எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நாட்டின் உயர்கல்வித்துறையை மேம்படுத்த 57 கோடி ரூபா ஒதுக்கீடு

visvawarnapala.jpgநாட்டின் உயர்கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கு 57 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தெரிவித்துள்ளார். இலங்கையின் உயர்கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக சுவீடன்,  அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியுடன் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

றுஹ{னு,  பேராதெனிய,  மொரட்டுவை மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக் கழகங்களில் தகவல் தொழில்நுட்பத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.  இதற்காக 14 கோடி 40 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. இணையத்தள வசதிகளுக்காக 18 கோடி 20 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகம்

he_president.jpgஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கஷ்டப் பிரதேச கிராமங்களுக்கான மின் விநியோகத் திட்டங்களை மெற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்திருந்தார்.

இத்திட்டத்துக்கு ஆகக்குறைந்த வட்டி வீதமான 1.25 வட்டி வீதத்துக்கு  ஈரான் அரசாங்கம் 88.7 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குகிறது.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி-தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்தனியாக வேட்பு மனு தாக்கல்

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் இன்று தனித்தனியாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈபிஆர்எல்எப் வரதர் அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.எனினும் கடைசிநேரத்தில் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக தமிழர் கூட்டணி தனியாக வேட்பு மனு தாக்கல் செய்ததாக அந்தக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் விநாயகமூர்த்தி சகாயதேவன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8இல் – தேர்தல் செயலகம் அறிவிப்பு

election_ballot_.jpgயாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை என்பவற்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் செயலகம் இன்று அறிவித்துள்ளது.

இவ்விரு தேர்தல்களுக்குமான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல்களுக்கு வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.

இத்தேர்தல்களில் யாழ். மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கு ஐ.ம.சு.முன்னணி நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்புமனுக்களைக் கையளித்தார். இதன்போது அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் றிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெண் ஊடகவியலாளர் கடத்தப்பட்டு விசாரணைகளின் பின் விடுதலை

ஊடகவியலாளர் கிருஷ்ணி இப்ஹாம் வெள்ளை வானில் வந்தவர்களால் நேற்று காலை கடத்தப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

தன்னைக் கடத்தியவர்கள் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் கண்டியில் வைத்து விடுவித்து சென்றுள்ளனர் என கிருஷ்ணி இப்ஹாம் தெரிவித்துள்ளார்.தனக்கு இதற்கு முன்னரும் அச்சுறுத்தல் இருந்த நிலையில், இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இடம்பெயர்ந்தோரின் சுகாதார மேம்பாட்டுக்கு உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

world_bank_logo.jpgவடக் கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருப்போரின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி 24 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்தி அமையத்தின் திட்டத்துக்கு அமைய வழங்கப்படவுள்ள இந்நிதி உதவியின் அரைப் பகுதி அண்மைய மோதல்களால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உருவாகியுள்ள விசேட சுகாதார நெருக்கடிகளைத் தீர்த்து வைக்க பயன்படுத்தப்படவுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் நவோகா இஷி தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக வங்கியால் கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்ட 60 மில்லியன் டொலருக்கு மேலதிகமாகவே இந்த 24 மில்லியன் டொலர் உதவி வழங்கப்படவுள்ளது.

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீள்குடியேற்றம்,  புனர்நிர்மாணம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களில் அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான சுகாதார சேவைகளை வழங்குவது உடனடித் தேவையாகும்.

ஏதிர்வரும் காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கின் சுகாதார தேவைகளில் முக்கியமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படவுள்ளது. இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் நடமாடும் சிகிச்சை நிலையங்களை அமைத்தல், அங்கவீனமுற்றோருக்கு மறுவாழ்வளித்தல்,  அதிர்ச்சியுற்றுள்ள மக்களுக்கான சிகிச்சைகள் மற்றும் முன்னுரிமை அளிக்க வேண்டிய உடனடித் தேவைகள் என்பன இதில் அடங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வசந்தம் ரீ.வி. இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐ.ரீ.என். தொலைக்காட்சிச் சேவை வழங்கும் தனித் தமிழ் தொலைக் காட்சி அலைவரிசையான  வசந்தம் ரீ.வி. இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழ் பேசும் மக்களுக்காக இந்த தொலைக் காட்சிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.40 அளவில் உத்தியோகபூர்வமாக இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமைச்சர்களான அதாஉல்லாஹ். அமீர் அலி. விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஐ.ரீ.என். தொலைக்காடசிச் சேவையின் தலைவர் அநுர சிறிவர்தன இதற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் எஸ்.குலேந்திரன் இதன் உதவி முகாமையாளராகவும் எம்.சித்தீக் ஹனீபா செய்தி ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றனர். வசந்தம் ரீ.வி.யின் ஒலி ஒளிபரப்பு வீ.எச்.எப். 9 அலை வரிசை ஊடாக தற்போது மேல் மாகாணத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் நாடளாவிய ரீதியில் சேவையை இடம்பெறச்செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை வசந்தம் தொலைக்காட்சிச் சேவை ஊடாக நிகழ்ச்சிகள் ஒலி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளன. தமிழ் பேசும் இரசிகர்களைக் கவரும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள்  செய்திகள் அரசியல் விவகாரங்கள் சிறுவர் நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஒலி ஒளிபரப்புச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.00 மணி மாலை 6.00 மணி இரவு 8.00 மணி என செய்திகள் இதன் ஊடாக ஒலி ஒளிபரப்பப்படுகின்றன.

தொடர்கதையாகும் ஊடக வன்முறை – யாழ் பத்திரிகைளுக்கு தீ!!! : த ஜெயபாலன்

uthayan_logoஇன்று (யூன் 25) காலை 5 மணியளவில் யாழில் இருந்து வெளிவரும் உள்ளுர் பத்திரிகைகள்  தீக்கிரையாக்கபட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளே தீக்கிரையாக்கபட்டு உள்ளது. யாழ் புறநகர்ப் பகுதிகளான ஆணைப்பந்தி, கன்னாதிட்டி ஆகிய பகுதிகளில் வைத்து இப்பத்திரிகைகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.

கன்னாதிட்டியில் நடந்த இச்சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி ஒருவர் இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்துபேர் வரையானோர் விநியோகத்தரிடம் இருந்து பத்திரிகைகளைப் பறித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகத் தெரிவித்தார். வந்தவர்கள் தீ வைத்துவிட்டுச் செல்ல மக்கள் அத்தீயை அணைத்ததாகவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வலம்புரி உதயன் தினக்குரல் ஆகிய மூன்று பத்திரிகைகளும் ஒரே நிறுவனத்தினூடாகவே விநியோகிக்கப்படுவதால் மூன்று பத்திரிகைகளுமே ஒரே நேரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மேலும் சாவகச்சேரி பருத்தித்துறை ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் யாழ் நகரில் உதயன் தினக்குரல் ஆகிய இரு பத்திரிகைகளினது விற்பனையையும் தன்னால் காணக் கூடியதாக இருந்ததாகவும் ஆனால் வலம்புரி பத்திரிகையை நகரில் எங்கும் காணக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கான காரணம் இன்னமும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்த அவர் இப்பத்திரிகைகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலருக்கு எதிரான செய்தியை பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அது பிரசுரிக்கப்படாததனால் இப்பழிவாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று பேசப்படுவதாகவும் தெரிவித்தார்
 
இன்று யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பதிவு செய்யும் இறுதிநாளாகும். தேர்தல் களம் சூடாகி உள்ள நிலையில் எதிர்கால நிகழ்வுகளை கட்டியம் கூறும் நிகழ்வாக இத்தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

சென்ற வாரம் இலங்கை ஊடக அடக்குமுறை காரணமாக சிறந்த ஊடகவியலாளர்களை இழந்துள்ளதென அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு Committe to Protect Journalist – CPJ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து உரிய கவனம் செலுத்தப்படாதமை மிகவும் வேதனையளிப்பதாக அவ்வமைப்பிக் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜோல் சிமோன் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டில் மட்டும் உலகெங்கும் 17 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா சுயாதீன ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்தி ஆகிய இருவரும் இலங்கையர்கள். மே 31 வரையான ஓராண்டு காலத்தில் உலகின் பலபாகங்களிலும் இருந்தும் 37 ஊடகவியலாளர்கள் தங்களது நாடுகளை விட்டு அச்சம்காரணமாக வெளியேறி உள்ளனர். அவ்வாறு வெளியேறியவர்களில் மூன்றில் ஒருவர் – 11 பேர் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது இலங்கையின் மோசமடைந்துவரும் ஊடக நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றிகொண்டுள்ளதாகக் கூறிக்கொண்டிருக்கையில் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாக ஊடகவியலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

1992 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கையில் 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இலங்கை ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான முதல் இருபது நாடுகளில் 11வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் ஊடகங்களின் நிலை மிகவும் துயர்மிக்கது. சர்வதேச சமூகத்தை எட்டாத யாழ் தமிழ் ஊடகங்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிய விரும்புபவர்கள் அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.  – Fact-finding report by the International Press Freedom Mission to Sri Lanka : Jaffna’s media in the grip of terror – August 2007. தற்போதைய தீ வைப்புச் சம்பவம் ஊடக சுதந்திரம் இலங்கை ஊடகங்களுக்கு வெகு தொலைவில் உள்ளதையே வெளிக்காட்டுகிறது.

துரோகிகள் …….??? : ரி கொன்ஸ்ரன்ரைன்

Pro_LTTE_Protest_in_Bernதுரோகிகள் என்றதும் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று ஒரு கணம் எண்ணியிருப்பீர்கள். இன்றைய புலிகளின் தலைவர் பத்மநாபனா…….? அல்லது நடேசனா?? புலித்தேவனா??? இளந்திரையனா???? அல்லது மறைந்த தலைவர் பிரபாகரனைத் தான் குறிப்பிடுகிறேனா?????

அரசியலில் மாற்றுக் கருத்தாளர்களை, அரசியல் எதிரிகளை, விமர்சகர்களை அனைவரையும் வரிசையாக துரோகிகள், எட்டப்பர்கள் என்று கூறி சுட்டுக் கொன்றதை விடுதலையின் பேரில் மௌனமாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் வியாக்கியானங்கள் கொடுத்து நியாயம் கற்பித்தவர்களும் வாயடைத்துப் போய் மௌனிகளாக நிற்கின்றனர். இன்று மக்களைக் காப்பாற்றுகிறோம் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் எனக்கூறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிப்பதைக் கண்டித்து இலட்சக்கணக்கில் படை எடுத்துள்ளனர்.

அன்று புலிகள் எந்த வாதத்தை மூலகாரணமாக வைத்து தமது அரசியல் விமர்சகர்களையும் சக போராளிகளையும் அழித்தனரோ, அதே வாதம் ஸ்ரீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டு கொடூர இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த காலம் சென்ற நடேசனும் புலித்தேவனும் சரணடைய எடுத்த முனைப்புகளை Times (UK) பத்திரிகையாளரான Marie Covin தனது குறிப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார். நடேசனும் புலித்தேவனும் சரணடைய விடுத்த விடயம் ஜனாதிபதி ராஜபக்ச உட்பட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டாக்டர் பலிதகோகன்ன, ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார் அனைவரிடமும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதை திகதி கால குறிப்புடன் வெளிப்படுத்துகிறார் மேரி. இவ்வாறான ஒரு தெளிவான சரணடையும் விடயம் தெரிவிக்கப்பட்டும் ஸ்ரீலங்கா அரசு நடந்து கொண்ட விதம் சர்வதேச போர் விதிகளுக்கு புறம்பானது என தற்போது பலதரப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.       

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் எந்தளவு சர்வதேச நீதிமன்றம் வரை சென்றடையும் என்பது பெரிய கேள்விக்குறி. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கைகள், அதிலும் குறிப்பாக முன்னாள் இந்தியப் பிரதமரின் கொலையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட சர்வதேச தடை, இவற்றுடன் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு எடுத்த நடவடிக்கை சர்வதேச நீதிமன்றத்தை எட்டும் சாத்தியம் மிகமிக குறைவு என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக ஸ்ரீலங்கா அரசின் இந்த மூர்க்கத்தனமான இராணுவ முன்னெடுப்பின் பின்னணியில் சீனா, இந்தியா போன்ற பலம் மிக்க நாடுகள் வெளிப்படையாக உடந்தையாக இருந்திருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச நீதிமன்றம் வரை போக சாத்தியம் இல்லையென்றே கூறவேண்டும்.

சர்வதேச சட்ட முனைப்புக்களை விடுத்து சாதாரண முறையில் ஸ்ரீலங்கா அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வித்தியாசமான வாதத்தை தனிப்பட்ட முறையில் முன்வைக்கிறார்கள். பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தின் போதும் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சி ஆரம்பத்தின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கிழக்கு மாகாணத்தில் சரணடைந்த நிராயுதபாணிகளான சிங்கள பொலிசாரை விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற சம்பவங்களை அவர்கள் கூறுகின்றனர்.

இன்று இல்லாத ஒருவர் உயிருடன் இருப்பதாக கூறி அரசியல் நடாத்த பலர் தயாராகின்றனர். நடைமுறை இப்படி இருக்கும் போது பிரபாகரனின் குடும்பத்தில் ஒருவரையோ அல்லது விடுதலைப் புலிகளின் உயர் தலைவர் ஒருவரையோ உயிருடன் பிடித்திருந்தால் அது தேவையில்லாத அரசியல் தலையிடியை தமக்குத் தந்து சிங்கள இராணுவ வீரர்கள் இதுவரை செய்த தியாகங்களை வீணடித்திருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தமாக பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பும், அதனை ஒட்டிய அரசியல் அழுத்தங்களும் காலப்போக்கில் மங்கிப் போகும். அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு அதிகூடிய வேகத்தில் செயலாற்றி வருகின்றது. வரும் ஓகஸ்ற் மாதத்தில் வடமாகாணத்திற்கான தேர்தல் என்ற அரசின் அறிவிப்பும், 180 நாட்களில் பெரும்பாண்மையான அகதிகளை மீள் குடியமர்த்துவோம் என்ற அறிவிப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் செய்யப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை முற்றாக தவிடுபொடியாக்கப் போகின்றது. மற்றும் தற்போது புலம் பெயர்ந்த நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிகவும் மோசமாகவும் கோமாளிகளாகவும் ஆக்கப்போகின்றது.

இன்று விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் லண்டனில் கோயில்களாகவும், நகைக்கடைகளாகவும், வீடுகளாகவும், தனிப்பட்டவர்களின் பெயரிலும், சில வசரளவ களிலும் உள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல இன்றைய நிலையில் பல லட்சக்கணக்கான புலிகளின் சொத்துக்கள் சில தனிப்பட்டவர்களை சென்றடைய இருக்கின்றன. இதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி வன்னியில் இயங்கும் வெண்புறா, அம்மன் வசரளவ போன்ற அமைப்புக்களின் கணக்கு விபரங்களை ஆராய்வதற்கு புலிகளின் உண்மையான விசுவாசிகளையும் சில பொதுவானவர்களையும் நியமித்து விசாரணை குழுக்கள் அமைக்கப்படல் வேண்டும். அதன் முதற்கட்டமாக வணங்கா மண் வேலைத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட பணத்தைப் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் மீள வசூலிக்கப்பட்டு வன்னிப் பிரதேசத்தில் அகதிகளாக உள்ள மக்களுக்கு செலவிடப்படல் வேண்டும். அத்துடன் ஆயிரக்கணக்கில் அநாதரவாக விடப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு காத்திரமான பங்களிப்பை செய்ய புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும். இன்றைய யதார்த்த அரசியலைப் புரிந்து, ஆதாரம் பெற முடியாத கோசங்களை முன்வைத்து, நடைமுறை சாத்தியம் இல்லாத அரசியல் வேலைத் திட்டங்களை கைவிட்டு, யதார்த்த அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே 18ம் திகதி இடம்பெற்ற சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு தூரம் கனவுலகத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை கோடிட்டு காட்டியுள்ளது. இனிமேலாவது தமிழ் மக்கள் துரோகி, எட்டப்பர் என்ற வெற்று பதங்களை மறந்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க உடந்தையாக இருக்க வேண்டும்.

‘சர்வதேச நாணய நிதியம் சாதகமான நிலைப்பாடு’

ranjith_siyambalapitiya.jpgசர்வதேச நாணய நிதியம், இலங்கை கோரியுள்ள கடனைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தற்போது சாதமாக செயற்பட்டு வருவதாக அரச வருவாய்த் துறை அமைச்சரும், நிதி திட்டமிடல் பிரதியமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது இதனைத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய, பயங்கரவாதப் பிரச்சினை முற்றுப்பெற்றிருக்கும் நிலையில், இலங்கைக்குக் கடன் வழங்குவதில் சர்வதேச நாணய நிதியத்திற்குப் பிரச்சினை இருக்காதென்றும் தெரிவித்தார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார இருப்பு அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதிய த்தின் கடன் கிடைத்ததும், மேலும் நிதி நிலைமை வலுவடையுமெனத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது பாராளுமன்றத்தில் எழுப்புவதற்குப் பிரச்சினைகள் எதுவும் இல்லாததால், நிர்க்கதியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.