எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மதவாச்சி, கெப்பித்திகொள்ளாவ சோதனைச்சாவடி; பாஸ் நடைமுறை நீக்கம்

buss.jpgமதவாச்சி மற்றும் கெப்பித்தி கொல்லாவ சோதனைச்சாவடிகளில் நடைமுறையிலிருந்த வாகன பாஸ் முறைமை நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

இதற்கான அங்கீகாரத்தை பாது காப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இதன்படி நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் வாகனங்கள் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ சோதனைச்சாவடி ஊடாக எவ்வித கட்டுப்பாடும் இன்றி சென்றுவர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன பாஸ் நடைமுறை நீக்கப்பட்டதை அடுத்து முதன் முறையாக கொழும்பிலிருந்து சென்ற வாகனங்கள் இச்சோதனைச்சாவடி களூடாக வவுனியா மற்றும் திருகோணமலை சென்றன.

காலி சிவன் கோவிலில் கொள்ளையர் அட்டகாசம் 17 விக்கிரகங்களை பெயர்த்தெடுத்துச் சென்றனர்

காலி சிவன் கோவிலுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று நூறு வருடங்களுக்கும் மேல் பழைமை வாய்ந்த பெறுமதி மதிக்க முடியாத 17 விக்கிரகங்களைப் பெயர்த்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தென் பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தத் துணிகர கொள்ளை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பல அரசியல் பிரமுகர்களும் பொலிஸாரை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது காலி நகரில் பஸ் நிலையத்திற்கு அருகிலும் நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவும் சிவன் கோவிலுள்ளது. ஆலயத்தின் நான்கு புறமும் பெரிய மதில் சுவர்கள் உள்ளன. ஆலயத்தின் முன்புறவாசல் காலிமாத்தறை வீதியிலும் பின்புறக் கதவு காலிகொழும்பு வீதியிமுள்ளது. கோயிலின் பாதுகாப்புக்காக காவலாளியும் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வாகனமொன்றில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர் கோயிலின் பின்புற வாசல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் இவர்களை தடுத்து நிறுத்த முனைந்ததுடன் உதவி கேட்டு குரல் எழுப்பியுமுள்ளõர்.

எனினும் ஆலயத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் பெரிய மதில் சுவர்களிருந்ததால் அது வெளியே கேட்கவில்லை.  இதற்கிடையில் அந்தக் கொள்ளையர்கள் காவலாளியை மடக்கிப் பிடித்து அவரைக் கடுமையாகத் தாக்கிய பின் அவரது கையையும் காலையும் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் அங்கிருந்த பெரிய சுற்றியல்கள் மற்றும் உளிகள் மூலம் சிவன் மற்றும் அம்மன் கோவில் கதவுளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவுகளையும் உடைத்து விக்கிரகங்களை அடியோடு பெயர்த்துள்ளனர்.

ஐம்பொன் மற்றும் பவுணினாலான 14 பெரிய விக்கிரகங்களையும் மூன்று சிறிய விக்கிரகங்களையும் அவற்றின் இருப்பிலிருந்து பெயர்த்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஒன்றொன்றாக கோயிலினுள்ளிருந்து சுமார் 50 யார் தூரத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு கொண்டு வந்து ஏற்றியுள்ளனர்.

மிகவும் பாரமான இந்த விக்கிரகங்களை தூக்கித் தூக்கி நிலத்தில் வைத்தவாறே வெளியே கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் உள்ளன. கொள்ளையர்கள் சிவன், முருகன், பிள்ளையார், வள்ளி, தெய்வானை, அம்மன், கிருஷ்ணர், சண்டேஸ்வரர் உட்பட 17 விக்கிரகங்களை பெயர்த்துச் சென்றுள்ளதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சேனாதிராஜா இரத்தினராஜா தெரிவித்தார். பெயர்த்தெடுக்கப்பட்ட அனைத்து விக்கிரகங்களும் நூற்றாண்டு பழைமை வாய்ந்தவை. இவற்றின் பெறுமதி மதிப்பிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரும் உடனடியாக அங்கு வந்து புலன்விசாரணைகளை ஆரம்பித்தனர். நேற்று மாலை வரை எவரும் கைதாகவுமில்லை.

தேர்தலைக் கண்காணிக்க 4 வெளிநாட்டுக் குழுக்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா உறுதியளிப்பு

dayananda_disanayake.jpgஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வருகை தரவுள்ளன. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய தேர்தல் ஆணைக்குழு என்பனவற்றைச் சேர்ந்த நான்கு குழுக்கள் தேர்தலை கண்காணிக்குமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தமக்கு அறிவித்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க இத்தகவலை தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரங்களைத் தடுப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததுடன், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐ.தே.மு. ஆட்சியமைக்கையில் அவர்கள் தொடர்பாக சட்டரீதியில் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மூலம் ஐ.தே.கவின் வலதுசாரி சர்வாதிகாரம் அம்பலம்

ஐ. தே. க. சம்மேளனத்தில் வைத்து ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் மூலம் ஐ. தே. க.வின் வலதுசாரி சர்வாதிகாரத் தோற்றம் அம்பலமாகியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார். ஊடகங்களை அடக்கி, ஒடுக்கிய ஐ. தே. க.வின் கடந்த கால போக்கு இன்னும் மாறவில்லை என்றும் தனது சுயரூபத்தை ஐ. தே. க. வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று  நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:- ஐ. தே. க. சம்மேளனத்திற்கு செய்தி திரட்டச் சென்ற ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஊடகவியலாளர்கள் அறுவர் நேற்று முன்தினம் ஐ. தே. க. தலைவரின் ஆதரவாளர்களால் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் கெமரா உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு, வீடியோ ஒளிநாடாக்களும் பறிக்கப்பட்டுள்ளன. மலசலகூடத்தினுள் புகுந்து தப்ப முயன்ற இந்த ஊடகவியலாளர்கள் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். ஊர்மக்கள்தான் இவர்களை காப்பாற்றியுள்ளனர். இவர்களை பாரிய கும்பலொன்றே தாக்கியுள்ளது. தமது கடமையை நிறைவேற்றச் சென்ற வேளையிலேயே இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செய்தி திரட்டுவதற்காக ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். தமது உயரதிகாரிகளின் பணிப்பின் படியே இவர்கள் செய்தி திரட்டச் சென்றனர். இவர்கள் அரசியல் செய்வதற்காக ஐ. தே. க. மாநாட்டிற்குச் செல்லவில்லை.

இந்த மாநாட்டிற்கு அரசாங்க ஊடகங்களுக்கு அழைப்பு வழங்கவில்லையெனவும், ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டது தெரியாது எனவும் ஐ. தே. க. செயலாளர் கூறியுள்ளார். ஜனநாயகம், ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஐ. தே. க. செயலில் அதற்கு மாறாகவே செயற்படுகிறது. கட்சியொன்றின் மாநாட்டில் செய்தி திரட்டச் செல்வதற்கு அனுமதி தேவையில்லை. ஐ. தே. க. வும் ஜே. வி. பி. யும் ஊடக சுதந்திரம் குறித்து பேசினாலும் ஊடக சுதந்திரத்திற்கு எதிராகவே செயற்படுகின்றன. கடந்த ஐ. தே. க. ஆட்சியில் பத்திரிகைகள் “சீல்” வைக்கப்பட்டபோது பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் தாக்கப்பட்டனர். ஆனால் ஐ. தே. க. தனது கடந்தகால போக்கை இன்னும் மாற்றவில்லை. ஐ. தே. க. வின் இந்த போக்கினால் மிகவும் பயங்கரமான நிலை உருவாகியுள்ளது.

தமது கூட்டங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களிலிருந்து யாரும் வரக் கூடாது எனவும், அவ்வாறு வந்தால் திரும்பிச் செல்ல மாட்டார்கள் எனவும் ஜே. வி. பி. அச்சுறுத்தியுள்ளது. மறுபக்கம் செய்தி திரட்ட வந்த அரச ஊடக நிறுவன ஊடகவியலாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் ஐ. தே. க. கூட்டங்களுக்கு செய்தி திரட்டச் செல்வதற்கு அரச ஊடக நிறுவனங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்களை அனுப்ப முடியாது. ஐ. தே. க. வினர் அவர்களை கொலை செய்து விடலாம். இந்தத் தாக்குதல் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது சில தொலைக்காட்சி சேவைகள் 24 மணித்தியாலமும் அது குறித்து செய்தி வெளியிட்டன. ஆனால் தனியார் ஊடகம், அரசாங்க ஊடகம் என வேறுபாடு கிடையாது. அனைத்தும் ஊடகங்களே. அவற்றின் சுதந்திரத்தை பாதுகாக்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ. ரீ. என். மற்றும் ரூபவாஹினி ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

பாதுகாப்பு செயலாளர் நியமனத்துக்குப்பின் எந்தவொரு சொத்தையும் வாங்கவில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

gothabaya.jpgஎதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகாவும் விடுக்கும் அனைத்து குற்றச் சாட்டுக்களையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மறுத்துள்ளார். ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு கடந்த சனிக்கிழமை வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

புலிகளின் சொத்து மற்றும் அந்த சொத்துக்களை பயன்படுத்துதல் மற்றும் ஊழல் மோசடி உட்பட விடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் மக்கள் மற்றும் படையினரின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் விடுக்கப்பட்ட பொய்க் குற்றச் சாட்டுக்களாகும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

தான் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டது. முதல் எந்தவொரு சொத்தையும் கொள்வனவு செய்யவில்லை என்று இப் பேட்டியின் போது கூறிய பாதுகாப்பு செயலாளர், அவ்வாறு கொள்வனவு செய்திருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுமாறு அவர் சவால் விடுத்தார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு வங்கியிலும் தனது பெயருக்கு உள்ள சொத்துக்களை தேடிப் பார்க்க அனுமதி வழங்கும் பகிரங்க கடிதமொன்றை வழங்க தான் தயாராக இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

அப்பேட்டியில் அவர் தொடர்ந்து கூறியதாவது:- ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 60 வருடங்களில் நாட்டுக்கு இழைத்திருக்கும் மிகப் பெரிய துரோகம் விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டதாகும். அந்த உடன்படிக்கையின் படி சட்ட பூர்வமாக உருவாக்கப்பட்ட படையினருடன் புலிகள் இயக்க தீவிரவாதிகள் சமமாகக கருதப்பட்டனர். படை அதிகாரிகள் தீவிரவாதிகளுடன் கை குலுக்கி சமாதானம் பற்றிப் பேசவும் நேர்ந்தது என்று பாதுகாப்பு செயலாளர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை கிட்டத்தட்ட 3 ஆயிரம் தடவைகள் மீறப்பட்ட நிலையில் பாதுகாப்பு படையினர் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதிருந்தது. புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்புத் தலைவர் கே. பி. கைது செய்யப்பட்டதையடுத்து அவரிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறிவருகிறார் என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

அரசாங்கத்தினால் நம்பிக்கை மீறப்பட்டிருந்தால் கே. பி. யை கைது செய்திருக்க முடியாது. ஏனெனில் அதற்கு சில வாரங்களுக்கு முன் செனல் 4 தொலைக்காட்சி சேவை கே. பி. யை பிரபாகரனின் வாரிசு என அறிவித்திருந்தது.  எனவே எமது புலனாய்வு அதிகாரிகள் கே. பி. யை கையாளுவதுடன், அவரை விசாரித்தும் வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானவை. இதில் சில சட்டபூர்வ வர்த்தகங்களாகவும் உள்ளன. சில நாடுகளில் புலிகளின் தொடர்புகளை எம்மால் கையாள முடிந்திருக்கிறது. ஆனால் சில நாடுகளில் அது கஷ்டமாக உள்ளது. விரைவில் கே. பி. யின் சொத்து பற்றிய விபரங்களை எம்மால் வழங்கக் கூடியதாக இருக்கும். சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் கொழும்பில் 90 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 25 பேர்ச் காணித் துண்டொன்றை ஒதுக்கியுள்ளது.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்று பொன்சேகா கூறி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியின் போது கூறியுள்ளார். சரத் பொன்சேகா ஓய்வு பெறுவதற்கு முன் காணி ஒதுக்குவது தொடர்பாக கேட்டுக் கொண்டிருந்தார்.  இராணுவ தளபதிக்கு மட்டுமன்றி கடற்படை மற்றும் விமானப் படை தளபதிகளுக்கும் கொழும்பில் காணி ஒதுக்கப்பட வேண்டுமென இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியபோது அவர் கூறியிருந்தார்.  இந்த யோசனையை ஜனாதிபதி அங்கீகரித்ததையடுத்து பாதுகாப்பு அமைச்சு காணிகளை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான கொழும்பு கிரிமண்டல மாவத்தையில் தலா 10 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை ஒதுக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்தது. குறிப்பிட்ட காணி அமைத்துள்ள இடத்தில் ஒரு பேர்ச் 3.8 மில்லியன் ரூபா பெறுமதியாகும். இந்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்ததும் அது பற்றி பொன்சேகாவுக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் தனது எண்ணத்தில் இருக்கும் வகையிலான வீட்டை கட்டுவதற்கு 10 பேர்ச் காணி போதாது என்று அவர் கூறியதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து தான் மீண்டும் ஜனாதிபதியிடம் சென்று பொன்சேகாவின் நிலையை எடுத்துக் கூறி அதே விலையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிட மிருந்து தலா 15 பேர்ச் வீதம் மூன்று காணித் துண்டுகளை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய குறிப்பிட்டார்.

எனினும் அமைச்சரவை 20 பேர்ச் காணித்துண்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியபோதும் பொன்சேகா திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.  அதனையடுத்து இன்றையகாணிப் பெறுமதியில் 90 மில்லியன் ரூபா பெறுமதியான 25 பேர்ச் காணித்துண்டை அரசாங்கம் ஒதுக்கியது. எனினும் தற்போது தனது காணி ஒதுக்குவது தாமதமாவதாக குற்றம் சாட்டி அவர் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். ஆனால் குறிப்பிட்ட காணித்துண்டு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; விசாரணையில் 3 பொலிஸ் குழு

வெலிசறை – நவலோக மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஜாஎல, கந்தானை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளே இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

வெலிசறை – நவலோக மைதானத்தில் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்.

திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி, எஸ்.பி.திசாநாயக்க இடையில் நேற்று சந்திப்பு

sb-dissanayake.jpgஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திங்கட்கிழமை தனது எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கவுள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எஸ்.பி.திசாநாயக்க ஆதரவளிப்பாரென ஊகங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில் இன்று செய்தியாளர் மாநாடு இடம்பெறவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சன்டே ரைம்ஸ் நேற்று ஞாயிறு மாலை தெரிவித்தது. 

இதேவேளை, ஹங்குரான்கெத்தவிலுள்ள திசாநாயக்கவின் இல்லத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி.திசாநாயக்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் வெலிசறையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கட்சியின் பிரதம அமைப்பாளரான எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொள்ளவில்லை. தனது தீர்மானத்தை அறிவிப்பதற்காக இன்று திங்கட்கிழமை திசாநாயக்க கொழும்பில் செய்தியாளர் மாநாட்டைத் திட்டமிடுவதாக அவரின் ஊடகப் பேச்சாளர் கூறியதாக சன்டே ரைம்ஸ் தெரிவித்தது. எஸ்.பி.திசாநாயக்க தற்போது மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை வகித்திருந்த எஸ்.பி.திசாநாயக்க பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பு செவ்வாய் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக அக்கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை.அதேசமயம், தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்தும் முடிவெடுக்கப் படவில்லையென அக்கட்சியின் திருமலைமாவட்ட எம்.பி. பி.துரைரெட்ணசிங்கம் சனிக்கிழமை கூறியுள்ளார்.ஆயினும் நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித்தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறினால் சுயேச்சை வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக யாழ்.மாவட்ட எம்.பி. எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தியாவில் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியான நிலையிலேயே துரைரெட்ணசிங்கம் இந்தக் கருத்துகளை கூறியுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலர் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டாலும் இத்தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பு விரைவில் உறுதியான முடிவொன்றை எடுக்குமென கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த முடிவுக்கு அனைத்து எம்.பி.க்களும் கட்டுப்படுவரெனவும் அதனால் தற்போது கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லையென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.

3-test.jpgஇலங் கைக்கு எதிரான 3 வது டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 393 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 726 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 333 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. 3 ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பரணவித்தாரன 8 ஓட்டங்களுடனும், டில்ஷன் 3 ஓட்டங்களுடனும் ஆட்டத்தைத் துவங்கினர். 4 ஆம் நாள் ஆட்டம் சூழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று தலைவர் தோனி எதிர்பார்த்தார்.

அவரது எதிர்பார்ப்புக்கு பலனும் கிடைத்தது. ஆரம்பம் முதலே ஹர்பஜனும், பிரக்யான் ஓஜாவும் பந்து வீசினர். இன்னிங்ஸின் 9 வது ஓவரிலேயே இதற்கு பலன் கிடைத்தது. ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி டில்ஷானை ஆட்டமிழக்கச் செய்தார். அவர் 16 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து பரணவித்தாரனவுடன் அணியின் தலைவர் சங்கக்கார ஜோடி சேர்ந்தார். இருவரும் மிகவும் பொறுமையாக விளையாடி இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தனர். பரணவித்தாரன நிதானமாக விளையாடி அரைச் சதம் எடுத்தார். அவர் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளையில் ஸ்ரீசாந்த் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சங்கக்காரவுடன் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ஜோடி சேர்ந்தார்.

ஜயவர்தன-சங்கக்காகர ஜோடி, அனுபவ ஜோடி என்பதால் தோனி பந்து வீச்சை மாற்றி மாற்றி இருவரையும் ஆடுகளத்தில் நிலைத்திருக்க விடாமல் தடுக்க முனைந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஜயவர்தன விக்கெட்டை சகீர் கான் வீசிய பந்து பறித்தது. அவர் 12 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தார்.

இதைத் தொடர்ந்து ஆடவந்த சமரவீரவும் ஓட்ட கணக்கைத் துவங்காமலேயே சகீர் கான் பந்தில் வீழ்ந்தார். பின்னர் வந்த மெத்யூஸ் 10 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

4 ஆம் நாள் ஆட்டதிலேயே இலங்கையை சுருட்டிவிடலாம் என்று தோனி மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரசன்ன ஜயவர்தனவும் சங்கக்காரவும் அபாரமாக விளையாடினர். ஜயவர்தன அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும். அவரும் ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிவதைக் கண்ட சங்கக்கரா அணியை சரிவிலிருந்து மீட்க நங்கூரமிட்டார்.

மிகவும் நிதானமாக விளையாடிய அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது 21 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆட்டநேர இறுதியில் சங்கக்கார 133 ஓட்டங்களுடனும், குலசேகர 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இறுதிநாள் ஆட்டம் நேற்று நடந்தது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்கிற நிலையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகப் பந்து வீசினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சங்கக்கார ஆட்டமிழந்தார். இதன் பிறகு வந்த யாரும் நிலைத்து நின்று ஆடாததால், இலங்கை அணி 309 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் சகீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

மு.கா. அதியுயர்பீட உறுப்பினர் உட்பட 7 முக்கியஸ்தர்கள் அரசுடன் இணைவு

மு. கா. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபைத் தலைவருமான மர்சூக் அகமது லெப்பை உட்பட மு. கா. வின் மட்டக்களப்பு மாவட்ட ஆறு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ. தே. க. உறுப் பினர் ஒருவருமாக ஏழுபேர் நேற்று ஐ. ம. சு. மு.வில் இணைந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் எம். பி. முன்னிலையில் இவர்கள் இணைந்துகொண்டனர்.

மர்சூக் அகமது லெவ்வையுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் நாகூர்கான் றமழான், காத்தான்குடி நகர சபை மு. கா. உறுப்பினர் ஹயாத்து முகம்மது, வாழைச்சேனை பிரதேச சபை மு.கா. உறுப்பினர் அப்துல் றபீக், ஏறாவூர்பற்று பிரதேச சபை மு.கா. உறுப்பினர் அப்துல் வாஹித், ஏறாவூர் நகர பிரதேச சபை உறுப்பினர் ஜே. எம். பிர்தெளஸ், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நந்தசிறி ஆகியோரே இணைந்து கொண்டவர்களாவர்.