ளே இருந்துள்ளார். 1988 இல் மத்திய மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றிருந்தார். 1991ஆம் ஆண்டு முதல் சில வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராகவும் கடமையாற்றியுள்ளார்.

சுகவீனம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மாலை உயிரிழந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் ரேய்மண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (8ம் திகதி) மாலை 6.30 மணிக்கு பொரளை கனத்தையில் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்கான இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படும்.

பாகிஸ்தான் சாரதி கலீலுக்கு லேக்ஹவுஸில் நேற்று கெளரவம்

mohamed-kaleel.jpgபயங்கர வாதிகளின் தாக்குதலிலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாத்த பாகிஸ்தான் சாரதி முஹமட் கலீலுக்கு நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமாரவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் இலங்கை வந்துள்ள கலீல், நேற்று பிற்பகல் லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு வருகை தந்தார்.

பிற்பகல் நான்கு மணியளவில் வருகை தந்த அவரை அதிகாரிகளும் ஊழியர்களும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து லேக்ஹவுஸ் நிறுவனத்தின் வரவேற்பு மண்டபத்தில் நடந்த நிகழ்வில் கலீல் கெளரவிக்கப்பட்டார்.

கலீல் தனது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோருடன் வருகை தந்திருந்தார். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து டெயிலிநியூஸ் பத்திரிகையில் வெளிவந்த சிறப்புப் பக்கத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் கலீலுக்கு வழங்கப்பட்டது. மேலும் இப் பத்திரிகையின் வாசகர் ஒருவரால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா பெறுமதியான காசோலை பத்திரிகை ஆசிரியரால் கலீலிடம் கையளிக்கப்பட்டது. ‘சிட்டி சைக்கிள்’ நிறுவனம் சார்பாக ஷிஹான் என்பவர் சர்வதேச தரம் வாய்ந்த சைக்கிள் ஒன்றை இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

கலீலும் குடும்பத்தாரும் இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் தேவையான காப்புறுதியினை ஏசியன் எலைன்ஸ் காப்புறுதி நிறுவனம் சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரமால் ஜயசிங்க வழங்கினார். கலீலும் தான் கொண்டு வந்திருந்த அன்பளிப்புக்களை நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டார். நிறுவனத்தின் பல பணிப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலீல், இலங்கையில் இருக்கின்றபோதும் பாகிஸ்தானில் இருப்பது போன்றே உணர்கிறேன் என்றார். கலீல் என்னை இலங்கைக்கு அழைத்தமைக்காக லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு நன்றி கூறுகின்றேன். ஒரு இரவில் என்னை ஹீரோவாக்கினீர்கள். இதை நான் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதற்கு நான் இறைவனுக்கே நன்றி கூறவேண்டும். நான் இங்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீண்டும் பாகிஸ்தான் வந்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பமாகும்.

அதுபோல் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு என்றும் நிலைத்திருக்க வேண்டும். சம்பவம் இடம்பெற்றபோது எனது தாயை நினைத்தேன். எனக்குள் புதிதாய் ஒரு வேகம் பிறந்தது. கிரிக்கெட் அணியினரை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்து விட்டேன் என்றார்.பாகிஸ்தான் சாரதி கலீலுடன் அவரது மனைவி மற்றும் மைத்துனரும் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் பொது முகாமையாளர் அபய அமரதாஸ உரையாற்றும்போது, கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அறிந்ததும் எமது நிறுவனத்தின் தலைவர் பந்துல பத்மகுமார, கராச்சியிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எயார்மார்ஷல் ஜயலத் வீரகொடியுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தான் சாரதியை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். அவரது விருப்பத்தின் பேரிலேயே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதென கூறினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிரிக்கெட் நேர்முக வர்ணனையாளருமான பிரேமசார எப்பாசிங்க உரையாற்றுகையில், கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டையே காப்பாற்றியுள்ளார் எனக் கூறினார். இஸ்லாமியர்களின் புனித குர்ஆன், ஹதீஸில் ஒருவருக்கு நன்றிக் கடன் செலுத்துவது இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கு சமம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக நினைத்தே இன்று நாம் கலீலை கெளரவிக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு. பலத்த காற்றால் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்கு சேதம்

lighting.jpgஇலங்கையில் பல்வேறு பாகங்களிலும் இடம்பெற்று வரும் இடியுடன் கூடியமழை மற்றும் கடும் காற்று காரணமாக நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதோடு மூவர் கொல்லப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு கடும் காற்றும் விசிவருகிறது.

மழையுடன் பலத்த காற்று வீசி வருவதையடுத்து களுத்துறை, நுவரெலியா, பிபிலை உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளன. இவற்றில் அதிகமான வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. நுவரெலியா, அம்பகமுவ கோரள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காசல்ரி, நோட்டன் பிறிஜ் பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் 21 வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் 3 வீடுகளுக்கு கூடுதல் சேதம் ஏற்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் உள்ள கோனபொலவில் வீசிய மினி சூறாவளியின் காரணமாக 110 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஓலபொடுவ, கும்புக்க திப்பத்த ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் இவ்வாறு சேதம் அடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமுற்றுள்ளனர்.

பலன்நருவவில் 39 வீடுகளும் ஓலபொடுவையில் 25 வீடுகளும், கும்புக்கவில் 36 வீடுகளும், கும்புக்க கிழக்கில் 5 வீடுகளும், ஓலபொடுவ வடக்கில் 4 வீடுகளும், வவுலகலவில் ஒரு வீடும் சேதமுற்றுள்ளதாக பிரதேச செயலாளர் நிசான் ஜயசிங்க தெரிவித்தார். இதேவேளை பிபிலை பகுதியில் வீசிய கடும் காற்றினால் 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 2 வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

புத்தளம் கருவலகஸ்வெவ பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூவர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை (5) இடம்பெற்றது. இடியுடன் கூடிய மழையையும் பொருட்படுத்தாது இவர்கள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்ததாகவும் மின்னல் தாக்கியதில் மூவரும் ஸ்தலத்திலேயே பலியானதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.  கடந்த 3 மாதத்தில் 8 பேர் இடி மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.

புலிகளின் மேலும் 4 படையணிகளின் நான்கு தலைவர்களும் உயிரிழப்பு

puthukku-05-04.jpgபுதுக் குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது படையினர் நடத்திய தாக்குதல்களில் புலிகளின் மேலும் நான்கு படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

சிலம்பரசன், கோபால், மோகனா மற்றும் கீர்த்தி ஆகிய நான்கு தலைவர்களே கொல்லப்பட்டுள்ளதுடன் அன்பு மற்றும் அஸ்மி ஆகிய இரு தலைவர்களே படுகாயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நடத்திய தேடுதல்களில் மாத்திரம் கொல்லப்பட்ட புலிகளின் 284 சடலங்களையும், பெருந் தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புலிகளின் பிடியிலிருந்த சுமார் 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை படையினர் முற்றாக விடுவித்துள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ள 20 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட பிரதேசம் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார். புலிகளின் மேலும் நான்கு முக்கிய படையணிகளைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளமையும், மற்றுமிரு தலைவர்கள் படுகாயமடைந்துள்ளமையும் நேற்றைய தினம் படைத்தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார். படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட நால்வரில் புலிகளின் ‘ராதா’ படையணியின் தலைவர் சிலம்பரசன், புலிகளின் பீரங்கி படைப்பிரிவின் தலைவர் கோபால், புலிகளின் ‘சோதியா’ படைப்பிரிவின் சிரேஷ்ட தலைவர் மோகனா மற்றும் புலிகளின் ‘ஜயந்தன’ படையணியின் தலைவர் கீர்த்தி ஆகியோர் அடங்குவர்.

இதுதவிர புலிகளின் ‘ராதா’ படையணியின் பிரதித் தலைவர் அன்பு மற்றும் கண்ணிவெடி பிரிவின் பொறுப்பாளர் அஸ்மி ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

படையினரின் வெற்றிகரமான படை நடவடிக்கைகளின் மூலம் நாளுக்கு நாள் தமது முழுக் கட்டுப்பாடுகளையும் இழந்த புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்பொழுது தமது முக்கிய தலைவர்களையும் இழந்து வருவதாக தெரிவித்தார். இது அவர்களது தோல்வியை எடுத்துக் காட்டுவதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் பொது மக்களின் நலனை கருத்திக் கொண்டு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்திற்குள் ஊடுருவிய புலிகள் அங்குள்ள அப்பாவி பொது மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திவரும் நிலையில் புலிகளின் பிடியிலிருந்து சிவிலியன்களை மிகவும் பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை முற்றாகப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

2127 பேர் படையினரிடம் தஞ்சம்

udaya_nanayakkara_brigediars.jpgபுலிகள் பிடியிலிருந்து தப்பிவந்த 2127 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். படையினரின் பாதுகாப்பை நாடி தப்பி வரும் பொது மக்களின் எண்ணிக்கை தற்பொழுது மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய 65,189 பொதுமக்கள் இதுவரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

503 குடும்பங்களைச் சேர்ந்த 2127 பொது மக்கள் வருகை தந்துள்ளனர். 429 ஆண்கள், 779 பெண்கள், 327 சிறுவர்கள் மற்றும் 592 சிறுமிகள் இவர்களில் அடங்குவதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தாலி பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் பலி

italyearthquake.jpgஇத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரை 150க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகவும் குறைந்தது 1500 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ரோமுக்கு வடகிழக்கே உள்ள பழங்கால நகரான ல அக்விலா நகருக்கு அருகில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அருகில் இருந்த பல மலைக் கிராமங்கள் சேதங்களுக்கு உள்ளாயின.

ல அக்விலா நகரில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தில் அழிந்து போயின. அதன் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நில நடுக்கத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்காணவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமரர் ஜெயராஜ் பாராளுமன்ற உரை நூல் இன்று ஜனாதிபதியிடம்…

jayaraj.jpgஅமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளேயின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் கையளிக்கப்படவுள்ளது. ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே யின் மனைவி டாக்டர் சுதர்சினி பெர்ணாந்துபுள்ளே இந்த நூலை அச்சிட்டுள்ள தோடு அன்னாரின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நூல் வெளியிட்டு வைக்கப்படுகிறது.

மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே 1989ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரை நிகழ்த்திய பாராமன்ற உரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று விசேட நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.

ராகுல் டிராவிட் உலக சாதனை

_rahuldravid.jpgகிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு காட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட் பெற்றுள்ளார்.

திங்கட்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நடைபெற்ற போட்டியில், அந்நாட்டு ஆட்டக்காரர் டிம் மெக்கிண்டோஷ் அடித்த பந்தை காட்ச் பிடித்த போதே இந்தச் சாதனையை அவர் படைத்தார்.

இது டெஸ்ட் போட்டியில் அவர் பிடிக்கும் 182 வது காட்ச்சாகும். ஆஸ்த்ரேலியாவின் மார்க் வாஹ் அவர்களின் சாதனையை அவர் முறியடித்திருந்தார்.

பாதுகாப்பு வலயத்தில் ஐ.சி.ஆர்.சி. தனது பணிகளைத் தொடர்கிறது

முல்லைத் தீவில் புதுமாத்தளன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் செஞ்சிலுவைச் சர்வதேசகுழு தனது மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அந்த அமைப்பின் பேச்சாளர் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு இத்தகவலை நேற்றுத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மக்களுக்குமான மனிதாபிமானப் பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணிகளை முன்னெடுக்க நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் புதுமாத்தளன் பகுதியில் இருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் எமது பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர்  என்றார் அவர்.