எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் இன்று அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானது. இதேவேளை,  ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதுளை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி., ஐக்கிய சோசலிஷக் கட்சி,  மலையக மக்கள் முன்னணி,  ஜனசக்தி முன்னணி மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மொனராகலை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி,  ஐ.தே.கட்சி,  ஜே.வி.பி.,  ஐக்கிய சோசலிஷக் கட்சி, சிங்களே மஹா சம்பத பூமிபுத்ர கட்சி, எக்சத் லங்கா மஹா சபாவ,  தேசப்பற்றுள்ள மக்கள் முன்னணி,  இலங்கை முற்போக்கு முன்னணி மற்றும் ஜனசக்தி முன்னணி ஆகிய கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தானியர்களில் மூன்றில் ஒருவரிடம் போலி விசாக்கள்

பாகிஸ் தானில் இருந்து ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் மாணவர் விசாவிலும் ஆயிரக்கணக்கானவர்கள் சுற்றுலா விசாவிலும் பிசினெஸ் விசாவிலும் இங்கிலாந்து செல்கின்றனர். அவர்களில் 3ல் ஒருவர் போலி விசா வைத்து இருக்கிறார்கள் என்று இங்கிலாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானியர்களின் விசா விண்ணப்பங்களில் பெரும்பாலானவை நம்பகத்தன்மை இல்லாதவை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அனுப்பப்பட்ட அறிக்கை அலட்சியப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை தடுப்பதற்காக அதிக அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஊழல் காரணமாக தான் இப்படி மோசடி நடக்கிறது. இதில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு இருக்கிறோம். அவர்களை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மறைமுக நோக்கங்களற்ற வன்னி மக்களுக்கான போராட்டங்கள் அவசியம்! த ஜெயபாலன்

Veddaiyadu Vilayaduஇன்று (யூன் 24 2009) மாலை நான்கு மணி முதல் மாலை ஆறு மணிவரை லண்டனில் உள்ள கொமன்வெல்த் அலுவலகத்திற்கு முன்பாக வன்னியில் உள்ள இடம்பெயர்வு முகாம்களை உடனடியாக மூடி மக்களை மீளக் குடியேற்றும்படி கோரி போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதே நிதியுதவிகளுக்கு என்ன நடக்கின்றது என்றும் இப்போராட்டம் கேள்வி எழுப்பி உள்ளது. ரமிழ் சொலிடாரிற்றி என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டமே புலிகளின் அரசியல் நலன்களுக்கு வெளியே வன்னி மக்களின் நலனில் அக்கறையுடன் நடத்தப்படுகின்ற போராட்டமாகும். ஸ்ரொப் தி ஸ்லோட்டர் ஒப் ரமில்ஸ் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்களே தற்போது முகாமில் உள்ள மக்களை வெளியேற்றும்படி கோரும் இப்போராட்டத்தை ரமிழ் சொலிடாரிற்றி என்பதன் கீழ் முன்னெடுக்கின்றனர். இப்போராட்டங்களில் மட்டுமே தமிழரல்லாத பிற சமூகங்களும் இணைந்து தமிழ் மக்களுக்கான ஆதரவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான போராட்டம் பிராஸ்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளின் கூட்டான சமூகப் பாதுகாப்பு அமைப்பினால் Comité de Défense Social முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யூன் 20ல் சர்வதேச அகதிகள் தினம். கடந்த ஆண்டு முடிவு வரை 42 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளதாக யுஎன்எச்சிஆர் குறிப்பிடுகின்றது. இவர்களில் 26 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளினுள்ளேயே தமது வாழ்விடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 80 வீதமானவர்கள் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்கின்றனர். ஏனையவர்கள் அகதிகளாகவும் அரசியல் தஞ்சம் கோரியும் வேறு நாடுகளில் வாழ்கின்றனரர். 2008 முடிவில் 504 800 பேர் இடம்பெயர்க்கப்பட்டு வாழ்ந்தனர். இவர்களில் வன்னி மக்கள் 300 000 பேர்வரை தற்போது வடக்கு கிழக்கில் உள்ள 20 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் 1990 ஒக்ரோபர் 20ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய வடக்கு மாவட்டங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட் முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளத்திலும் கிழக்கிலும் வாழ்கின்றனர்.

மே 18ல் பிரபாகரனின் மரணத்துடன் முடிவுக்கு வந்த இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் மிகப்பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசு சர்வதேச யுத்த விதிகளை மீறி தனது சொந்த மக்கள் கொல்லப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தும் அந்த மக்கள் செறிந்திருந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதை சர்வதேச உரிமை அமைப்புகள் அனைத்துமே சுட்டிக்காட்டி உள்ளன. சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஊடகங்கள் எவற்றையும் அனுமதிக்காமல் சாட்சியமற்ற யுத்தத்தை மனிதப்படுகொலைகளை நிகழ்தியதாக அவை சரியாகவே சுட்டிக்காட்டி உள்ளன.

அதே சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களைப் பாதுகாப்பதற்காக மக்களை மனிதக் கேடயங்களாக்கி மக்கள் மத்தியில் இருந்தே தாக்குதலை நடத்தி மனித அவலம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்துள்ளனர். இதனை முழுமையாக அறிந்திருந்த பிரிஎப் ரிவைஓ மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த புலி ஆதரவு அமைப்புக்கள் வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி கோராமல் வன்னி மக்களும் புலிகளும் ஒன்று, மக்கள் சுயவிருப்பிலேயே யுத்தப் பகுதிக்குள் இருக்கின்றனர் என பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர்.

20 000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு பிரிஎப் உம் பொறுப்புடையது என தீபம் தொலைக்காட்சியில் யூன் 19ல் இடம்பெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் ‘தேசம்நெற்’ சார்பிலும் ஏனைய நேயர்கள் சிலரும் கேள்வி எழுப்பிய போது பிரிஎப் சார்பில் கலந்துகொண்ட பத்மநாதன் விடுதலைப் ‘புலிகள் யார்? அவர்களும் எம்மவர்கள்தானே. அவர்களை விட்டுவிட்டு எப்படி மக்களை வெளியேறும்படி கேட்க முடியும்.’ என்று பதிலளித்தார். விடுதலைப் புலிகளுக்கு அந்த மக்களை கேடயங்களாக வைத்திருக்க பிரிஎப் உம் உடந்தையாக இருந்ததை அப்பதில் தெளிவாக்கி உள்ளது. அதே நிகழ்ச்சியில் பிரிஎப் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் வழங்கிய மிகைப்படுத்திய பொய்யான தகவல்களே இவ்வளவு மோசமான அழிவுக்கு இட்டுச்சென்றது அதற்கு பிரிஎப் வன்னி மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பத்மநாதனிடம் பதில் இருக்கவில்லை.

நடந்து முடிந்த மனித உரிமை மீறல்களுக்கும் படுகொலைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் சம பொறுப்புடையவர்கள் என்பது பரவலாக அனைத்து மனிதாபிமான மற்றும் உரிமை அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அப்படியான நிலையில் சிங்கங் கொடியையும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் படத்தையும் கொண்டுவந்து மனித உரிமை பற்றி பேசுவது எவ்வளவு கேலியானதோ அதே போல் புலிக்கொடியையும் அதன் தலைவர் பிரபாகரனது படத்தையும் கொண்டு வந்து மனித உரிமைப் போராட்டம் செய்வதும் கேலிக்குரியதே. வன்னி மக்களின் இரத்தத்தில் தோய்ந்த இவை எப்போதும் மனிதஉரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

அந்த வகையில் வன்னி மக்களின் இரத்தக் கறைபடியாத ரமிழ் சொலிடாரிற்ரி போன்ற அமைப்புகளின் போராட்டங்களே மனித உரிமையை வென்றெடுக்க வன்னி முகாம்களில் உள்ள மக்களுக்காக குரல் எழுப்ப தகமையுடையன. இப்போராட்டங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவினதாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய போராட்டத்தில் உள்ள நியாயம் கௌரவிக்கப்படும்.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் வன்னி முகாம்களில் உள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு முகாம் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையின் குறைந்தபட்ச விடயங்கள் கூட இன்னமும் முகாம்களில் பிரச்சினையாகவே உள்ளது. சர்வதேச உதவி அமைப்புகளைக் கூட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவர்கள் பணியாற்றுவதைத் தடுக்கின்றது. அரசு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் வன்னி முகாம்களை பரமரிப்பதில் நிதித் தட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது. ஆனாலும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை. இவை இலங்கையரசு தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே நடத்துகின்றது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இடம்பெயர்ந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வை மட்டுமே கவனத்திற்கொண்டு அம்மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவது தவிர்க்க முடியாதது. அந்த வகையில் மறைமுக நோக்கங்களற்ற ரமிழ் சொலிடாரிற்றி போன்ற அமைப்புகளின் போராட்டங்கள் இலங்கை அரசு மீது தொடர்ச்சியான அழுத்தங்களை மேற்கொள்வதற்கு அவசியம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்க அரசாங்கம் நீடித்துள்ளது.

lttelogo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக பட்டியல் படுத்துவதாக இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அமைதி வழிப் போராட்டங்களின் மூலம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்வதாக விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள கருத்து பாராட்டுக்குரியதென இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரி கிரேஜ் சுவில்லியன் தெரிவித்துள்ளார்.
 
எனினும், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரவேசத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், புலிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.சீ.சீ. ருவன்டி-20 தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது!

_dilshan_.jpgஐ.சீ.சீ.  ருவன்டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சற்று நேரத்துக்கு முன்னர் நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க, விமானநிலையத்தில் வந்திறங்கிய குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர். ருவன்டி-20தொடரின் இறுதிப் போட்டியில் கடந்த 21ஆம் தகதி பாகிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி சம்பியனாகும் வாய்ப்பை இழந்து ரண்ணர்அப் எனும் 2ஆவது ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முழுமைபெறாத அரசியலமைப்பு சபைக்கு “அரசியல் யாப்பில் ஒருபோதும் இடம்கிடையாது

06arliament.jpgமுழுமை பெறாத அரசியலமைப்புச் சபைக்கு அரசியல் யாப்பில் ஒருபோதும் இடம் கிடையாது.அரசியலமைப்பின்படி 17வது திருத்தத்திற்கு அமைய, அரசியலமைப்புக்குப் பத்துப் பேரைத் தெரிவு செய்ய வேண்டும். இதில் ஒருவரின் பெயர் பிரச்சினை யாக உள்ளதால் சபையை ஸ்தாபிக்க முடியாது என்று அரசாங்கத்தின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. வழமையான நிகழ்வுக்குப் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் சற்று சூடுபிடித்தே காணப்பட்டது. பொலிஸ் மாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரின் நியமனம் தொடர்பாக பிரேமசிறி மானகே எம். பி. கேள்வி எழுப்பினார்.  இந்தக் கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில்:- அரசியலமைப்புச் சபையை ஸ்தாபிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார். இதன் போது, சபாநாயகர் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அப்போது, இல்லாத ஒரு சபைக்குத்தான் நான் தலைவர். இல்லாத அதிகாரத்தை நான் சிருஷ்டித்துச் செயற்படுத்தவா என்று சபாநாயகர் திருப்பிக்கேட்டார். இதன்போது, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சூடான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்த கருத்துப் பரிமாற்றத்தின் போது பார்வையாளர்கள் வரிசையில் பாடசாலை மாணவர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களுக்காவது அமைதியைப் பேணுங்கள் என்று சபாநாயகர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

பின்னர், தேர்தல் ஆணையாளர் தொடர்பாகவும் மேற்கண்டவாறான ஒரு கேள்வியை பிரேமசிறி மானகே எம். பி. தொடுத்திருந்தார். அதற்கும் விளக்கமளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்வரை ஆணையாளர் ஓய்வு பெற முடியாது என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக சுட்டினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும், முற்பகல் 11 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, ஜே. வி. பி. உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.

‘தேர்தல் நடத்தாது ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் கிடையாது’ – ஐ. தே. க. பொய் பிரசாரமென அரசாங்கம் குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தல் நடத்தாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் நீடிக்க வைக்கும் திட்டமெதுவும் அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ கிடையாது என அமைச்சர் டளஸ் அலஹபெரும கூறினார். இது தொடர்பாக ஐ. தே. க. தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

தேர்தல் நடத்தாது சர்வாதிகார ஆட்சி நடத்த அரசாங்கம் தயாராவதாக ஐ. தே. க. கடந்த சில தினங்களாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. அத்தகைய திட்டமெதுவும் அரசுக்குக் கிடையாது.

பிரதேச சபைத் தலைவர்களின் சம்மேளனக் கூட்டமொன்றில் ஐ. தே. க. நகர சபைத் தலைவர் ஒருவரே போட்டியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்ய வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளார். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறியதாவது,

தோல்வி என்பது ஐ. தே. க. வுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக மாறியுள்ளது. அதனால் தேர்தல்களில் தமக்கு ஏற்படும் தோல்வியை மட்டுப்படுத்தவே அந்தக் கட்சி தற்பொழுது முயன்று வருகிறது.இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை பயன்படுத்தி அரசியல் லாபம் பெற ஐ. தே. க. முயன்று வருகிறது. நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி புலிகளுடன் தொடர்புடைய ஐ. தே. க. எம்.பி.க்கள் சிலர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களிடையே வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆனால் இடம்பெயர்ந்த மக்களை அரசியல் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற ஐ. தே. க. முயல் கிறது. 1987 – 1989 களில் இடம்பெற்ற வன்செயல்களின் போது பெருமளவு இளைஞர்களை ஐ. தே.க. அரசு தடுத்து வைத்திருந்தது. ஆனால் அந்த இளைஞர்களை பார்வையிட ஐ. தே. க. அனுமதி வழங்கவில்லை என்றார்.

வவுனியா, வேப்பங்குளத்தில் 46 கிலோ சி.4 வெடிமருந்து கிளேமோர் குண்டுகள் மீட்பு

வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்திலிருந்து 46 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று புலிச் சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல்களின் போதே பொலிஸார் இந்த பெருந்தொகையான வெடிமருந்துகளையும் வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்தே இந்த பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அதிசக்திவாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் 46 கிலோ, 10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி-01, 3 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கிகள்-03, 14 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு-02, அதனை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் கருவிகள், வெள்ளை மற்றும் சிவப்பு நிற வயர்கள், காஸ் சிலின்டர்-01, 2.7 கிலோ எடையுள்ள குண்டுகள்-02, பிளாஸ்டிக் பரல்கள் மற்றும் பெருந்தொகையான வெடிக்கவைக்கும் கருவிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மாகாணசபை தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்பு இன்றுடன் பூர்த்தி ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஜே.வி.பி. வேட்பு மனு தாக்கல்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படவுள்ளதோடு இன்று பிற்பகல் தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிக்க உள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது.

பதுளை மாவட்டத்திற்கு ஏழு அரசியல் கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதோடு மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. மொனராகலை மாவட்டத்திற்கு 4 கட்சிகளும் 3 சுயேச்சைக் குழுக்களும் நேற்று வரை வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தன. ஐ. ம. சு. கூட்டமைப்பு செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தலைமையிலான குழுவினர் வேட்பு மனுக்களை கையளித்தனர். அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான் டிலான் பெரேரா, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் இங்கு பிரசன்னமாகி யிருந்தனர்.

பதுளை மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. தேசிய மக்கள் நல முன்னணி, தேசப் பற்று மக்கள் முன்னணி, தேசிய அபிவிருத்தி முன்னணி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி, மலையக மக்கள் முன்னணி என்பன வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன. இது தவிர 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் செயலகம் கூறியது,

பதுளை மாவட்டத்திற்கான ஐ. தே. க. வேட்பாளர் பட்டியலை கட்சி முதன்மை வேட்பாளர் உபாலி சமரவீர தாக்கல் செய்தார். ஐ. தே.க.வுடன் தொழிலாளர் தேசிய சங்கம், மேலக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி என்பன இணைந்து போட்டியிடுகின்றன.

மொனரகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜே. வி. பி., ஐக்கிய சோசலிசக் கட்சி என்பனவும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போ ஐ. தே. க. வோ முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்கவில்லை. இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் நியமிக்காது எனவும் கட்சி கூடி முதலமைச்சரை தெரிவுசெய்யும் என அமைச்சர் டளஸ் அலஹப் பெரும நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.

கிளிநொச்சி, ஆனையிறவு முல்லைத்தீவுக்கு மின்சாரம்

சுமார் 400 மின்மாற்றிகளின் துணையுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆனையிறவு பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது என மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ண நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் மேலும் பேசுகையில்:-

மின்சார உற்பத்தியின் போது பெருந்தொகை பணத்தை செலவிட வேண்டியுள்ளது. மின்சாரத்தை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் போது அலகொன்றுக்கு ஒரு ரூபா 50 சதம் நட்டமேற்படுகிறது. இதன்படி 40 மில்லியன் ரூபாவை தினமொன்றுக்கு நஷ்டமடைய வேண்டியுள்ளது. டீசலை எரிபொருளாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுவதாலேயே அதிக உற்பத்தி செலவை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவற்றுக்கு மாற்டாகவே நிலக்கரியினாலான மின் ஆலையை உருவாக்கி வருகிறோம். முதற்கட்ட வேலைகள் பூர்த்தியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனு¡டாக 300 மெகாவோட் மின்சாரத்தை பெற முடியும்.

இரண்டாவது கட்டத்தை விரைவிலேயே ஆரம்பிக்கவுள்ளோம். எக்ஸிம் வங்கியூடாக கடனை பெற்றுக் கொண்டு இரண்டாவது கட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாக 900 மெகாவோட் மின்சாரத்தை பெற முடியும். அத்துடன் இலங்கை – இந்திய கூட்டு முயற்சியில் திருகோணமலையில் அரம்பிக்கப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் இவ் வருட இறுதியில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. என்றும் அமைச்சர் ஜோன் சென விரட்ன கூறினார்.