எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

‘பெற்ற வெற்றியை எவரும் பறித்துக்கொள்ள இடமளிக்க கூடாது’

mahinda-rajapaksha.jpgஇந்நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்கள் நிலவிய குரூர தீவிரவாதத்தைக் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டி பெற்றிருக்கும் பாரிய வெற்றியை எவரும் பறித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மாலை களுத்துறையில் தெரிவித்தார்.

அதேநேரம், சட்டம், ஒழுங்கைப் பேணி தேசத்தின் கெளரவத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். விசேட அதிரடிப்படையில் அடிப்படை பயிற்சியை முடித்த 60 வது குழுவினர் வெளியேறும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். விசேட அதிரடிப்படையினரின் களுத்துறை, கட்டுக்குருந்தை பயிற்சி கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த விசேட அதிரடிப்படையின் 100 உதவி பரிசோதகர்களும், 314 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வைபவத்தின் போது வெளியேறினர்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் மிகவும் குரூர தீவிரவாதிகள் ஆசிய நாடான இலங்கையில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு விசேட அதிரடிப்படையினரின் அர்ப்பணிப்புக்களும், திறமைகளும் பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இந்நாட்டில் பெரும் கெளரவத்திற்குரிய படைப் பிரிவொன்றில் இணைந்துள்ள உங்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகின்றேன்.

1983ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலால் நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். அன்று முதல் இற்றைவரையும் 461 விசேட அதிரடிப்படை வீரர்கள் நாட்டுக்காக உயிர் நீத்திருக்கின்றார்கள். இருநூறுக்கும் மேற்பட்டோர் ஊனமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தேசத்தின் கெளரவத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்கிய போதே விசேட அதிரடிப்படை ஸ்தாபிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, அமைதி, சமாதானத்தை நிலைநாட்டும் பொலிஸாரைப் படுகொலை செய்வதற்கு பயங்கரவாதிகள் ஆரம்பித்தனர். அல்பிரட் துரையப்பாவை படுகொலை செய்து அரசியல் கொலைகளையும், சப். இன்ஸ்பெக்டர் பஸ்தியான் பிள்ளையைப் படுகொலை செய்து பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் எதிரான கொலை நடவடிக்கைகளையும் தீவிரவாதிகள் தொடங்கினர்.

நாட்டைத் துண்டாடுவதற்காகப் தீவிரவாதிகள் அன்று முதல் நடவடிக்கை எடுத்தார்கள். இவர்களுக்கு எதிராகக் கடந்த கால ஆட்சியாளர்கள் தொடராக நடவடிக்கை எடுக்கவில்லை. சில ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடராக மேற்கொள்ளத் தயங்கினார்கள். ஆனால் நாம் மாவிலாறு முதல் இடைவிடாது தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடராகப் போராடி அவர்களைக் குறுகிய காலத்தில் ஒழித்துக் கட்டி பாரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றோம். இந்த வெற்றியை எவரும் கவர்ந்துகொள்ளவோ, பறித்துக்கொள்ளவோ இடமளியாதீர்கள்.

மனிதாபிமான நடவடிக்கையின் மூலமே நாடு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. அதனால் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்நாட்டில் மக்களுடன் மிகவும் நெருங்கி செயற்படும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களமே விளங்குகின்றது. அதனால், சட்டத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடமுள்ளது. அதுவே எமது பாரிய வெற்றியை அர்த்த பூர்வமாக்கும்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. சமாதானமில்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இதன் பயனாக தீவிரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் எல்லைக் கிராமங்கள் என்ற பெயரை இல்லாமலாக்குவதற்கும் விசேட அதிரடிப்படையினர் பெரும்பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இராணுவத்தினர் வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்த போது பயங்கரவாதிகள் மொனறாகலை, யால, ஒக்கம்பிட்டி வாழ் அப்பாவிகள் மீது தாக்குதல்களை நடத்தினர். இதன் மூலம் வன்னி மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்தலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளை முறியடித்தனர்.

தீவிரவாதிகளின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட கஞ்சிகுடிச்சாற்றிலும், விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளுக்கு நல்ல பாடம் புகட்டினர். அம்பாறை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 24 முகாம்களை விசேட அதிரடிப்படையினர் குறுகிய காலத்தில் நிர்மூலமாக்கினர்.

கொழும்புக்குள் தற்கொலைப் பயங்கரவாதிகள் பிரவேசிப்பதையும் முறியடித்தனர். தீவிரவாதிகளை ஒழிப்பதில் விசேட அதிரடிப் படையினரின் பங்களிப்பும் அளப்பரியதாகும். இதற்கு பல நாடுகளின் வீரர்கள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியாகியுள்ள சர்வதேச தரத்திலான இக்கல்லூரியின் பயிற்சி பெரிதும் உதவியுள்ளது என்றார்.

20 -20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை Vs அயர்லாந்து / இந்தியா Vs இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

muralitharan-sri-lankas.jpg ஐ.சீ.சீ. உலக் கிண்ண ‘டுவன்டி-20’ கிரிக்கட் தொடரின் ‘சுப்பர்-8′ சுற்றில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இரண்டாவது உலகக் கிண்ண டுவன்டி-20’ கிரிக்கட் தொடரில் ‘சுப்பர்-8’ எனப்படும் இரண்டாவது சுற்றின் இன்றைய ஆட்டம் லண்டன்,  லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது.

இதேவேளை, ‘சுப்பர்-8’சுற்றின் மற்றுமொரு போட்டியும் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் இப்போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பசில் எம்.பி. தலைமையில் விசேட உயர்மட்ட மாநாடு

basil.jpg“வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தல் தொடர்பான திட்டங்களை ஆராயும் விசேட கூட்டமொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றுக் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மின்சாரம், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீள்குடியேற்றம், கல்வி கைத்தொழில், தொழில் பயிற்சி, சுகாதாரம், சமூக சேவைகள், கூட்டுறவு, வர்த்தகம், தேசத்தை கட்டியெழுப்புதல், போக்குவரத்து உட்பட அனைத்து அமைச்சுக்களின் ஊடாகவும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்க உத்தேசித்துள்ள வேலைத் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்களும் விளக்கமளித்தனர்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் 180 நாள் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் நீண்டகால வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தனர். முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் யாவற்றையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ செவிமடுத்ததுடன் சில ஆலோசனைகளையும் முன்வைத்தார்

யாழ். மா.ந.சபை, வவுனியா ந.ச.தேர்தல்: ஐ.ம.சு.மு கட்சிகளுடன் தனித்தனிச் சந்திப்பு

யாழ். மாநகர சபை, வவுனியா நகரசபை தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக வடக்கிலுள்ள கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த நேற்றுத் தெரிவித்தார்.

வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஏதுவாக விரைவில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப் படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவி த்தார்.

வடக்கிலுள்ள சிறு சிறு கட்சிகளுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது அரசாங்கம் வெற்றிலைச் சின்னத்தின் கீழேயே போட்டியிடவுள்ளது என்பது பற்றி திட்டவட்டமாக கூறியுள்ளது, எனக் குறிப்பிட்ட அமைச்சர் இதற்கு ஏனைய கட்சிகளும் தமது இணக்கத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

யாழ். மாநகர, வவுனியா நகர சபைத் தேர்தலில் பிரதான வேட்பாளராக நியமிக்கப்ப டவுள்ளவர் யார் எனக் கேட்டபோது இதுபற்றி கட்சியின் தலைமை இதுவரை முடிவு செய்ய வில்லை என்றும் குறிப்பிட்டார். ஈ.பி.டி.பி, புளொட், ஈ.ரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ (சிறி) அணி போன்ற கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்பட்டதாக தெரியவருகிறது

காலை 6 மணி முதல் மாலை 6 வரை A9 தனியார் லொறிகளுக்கு அனுமதி

08lorry-good.jpgயாழ். குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களுடன் முதற்கட்டமாக தனியார் வர்த்தகர்களின் பொருட்களுடன் சுமார் 120 லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்லவுள்ளன.

எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலிருந்து மேற்படி லொறிகள் ஏ-9 பாதையூடாக செல்கின்றன என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் குறிப்பாக ஓமந்தைக்கு அப்பால் மோதல்கள் ஓய்ந்ததன் பின்னர் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்களுடன் ஏற்கனவே லொறிகள் சென்றன.

இதனையடுத்து குடாநாட்டிலுள்ள தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களது லொறிகளிலேயே ஏற்றி செல்வதற்கு ஏதுவாக லொறிகளை பதிவு செய்யுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் கேட்டிருந்தார்.

இந்த அறிவித்தலையடுத்து இதுவரை சுமார் 300 லொறிகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவு செய்துகொண்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட இந்த லொறிகளில் சுமார் 120 லொறிகளே முதற்கட்டமாக செல்லவுள்ளன.

காலை ஆறு மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே ஏ-9 வீதியூடாக செல்ல லொறிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன் எக்காரணம் கொண்டும் லொறிகளை வீதியின் ஓரத்தில் நிறுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதி ஓரங்கள் கண்ணிவெடி, மிதிவெடி அச்சுறுத்தல் உள்ளது என்பதாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டை நோக்கியோ அங்கிருந்து கொழும்பு நோக்கியோ வரும் போது போகும் போது தற்செயலாக லொறி பழுதடைந்தால் லொறிச் சாரதிகள், நடத்துனர்கள் லொறி நிறுத்தப்பட்டுள்ள இடத்தைவிட்டு செல்லவேண்டாம் எனவும், வீதியின் ஓரங்களுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தனியார் வர்த்தகர்களினால் லொறிகளுக்கு ஏற்றப்படும் பொருட்கள் ஒரே இடத்தில் வைத்து ஏற்றப்பட்டு சீல் வைக்கப்படும். குடாநாட்டில் கைதடி களஞ்சியசாலையில் வைத்தே பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு சோதனையின் பின்னர் தனியார் வர்த்தகர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், உடைகள், கட்டடப் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குடாநாட்டிற்குள் சென்றடைந்ததும் சகல பொருட்களின் விலைகளும் வெகுவாக குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கைப் பெண் பாகிஸ்தானில் மரணம்

பாகிஸ் தான், கராய்ச்சி நகரிலுள்ள இலங்கை தூதரக கொன்சியூலர் அலுவலகத்தில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்னஸ் (48) என்ற பெண்ணே மரணமடைந்தவாராவார்.

அவர் தனது விடுதியில் தங்கியிருந்த போது மரணமடைந்துள்ளார். இயற்கை மரணமென பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும் அவரது கணவன் தேடப்படுகிறார். பங்களாதேஷ் பிரஜையான இவரது கணவர் சிராஜூள் ஹக் தலைமறைவாகியுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

அஸ்ஸாமில் சுகோய் படையை நிறுத்தியது இந்திய விமானப்படை

iair-force.jpgசீனாவின் ஆக்கிரமிப்பு மேகம் வட கிழக்குப் பகுதியில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அஸ்ஸாமில் சுகோய் போர் விமானங்களை இந்திய விமானப்படை நிறுத்தியுள்ளது. மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் நான்கு சுகோய் விமானங்கள் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன.

சமீபத்தில் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஏழு விமானப்படையினரும், 6 ராணுவத்தினரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகோய் சேர்ப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. சுகோய் -30 ரக போர் விமானம் அதி நவீனமானது. 2 பேர் அமர்ந்து செல்லக் கூடியது. அனைத்து விதமான வானிலையையும் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது. வானிலிருந்தபடியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அணு ஆயுதங்களையும் இது சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்தது.

ரஷ்யாவிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தைக் கொண்டு, தற்போது நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலேயே சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் வகையில் வட கிழக்குப் பகுதியில் தற்போது இந்திய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறபப்டும் பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றபடப்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.

வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையமொன்றில் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினரொருவரிடமிருந்து கிடைத்த தகவல்களையடுத்தே விசேட பொலிஸ் குழுவினரால் இவை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறபப்டுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலுள்ள தோணிதாண்டமடுவில் மறைவிடமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி 56 துப்பாக்கிகள் – 210 ,ரீபீட்டர் ரக துப்பாக்கி – 01 , 303 வகை துப்பாக்கி – 01 உட்பட ஆயுதங்களும் வெடிப் பொருட்களும் நேற்று பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்டு புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்று திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்திலுள்ள கல்லடி என்னுமிடத்திலும் ஆயுதங்களும் வெடி பொருட்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ரி – 56 துப்பாக்கி – 51 ,அதற்கான மகசீன்கள் – 900,ஆர்.பி.ஜி. ரக துப்பாக்கிகள் – 02,ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் – 03 உட்பட யுத்த உபகரணங்கள் ஒரு தொகுதி இதில் அடங்குவதாக பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மொரவெவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வான்வில் காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி சந்தேக நபரொருவர் நேற்று முன் தினம் மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது ரி – 56 ரக துப்பாக்கி சகிதம் குறிப்பிட்ட சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனிதக் கொடுமையினூடாகப் பயணித்த இளம் தாயின் நேரடிச் சாட்சியம். : தொகுப்பு குமாரி

Nanthi_Kadal”கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.”

தமது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பல இடங்களில் தங்கி சகல உடமைகளையும் இழந்து ஆனால் உயிர்தப்பி தற்போது முகாமில் இருக்கும் ஒரு இளம்குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நேரடி உரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொண்ட, அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மனக்கசப்புகள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பே இக்கட்டுரையாகும்.

”கிளிநொச்சியில் ஏ9 அருகாமையில் அமைந்த எங்கள் வீடு, வசதிகளுடன் கூடிய பெரியவீடு. இவ்வீட்டை தம்மிடம் தரும்படி பலதடவைகள் புலிகள் எங்களிடம் கேட்டனர். ஜந்துபேரைக் கொண்ட எமது குடும்பத்திற்கு அறைகளற்ற குடிசை வீடுகளை பதிலாகக் காட்டினார்கள். உறுதியை எழுதி அவ்வீட்டை எம்மிடமிருந்து எடுப்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. எப்படியும் எமதுவீடு பறிபோய்விடும் என்ற பயம் எமக்கிருந்தது. எனவே இதை வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனத்தினருக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு டிசம்பர் 2008 நடுப்பகுதியில் நாம் அக்கராயன் நோக்கி இடம்பெயர்ந்தோம்.

தொழில் – கம வசதிக்காகவும் அக்கராயன் போனோம். அங்கு எமக்குக் கிடைக்கும் மாத வருமானத்தைவிட அதிகமான பணத்தை புலிகள் அறவிடுவார்கள். என்றுமே புலிகளுக்கு இதைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் தரவுமில்லை. தாம் நினைத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். இதன் காரணமாகவே தொழில்துறைகள் நஷ்டப்பட்டு அழிந்து போனது பலருடைய அனுபவங்கள். ஏ9 பாதையை அண்மித்த வியாபாரத் தளங்களின் வியாபாரிகள் இதற்கு நல்ல உதாரணம். எமது தொழில்துறைகளை அழித்தது மட்டுமல்ல கிளிநொச்சிக்கு இராணுவம் வருகின்றதென எவ்வித ஆயத்தங்களோ முன்னறிவிப்போ இன்றி உடனடியாக எம்மை வற்புறுத்தி வெளியேற்றியமை மிகவும் கொடுமையானது.

கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம். வெளியேறிய நாட்களிலிருந்து பல இடங்களில் தங்கினோம். எம்மிடமிருந்த உடமைகள் உடுப்புகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு இடத்திலும் தொலைத்தோம். குண்டுச் சத்தம் அருகாக கேட்கையில் பயத்தில் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு ஓடுவோம். திரும்பி வந்து பார்க்கையில் எமது பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். எமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இழந்தோம். இவையாவும் எமது மக்களுக்கான எமது தமிழ் இனத்திற்கான விடிவைத் தேடித்தரும் என்று நம்பினோமோ? இல்லையோ? இந்த வழியால் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயநிலை எமக்கு.

இலங்கை அரசும் இராணுவமும் எமது எதிரியா? அல்லது நண்பனா? நாம் என்றுமே பரீட்சித்துப் பார்க்கவில்லை. ஆனால் எம்மீது விழும் குண்டுகள் எமது எதிரிகளே. இது யாரிடமிருந்து வருகிறது என்றும் எமக்கு தெரியாது? ஆனால் இலங்கை இராணுவத்தின் கொடுமை என்ற பேச்சிலிருந்து நாம் விலகுவதில்லை. குண்டு வரும் திசை பார்க்க எமக்கு தெரியாது. எல்லா திசைகளுமே ஒரே திசையாகவே தெரிந்தது.

இடம்விட்டு இடம்மாறுவது கூட யாரோ சொல்வார்கள், மக்கள் அசைவார்கள் நாமும் போவோம். ஏன் மாறுகின்றோம்? காரணம் எப்போதும் ஒன்றாகவே இருந்தது. அது இலங்கை இராணுவம் முன்னேறுகின்றது என்பதே. நாம் எங்கே போகிறோம் என்று யாரும் கேட்பதில்லை. விலகிப்போகிறோம். செல்விழுந்தால் ஓடுவோம். யார்மீது விழுந்தது? அவரது நிலை என்ன? திரும்ப வந்து பார்த்தது கிடையாது. விலத்திப் போகிறோம். புதிய மண், புதிய கிராமம், புதிய குறிச்சி நோக்கி போகிறோம். ஒவ்வொரு புதிய இடங்களிலும் ஒவ்வோரு புதிய பிரச்சினைகள் வரும். தண்ணீர் கிடையாது. தண்ணீர் கிடைத்தால் மரநிழல் கிடையாது. இருந்த பிறகு தான் தெரியும் நாம் கடியெறும்பின்மேல் இருந்து விட்டோம் என்று. ஒழுங்கான நித்திரை கிடையாது. நித்திரையானால் மீண்டும் கண்விழிப்பமோ தெரியாது என்ற மனப்பயம் எப்போதுமிருக்கும். எவ்வளவு கேவலமாகவெல்லாம் நாம் நடத்தப்பட்டோம்.

பாரதிபுரம் ரெட்பார்னா விஸ்வமடு உடையார்கட்டு குரவயல் இருட்டுமடு அம்பலவன்பொக்கணை மாத்தளன் ஆகிய கிராமங்களைத் தாண்டி நந்திக்கடல் அருகே வந்தோம்.

நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது ஒரு உழவுயந்திரம் ஒரு லொறி சமையற்பாத்திரங்கள் மாற்று உடைகள் நகைகள் பணம் எம்மிடம் இருந்தன. இன்று எம்மிடம் எந்த உடமைகளோ பொருட்களோ இல்லை. உடுத்த உடுப்பும் கையில் உள்மாற்று உடுப்புகளும் மட்டுமே மிஞ்சியிருந்தது.

நாம் இத்தனைகளையும் ஏன் இழந்தோம்? எமக்கு தெரியவில்லை? இத்தனை கஸ்டங்களை அனுபவித்தோம் – எதற்காக என்றும் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் எதை தரப்போகின்றது? என்பதுவும் எமக்கு தெரியவில்லை. பசி களைப்பு. சாப்பாடு தண்ணி எங்கு கிடைக்கும் என்பதைத்தவிர வேறெந்த சிந்தனையும் எம்மிடம் இருக்கவில்லை.

கடந்த 3 ,4 மாதங்களாக நடந்த இந்த மக்கள் யாத்திரையில் எத்தனை நாட்கள் உணவு கிடைத்தது என்று எம்மால் கூற முடியும். எந்த இடங்களில் எந்த மரங்கள் காபய்க்கவில்லை. கனிகள் இல்லை என்பதுவும் எமக்கு தெரியும். எமக்கு உணவுதர யாரும் இல்லை! பாதை சொல்ல யாரும் இல்லை! நடைபயணம் மட்டும் வெற்றிகரமாக முன்னேறியிருந்தது.

குழந்தைகளும் நாமும் படும் அவலங்கண்டு மாத்தளன் பகுதியிலுள்ள ஒரு பெரியவர் நாம் தப்பி ஓடுவதற்கு உதவி புரிந்தார். இவரது வீட்டில் புலிகளுக்குத் தெரியாமல் ஒளித்திருந்து பலர் இந்த வழியாக நந்திக்கடலில் நீந்தி இராணுவம் உள்ள பக்கத்திற்கு போயிருந்தனர். புலிகளின் சென்றி பொயின்ற்றுக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் மக்கள் ஒளித்திருந்து புலிகளின் சென்றி பொயின்ரில் அவர்கள் இல்லாத வேளைகளில் நந்திக்கடலினூடாக தப்பியோடுவார்கள். சிலசமயங்களில் புலிகள் வேறு இடத்தில் இராணுவத்தினரை மறிப்பதற்காக ஓடும்போதும் மக்கள் அலை அலையாக நந்திக்கடலில் இறங்கி ஓடுவது வழக்கமானது. பொதுவாக இரவு வேளைகளிலேயே தப்பியோடுவர்.

நந்திக்கடல் அருகே புலிகளின் நடமாட்டங்களை மற்றவர்கள் போல் நாமும் அவதானித்துக் கொண்டிருந்தோம். தப்பி ஓடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது எமக்கு இலங்கை இராணுவத்தின் திசை திட்டவட்டமாக தெரியும். அதை நோக்கி போக வேண்டும் என்பது மட்டுமே எமது இலக்காக இருந்தது.

இராணுவப் பகுதிக்குச் சென்றபின்னர் என்ன நடக்கும் என்றும் எமக்குத் தெரியாது. இலங்கை இராணுவம் உள்ள பக்கம் நோக்கிச் சென்றால் அங்கு எமக்கு தெரிந்த சிலராவது எமக்கு உதவுவார்கள் என நம்பினோம்.

எல்லோரையும் போலவே நாமும் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தோம் சிலநாட்களுக்கு முன்பு போல் அல்லாது தற்போது புலிகளின் நடமாட்டம் குறைவடைந்தது. பசியால் கதறும் குழந்தைகளையும் கொண்டு நந்திக்கடலை கடப்பதைவிட வேறு வழியில்லை என புரிந்து கொண்டோம். எனது சகோதரத்தையும் சேர்ந்து வரக் கேட்டேன். அவர்கள் எமக்கு இருப்பதோ ஒரு குழந்தை அந்தப் பிள்ளையை நந்திக்கடலுக்கு பலிகொடுப்பதைவிட இங்கேயே இருப்போம் என்றார். அவரது நியாயம் எனக்கு விளங்கியது. நாம் எமது குழந்தைகளுடன் நந்திக்கடலில் இறங்கினோம். இரவு 06மணி 45 நிமிடம். இரவு கவிழ ஆரம்பித்த நேரம். நாம் வாழ்வா சாவா என்ற தாயக்கட்டையில் இருந்த அந்தகணப்பொழுது இன்றும் நினைவுவரின் பயப்பிடுகிறோம்.

தப்பிஓட முயன்ற பலர் நந்திக்கடலில் இறங்கும்போது இவர்களால் நந்திக்கடல் சிவந்தது. உடல்கள் மிதந்தது. சிலர் தப்பி ஓடினர். எமது குடும்பத்தினருக்கும் எதுவும் நடக்கலாம். என்னவும் நடக்கட்டும் என்று இறங்கினோம். எமக்கு வேறு மாற்றுவழி எதுவுமே இருக்கவில்லை எம்பின்னால் இருந்து துப்பாக்கி ரவைகள் எம்மீது பாய்ந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் குழந்தைகளும் நாமும் தண்ணீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து தலைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிய மிருகங்கள் போல் புலிகளிடமிருந்து தப்பித்து ஓடினோம். கடலில் மிதந்த சடலங்கள் இந்தக் கடலை நிரப்பியிருந்ததை நாமும் குழந்தைகளும் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம். இடையிடையே ஆழமான பள்ளங்களுள் ஆள்மாறி ஆள்மாறி விழுந்தெழும்பினோம். அருகேவந்த மற்றவர்களின் முதுகில் புலிகளின் துப்பாக்கி வேட்டுக்கள் பட்டு அலறும் சத்தம் கேட்கையில் எமக்கும் உயிர்போகும். குழந்தைகள் பல தடவைகள் செத்துப் பிழைத்தனர. இந்தப்பயணம் முன்னைய பயணங்கள் போல் அல்லாத பசிதீர்க்கும் பயணமாகவே இருந்தது. குடிதண்ணீர் கிடைக்கக் கூடிய பயணமாகவே இருந்தது. பல மணிநேர போராட்டத்தின் பின் நள்ளிரவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி கரையேறினோம். நந்திக்கடலின் இறுதிக்கட்டத்தில் அடைமழை எம்மை மிகவும் வருத்திவிட்டது.

புலிகளின் பார்வையிலிருந்து தப்பி கரையேறும்போது இரவு 11மணி 30 நிமிடம் நாம் வரும்திசைகளை மிகதிட்டவட்டமாக அரச இராணுவம் அவதானித்திருந்தது. இந்த இருட்டினுள் இராணுவம் அடிக்கும் பரா லைட் வெளிச்சத்தில் எமது பயணம் தொடர்ந்தது. சிலர் வழிதவறிப் போய் நிலக்கண்ணி வெடியில் அகப்பட்டு உயிரிழந்தார்கள். அங்கங்களை இழந்தவர்களின் அலறும் குரல்களும் இருட்டினுள் அப்பா அம்மா என்று அலறும் குரல்களும் எம்மை மரணத்தின் விளிம்புக்கு எடுத்துப் போய்வந்தது. இவ்வளவு பரிதாபங்களையும் பராலைட் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டு இருட்டில் அசையும் போது நாம் அனுபவித்த மனவேதனையை நினைத்துப் பார்க்கும் போது இப்போதும் அழுகைவருகிறது.

அந்த நள்ளிரவில் எமது கண்ணீரை கழுவிப் போன அடை மழையையும் நாம் மறக்கவில்லை. எமக்கு தப்பியோட உதவிய முதியவரையும் நாம் இன்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.

இராணுவத்தின் பரா லைட் எமக்கு பாதுகாப்பாகவும் வழிகாட்டியாகவும் புலிகளுக்கு எம்மை காட்டிக் கொடுக்கும் எமனாகவும் அதே நேரத்தில் இருந்தது. ஆனாலும் நாம் இராணுவத்திடம் போய் சேர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். எம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய புலிகள் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை நாம் என்றும் மன்னிக்க மாட்டோம். இது எத்தனை சந்ததிக்கும் நினைவிருக்கும்.

மீண்டும் பசிப்போராட்டம். சாப்பிட ஏதும் இல்லை. இப்போது நாம் புலிகளின் பயறிங் றேஞ்சில் இல்லை (firing range) களைத்துப்போய் கரையில் பல மணிநேரம் இளைப்பாறினோம். குழைந்தைகளின் பசிக்களையை கண்டு கூட இருந்தவர் தான் கொண்டுவந்த ரொட்டியில் இரண்டை எமக்குத் தந்தார். அதை எனது மூன்று குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்தேன். தூரத்தே இலங்கை இராணுவம் தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தோம். கற்களும் முட்களும் நிறைந்தபாதை எமக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

மாத்தளனில் புலிகளின் துப்பாக்கிகள் அவர்களின் கைகளில் எம்மை நோக்கியபடியே இருந்தன. தற்போது இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிகள். ஆனால் அவை அவர்களின் தோளில் இருந்தன. அவர்கள் கைகளில் பிஸ்கட் பைக்கட்டுக்ளுனும் தண்ணீர்ப் போத்தல்களுடனும் எம்மை அணுகினர். சாப்பிட்டோம் தண்ணீர் குடித்தோம். எமது குடும்பம் தப்பித்துக் கொண்டது என்ற நிம்மதியில் மரத்தடியில் அடுத்த 7 மணித்தியாலங்கள் உறங்கிவிட்டோம்.

பின்னர் இராணுவம் எம்மை அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தது. 7 நாட்களின் பின்னர் மாற்று உடுப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் ஆரம்பித்த பயணம் பல மாதத்தின் பின்னர் வவுனியா அகதி முகாமில் முடிவடைந்துள்ளது இனி என்ன? எமது எதிர்காலம் என்ன? எல்லாம் கேள்வியாகவே உள்ளது. யாரிடமும் பதில் இல்லை!

தற்போது சைவப்பிரகாச நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளோம். 3600 பேர் இங்குள்ளனர். ஒருசிறு கட்டிடத்தில் 55 பேர்கள் ஒரு வகுப்பறையில் படுத்திருக்கிறோம். இரவில் ஒருவரின் தலையில் ஒருவரின் கால்படுவது சாதாரணமானது எனினும் நித்திரைக்குப் போகிறோம். நித்திரை உண்மையிலேயே நித்திரைதான. நித்திரை விட்டு நிச்சயமாக எழுவோம். என்ற நம்பிக்கையுண்டு.

முகாமில் சாப்பாடு ஒருதரம் என்றாலும் நிச்சயம் கிடைக்கும். சாப்பாட்டின் தரம் என்பதைவிட சாப்பாடு கிடைக்கின்றது. குடிதண்ணீர் கிடைக்கின்றது. குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்கள்.
 
முகாமில் மக்கள் தொகை அதிகமாதலால் பலவிதமான அசௌகரியங்களை சந்திக்கிறோம். மலசலகூடமும் அதன் சீர்கேடுகளும் துர்நாற்றங்களும் சகிக்க முடியாது. குளிப்பதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும். நான் இரவு 12 மணியளவிலேயேதான் குளித்துள்ளேன்.

எமது மருத்துவப் பிரச்சினைகளுக்கு வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். எமது குழந்தை ஒன்றின் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு விசேட மருத்துவர் ஒழுங்கு செய்யப்பட்டும் தரப்பட்டுள்ளது.

எனது சகோதரர் குடும்பம் இறுதியாக வெளியேறிவர்களுடன் வெளியேறி வேறு முகாமில் உள்ளதாக அறிந்தேன்.

நாம் எப்போது எமது வீட்டுக்குத் திரும்பிப்போவோம் என்ற எதிர்பார்ப்புடன் முகாம்களில் காத்திருக்கின்றோம். எமது முகாமிற்கு டக்ளஸ் பல தடவைகள் வந்துள்ளார் எல்லோருடனும் தனித்தனியே கதைப்பார். நானும் கதைத்துள்ளேன். எமது தேவைகள் பற்றி சொல்லியுள்ளேன் பலர் கடிதங்களாக எழுதிக் கொடுப்பார்கள். நாம் எமது வாழ்விடங்களுக்கு திரும்பிப்போக வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். தற்போது நாம் இருக்கும் இந்தப் பள்ளிக் கூட அகதி முகாம் மிக விரைவில் உழுக்குளம் 6வது நிவாரணக் கிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அறிகிறோம். பிரிந்த குடும்பங்களை ஒன்றாகச் சேர்க்கின்றார்கள். அதே வேளை தத்தமது வசிப்பிடங்களுக்கு போக விரும்புவர்களது பெயர்விபரங்களும் சேகரிக்கப்படுகின்றது.”
 
இவ்வாறு இந்த இளம்தாய் தனது நீண்ட கொடுமையான பயணத்தை விளங்கப்படுத்தினார். மிகவும் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெறுப்புடனும் உள்ள இவர்கள் மனஆறுதலுக்கு யாருடனாவது கதைப்பதற்கு ஏங்குவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. அவர்கள் இழந்தது சொத்து சுகமல்ல. அவர்களது வாழ்க்கை. தாம் வெளியேறிய பின்னர் நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு போர் முடிந்ததை தவிர எவ்வாறு முடிந்தது என்ற விபரம் தெரியாதுள்ளனர். தமது வாழ்வு வளம் தமது எதிர்காலம் எல்லாமே புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக குறைப்படும் இவர்களுக்கு தமது எதிர்காலத்தை எவ்வாறு ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற அச்சஉணர்வும் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நிதிஉதவி அளித்துத்தானே புலிகளை இந்த யுத்தத்தை செய்விக்கத் தூண்டினீர்கள். நாம் இன்று இந்த நிலைமைக்கு வர நீங்களும்தானே காரணம். நாம் எமது வாழ்விடங்களுக்கு போய் வாழ நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்? எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் கேள்விகள் மட்டுமே நிறையவே உண்டு.

ஈரானிய தேர்தல்: அஹமதி நெஜாத் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு 65 வீத வாக்குகள் பெற்று பெரு வெற்றி

president-ahamadinejad.jpgஈரான் ஜனாதிபதியாக கலாநிதி மஹ்மூத் அஹமதி நெஜாத் மீண்டும் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கலாநிதி நெஜாத் 65% வாக்குகளைப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளாரென்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52 வயதான அஹமதி நெஜாத் ஈரானின் ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் பதவியேற்கின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பிரதமரான மிதவாத அரசியல்வாதியாகக் கருதப்படும் மிர் ஹுசேன் முசாவி 32.05% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பழைமைவாதியான அஹமதி நெஜாத்துக்குக் கிராமப்புற மக்கள் 75% வாக்களித்துள்ளனர். ஈரானின் 46.2 மில்லியன் வாக்காளர்களில், ஒரு கோடியே 40 இலட்சத்து 11,668 பேர் வாக்களித்துள்ளனர். எதிரணி வேட்பாளருக்கு 65 இலட்சத்து 75,844 பேர் வாக்களித்துள்ளனர்.

1979ஆம் ஆண்டின் இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், நடைபெற்ற இந்த 10வது ஜனாதிபதித் தேர்தலிலேயே கூடுதலான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கு நாடு முழுவதும் 45,713 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தபோதிலும், மக்கள் அலை அலையாக வாக்களிக்கவென திரண்டு வந்தனர். இதனால் வாக்களிப்பு நேரத்தை இரண்டு மணித்தியாலம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்தது.

மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததால், வாக்களிப்பு நிறைவடைந்ததும் உடனடியாக செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிய முன்னாள் பிரதமர் ஹுசேன் மூஸ்வி, தாம் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியென அறிவித்திருந்தார். ஆனால், நேற்றுக் காலை முதல் வெளியான முடிவுகளின்படி ஜனாதிபதி அஹமதி நெஜாத் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் வீதிகளில் திரண்டு தமது வெற்றிக் களிப்பை வெளிப்படுத்தினர். இதனால், தலைநகர் தெஹ்ரானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஜனாதிபதி அஹமதி நெஜாத்தின் வெற்றியை ஏற்க முடியாதென ஹுசேன் மூஸ்வி தெரிவித்துள்ளார். இது ஒரு மோசடியான தேர்தல் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேர்தலின்போது தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. குறுந்தகவல் சேவை, இணையத்தளம் என்பவையும் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது