கிழக்கு மாகாணத்தில் திறமைவாய்ந்த புதிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் மற்றும் சிறப்பாக பந்து வீசுவது தொர்பான யுக்தியை கற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கில் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனால் சுழற் பந்துவீச்சு பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பாடசாலைகளின் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட 150 பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதற்கான ஒழுங்கை செலிங்கோ லைஃப் நிறுவனம் சமூக நலத்திட்டங்களில் ஒன்றாக இந்தத்திட்டத்தை நடத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை அணியின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் இதுவாகும்.
இந்நிகழ்வில் முரளியின் முதலாவது பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோ மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பியால் விஜேதுங்க ஆகியோர் உதவியாகப் பணிபுரிந்தனர். இந்நிகழ்வில் செலிங்கோ லைஃப் பிரதித் தலைவர் ஆர். ரெங்கநாதன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நகர சபைத் தலைவர் கெளரி முகுந்தன் மற்றும் ஆயிரக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.