எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் மாநாடு

மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு சுதந்திர தினமான இன்று சிம்லாவில் நடக்கிறது. இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை பெண்கள் வீட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். திருமணத்துக்கு தந்தைக்கும், திருமணத்துக்கு பின் கணவருக்கும், வயதான காலத்தில் மகனுக்கும் அடிமைகளாக இருந்தனர்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முக்கிய கட்டமான திருமணத்தின் போது பெண்கள் வரதட்சனை என்ற பெயரில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் வரதட்சனை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வி்ஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சிலர் இந்த வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்றவற்றை தங்களது சொந்த லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். கணவன்மார்களை தங்களது கைக்குள் வைத்துள்ளவும், பிடிக்காத கணவரை கழட்டிவிடவும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என மிரட்டும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போனால் மானம் போய்விடும், 3 ஆண்டுகள் வரை சிறை  தண்டனை கிடைக்கம் என்பதால் பல ஆண்கள் அஞ்சி பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

மேலும், இது போன்ற வழக்குகளில் குழந்தைகள் தாயாரிடம் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுவதால் குழந்தைகளை பிரிய விரும்பாத நல்ல தந்தையாக இருக்க நினைக்கும் ஆண்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை ஒரிசா பெண்கள் கமிஷனும் ஒத்துகொண்டுள்ளது. கணவனை கொடுமைப்படுத்த வரதட்சணை கேட்கபதாக பெண்கள் பொய்புகார் கொடுப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒன்றிணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மாநாடு ஒன்றை இன்று துவக்கியுள்ளனர். இது குறித்து இந்திய குடும்ப அடிப்படைகளை காப்பாற்றுங்கள் என்ற பெங்களூர் அமைப்பின் உறுப்பினர் விரக் துலியா என்பவர் கூறுகையில்,

எங்கள் மாநாட்டை சுதந்திர தினத்தின் போது நடத்த திட்டமிட்டோம். இதன் மூலம் எங்கள் பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரலாம் என நம்புகிறோம். மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் சென்னை, டெல்லி, மும்பை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 ஆண்கள் உரிமை அமைப்பிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் மனைவிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் கணவர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

முகாம்களில் இடம்பெயர்ந்த தமிழர்கள், போர்க் குற்றவாளிகள் போலவே நடத்தப்படுகின்றனர்: மனித உரிமைகள் பணியாளர் நிமால்கா பெர்னாண்டோ

nirmala_lawyer_.jpgஇலங்கை அகதி முகாம்களின் நிலைமை வரலாற்றிலேயே மோசமானவையாக இருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடத்தப்படாமல் போர்க்குற்றவாளிகள் போன்றே தமிழர்கள்  நடத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பணியாளரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ கூறியுள்ளார்.  எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியிலேயே நிமால்கா பெர்னாண்டோ  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், முகாம்களிலுள்ள மக்களுக்கு பற்தூரிகையும், சவர்க்காரமும் ஆடம்பரப் பொருட்களாக உள்ளதாகவும், முகாம்களுக்கு வரும்போது கொண்டு வந்த ஆடைகளையே தொடர்ந்தும் அணிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தமிழர்கள் நடத்தப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகள் போன்றே அவர்கள் நடத்தப்படுவதாகவும், பொதுமக்களே இந்த மாதிரியாக நடத்தப்படுவதென்றால் புலி உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனர்களின் நிலைமையைத் தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் விசேட தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். நிலக்கண்ணிவெடி ஆபத்தை எதிர்கொள்வதாலேயே இடம்பெயர்ந்த மக்களைப் பலவந்தமாகத் தங்கியிருக்கச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் நிமால்கா, கண்ணிவெடிகளில் சிக்காமல் தமிழ் மக்கள் முகாம்களுக்கு வரமுடியுமென்றால் அதே பாதையால் அவர்களால் ஏன் திரும்பிச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் பகுதிகள் மீது ஷெல் வீச்சு அதிகரித்தமையும் பட்டினி நிலைமையுமே அகதி முகாம்களுக்கு அவர்கள் வருவதற்கான நிர்ப்பந்தமாக அமைந்ததாகவும் நிமால்கா குறிப்பிட்டுள்ளார்.  மதுரை கூடல் நகரிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்றிருந்த நிமால்கா இலங்கையிலுள்ள அகதி முகாம்களையும் கூடல் நகர் முகாமையும் ஒப்பிட்டுக் கூறுகையில்;  கூடல் நகர் முகாமில் சுதந்திரமான நடமாட்டத்திற்கான காற்றைச் சுவாசிப்பதை உணர முடிவதாகவும் அது இலங்கையில் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

அகதிகள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவது கடினமானதென்றும் தமது படகுகள், விவசாய உபகரணங்கள், நிலங்கள் என்பனவற்றை மீளப் பெற்றுக்கொள்வது கடினமான விடயம் என்றும் நிமால்கா கூறியுள்ளார்.  அரசாங்கம் பலவந்தமாக அவை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதாகத் தெரிவித்த அவர் புனர்வாழ்வுக்காக வெளிநாடுகள் கொடுத்த நிதியும் யுத்தத்தால் ஏற்பட்ட கடனுக்கு நஷ்ட ஈடாக வழங்குவதற்காக திசை திருப்பப்படக்கூடும் என்றும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் கிடைக்காமல் போகும் என்றும் நிமால்கா பெர்னாண்டோ கூறியுள்ளார்.

அத்துடன், அவர் இந்தியாவில் இருந்து வெளிவரும்  குமுதம் இதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்த சில முக்கியமான கருத்துக்கள்:-

சிறுபான்மை சமூகத்தின் அடையாளங்களை அழிப்பதற்காகவே, தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ள முனைவதாக இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த முன்னெடுப்புகள் மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள பொது மக்கள், பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வரும் நிலையில், மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கு உணவை வழங்குவாரே தவிர தீர்வை வழங்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற பாரிய அழுத்தங்களே, இலங்கை தமிழர்களின் தலையெழுத்தை மாற்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு 13ம் திருத்த சட்ட அமுலாக்கம் ஒன்றே சிறந்த தீர்வாக அமையும் என தெரிவித்த அவர், எனினும் அதனை அரசாங்கம் அமுல்படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலி தொடர்பாளர்கள் என விசாரணை செய்துவரும் அரசாங்கம், இந்த விசாரணைகளில் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமானவர்களை விடுவித்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தொலைக்காட்சிகளில் இராணுவத்தினர் காட்டிய சடலம் மற்றும் அடையாள அட்டை என்பன பிரபாகரனுடையது இல்லை என குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் இறந்து விட்டமை உண்மை என இராணுவம் அறிவித்த போதும், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தூதரகம் முன் யேர்மன் தமிழர்கள் போராட்டம்

மலேசியா அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்ட ஐனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்தும். வவுனியாத் தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியும் யேர்மனி பேர்லின் நகரில் அமைந்துள்ள மலேசியத் தூதரகம் மற்றும் பிராங்போட் நகரில் அமைந்துள்ள மலேசியத் துணைத் தூதரகம் என்பவற்றை நோக்கி யேர்மனி வாழ் தமிழ் மக்களால் கண்டன ஊர்வலங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ் ஊர்வலங்களில் மலேசிய நாட்டின் நடவடிக்கையைக் கண்டித்து பாதாதைகள் தமிழ்மக்களால் தாங்கிச் செல்லப்பட்டது.

வன்னிப் பகுதியில் கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு

teli00000.jpgஇலங் கையின் மிகப்பெரிய கையடக்கத் தொலைபேசி வலையமைப்பாளர்களான டயலொக் நிறுவனத்தினர், முதன்முறையாக வன்னி நிலப்பரப்பில் தமது வலையமைப்பை ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.  இவர்கள் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 10 மில்லியன் டொலர்கள் செலவில் 60 நிலையங்கள் வன்னி நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளன. ஆனால், அங்குள்ள ராணுவத்தினரில் நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தான் முதலில் இணைப்புகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் மேலதிக தொலைத்தொடர்பு கோபுரங்கள் கட்டுவதற்கு அரசு அனுமதியளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கிளிநொச்சி, ஆனையிறவு, பூநகிரி, மாங்குளம், துணுக்காய் ஆகிய இடங்களில் டயலொக் கோபுரங்கள் வந்துள்ளன.

38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட நபர் கைது – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சம்பவம்

police_man.jpgசட்ட விரோதமான முறையில் இந்தியாவுக்கு 38இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகைத் தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபரொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

குறித்த நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து விமான நிலைய சுங்கப் பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே அவரது பயணப் பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி தங்கம் கைப்பற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்திலேயே மேற்படி சந்தேக நபர் பயணிக்கவிருந்தார். இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்துக்கு வந்த அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தொடர்பில் அவதானம் செலுத்திய விமான நிலைய சுங்கப் பிரிவினர் அவரை அழைத்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி தொகை தங்கம் கைப்பற்றப்பட்டது. 

தனக்கு அன்பளிப்பாக வழங்கிய நகைகளை ஏழைக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரி

தென் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.டபிள்யூ. பிரதாப் சிங்க ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு தென் பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் காலியில் பிரிவுசார நிகழ்வை நடத்தினார்கள்.
38 வருடகாலம் பொலிஸ் சேவையில் அவர் ஆற்றிய பணிகளை பலரும் பாராட்டினார்கள். நிகழ்வின் முடிவில் அவருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த குலதிலக அதனை அவருக்கு வழங்கினார்.  இவற்றை பெற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப்சிங்க, அதற்கு நன்றி தெரிவித்ததுடன் அந்தப் பகுதியில் வறுமையில் வாழும் வீடில்லாத ஒரு குடும்பத்துக்கு அவற்றை வழங்குமாறும், அதன்மூலம் அக்குடும்பம் புதிய வீடு ஒன்றை பெற முடியுமென்றும் கூறினார்.

அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பொலிஸ் குடும்பத்தினருக்கு அதனை வழங்குமாறும் கூறினார்.  காலி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அங்குலானை கொலைச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை

angulana.jpgஅங்கு லானையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணை ஒன்று மனித உரிமை ஆணைக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அங்குலானையில் கொலைசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.  இதற்காக சிரேஷ்ட விசாரணை அதிகாரிகள் அங்குலானைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடுமாதா உற்சவத்தில் அமைச்சர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

madhush_2.jpgமடு தேவாலய உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 9 மணிக்கு இடம்பெறும் திருசொரூபபவனியுடன் நிறைவுபெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;  உற்சவம் கொழும்பு புதிய அதிமேற் ராணியார் பேரருள் திரு மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறவுள்ளது. அவருடன் இணைந்து யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் நேற்று வெள்ளிக்கிழமை வரை வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 200 குடும்பங்கள் ஆலய விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நற்கருணை விழா இளைப்பாறிய கொழும்பு அதிமேற்ராணியார் பேரருள் திரு ஒஸ்வேல்ட் கோமிஸ் தலைமையில் நடைபெற்றது.  இதில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான சரத் குணரட்ன மற்றும் நியோமல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர் என்றார்.

பாடசாலை மாணவர்களுக்கு சுழல் பந்து வீச்சு பயிற்சி முகாம் நேற்று திருமலையில் ஆரம்பிப்பு – முரளிதரன் பயிற்சி வழங்கினார்

murali.jpgகிழக்கு மாகாணத்தில் திறமைவாய்ந்த புதிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் மற்றும் சிறப்பாக பந்து வீசுவது தொர்பான யுக்தியை கற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கில் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனால் சுழற் பந்துவீச்சு பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பாடசாலைகளின் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட 150 பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதற்கான ஒழுங்கை செலிங்கோ லைஃப் நிறுவனம் சமூக நலத்திட்டங்களில் ஒன்றாக இந்தத்திட்டத்தை நடத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை அணியின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் இதுவாகும்.

இந்நிகழ்வில் முரளியின் முதலாவது பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோ மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பியால் விஜேதுங்க ஆகியோர் உதவியாகப் பணிபுரிந்தனர். இந்நிகழ்வில் செலிங்கோ லைஃப் பிரதித் தலைவர் ஆர். ரெங்கநாதன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நகர சபைத் தலைவர் கெளரி முகுந்தன் மற்றும் ஆயிரக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பன்றிக் காய்ச்சல் காரணமாக ஹஜ் கடமைக்கு புதிய கட்டுப்பாடு

haji.jpgஉலக நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வருகை தரும் யாத்திரிகர் தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கம் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதன்படி 12 வயதுக்குக் குறைவானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணித் தாய்மாரும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்வது ஏற்றதாகும் என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் புதிய இன்புலுவன்சா ஏ (எச்-1, என்-1) வைரஸ் காய்ச்சல் காரணமாகவே சவூதி அரேபிய சுகாதார அமைச்சு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இது கட்டுப்பாடோ தடையோ அல்ல எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இது தவிர இருதய நோயாளிகள்,  சிறுநீரக கோளாறு உடையோர், நீரிளிவு நோயாளிகள் போன்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவதை தவிர்க்குமாறும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபிய அரசாங்கத்தின் புதிய அறிவுறுத்தல்கள் குறித்து இலங்கையிலுள்ள சகல ஹஜ் முகவர் நிலையங்களையும் அழைத்து அறிவூட்ட உள்ளதாகவும் நவவி கூறினார்.

இதேவேளை இந்த வருடம் சர்வதேச கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரிகை செல்ல அனுமதி வழங்கவும் சவூதி அரேபியா அரசு தீர்மானித்துள்ளது. முன்னர் மத்திய கிழக்கு கடவுச்சீட்டு மற்றும் ஹஜ்ஜுக்கான விசேட கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.