பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் நன்றி கூறிக்கொள்வதுடன் அவ்விருவருக்கும் எதிராக சர்வதேசத்தினால் மேற்கொள்ளவிருக்கின்ற போர்க் குற்ற விசாரணைகளுக்கு எதிராக அரசுடன் கைகோர்த்துச் செயற்பட ஐ.தே.க. தயார் என்று அக்கட்சியின் குருணாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாழ்க்கை தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, தமிழ் – சிங்கள உறவைக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்று, வன்னிக் களமுனையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையைச் சேர்ந்த சமன் குமார ராமவிக்ரம தெரிவித்தார்.
இந்தப் பணியை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது கடந்த ஒன்றரை வருட காலமாக, களமுனையில் நின்று ரூபவாஹினிக்காக செய்தி சேகரித்த சமன்குமார ராம விக்ரமவுக்கும், அமல் சமந்தவுக்கும் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வளவில் திறந்த வெளிக் கலையகத்தில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், துணிச்சல் மிக்க இரண்டு செய்தியாளர்களுக்கும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நேரடியாக ஒளிபரப்பாகிய இந்தப் பாராட்டு விழா நிகழ்வில் கருத்துத் தெரிவித்த இரண்டு செய்தியாளர்களும், களமுனையில் தாம் பெற்ற அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
“ஒரு நாள் முன்னேறிச் செல்லும் படையினருடன் சென்றபோது, புதுக்குடியிருப்பில் வைத்து தீவிர மோதல் நடந்தது. நான் செய்வதறியாது, என்னவானாலும் நடக்கட்டும் என்று கண்களை மூடிக் கொண்டேன். எந்தக் கஷ்டமானாலும், நாட்டு மக்களுக்கு போர்ச் செய்திகளைத் திரட்டி உடனுக்குடன் ஒளிபரப்ப வாய்ப்பு கிடைத்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். இறுதி வரை, களத்தில் நின்று வெற்றி வாகை சூடியதன் பங்காளியாக ரூபவாஹினியும் இணைந்து கொண்டுள்ளதில் மகிழ்ச்சி. இனி, நாம் தமிழ் – சிங்கள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். எமது அடுத்த கட்ட போராட்டம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்” என்றார் ராமவிக்ரம.
அம்பாறை, சியம்பலாண்டுவ பகுதியில் பதுங்கியிருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படைவீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக வேட்டு தீர்க்கப்ப ட்டதனால் அவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றொரு வீரர் உயிரிழந்துள்ளார்.
சிம்பலாண்டுவ, மூன்றாம் கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். அறுகம்பை பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த கே. ஜி. துஷாரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு வலயத்தில் இருந்துகொண்டு மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான பொய்யான தகவல்களை வெளியிட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மருத்துவர் போன்றோர் தொடர்பான உண்மையான தகவல்கள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும்.
இவர்களை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனரென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர்.
இவர்களில் சிலர் இறந்து விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களில் இவர்கள் தொடர்பான தகவல்கள் அம்பலப்படுத்தப்படும். அவர்களாகவே உண்மையை வெளிப்படுத்துவார்கள்.
கடந்த காலங்களில் 9100 புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். இவர்களில் 1600 பேர் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 14 தற்கொலை குண்டுதாரிகள் வெளியில் உள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சரணடைந்தவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழே விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட மாட்டாது. சமாதானம் நிலைநாட்டப்பட்டால் இந்த சட்டங்கள் தேவைப்படாது.
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துள்ள போதும், பயங்கரவாதம் முற்றுப் பெறவில்லை. சர்வதேச ரீதியில் புலி முக்கியஸ்தர்கள் பலர் செயற்பட்டு வருகின்றனர். இவர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸின் (இன்டர்போல்) ஒத்துழைப்பை கோரியுள்ளோம். இதேவேளை, புலி ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களையும் இலங்கை பிரஜைகளையும் தாக்கி வருகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சர்வதேச நாடுகளை கோரியுள்ளோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பபட்டு வந்த நிதி புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டது அறிய வந்தபின் சென்றடையவில்லை என இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ ரீதியாக பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண போராளிகள் புலம்பெயர் புலிகளினாலும் கைவிடப்பட்டு விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக சரணடையும் வழிகள் பற்றி சிந்திக்க முற்படுவதாக தெரியவருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பகுதியினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பேச்சுவாரத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைப் பொறுப்பாளரும் தற்போது அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தன்னுடன் சரணடைவது பற்றி தொடர்பு கொண்டிருப்பதை முரளீதரன் உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கயஸ்தர் ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் ஐரோப்பாவிலே குறிப்பாக லண்டனிலேயே உள்ளனர்.
ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு இயக்கமும் தடைசெய்யப்பட்ட போது அதன் போராளிகள் அனைவராலும் கைவிடப்பட்டு உதிரிகளாகி பல தவறான வழிகளில் ஈடுபட்டனர். பிழையான அரசியல் சக்திகளால் உள்வாக்கப்பட்டு மீண்டும் அவர்கள் ஆயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு குடும்பங்களைக் காக்கவும் தங்கள் உயிர்களைக் காக்கவும் ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். இதனை புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்து சென்ற போதும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் செல்வந்தமான ஒரு இயக்கம். இதன் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என சில ஆண்டுகளுக்கு தி எக்கொனமிஸ்ற் தெரிவித்து இருந்தது. அப்படி இருந்தும் இந்த நிதிக் கையாள்கை சிலருடைய கரங்களில் மட்டுமே உள்ளது.
தற்சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற வாதம் தொடர்கையில் இப்போராளிகளின் எதிர்காலம் பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவாதா? அவ்வாறு சரணடைந்தால் அவர்களது வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன? அல்லது அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள்? இவை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்கள் அவசரமான ஆனால் தெளிவான முடிவுகைள அறிவிக்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கை நிலவரத்தை நேரில் பார்வையிட அனுமதியளிக்கப்பட வேண்டுமென மல்வத்த பீடாதிபதி வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை குறித்து சர்வதேச நாடுகளிடையே காணப்படும் பிழையான கருதுகோள்களை களைய வேண்டுமாயின் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த போது, மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எதிர்வரும் காலத்தில் பயங்கரவாதம் தலை எடுக்காமலிருக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான ராஜதந்திரிகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தங்கள் நியமனங்களைக் கையளித்தனர். மியன்மார் மற்றும் போலாந்துக்கான தூதுவர்கள் இருவரும்; உகண்டாவுக்கான உயர்ஸ்தானிகருமே இவ்வாறு நியமனங்களை சமர்பித்தனர்.
நிமிஷா ஜே மத்வானி உகண்டா உயர்ஸ்தானிகராகவும்; யூ ஓஹ்ன் த்வின் மியன்மார் தூதுவராகவும் பேராசிரியர் பியட்ர் க்ளோகவுஸ்கி போலாந்து தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஐநூறு கிலோவுக்கும் அதிகமான அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளை முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தினர், மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
மீட்டெடுக்கப்பட்ட பொருட்களில் ரி-என்.ரி ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்து – 260 கிலோ, ரி.என்.ரி. சிலப் 85 கிலோ, குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் மூலவெடிமருந்து – 83 கிலோ, பெட்ன் ரக வெடிமருந்து – 11 கிலோ, சி – 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து – 36 கிலோ, கறுப்புப் பவுடர் – 13 கிலோ, வெடிமருந்துகள் – 16 கிலோ, ஆகிய பலதரப்பட்ட வெடிமருந்துகளை மீட்டெடுத்துள்ளனர்.
குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு குண்டுகள் – 530 கிலோ, அலுமினியக் குண்டுகள் – 25 கிலோ, குண்டுகளை வெடிக்கவைக்க பயன்படுத்தப்படும் கறுப்பு மற்றும் சிவப்பு நிற சுவிட்சுகள் – 17,300 மற்றும் 517 பியுஸ்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, 55 கிலோ எடையுள்ள இனங்காணப்படாத இரசாயனப் பவுடர்களையும் படையினர் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர். இவற்றில் 35 கிலோ கறுப்பு நிற இரசாயனப் பவுடரும் 20 கிலோ வெள்ளை நிறப்பவுடரும் அடங்கும்.
ஆர்.பி.ஜி. குண்டுகள் – 44, கைக்குண்டுகள் – 29, கிளேமோர் குண்டுகள் – 8, ஜொனி ரக கண்ணிகள் – 108, மிதி வெடிகள் – 98, ரி. 56 ரக துப்பாக்கிகள் உட்பட பெருந் தொகையான ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு பொருத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் என்பவற்றையும் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படையணியினர் கண்டெடுத்துள்ளனர். இதேவேளை இராணுவத்தின் 58 வது படையினர் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போது.
ரி-56 ரக துப்பாக்கிகள் – 206, வெடிக்கவைக்கும் கருவிகள் – 1000, வெடிமருந்து பொதிகள் – 11, தற்கொலை அங்கிகள் – 03, சினைப்பர் ரக துப்பாக்கிகள் – 02, 40. மி. மீ. ரக கிரனைட் லேஞ்சர் குண்டுப் பெட்டிகள் – 03, ஒட்சிசன் சிலின்டர்கள் – 13, அசிட் கலன்கள் – 15 அதாவது 5 லீட்டர் கடல் கண்ணிகள் – 06 சுழியோடி உடைகள் 120 மி.மி. மோட்டார் குண்டுகள் – 44 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 13 60 மி.மீ. மோட்டார் குண்டுகள் – 39 உட்பட ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
வடக்கில் யுத்தம் முடிவுற்றுள்ள நிலையில் அப்பிரதேசங்களில் காணப்படும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு மேலும் 160 மில்லியன் ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் பிரதேசத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் ஏற்கெனவே 80 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது. இதன்படி வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இதுவரை 240 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
தற்போது வழங்கப்படவுள்ள நிதியைக்கொண்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படும். இப்பணியை டானிஷ் டெமினிங் குழுவும், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமும் மேற்கொள்ளும்.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் கண்ணிவெடிகளற்ற இலங்கை எனும் இலக்கை அடைவதற்கு தொடர்ந்தும் உதவியளித்து வரும் ஜப்பான், இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீள்குடியேற்றும் பணிகளுக்காக கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2250 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நேற்று இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
மக்களுடன் நேரடியாகப் பேசிய அவர் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். வவுனியா செயலகத்திற்கு விஜயம் செய்து மாவட்ட அரச அதிபருடன் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர்களான றிசாட் பதியுதீன், அமீர் அலி ஆகியோரும் வந்திருந்தனர்.