எமது உள்நாட்டு பிரச்சினையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை -யாப்பா

anura.jpgவைகோ வாக இருக்கலாம் அல்லது வேறு எவராகவேனும் இருக்கலாம். எமது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை. தமிழகத்திலுள்ள ‘வைகோ’வை நாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். தமிழினம் அழிந்தால் தமிழகம் கொந்தளிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி கூறியிருப்பதை சுட்டிக்காட்டி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். தமிழகம் இன்று பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. தமிழகத்தில் பாரிய தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் குறிப்பிட்ட கொஞ்ச ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு இருக்கும் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்தான் வைகோ என்பவர். அவர் வன்னிக்கு வந்து புலிகளுடன் பேசியது மட்டுமல்ல, புலிகளின் சீருடையையும் அணிந்து ஆயுதம் கையிலேந்தியவர்தான். எனவே அவரது கருத்துக்களை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.

பிரபாகரன் என்பவரை இந்திய நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியிருப்பதுடன் இந்தியாவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டவராகவும் கருதப்படுகிறார். பயங்கரவாதப் பிரச்சினையை அரசாங்கம் இன்று வெற்றிகரமாக முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எமது உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட எவருக்கும் அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *