எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அரசியல் ஆலோசனை, கூட்டு ஆணைக்குழு, வர்த்தக சம்மேளன புரிந்துணர்வு: -லிபியாவில் மூன்று ஒப்பந்தம்

mahi-kadabi.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று நாள் உத்தியோகபூர்வ லிபிய விஜயத்தின் போது இலங்கைக்கும் லிபியாவுக்குமிடையில் மூன்று முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பொருளாதார, கலாசார மற்றும் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு கூட்டு ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், அரசியல் ஆலோசனைகள் தொடர்பாகவும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டிருக்கின்றன. ஒரு நாடுகளின் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையிலும் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லிபிய வெளிவிவகார அமைச்சரும் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர். லிபிய ஜனாதிபதி கேர்ணல் முஅம்மர் கடாபியுடன் இரண்டாவது தடவையாக நடைபெற்ற விசேட பிரத்தியேக சந்திப்புக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தூதுக்குழுவினர் விசேட விமானம் மூலம் லிபியாவின் திரிப்போலி நகரை நேற்று முன்தினமிரவு சென்றடைந்தனர்.

அங்கு லிபிய சுகாதார அமைச்சர் அலி முஹம்மத் ரிஜாஸ் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு உட்சாக வரவேற்பு அளித்தார். திரிப்போலி நகரில் இரு நாடுகளினதும் வர்த்தக சம்மேளனங்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன் பின்னர் இலங்கை வர்த்தக சம்மேளன குழு உறுப்பினர் ஜி. தம்மிக்க பெரேராவும், லிபிய வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் சபையின் தலைவருமான ஜி ஹுசமா அலி அலுஸ்பாவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

எமது உள்நாட்டு பிரச்சினையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை -யாப்பா

anura.jpgவைகோ வாக இருக்கலாம் அல்லது வேறு எவராகவேனும் இருக்கலாம். எமது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தமிழகத்திலுள்ள ‘வைகோ’வை நாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். தமிழினம் அழிந்தால் தமிழகம் கொந்தளிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி கூறியிருப்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். தமிழகம் இன்று பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. தமிழகத்தில் பாரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் குறிப்பிட்ட கொஞ்ச ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு இருக்கும் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்தான் வைகோ என்பவர். அவர் வன்னிக்கு வந்து புலிகளுடன் பேசியது மட்டுமல்ல, புலிகளின் சீருடையையும் அணிந்து ஆயுதம் கையிலேந்தியவர்தான். எனவே அவரது கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

பிரபாகரன் என்பவரை இந்திய நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியிருப்பதுடன் இந்தியாவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டவராகவும் கருதப்படுகிறார். பயங்கரவாதப் பிரச்சினையை அரசாங்கம் இன்று வெற்றிகரமாக முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எமது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட எவருக்கும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்து பரிதவிக்கும் சிறுவரை பராமரிக்க திருச்சபை அமைப்புகள் முன்வருகை

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென்ற விருப்பத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப், இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருவதாக அம்மாவட்ட குருமுதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து வருகை தந்து செட்டிகுளம் அருணாச்சலம் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை புதன்கிழமை மாலை ஆயர் சென்று பார்வையிட்டார். 14 ஆயிரம் மக்களை கொண்டுள்ள இம்முகாமில் சிறியதொகை மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

இடைத்தங்கல் முகாம் மற்றும் மருத்துவமனைகளில் கைவிடப்பட்டுள்ள முதியோர் 150 பேர் வவுனியா பம்பைமடுவிலுள்ள அன்னை திரேசா முதியோர் இல்லத்தில் ஆயரின் உத்தரவின் பேரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலதிகமான 100 பேரை மன்னார் பட்டித் தோட்டத்தில் அமைந்திருக்கும் அன்பு கன்னியர் நடத்திவரும் இல்லத்தில் தங்கவைக்க முடியுமென்பதால் அவர்களை அங்கு அனுமதிக்குமாறு இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளை கோரியுள்ளார்.

இதன் அடிப்படையில் 15 முதியவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். குறிப்பாக முகாம்களிலுள்ள பெற்றோரை இழந்து நிர்க்கதியாகியுள்ள சிறுவர்களை விடுவித்தால் அவர்களை திருச்சபை அமைப்புகள் பராமரிக்க முடியுமென விரும்புவதாக ஆயர் இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைக் கோரியுள்ளார். அதேபோல கால், கைகளையிழந்துள்ளவர்களை பராமரிக்க திருச்சபை அமைப்புக்கள் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் பந்துல

bandula_gunawardena.jpgசுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற் பன்னப்பட்டு விற் பனை செய்யப்படும், சீனி, பருப்பு என்பன நுகர்வோர் பாதுகாப்பு சபை அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு அல்லது அதற்கு குறைவாகவோ விற்பனை செய்யா தோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் வெள்ளைச் சீனி ஒரு கிலோ 73 ரூபாவுக்கும், பருப்பு ஒரு கிலோ 175 ரூபாவுக்கும் குறைவாகவே விற்பனை செய்ய வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் சில வர்த்தக நிலையங்களிலும், சுப்பர் மார்க்கட்டுகளிலும் பக்கட் பன்னப்பட்ட சீனி, பருப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சீனி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் பருப்பு 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டதன் பின்னர் லக் சதொசவில் பருப்பு ஒரு கிலோ 154 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

பக்கற் பன்னப்பட்டதற்காக அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது. எந்தவொரு பொருளுக்கும் பொதியிடும் செலவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் மீது பழிதீர்க்கும் போக்கே இந்த அரசிடமிருப்பது தற்போது தெளிவாகத் தெரிகிறது -கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

இலங்கை அரசாங்கத்தின் சுயரூபத்தை சர்வதேசம் இன்று உணரத் தொடங்கியுள்ளது. இந்த அரசாங்கத்திடம் தமிழ்மக்கள் மீது பழிதீர்க்கும் போக்கே உள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதனை உணர்ந்தே சர்வதேச நாடுகள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளன. அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கியவர்கள் இன்று தீர்வை முன்வைக்குமாறு நிர்பந்திக்கின்றனர்.

இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேல் மாகாணசபைத் தேர்தலில் இடதுசாரி முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து கொலன்னாவ சாத்தம்மா தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது கூறினார்.

தொடந்து பேசிய அவர்; பொறுப்பும், கௌரவமும் மிக்க பதவியான பிரதமர் பதவியில் இருப்போர் சவப்பெட்டி, ஆணி, இரத்தம்மென மக்களை போரை நோக்கி நகரச் செய்யும் வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். இன்று வன்னியில் வாழும் மக்கள் தம் மண்ணை விட்டு அகலமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இம்மக்களின் மன உறுதிக்கு மாசு கற்பிக்க முயன்ற அரசின் முயற்சிகள் யாவும் தவிடுபொடியாகி உள்ளது. இன்று தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக நாம் மட்டுமே போராடுகின்றோம். மற்?றய கட்சிகள் என்ன செய்கின்றன.

ஐக்கிய தேசியக்கட்சி தென்னிலங்கையில் நடக்கும் மரண வைபவங்களுக்கு கதிரைகளை வழங்கிவருகின்றது. போரைப்பற்றியோ, தீர்வை பற்றியே ஐக்கிய தேசியக்கட்சி இன்று அதிகம் கதைப்பதில்லை. அவசரகாலச்சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும்போது எதிர்த்துவாக்களிக்காமல் ஒதுங்கி போவது அதற்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்பானதாகும். எதிர்வரும் காலங்களில் வார்த்தைகளால் மக்களுடன் விளையாடமுடியாது. சரியான நிலைப்பாட்டுடன் மட்டுமே மக்களை அணுகமுடியுமென்றார்.

கருணாநிதியின் அலெக்ஸாந்தர்-போரஸ் ஒப்பீட்டுக்கு எதிராக கண்டனங்கள்

karunanithi.jpgஇலங் கையில் நடைபெறும் சண்டையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால், போரஸ் மன்னரை அலெக்ஸாண்டர் நடத்தியதைப் போல கெளரவமாக நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிட நடைபெறும் போரைத் தடுத்து நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி வாதாடுவதை விட்டுவிட்டு, போருக்கு முதல்வரே முடிவுரை எழுத முற்றப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பேசிய பேச்சு தொடர்பாக, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, இது மிகப்பெரிய இனத் துரோகம் என்று கண்டித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஆபத்து ஏற்ப்டடால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்றும் இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் பேசிய வைகோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த வைகோ, தமிழகம் கொந்தளிக்கும் என்று மத்திய, மாநில அரசுகளை நல்லெண்ணத்தோடு எச்சரித்ததாக விளக்கமளித்துள்ளார்
 

தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் மோசமாக அதிகரிக்கும் அபாயம் – பவ்ரல்

எதிரணி அரசியல் கட்சிகளுக்கெதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதகாரிகள் உடனடியாக மேற்கொள்ளாதுவிட்டால் எதிர்வரும் நாட்களில் இன்னும் மோசமான வன்முறைகள் இடம்பெறும் சூழ்நிலை ஏற்படுமென தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் எச்சரித்துள்ளது.

அத்துடன் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியன இல்லாத நிலையில் மேல்மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை நீதியானதும் நேர்மையானதாகவும் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு கலாசார, சமய உறவுகளுக்கான நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த பவ்ரல் அமைப்பின் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் கூறியதாவது;

எமது அமைப்பு வேட்பு மனு கையளிப்பு ஆரம்பித்த நாள் முதலே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்கின்றது. நாம் முதல் கட்டமாக தேர்தல் செயற்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் முக்கிய பொறிமுறையான நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளோம்.

இரண்டாம் கட்டமாக அக்குழுவில் தேர்தல் ஒருங்கிணைப்புக்கான பிரதான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதுடன், அவரையும் உள்ளடக்கும் தேர்தல் குழுவொன்றை பவ்ரல் தலைமை அலுவலகத்துடன் இணைந்து ஏற்படுத்துவதாகும். தேர்தல் பிரசாரத்தின் போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நாளாந்தம் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளையும் தகவல்களையும் ஆராய்வதற்கான அலுவலகத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

எமது நடவடிக்கைக் குழு தேர்தல் தினத்தன்று தேர்தல்கள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும். கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை இணைத்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன. இந்நிலையில், இவற்றுக்கென மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பாளருக்கு உதவும் பொருட்டு தொகுதிவாரியாக பிரதேச ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதேவேளை, இம்மாகாணத்திலுள்ள 2,299 வாக்குச் சாவடிகளுக்கு தலா ஒருவர் வீதம் எமது கண்காணிப்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்களுக்கான செயலமர்வுகளையும் மாவட்டம் தோறும் நடத்தவுள்ளோம்.

இதற்கு மேலதிகமாக தேர்தல் தினத்தன்று 40 நடமாடும் வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தி 200 நடமாடும் கண்காணிப்பாளர்கள் மூலம் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களைக் கண்காணிப்பதற்காக சேவையில் ஈடுபடுத்துவதும் எமது திட்டங்களாகும்.

மேலும், எமது ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெறும் சர்வகட்சி நடவடிக்கை கூடம் தேர்தல் செயலகத்தில் இயங்கும். அதேவேளை, பிரதேச ரீதியாக நிறுவப்படும் பிரதேச சர்வகட்சி நடவடிக்கை கூடத்திலும் எமது பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

தபால் மூலமான வாக்களிப்பு, பிரசார நடவடிக்கைகள் சார்ந்த சில சம்பவங்கள் தவிர்ந்த ஏனைய பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறாது அமைதியான முறையில் இடம்பெற்றது. நாம் அவதானித்ததன் பிரகாரம் 70% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இது அதிகரிக்கலாம்.

இதேவேளை, தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக சட்ட முறையற்றவிதத்திலான சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுத்ததுடன், வாக்களிப்பின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை, பாஸ்போட், சாரதி அனுமதிப்பத்திரம், ரயில்வே பருவகாலச் சீட்டு, தற்காலிக அடையாள அட்டை, தபால் அடையாள அட்டை என்பவற்றுக்கு அனுமதியளித்துள்ளார்.

இத்தேர்தலில் பணம் மற்றும் அரசியல் பலம் கொண்டவர்கள் அநேகர் மத்தியில் இவை இரண்டுமற்ற வேட்பாளர்கள் கவனிக்கப்படாமல் போவது ஜனநாயக பண்பல்ல. இந்த பண அரசியல் பலம் உள்ளவர்களால் 500 மில்லியன் ரூபா சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு உள்ள நிலையில், இதனை அகற்றுவதற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இட்ட முறையற்ற பிரசாரத்தை அகற்றும் போது மீண்டும் அவை ஒட்டப்படுகின்றன. இதனை நிறுத்த கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஒத்துழைப்பு அவசியம்

அத்துடன் பிரச்சினை ஏற்படும்போது சர்வகட்சி மூலம் உடனடியாக தீர்வு காண்பது போல் இதற்கும் தீர்வைக் காணவேண்டும். குறிப்பாக எவ்வித அரசியல் அடிப்படையும் அற்ற கட்சிகளும் குழுக்களும் பெயரளவில் மாத்திரம் தேர்தலில் களமிறங்குவதை மட்டுப்படுத்தாத யாதேனும் செயற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீண்டதோர் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடைய ஆவணத்தை இல்லாமல் செய்யமுடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.2,378 வேட்பாளர்களில் 19 பேரே பெண்களாவர், இது கவலைக்குரியது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் குறைந்தது 30 பெண்களை தெரிவு செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். பெண்கள் நிலைமை தொடர்பில் இந்த குறைவான எண்ணிக்கையான வேட்பாளர்கள் மூலம் பாரதூரமான பலவீனமுள்ளதை நாம் காண்கின்றோம். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

எமது கண்காணிப்பின்போது கொலைச்சம்பவம் ஒன்றுடன் 13 தாக்குதல் சம்பவங்களை பதிவுசெய்துள்ளோம். மொத்தமாக 38 முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். ஜே.வி.பி. ஆதரவாளர் கொல்லப்பட்டமை, அவர்களது அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளமையை நாம் பதிவுசெய்துள்ள நிலையில், எதிரணி அரசியல் கட்சிகளுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு குறித்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் வருடப்பிறப்புக்கு பின்னர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதுவிடின் நிலைமை இன்னும் மோசமாகும்.

17 ஆவது அரசியலமைப்பு இல்லாத நிலையில் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இல்லாது முன்னர் போன்று தேர்தல் இடம்பெறுவதால் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்காளர் அட்டைகளை மேலதிகமாக விநியோகித்து தேர்தலில் வெற்றிபெற ஆளும் கட்சி புதிய தந்திரம் – ஐ.தே.க. குற்றச்சாட்டு

unp-members.jpg1,33,000 அட்டைகள் சட்ட விரோதமானவை ‘அரசாங்கம் தேர்தலில் வெற்றிகொள்வதற்கு காலத்துக்குக் காலம் புதிய யுக்திகளை கையாண்டு வருகின்ற நிலையில், மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் “சட்ட விரோத வாக்காளர் அட்டை’யெனும் புதிய முறையொன்றை அரசு கையாண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையாளரின் அனுமதியின்றி இவ்வட்டைகளை அச்சிட்டு விநியோகிக்க முடியாதென்ற வகையில் இதற்கு பதிலளிக்க அவர் கடப்பாடுடையவர் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக வியலாளர் மகாநாட்டில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மதுபானக் கடைகள் 13, 14 இல் மூடப்படும்

புத்தாண்டு காலப் பகுதியில் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கலால் அத்தியட்சகர் பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார். கடந்த மூன்று தினங்களில் மேற்கொள்ளப்பட்ட 1179 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 1208 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு 13ம் 14ம் திகதிகளில் சகல மதுபானக் கடைகளும் மூடப்படும். அந்தக் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்த கலால் திணைக்கள அத்தியட்சகர், நாடு முழுவதும் திணைக்கள அதிகாரிகள் விசேட கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மதுபானத்தையும், மதுபாவனையையும் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் பெரும் முன்னேற்றம் கண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இது மக்கள் மத்தியில் பெருவரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்-சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படுவதால் சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்கள், கசிப்பு உற்பத்தி செய்வோர் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் புத்தாண்டு தினங்களில் மதுபோதையில் நடமாடுபவர்களுக்கு எதிராகவும் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை புல்மோட்டைக்கு வந்தவர்களில் இரு குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

trico.gifமுல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு புல்மோட்டைக் களவைத்தியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட 537 காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்களில் 9பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் வெளியிட்ட களநிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களில் 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை27 ஆக அதிகரித்துள்ளது.  கூட்டிவரப்பட்ட காயமடைந்தவர்களில் புல்மோட்டை கள வைத்தியசாலையில் 169 பேருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் 90 ஆண்கள், 55 பெண்கள், 24 குழந்தைகள் அடங்குவர், 147 பேர் (ஆண்கள் 80, பெண்கள் 49, குழந்தைகள் 18) பதவியா அரசினர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கர்ப்பிணித் தாய். இவர்களுடன் வந்த உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று 386 பேரும் பதவியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போது புல்மோட்டைக் களவைத்தியசாலையில் 22 காயமடைந்தவர்களும் (10 ஆண்கள், 6 பெண்கள், குழந்தைகள் 6) 22 உறவினர்களுமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு 98 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

16.3.2009 இலிருந்து 8.4.2009 வரை முல்லைத்தீவிலிருந்து புல்மோட்டைக்கு கப்பல் மூலம் கூட்டிவரப்பட்டு ஆஸ்பத்திரிகள், நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,468 ஆகும். இவர்களில் 1,164 பேருக்கு புல்மோட்டையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.