எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மட்டக்களப்பில் யுத்த சூழ்நிலை காரணமாக வீடுகளை இழந்த 118 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கிராமங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இருப்பிடங்களை இழந்த குடும்பங்களுக்கு சர்வோதயத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 118 வீடுகளும் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. கித்தூள், றூகம், கோப்பாவெளி ,பெரிய புல்லுமலை,கரடியனாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே சகல வசதிகளையும் உள்ளடக்கிய இவ் வீடுகள் கையளிக்கப்பட்டதோடு மேலும் 32 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.

றூகம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வைபவத்தில் சர்வோதயத்தின் நிறைவேற்று இயக்குநர் வின்னி ஆரியரட்ன கலந்து கொண்டு இவ் வீடுகளை கையளித்தார். இந் நிகழ்வில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 250 பாடசாலை மாணவர்களுக்கும் ,15 பால் உற்பத்தியாளர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் கித்தூள் கிராமத்தில் ஒன்று கூடல் மண்டபமொன்றும் சர்வோதய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதே வேளை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தொழில் பயிற்சி முடித்துக் கொண்ட 61 பேருக்கு தொழில் உபகரணங்களை வழங்கும் மற்றுமொரு வைபவமும் நேற்று நடைபெற்றது. ஒக்.ஸ. பார்ம் நிறுவனத்தின் இலங்கைக்கா வதிவிடப் பிரதிநிதி ஜோன் பார்ம் இதில் கலந்து கொண்டு அலுமினியம் பொருள் உற்பத்தி ,தச்சு மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் போன்ற துறைகளில் தொழில் பயிறிச்சி பெற்றவர்களுக்கு இந்த உபகரணங்களை வழங்கினார்.

15 பேருடன் இந்திய சரக்குக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தல்

சோமாலியா அருகே போஸாசா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டதாக ஆஸ்திரேலிய இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய சரக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் அதனை மடக்கி கடத்திச் சென்று விட்டனர்.

தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சோமாலியாவின் வட கிழக்குப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்யத்திலிருந்து இந்தக் கப்பல் சோமாலியாவிலுள்ள துறைமுகத்திற்கு வந்தது. சரக்குகளை இறக்கி விட்டுத் திரும்பும்போதே இது கடத்தப்பட்டது. சவூதி அரேபியாவுக்கும், ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சரக்குப் போக்குவரத்தை கையாண்டு வரும் கப்பல் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பாக ஆராய விசாரணைக் குழு!

jhon_senevirathna.jpgஇலங்கை மின்சார தனியார் நிறுவனம் (லெகோ) தொடர்பாக ஆராய விசேட விசாரணைக் குழுவொன்றை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே.செனவிரத்ன நியமித்துள்ளார். இக்குழு உரிய விசாரணைகளை  மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் இணை நிறுவனமாக கிழக்கிலும் தெற்கிலும் மின்சார விநியோகம்,  அபிவிருத்தி. நுகர்வேர் சேவை  மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட   இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பில் ஊடகங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இக்குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையைக் கண்டறியும் முகமாகவே ஐவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைச்சர் நியமித்துள்ளார். 

மீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலை தெற்கில்- அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

felixperera.jpgமீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலையொன்றை தெற்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். நியுசிலாந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இத்தொழிற்சாலை காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீன்பிடித்தடைகள் நீக்கப்பட்டதால் இப்போது மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேடுவப் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

0000.jpgவீட்டு வேலைக்காக அமர்த்தப்படுகின்ற வேடுவப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக ஆதிவாசிகளின் வேடுவத் தலைவர் ஊருவரியகே வன்னி அத்தோ தெரிவித்தார். இன்றைய நாகரிக உலகில் எமது ஆதிவாசிகளும் தேசிய நீரோட்டத்தில் இணைவது காலத்தின் தேவை. இதனால் வனப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எமது சமூகத்தை வெளியுலகிற்குக் கொண்டுவருவதற்குப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றவேளை எம் இளம் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அண்மைக்காலமாக எமது இனத்தைச் சேர்ந்த இளம் வயதினர் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவது மாத்திரமல்லாது வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரைப் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து சிறுவர் நன்நடத்தைப் பிரிவினர் மீட்டெடுத்ததாகவும் அவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள நன்நடத்தை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊறுவரியகே வன்னி அத்தோ கடும் விசனத்துடன் தெரிவித்தார்.

உலக மக்கள் தொகை நாள் ( World Population Day) – புன்னியாமீன்

world-population-day-11-july.jpgஉலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. “பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு’ என்பது இவ்வாண்டின் தொனிப் பொருளென ஐ.நா. சனத் தொகை நிதியம்(UNFPA) பிரகடனப்படுத்தியுள்ளது.

(UNFPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அஹ்மத் ஒபெய்ம் உலக மக்கட் தொகை தினம் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் மரண வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின் மையாக விளங்குகின்றது. என்றிருந்தார்.

1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி 2009 ஜூலை 10 ம் தேதி உலகின் மக்கள் தொகை 6,770,073,396 (00:51 GMT (EST+5) Jul 10, 2009) அதாவது 677 கோடியாகும். சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருவதாக மதிப்பீட்டின் பிரகாரம் கூறப்படுகின்றது.

உலக சனத்தொகை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கை பிரகாரம் கி.பி. 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக காணப்பட்டது. இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனாகவும், கி.பி. 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும், 1650ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும், 1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 2.55 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆண்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் உயர்ந்தது. இத்தொகை 1990ஆம் ஆண்டில் 5.3 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும், 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும், 2006ஆம் ஆண்டில் 6.5பில்லியனாகவும் உயர்ந்து தற்போது (2009 ஜுலை) 6.76 பில்லியனாக ஆகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும்.

இன்று உலகளாவிய ரீதியில் அதிக சனத்தொகைக் கொண்ட 15 நாடுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி பின்வருமாறு அமைந்துள்ளது.

1. சீனா 1,331,630,000 (19.67%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
2. இந்தியா 1,165,930,000 (17.22%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜுன் 24, 2009 மதிப்பீட்டின்படி
5. பிரேசில் 191,437,000 (2.83%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46% ) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி
8. நைஜீரியா 154,729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி
9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி
11 மெக்சிகோ 109,610,000 (1.62%) ஐ.நா மதிப்பீட்டின்படி
12. பிலிப்பைன்ஸ் 92,226,600 (1.36%) ஜனவரி 1, 2009 மதிப்பீட்டின்படி
13. வியட்னாம் 88,069,000 (1.3%) ஐ.நா. மதிப்பீட்டின்படி
14. ஜெர்மனி 82,062,200 (1.21%) ஜனவரி 1, 2009 ஐ.நா. மதிப்பீட்டின்படி
(15) எத்தியோப்பியா 79,221,000 (1.17%) ஜுலை 5, 2008 மதிப்பீட்டின்படி ஆகியன அமைந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட அட்டவணைப்படி உலக சனத்தொகையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் ஆகியன கூடிய சனத்தொகைக் கொண்ட நாடுகளாக இருப்பதை அவதானிக்கலாம். 2009ஆம் ஆண்டு ஜுலை 05ம் திகதியின் மதிப்பீட்டின் பிரகாரம் இப்பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1 ஆகவும், பிறப்புவீதம் 1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத்தின் பிரகாரம் 18,797,257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை தற்பொழுது 2009ஆம் ஆண்டு மதிப்பின் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கருவளவீதமானது 1965 ஆம் ஆண்டில் 5.19 வீதமாகவும், 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு குறைவடையும் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடுபாடு, திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.

உலகளாவியரீதியில் தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது, குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு கணிப்பின் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது.  எனினும் 2050 ஆம் ஆண்டில், குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது 900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075 ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள்ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கின்றது. இனப்பெருக்க திறன்கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ‘கருவலம்” எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளாதார நிலை, இருப்பிடம் போன்றன அமைகின்றன.

குறித்தொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை ‘இறப்பு வீதம்” என்பர். நாடுகளின் இறப்பு வீதம் எனும்போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுக்கும்போது பெறப்படும் எண்ணிக்கையாகும். பொதுவாக இறப்பு வீதத்தைவிட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகைப் பெருக்கத்திற்கான காரணமெனலாம். நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் பெருமளவுக்கு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.

பூமியில் உள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக இரண்டு லட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.

பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடையாத நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் அபிவிருத்தியடையாத நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும் குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் வளம் வறண்டு விடும். வாழ்வு வீழ்ந்து விடும். அளவோடு பெற்றால் தான் வளமோடு வாழ முடியும். வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி நாட்டுக்கும் பொருந்தும்.

ஜூன் 2009இல் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ரஸ்யா, இங்கிலாந்து ஆகிய ஜி.8 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ‘உலக வறுமையும், பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது உலகில் உள்ள ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகிறார். உலகில் 6 விநாடிக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கிறது. ஆப்பிரிக்க மண்டல நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர் கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம்.” என்றார். இக்கருத்து இவ்விடத்தில் ஆழமாக ஆராயப்படல் வேண்டும்.
2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியைத் தாண்டி விடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும். 2010 – 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் தெரிவித்துள்ளார். 2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியில்லை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என்ற உறுதியாகச் சொல்லலாம்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மண் அரிப்பு பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறைஇ போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நகரங்கள் நரகங்களாகின்றன.

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நேரடியாக நோக்குவோம். அவை அடிப்படையில் உணவுப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, வதிவிடப் பிரச்சினை என வகுக்கலாம். கல்வி வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி முதலிய சமூக நலச் சேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளென பல குடித்தொகை பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன. இவற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே.

குடிசனப் பெருக்கத்தினால் இன்றைய உலகம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை உணவுப் பிரச்சினையாகும். அதிகரித்துவிட்ட மக்களுக்கு போதிய உணவுமில்லை. ஊட்டமான உணவுமில்லை. உலகில் மக்கள் தொகை மூன்றிலொரு பங்கினர் உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கின்றனர். மூன்றிலொரு பங்கினருக்கு மாத்திரமே போதுமானளவு உணவு கிடைக்கின்றது. அத்துடன், வேலையில்லாப் பிரச்சினை குறைவிருத்தி நாடுகளில் அதிகளவில் தலைதூக்கியுள்ளன. அதனால்தான் அண்மைய ஆண்டுகளில் பலவிதமான தொழில்களை நாடி இலங்கை, இந்திய மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் இடம்பெயர்கின்றனர். மூளைசாலிகள் வெளியேறுவதும், மனிதவலு வேளியேறுவதும் ஒரு நாட்டின் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாமையினாலும் ஊதியக் குறைவினாலுமாகும். பொதுவாக பயிர்ச்செய்கை பொருளாதாரத்திலேயே தொழில் பிரச்சினை அதிகளவு காணப்படுகிறது. அதிகரிக்கும் மக்கட் தொகைக்கு வேலை வழங்கும் திறன் பயிர்ச்செய்கைக்கு இல்லை. அதனால்தான் குறைவிருத்தி நாடுகள் இன்று கைத்தொழில் ஆக்கங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று முக்கியமாக நகர்ப்புறங்களில் வதிவிடப் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மக்கள் தொழில் நாடி நகரங்களில் குடிபெயருவதால் நகரங்களில் இருப்பிடமின்மை உருவாகின்றது. நியுயோர்க், லண்டன், ஹொங்கொங், பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் மாத்திரமன்றி கொழும்பு போன்ற சிறிய நகரங்களிலும் வதிவிடப் பிரச்சினைகள் உருவாகுகின்றன. அதனால்தான் வானளாவிய மாடிக்கட்டடங்கள் இந்த நகரங்களில் கட்டப்பட்டு வருகின்றன. பண்டைய காலம் முதலே குடித்தொகைப் பிரச்சினை பொருளாதார புவியியல் அறிஞர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து அறிஞர்கள் மக்கள் தொகைக் கோட்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக உருவாக்கியுள்ளனர்.

மேலும், சனத்தொகை பிரச்சினை உக்கிரமடைய உலகக் குடிப்பரம்பலும் ஒரு காரணமாக அமைகின்றது. கிழக்காசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் வடக்கில் அமெரிக்க நாடுகளிலும் சனத்தொகை பரம்பல் அதிகரிப்புக்கான காரணங்களாக பயிர்ச்செய்கைக்கு உகந்த விளைநிலங்கள் காணப்படுவதும், உகந்த காலநிலை காணப்படுவதும் பிரதான காரணிகளாக அமைகின்றன. அதேநேரம், அதிகக் குளிர்ப் பிரதேசங்கள், அதிக வெப்பப் பிரதேசங்கள்ää அதிக ஈரழிப்பான பிரதேசங்கள், அதிக உயரமான பிரதேசங்களில் சனத்தொகைப் பரம்பல் மிக ஐதாகக் காணப்படுகின்றது.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து இரு வேறு கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ‘பிறக்கும் குழந்தை வயிரோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது’ இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். அதாவதுää பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமவுடமைவாதம் மூலதனமாகவே கருதுகின்றது. மறு சாரார். ‘கரங்கள் உழைப்பது சில காலம்தானேஇ ஆனால் காலம் முழுக்க வயிற்றுக்கு சோறிட வேண்டுமே’ என்று வேதனை கொள்கிறது இது முதலாளித்துவவாதத்தின் அடிப்படை. ‘ஒரு ஜோடிக் கரங்கள் பல ஜோடி வயிற்றுக்கு காலமெல்லாம் காப்பாற்றுமே’ என்ற நம்பிக்கையை பின்னைய கருத்து ஏற்படுத்துகின்றது. இதை வேறுவிதமாகக் கூறும்போது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமையாகவே கொள்ளப்படுகின்றது.

அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.

அதே போல மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட மக்கள் தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மகளின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும். சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது இருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டே சிறுகுடும்ப நெறியை பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அளிக்கிறது.

சீனாவில் 6 தடவை நிலநடுக்கம் 18 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்

china_yunnan_.gifசீனாவில் உள்ள யுன்னன் பிராந்தியம், தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் நேற்று இரவு ஆறு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 ரிச்டர் அளவில் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 600க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனரென சீனா அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன் 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததாக ஷிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் பின்னர் 9 தடவைகள் சிறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது மூன்று தொடக்கம் 4.1 ரிச்டர் அளவீடாக இருந்த தென அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கவென 5000 கூடாரங்கள் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் சுமார் 1000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட யுன்னன் பிரதேசம் மலைப்பாங்கான தென்பதால் சுமார் 4 இலட்சம் பேரை அங்கிருந்து அகற்றி வேறு இடங்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு சிக்பொன் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர்.

முந்தைய சேத விபரங்களை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்கிறது ஐ.நா.

110709gordon.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் சேதம் தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த விபரங்களில் மாற்றம் செய்யப்போவதில்லை என இலங்கையில் உள்ள ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னிக் களமுனையில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்த தமது தகவல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வைஸ் வலியுறுத்தியுள்ளார்..

புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் சர்வதேச ஊடகங்களுக்கு மிகைப்படுத்திய தகவல்களை வழங்கியதாக வன்னி மருத்துவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர்.

தவிர, லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வவுனியா நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கு 1400 பேர்கள் இறக்கிறார்கள் என்ற மதிப்பீட்டுடன் தாங்கள் உடன்படவில்லை என்றும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மாணவரின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு விசேட திட்டம் – சார்க் சிறுவர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து பிரதமர் தகவல்

pmsrilaka.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்கென 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். சார்க் பிராந்திய நாடுகளிலுள்ள 18 வயதுக்குக் கீழ்பட்ட 50 கோடி சிறுவர்களின் எதிர்கால கனவுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது எமது பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்ட நான்காவது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜி. ஜயசேனவின் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிதமர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் எமது நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் கண்டு வந்த வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. எமது தேசத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் பல தியாகங்களுக்கு மத்தியில் எமது படைவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அர்த்தமுள்ளதாகும்.

பயங்கரவாதம் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கின் வசந்தம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

சார்க் பிராந்தியத்தின் சிறுவர்கள் குறித்த இந்த 4வது மாநாட்டில் ஒரு முக்கிய விடயத்தை நாம் மறந்துவிட முடியாது. தெற்காசியாவின் சனத் தொகையில் 40 வீத மானவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். இது எண்ணிக்கை அடிப் படையில் சுமார் 50 கோடியாகும்.

50 கோடி சிறுவர்களின் சிறந்த எதிர்கால கனவுகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்று நாம் எந்தளவுக்கு எமது கடமைகளை நிறைவேற்றுகின்றோமோ அதைப் பொறுத்துத்தான் எமது எதிர்கால சந்ததியின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் அமைந்திருக்கும்.

சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அனைத்து சார்க் நாடுகளாளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களுக்கான எமது வேலைத்திட்டங்கள், கொள்கைகள், விளக்கங்கள் என்பனவற்றை வடிவமைத்துக் கொள்ள நல்லதோர் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களில் எமது மக்களுக்கான வறுமை ஒழிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இன்றும், நாளையும் வவுனியாவில் நடமாடும் சேவை

வவுனியாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மக்கள் நடமாடும் சேவையில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சும் பங்கு பற்றி மக்களுக்கு சேவையாற்ற உள்ளது.

இவ்வமைச்சினால் கையாளப்படும் விடயங்கள் சம்பந்தமாக பொது மக்களிடமி ருந்து கிடைக்கும் கோரிக்கைகள், முறைப்பாடுகள் என்பன கவனத்திற்கு எடுக்கப்பட்டு அவை சம்பந்தமாக உடனடி நிவாரணங்கள் வழங்கமுடியுமாயின் அவை வழங்கப்படும்.

தபால் மற்றும் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமியின் தலைமையில் அவரது பிரத்தியேக செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் தபால் மா அதிபர் அவரது உதவியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.