எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு

mahinda_jaffna.jpgதமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். அதேநேரம் சகல மாகாண சபைகளும் அங்கம் வகிக்கக்கூடிய வகையில் புதிதாக மேல் சபையொன்றும் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் ஏற்கனவே தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இனிமேல் இந்த நாட்டில் அகதிகள் யுகம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எவரும், எங்கும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக சென்று வரலாம். இதில் எதுவிதமான கட்டுப்பாடுகளுமே இராது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொறியியற் பீடம், விவசாயப் பீடம் என்பனவற்றை உள்ளடக்கிய முழுமையான பல்கலைக்கழகமாக மேம்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். யாழ். குடாநாட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ் மொழியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என முழு நாட்டு மக்களும் அச்சம், பீதியின்றி நிம்மதியாக வாழுகின்றார்கள். மத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், சந்தைகள் என எல்லா இடங்களுக்கும் பயமில்லாமல் சென்று வருகின்றனர். ஏனைய பகுதி மக்கள் அனுபவிக்கின்ற அதே சுதந்திரத்தையும், உரிமைகளையும் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக உள்ளோம். மூன்று இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்திருந்தார்கள். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும். அதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. தென்பகுதி நதியொன்றை திசை திருப்பி இப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் விவசாயிகளுக்கும் நீர்ப்பாசன வசதி செய்து கொடுக்கப்படும்.

யாழ்ப்பாணம் தகவல், தொழில்நுட்ப கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்யப்படும். ஏற்கனவே யாழ். மாநகர சபைக்கும், வவுனியா நகர சபைக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் விரைவில் தேர்தல் நடத்தப்படும். இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

அன்று தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். நானும் எனது தமிழ் நண்பர்களுடன் யாழ் தேவி ரயிலில் இங்கு வந்து சென்றிருக்கிறேன். அந்த யாழ் தேவி ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நாம் ஒரு தாய் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சகலரும் ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழ வேண்டும்.

எல்லா மக்களையும் பாதுகாப்பது எனது கடமையும் பொறுப்புமாகும். இங்கு இன ரீதியான அரசியல் இனித் தேவையில்லை. இன, மத, குல, மாகாண பேதங்களும் நமக்கு அவசியமில்லை. சேர் பொன்னம்பலம் ராமநாதன், சேர் பொன்னம் பலம் அருணாச்சலம் போன்ற அரசியல் தலைவர்கள் இப்பூமியில் உருவாக வேண்டும். நான் உங்கள் சகோதரன், உங்கள் நண்பன், நான் உங்களை நம்புகிறேன் என்றார்.

பொன்சேகாவின் 10 அம்சத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வருகை – ஜே.வி.பி.

jvp.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் பத்து அம்ச வேலைத்திட்டத்தில் நம்பிக்கை வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததாக தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க, சம்பந்தனுக்கும் ஜெனரல் பொன்சேகாவுக்குமிடையில் எந்தவிதமான இரகசிய உடன்படிக்கையும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குவதாக ஜெனரல் பொன்சேகா அறிவித்த போது கூச்சல் போட்ட விமல் வீரவன்ச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே அறிவிப்பை செய்திருப்பதையிட்டு என்ன செய்யப் போகிறார்? எனவும் ஜே.வி.பி.கேள்வி எழுப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் ஜெனரல் பொன்சேகாவின் இணைஊடகப் பேச்சாளருமான அநுரகுமார திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா பத்து அம்சத்திட்டத்தின் அடிப்படையிலேயே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றார். அதனடிப்படையிலேயே சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறார்.

ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் இதே 10 அம்ச வேலைத்திட்டத்தினை முன்வைத்தே பேசினார். இந்த வேலைத்திட்டத்தின் மீது திருப்தி கண்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்தது. இது தவிர சம்பந்தனுடனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ ஜெனரல் பொன்சேகாவோ, அவருக்கு ஆதரவளிக்கும் கட்சிகளோ எந்தவிதமான உடன்படிக்கைகளையோ, இரகசியப் பேச்சுகளையோ நடத்தவில்லை.

சில ஊடகங்கள் தெரிவிக்கும் விதத்தில் எந்த இரகசிய ஒப்பந்தங்களும் எவருடனும் ஜெனரல் பொன்சேகா செய்து கொள்ளவில்லை. அதேசமயம் ஒரு சிங்கள வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் வடக்கு,கிழக்கு இணைப்புக்கு ஜெனரல் இணங்கியதாகவும் அதனாலேயே அவரை ஆதரிக்க முன்வந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்ததாக குறிப்பிட்டிருக்கின்றது. அவ்வாறான எந்தத் தகவலையும் தான் கூறவில்லை என சம்பந்தன் மறுத்திருக்கிறார். சில ஊடகங்கள் மீது அரச தரப்பு தமது ஆதிக்கத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அந்த ஊடகங்களும் அதற்குத் துணைபோகும் நிலை காணப்படுகின்றது. எந்தவொரு ஊடகத்தையும் நாம் கட்டாயப்படுத்த முற்படவில்லை. ஊடகங்கள் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதையே நாம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம் – 4,01118 பேர் தகுதி; 57036 நிராகரிப்பு

election_box.jpgஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ தபால்மூல வாக்களிப்பு நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 4 இலட்சத்து ஆயிரத்து 118 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு. பி. சுமணசிறி தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 15 ஆயிரம் அரச நிறுவனங்களில் இம்முறை தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு சமுகமளிக்க முடியாத 4 இலட்சத்து 58 ஆயிரத்து 154 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இவர்களுள் பல்வேறு காரணங்கள் காரணமாக 57 ஆயிரத்து 36 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தபால்மூல வாக்களிப்பு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட தெரிவத்தாட்சி அலவலகர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.

12 ஆம் 13 ஆம் திகதிகளில் தவிர்க்க முடியாத காரணமொன்றினால் வாக்களிக்க முடியாத போதும் தபால்மூல வாக்காளரொருவருக்கு 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை அந்த வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இருப்பினும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் குறிப்பிட்ட மாவட்டத் தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கிடைக்க வேண்டுமென்பதை கவனத்திற்கொள்ளுமாறும் சிரேஷ்ட அதிகாரி சுட்டிக் காட்டினார்.

அத்தாட்சிப்படுத்தும் அலுவலரொருவரின் அலுவலகத்தில் அஞ்சல் வாக்குகளை அடையாளமிடும் சந்தர்ப்பத்தில் வேட்பாளரொருவர் சார்பாக முகவரொருவரும் ஒரு கண்காணிப்பு நிறுவனம் சார்பாக கண்காணிப்பாளரொருவரும் நியமனஞ் செய்யப்படலாம். இப்பணியை கண்காணிப்பதற்கு பெப்பரல், சி.எம்.இ.வி. ஆகிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விசேட பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தபாலகங்களினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் நிறைவுபெறுமெனவும் 10 ஆம் திகதியாகிய நேற்று விசேட தபால் விநியோகம் முன்னெடுக்கப்பட்டதாகவும் தபால்மா அதிபர் எம். கே. பி. திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.

விமானத்தை தகர்ப்பதாக மிரட்டல்: லண்டனில் மூன்று பயணிகள் கைது

heathrow-airport.jpgலண்டனில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தை தகர்க்கப் போவதாக, அந்த விமானத்தில் பயணித்த மூவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி, அமெரிக்க விமானத்தை நைஜீரியாவைச் சேர்ந்தவர் தகர்க்க முயன்றதையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல நாடுகளின் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் 331 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்தவர்களில் 58, 48 மற்றும் 36 வயது மதிக்கத்தக்க மூவர் விமானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து, விமான பணியாளர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் மேலே எழுவதும் நிறுத்தப்பட்டது. உடன் பொலிஸார் விரைந்து வந்தனர். விமானத்தை சுற்றிலும் ஒன்பது பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. விமானத்திற்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ் அதிகாரிகள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மூவரையும் கைவிலங்கிட்டு, வெளியே இழுத்துச் சென்றனர். பின்னர், விமானம் முழுவதும் சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் உள்ளனவா என மோப்ப நாய்கள் மூலமும் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமானம் புறப்படுவது மூன்று மணி நேரம் தாமதமானது.

இதேபோல, அட்லாண்டாவிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில், போதையில் பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்று உள்ளே பூட்டிக் கொண்டார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கொலராடோ விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின் அந்நாட்டு பொலிஸார் விமானத்துக்குள் புகுந்து போதை நபரைக் கைது செய்தனர்.

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற்றம்

catak.jpgமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்றைய 5வது லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் உள்ள மிர்புரில் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு சங்கக்கார (68), ரன்திவ் (56), தில்ஷான் (33), துஷாரா (28) உள்ளிட்டோர் கைகொடுத்தனர். இலங்கை அணி 46.1 ஓவரில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாகீர் கான், அமித் மிஸ்ரா தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் (48), கவுதம் காம்பீர் (71) ஜோடி சிறப்பாக ஆடியது. பின்னர் இணைந்த விராத் கோஹ்லி (71), யுவராஜ் சிங் (8) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்திய அணி 32.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை சார்பில் துஷாரா, பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடம்பிடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலிடத்தில் இலங்கை அணி (12 புள்ளி) உள்ளது. எதிர்வரும் 13ம் திகதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

அரசாங்க ஊழியர்களுக்கு ரூ. 2500 சம்பள உயர்வு

அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது கிடைக்கும் அனைத்து கொடுப்பனவுகளுக்கும் புறம்பாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் அரசாங்கத் துறை அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும்.

எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் இந்த சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்து வருகிறது.

பிரபாவின் தந்தையின் இறுதிநிகழ்வில் இரு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்பதாகக் கூறிய தர்மசிறி கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்!!! : ரி சோதிலிங்கம்

Velupillai_Funeral_TNAவே பிரபாகரனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (டிசம்பர் 20) இடம்பெற்று அவரது பூதவுடல் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் சகோதரர் அவருக்கு கொள்ளியிட்டார். மரணச் சடங்குகள் திரு வேலுப்பிள்ளையின் மகள் வினோதினி ராஜேந்திரனின் வீட்டில் (வேலுப்பிள்ளையின் வீட்டிலிருந்து 150 யார் தூரத்தில் உள்ளது) நடைபெற்றது. இந்த சடங்குகளுக்கு முன்பு இவரது உடல் வல்வெட்டித்துறை ரீமலில் – குமரப்பா – புலேந்திரன் தூபிகள் உள்ள  மாவீரர் சதுக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மரணச் சடங்கில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Velupillai_Funeral_PLOTE_Sitharthanதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் முதல் பரம எதிரி அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் தலைவர் சித்தார்த்தனும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தனது அஞ்சலியைச் செலுத்தினார். 

இறுதி அஞ்சலியில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினாவின் புதிய இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சமல், பத்திரகையாளர் தர்மசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கே தர்மசிறி இலங்கையில் இரண்டு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று பேசத் தொடங்கியதும் வல்வெட்டித்துறைப் பொலிசார் ஒலிபெருக்கியை நிறுத்தி தர்மசிறியை கைது செய்ததாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் பொலிசார் ஒலிபெருக்கி உரிமையாளரையும் ஓட்டோ சாரதியையும் கைது செய்ததாகவும்  தான் பொலீஸ் நிலையம் சென்று தலையிட்டதின் காரணமாக தர்மசிறி விடுவிக்கப்பட்டதாகவும் மற்றைய இருவரும்  நாளை நீதிமன்றில் ஆஜராகும்படி கேட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை ஏற்றுக்கொண்ட நேரம் முதல் திரு ஜிவாஜிலிங்கமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதிவரையில் மரணச்சடங்கில்  இருந்துள்ளனர். இன்று (டிசம்பர் 10) காலை ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதன் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். நேற்று மாலை (டிசம்பர் 9) ரிஎன்ஏ பா உ க்களான சிறீகாந்தா, சம்பந்தர், துரைரட்ணசிங்கம்,  வில்லியம் தோமஸ், அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிறில், சுரேஸ் பிரேமச்சந்திரன், சேனாதிராஜா மற்றும் கல்முனை நகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் போன்றோர்கள் உட்பட 15 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் அறியப்படுகிறது.

பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறைக்கு ஓடுகின்ற 751 ம் இலக்க பஸ் சேவையிலீடுபடவில்லை என்றும் அதனால் இறுதிநிகழ்வில் மக்கள் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழப்பாணத்தில் பெருமளவு பஸ்கள் மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டத்திற்காகத் திசை திருப்ப்பட்டு இருந்ததாகவும் ஏம் கெ சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டினார்.

715 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ltte-rele.jpgபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரை நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொரகொட, டக்ளஸ் தேவானந்தா, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்கா, வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

ltte-rele.jpg

வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று

prabakaeans-father.jpgபிரபாக ரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

பூதவுடல் வல்வெட்டித்துறை பூச்சிவிட்டானில் உள்ள அவரது உறவினரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பனாகொட இராணுவ முகாமில் காலமான அவரின் சடலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று வல்வெட்டித்துறைக்குக் கொண்டுவந்தார்.

இதேநேரம் பிரபாகரனின் தாயார் பார்வதி வேலுப்பிள்ளை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரண விசாரணைகள் நடைபெற்று மருத்துவ அறிக்கையில் இயற்கைச் சாவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான்’ – சிவாஜிலிங்கம்

Sivajilingam_M_Kஇனப் பற்றுள்ள எந்தத் தமிழனும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தத் திட்டமும் இராணுவத் தளபதியிடம் இல்லை. இறுதிவரை யுத்தம் நடத்திய ஓர் இராணுவத் தளபதியைத் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிப்பது துர்ப்பாக்கியம் என்றும் தேசிய தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஓர் இராணுவ அதிகாரி அரசாங்க அதிபராக இருந்தபோது, வடமாகாணத்துக்கு ஓர் இராணுவத் தளபதியை நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த சம்பந்தன், நாட்டின் தலைவராகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்கும் ஓர் இராணுவத் தளபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை மக்களைத் தவறாக வழிநடத்தும் முடிவாகும். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடப்பதை மறுக்க முடியாது. இந்தத் தேர்தலில் ‘தமிழ் மக்களின் சுயத்தை வெளிப்படுத்தவே தனித்துப் போட்டியிடு கிறேன்’ என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.