எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழ் மொழி புறக்கணிப்புக்கு ஆட்சேபனை

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபையின் நடவடிக்கைளில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இந்தச்சபையின் தமிழ் உறுப்பினர்கள் நேற்று 29 ஆம் திகதி வெளிநடப்பு செய்துள்ளனர்.

கொத்மலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போதே, கொத்மலை பிரதே சபையின் தமிழ் உறுப்பினர்களான அந்தனிராஜ், சிவகுமார், ஜோன்பிள்ளை ஆகியோர் இவ்வாறு வெளிநடப்பு செய்தனர்.

அத்துடன் 2004 ஆம் ஆண்டு முதல் கொத்மலை பிரதேசபையின் தமிழ் உறுப்பினர்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமைக்கு குறித்தும் நேற்றைய அமர்வின் போது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகக் கொத்மலை பிரதேசபை உறுப்பினர் அந்தனிராஜ் தெரிவித்தார்.
 

நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்க எவருக்கும் உரிமையில்லை : கெஹெலிய ரம்புக்வெல

நாட்டின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாதென தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த வைபமொன்றில் உiரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்கின்றது. அதன் தலைவர் முப்படைகளுக்கும் தளபதியாவார். எனவே இறைமையுள்ள நாடொன்றுக்கு வெளியிலிருந்து அழுத்தம் பிரயோகித்து பக்கச் சார்புடன் நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.

சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் இத்தகைய அழுத்தங்களைப பிரயோகிக்க முயலுகின்றன. இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க இத்தகைய சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

வழக்குப்பதிவா? விடுதலையா? – அமைச்சு ஆராய்வு: அரசியல் இலாபம் வேண்டாம் – புத்திரசிகாமணி

210909jail.jpgசிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 600 இற்கும் மேற்பட்ட தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார். கைதிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பதைப் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

எனவே, கைதிகளை உண்ணாவிரதமிருக்குமாறு தூண்டிவிடுவதோ, அரசியல் இலாபத்திற்காக அறிக்கைகளை விடுவதோ, கைதிகளின் நன்மையைப் பாதிக்குமென்றும் பிரதியமைச்சர் கூறினார்.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறும் தமிழ்க் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகாலச் சட்டத்தின் கீழும், பல்வேறு காலகட்டங்களில் கைதுசெய்யப்பட்டவர்களே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, கைதிகளின் விபரங்களைத் தனித்தனியே ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் தமது நடவடிக்கைகளுக்குக் கைதிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார். அதேநேரம் இந்தப் பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசுவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். கைதிகள் சிறைகளில் இருப்பது தமக்குக் கவலையளிப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, கைதிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

எயார் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் ரிக்கெட் பதிவுகள் ரத்து; சேவைகள் பாதிப்பு

26-air-india.jpgவிமானிகளின் வேலைநிறுத்தம் எதிரொலியாக கடைசி நிமிடத்தில் விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங் களை கருத்தில் கொண்டு காலை நேர விமானங்களை ரத்துச் செய்யவும்,  ரிக்கெட் முன்பதிவுகளை நிறுத்திவைக்கவும் எயார் இந்தியா முடிவு செய்துள்ளது.

வெள்ளத்தில் பலியானோர் இருநூற்றி நாற்பதாக உயர்வு – பிலிப்பைன்ஸில் நான்கு இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர்

280909.jpgபிலிப்பைன் ஸில் வீசிய கெற்சனா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 240 பேர் உயிரிழந்ததுடன், ஒரு இலட்சம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். சென்ற சனிக்கிழமை பிலிப்பைன்ஸில் கடும் மழை பெய்ததுடன், பாரிய சூறாவளியும் வீசியது. இதில் இருபது அடிக்கு மேல் வெள்ளம் நின்றது.

சுமார் நான்கு இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. நாளாந்தம் இழப்புகளின் தொகை அதிகரித்த வண்ணமுள்ளது. இராணுவம், பொலிஸ் படையணிகள் ரோந்தில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதி க்கப்பட்டோரை கரையேற்றி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தையடுத்து அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகள் இன்னும் வழமைக்கு வரவில்லை. விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மீன் பிடி படகுகள் துறைமுகத்துக்குத் திரும்பியுள்ளன. மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.

வீடுகளை விட்டு வெளியேறியோரைப் பராமரிப்பதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளம் பூரணமாக வடியும் வரை தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. வியட்நாமை நோக்கி கெற்சனா சூறாவளி மணித்தியாலத்துக்கு 12 கி.மீற்றர் வேகத்தில் நகர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அரோயா தனது இரண்டு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியு ள்ளார். இதையடுத்து ஏனைய அரசியல் தலைவர்களும் தங்கள் சம்பளங்களை வழங்க முன்வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி, மன்னாரில் வேலைவாய்ப்பு பணியக பயிற்சி நிலையம்

வட மாகாணத்தில் இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு இன்னும் சில வாரங்களில் அப்பிரதேசங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பயிற்சியளிக்கும் நிலையம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சேமநல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கேகாலை மாவட்ட பயிற்சி நிலையத்தை 27ம் திகதி திறந்து வைத்துப் பேசும் பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார். யாழ்ப்பாணத்தில் முதலாவது பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன் அதனை அடுத்து மன்னார், கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் இவ்வாறான பயிற்சி நிலையங்களை அமைச்சு ஏற்படுத்தும்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளிகள்

150909sri-lankas-students.jpgஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிவருமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது வெட்டுப் புள்ளிகள் இந்த ஆண்டு சற்று அதிகமாக இருக்குமென பரீட்சைகள் ஆணையர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெட்டுப்புள்ளிகள் 105 க்கும் 117 க்கும் இடைப்பட்டதாக இருந்தது.

பொதுநலவாய நாட்டு நிதியமைச்சர்கள் மாநாடு; அமுனுகம சைப்பிரஸ் பயணம் – துருக்கியில் இடம்பெறும் நாணய நிதிய கூட்டத்திலும் பங்குபற்றுவார்

பொதுநலவாய நாடுகளின் நிதிய மைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதி நிதியமைச்சருமான சரத் அமுனுகம நேற்று சைப்பிரஸ் பயணமானார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர் அமுனுகம, அதனையடுத்து துருக்கிஸ்தான் புல் நகரில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் விசேட மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

பொதுநலவாய நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகைதரும் சர்வதேச நாடுகளின் நிதியமைச்சர்களுடன் அமைச்சர் சரத் அமுனுகம விசேட இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

மன்னார் – அகத்திமுறிப்பு பிரதேசத்தில் 2000 ஏக்கரில் நெற்செய்கை

190909paddy.jpgமன்னார் அகத்திமுறிப்பு குளத்தை அண்டியுள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் காணிகளில் பெரும்போக செய்கையை மேற்கொள்ள கமநல சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய நாளை முதலாம் திகதி அருவியாற்றிலிருந்து அகத்தி முறிப்பு குளத்திற்கும், கட்டுக்கரை குளத்திற்கும் நீர் திறந்துவிடப்படவுள்ளது.

வவுனியா, பரயனாளங்குளம் அருவியாற்றின் தேக்கம் அணைக் கட்டிலிருந்து இடதுபக்கமாகச் செல்லும் வாய்க்கால் ஊடாக அருவியாற்றுக்கும்,  அடுத்த கால்வாய் ஊடாக கட்டுக்கரை குளத்திற்கும் நீர் திறந்து விடப்படவுள்ளது. நாளை காலை 10.00 மணியளவில் அணைக்கட்டிலிருந்து நீர் திறந்து விடப்படுவதுடன் கடந்த 20 வருடங்களின் பின்னர் தரிசு நிலங்களாகக் கிடந்த விளைநிலங்களில் செய்கை பண்ணவும் விவசாயிகளுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

யுத்தம் காரணமாக தரிசு நிலங்களாக காடு மண்டிக் கிடக்கும் விளை நிலங்களை துப்புரவு செய்வதற்காக ஏக்கருக்கு 8870 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன் நிலத்தை உழுவுவதற்காக ஏக்கருக்கு 4000 ரூபா வீதமும், விதை நெல், உரம் என்பனவும் வழங்கப்படவுமுள்ளன.

அகத்திமுறிப்பு குளத்தை அண்டிய 2000 ஏக்கர் நிலத்தில் சுமார் 1100 விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்கு முதற்கட்டமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த கட்டமாக நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் மாந்தை மேற்குப் பகுதி விவசாயத்திற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது எனவும் மன்னார் நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாத சுந்தரம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொருளாதார நோக்குடனேயே வருகின்றனர்: எதிர்க்கட்சி எம்.பி.

அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொருளாதார நோக்கத்துடனேயே வருவதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இவர்கள் அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கின்ற போதிலும், பெரும்பாலானோர் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே பிரவேசிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ‘பானபி ஜோய்சி” தெரிவித்துள்ளார்.

புகலிடம் கோருவோராக நேற்று முன்தினம் 40 பேர் வரை அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசித்தமையை அடுத்தே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.  அகதிகளாக வருவோரில் பெரும்பாலானோர் மல்டி விட்டமின் போசனை வில்லைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள ஜோய்சி அவர்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போதைய குடிவரவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.