எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வே பிரபாகரனின் மரண அத்தாட்சிப் பத்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

Pirabakaran 2007தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததை இலங்கை அரசு இந்திய அரசுக்கு உறுதிப்படுத்தி உள்ளது. வே பிரபாகரன் மரணமடைந்ததை உறுதிப்படுத்தம் ஆவணங்களை இலங்கை அரசு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ க்கு அளித்துள்ளதாக மத்திய உள்நாட்டு அமைச்சர் ப சிதம்பரம் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனது உடல் மே18ல் சர்வதேசத்திற்கும் காட்டப்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் தரப்பில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பக்கத்தில் அதனை பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளாத நிலை காணப்பட்டது. பிரபாகரனது மரணத்தை ஏற்றுக் கொள்ளாததற்கு வழங்கப்பட்ட காரணங்களில் இலங்கை அரசு இந்தியாவுக்கு பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்பதும் ஒன்று. தற்போது அதுவும் செய்யப்பட்டு உள்ளது.

Pirabakaran V & Mahathayaதமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் பல்லாயிரம் பேருக்கும் அஞ்சலிகள் செலுத்தப்பட்ட போதும் அதன் தலைவருக்கு இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான பிரிவினர் இதுவரை எவ்வித அஞ்சலியும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்களுக்கும் புலிகள் அஞ்சலி செலுத்தி இருக்கவில்லை.

அரசின் மீள்குடியேற்றமும் மக்களது மீளாத்துயரும் : த ஜெயபாலன்

Rehabilitation_Wanniஇலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மீண்டும் விட்ட இடத்தில் இருந்து ஆட்சியைத் தொடர்வது ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகளை தொடருவதற்கு உதவும் என்ற வகையில் விரும்பியோ விரும்பாமலோ மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தலையிடிக்கு தலைப்பாகையை மாற்றுவது மருந்து அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நடைபெற்ற தேர்தல் முடிவுகளோ தேர்தலோ அவர்களுக்கு ஒரு விடயமே அல்ல. அவர்களுடைய சுமைகள் அத்தேர்தலை விடவும் கடுமையானது கொடுமையானது.

அரசாங்கம் மீள்குடியேற்றத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்தப் போவதாக அறிவிக்க உள்ளது. இதன்படி 1000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த மீள்குடியேற்றங்களின் பின் என்ன நிகழ்கின்றது.

இலங்கையில் நான் தங்கியிருந்த நாட்கள் பெரும்பாலும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுடனேயே கழிந்தது. அவர்களில் ஒரு குடும்பத்தினரின் வாழ்வியலைப் பகிர்ந்துகொள்வது வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாக அமையும்.

மூன்று தலைமுறையைச் சேர்ந்த தாய், தந்தை அவர்களின் இரு புதல்விகள் அவர்களின் கணவர்கள் அவர்களின் பிள்ளைகள் என ஒன்பது பேர் கொண்ட குடும்பம். அவர்கள் விவசாயத்திலும் அரச தொழில்களிலும் ஈடுபட்டு தன்னிறைவாக வாழ்ந்தவர்கள். தங்களது சம்பாத்தியத்தின் மூலம் சிறுகச் சிறுக சேமித்து தங்களது அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர்.

வயதான தாய் தந்தை மூத்த மகள் ஆசிரியை அவருடைய கணவர் அரச உத்தியோகஸ்தர் அவர்களுக்கு பெண்ணும் ஆணுமாக இரு குழந்தைகள். சிறுவர் படையில் சேர்க்கப்படக் கூடிய பருவம். கடைசி மகள் சங்கத்தில் வேலை கணவர் அச்சகத்தில் வேலை. அவர்களுக்கு ஒரு குழந்தை சிறுவர் படையணியில் சேர்க்க முடியாது. கைக் குழந்தை. அத்துடன் அவர் கர்ப்பணித் தாய்.

ஜனவரி 3 கிளிநொச்சி அரச படைகளின் கைகளில் வீழ்ச்சி அடைய கிளிநொச்சியில் உள்ள தங்கள் கிராமத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். தங்கள் வாழ்நாளில் சேமித்தவை தங்கள் உணவுத் தேவைக்கான நெல் இவற்றுடன் இவர்களது பயணம் ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் இப்பயணம் இவ்வளவு நீண்டது என்றோ இவ்வளவு கொடுமையானது என்றோ இவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. கிளிநொச்சியில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருள் பண்டத்தையும் இழந்து இறுதியில் ஒவ்வொரு முடிச்சுடன் புதுமாத்தளன் வந்தடைந்தனர். அதற்குள் நடந்த கொடூரங்களை விபரிப்பதற்கு தமிழ் அகராதியில் வார்த்தைகளே இல்லை. தங்கள் எதிரிக்குக் கூட அப்படி நடந்துவிடக்கூடாது என்று அவர்கள் கடவுளை வேண்டுகின்றனர்.

அரச படைகளின் தாக்குதல்களில் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று தப்பியோட முற்பட்ட போதெல்லாம் தங்களை துப்பாக்கி முனையில் ஈவிரிக்கமற்றுத் தாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்கள் திட்டாத நாளில்லை. ‘ஆமிக்காரன் தான் எங்களுக்கு செல் அடிக்கிறான் என்றால் இவன்களும் சேர்ந்து தான் எங்களுக்கு செல் அடித்தாங்கள்.’ என்று குமுறினார் அந்த வயதான தாய். ‘அவங்கள் எங்களை மனிசராயே நடத்தேல்லை’ என்று அவர் புலம்பினார். தங்கள் குடும்பத்துடன் தப்பியோட முற்பட்டவேளை சுடுவதற்கு துப்பாக்கியை லோட் பண்ணி நீட்டியபோது நாங்கள் இங்க இருந்து எங்கயும் போகமாட்டோம் என்று பிள்ளைகளையும் கட்டி அணைத்து கதறி அழுதாள் ஆசிரியையான மூத்த மகள். லோட் பண்ணிய துப்பாக்கியால் அருகில் நின்ற ஒருவரை சுட்டுக்கொன்றதாம் அந்தப் புலி.

சனங்கள் தப்பியோடத் தயாராய் நிற்கின்ற இடங்களில் எல்லாம் தங்கள் குறும்தூர செல்களால் புலிகளே மக்கள் மீது தாக்குதலை நடத்தி படுகொலை செய்துள்ளதாயும் அவர்கள் கூறுகின்றனர். அந்த யுத்தத்தில் அரசாங்கமும் புலிகளும் மக்களுக்கு எதிராக கொலைத் தாக்குதலை நடாத்தி உள்ளனர். பல நேரங்களில் செல் தாக்குதலை அரசாங்கம் செய்கிறதா அல்லது புலிகள் செய்கிறார்களா என்பதையே தங்களால் ஊகிக்க முடியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

மரணத்தின் வலியும் கொடுமையும் தினம் தினம் கொல்ல எங்கு தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விடுவோமோ என்ற பயம் தான் அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தியிருந்தது. செல் வீச்சுக்கள் வருகின்ற போது அனைவரும் ஒன்றாக தங்கள் குழந்தைகளை அனைத்தபடி ஒன்றாகப் படுத்துக் கொண்டனர். மரணம் சம்பவித்தால் அது அத்தணை பேருக்குமானதாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தனர்.

கர்ப்பிணித்தாயான இரண்டாவது மகள் நாளுக்கு நாள் அவருடைய சிசுவும் வளர்ந்தது. தாய்மையின் வலி அதன் உபாதைகள் இவற்றுக்கு மத்தியில் மரணத்தின் கொடுமை. வாழ்வில் மிக மென்மையாக பேணப்பட வேண்டிய தாய்மைக்காலம் மிக்க கொடுமையானதாக அமைந்தது.

இவற்றில் இருந்தெல்லாம் தப்பி வந்தபோது இலங்கை இராணுவம் பிடித்தால் சித்திரவதை செய்யும், கற்பழிப்புச் செய்யும் என்றெல்லாம் சொல்லப்பட்ட கதைகளைக் கேட்டு வந்தவர்களுக்கு இலங்கை இராணுவம் தண்ணீரும் பிஸ்கட்டும் கொடுத்து அவர்களை குண்டு வீச்சும் செல்வீச்சும் இல்லாத இடத்திற்கு அனுப்பி வைத்தது ஆறுதல் அளித்தது.

ஆனால் அந்த அறுதலைத் தவிர அவர்களுக்கு வன்னி முகாம்கள் எவ்வித நம்பிக்கையையும் கொடுக்கவில்லை. அவர்களின் ஆளுமையை ஆற்றலை சிதறடித்தது. மரணத்தின் கொடுமையில் இருந்து தப்பியவர்கள் நோயின் கொடுமையில் துவண்டனர். சுகாதாரமற்ற சுவாத்தியம். வாட்டி வதைக்கின்றி கடுமையான வெப்பம். அடிப்படை வசதிகளற்ற சூன்யமான எதிர்காலம் அவர்களை வாட்டியது.

நிறைமாதக் கர்ப்பிணியான இரண்டாவது மகள் எல்லைகளற்ற மருத்துவர்களின் தரமான கவனிப்பில் தன் கவலைகளையெல்லாம் மறக்கும் வகையில் தன் யுத்தகால பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதனால் அவர்கள் முகாமைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கணவனின் குடும்பத்தவருடன் இணைந்து கொண்டனர்.

மற்றைய ஆசிரியையான மூத்தவளும் முகாமைவிட்டு வெளியேறி மன்னாரில் தனது கணவருடைய குடும்பத்துடன் இணைந்து கொண்டார்;.

இவ்வாறாக வன்னி முகாம்களில் உள்ள 300 000 மக்களில் 200 000 மக்கள் முகாம்களைவிட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் இவர்கள் மீள்குடியேற்றப்பட்டார்களா என்றால் அது மிக நியாயமான கேள்வியே?

Rehabilitation_Wanniஇன்றும் வன்னி முகாம்களில் 100 000 வரையானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 200 000 மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இப்போது வன்னி முகாம்களில் உள்ளவர்களின் நிலை ஒப்பீட்டு அளவில் பரவாயில்லாமல் உள்ளதாக அம்முகாமில் இருந்து உறவினர்களைச் சந்திப்பதற்காக வந்த ஒருவர் தெரிவித்தார். இதே கருத்தை வெளியிட்ட மற்றுமொருவர் தான் வேலை செய்வதற்காக வெளியே வந்ததாகவும் தங்கள் சொந்த இடத்திற்கே செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இவர்களிடையே எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பலவீனமானதாகவே இருந்தது. ஏதோ வாழ்ந்தாக வேண்டி உள்ளதே என்ற எண்ணமே ஏற்பட்டது. வன்னி முகாம்களில் கிடைக்கும் தேவைக்கு அதிகமான பொருட்களை விற்று தமக்குத் தேவையான பொருட்களை வாங்கும் நடைமுறையையும் வவுனியா நகரில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

Rehabilitation_Wanniவவுனியாப் பகுதியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடியேற்றங்கள் அடிப்படை வசதிகளற்ற மாட்டுத் தொழுவங்கள் என்றே சொல்ல முடியும். தலைக்குமேல் கூரை இருந்தால் அது மீள்குடியேற்றம் ஆகிவிடாது என்பதனை அரசு புரிந்துகொள்ளவில்லை. அரசின் எந்தவொரு கட்டிட விதிமுறையும் தற்போது மீள்குடியேற்றத்திற்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள் மனிதக் குடியிருப்புக்கு உகந்தது என்ற சான்றிதழை வளங்காது. இந்த மீள் குடியேற்றங்கள் துரிதகதியில் மிகக் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றை தரமானதாக அமைக்க அரசு இதுவரை வன்னி மக்களுக்கு காத்திரமான உறுதி மொழியை அளிக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி இருந்தாலே அவர்கள் தங்கள் வாழ்வை புனர்நிர்மாணம் செய்திருப்பார்கள்.

Rehabilitation_Wanniவன்னி முகாமில் இருந்து வெளியேறிய பின்னர் குறிப்பிட்ட ஆசிரியையான மகள் சங்கத்தில் வேலை செய்த மகள் இருவரது குடும்பங்களும் மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ளனர். இவர்களது தாயும் தந்தையும் யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் மாறி மாறிப் பயணிக்கின்றனர். இவர்களில் ஆசிரியையான மகளுக்கு சில மாதங்களுக்கு உள்ளாகவே வெவ்வேறு இடங்களுக்கு ஆசிரியை வேலை மாற்றப்பட்டு உள்ளது. பிள்ளைகள் மன்னாரில் கல்வி கற்க. தாய் வவுனியாவில் கற்பிக்க தந்தை கிளிநொச்சியில் வேலை செய்ய அந்தக் குடும்பம் சிதறிப் போய் வாழ்கிறது. ஆசிரியை மன்னாருக்கு மாற்றலாகி சில வாரங்களுக்கு உள்ளாகவே அவரை கிளிநொச்சிக்கு மாற்றம். கடந்த ஓராண்டு காலமாக அவர்களுடைய இரு பிள்ளைகளின் கல்வியும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களால் நிலையான இடத்தில் இருந்து கல்வியைத் தொடர முடியவில்லை. குழந்தைகளுக்கு பெற்றோர் அண்மையாக இருந்தும் அவர்கள் இருவரும் அங்கும் இங்குமாக வாழ வேண்டிய நிலையுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த இம்மக்களுக்கு அவர்கள் செய்த கொடுமை அரசு மீதான எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தி உள்ளது. இவர்களிடையே பெரும்பாலும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைக்கு எதிரான உணர்வுகளும் அவர்களின் போராட்டத்தின் மீதான வெறுப்பும் மேலோங்கி உள்ளது. இந்த யுத்தத்தில் இருந்து தப்பிய சிறுவர்கள் கூட மிகக் கடுமையான சொற்களால் புலிகளின் தலைமையையும் தலைவரையும் திட்டினர். அவற்றை இங்கு நேரடியாகக் குறிப்பிடுவது பொருத்தமற்றது என்பதால் அவற்றைத் தவிர்க்கின்றேன்.

Rehabilitation_Wanniதன்னிறைவோடு அடிப்படை வசதிகளோடு வாழ்ந்த குடும்பம் இன்று மன்னாரில் கணவரின் குடும்பத்தினரின் உதவியால் அவர்களின் சமையலறையில் வாழ்கின்றனர். இப்போது அதுதான் அவர்களுடைய வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை எல்லாமே. அதில் இரு பாக்குகள் (bags)) இருக்கும் அதற்குள் தான் அவர்களுடைய சகல பொருட்களும் வைக்கப்பட்டு இருக்கும். அவர்களுக்குள்ள ஒரே நம்பிக்கை அவர்கள் இருவருமே அரச உத்தியோகத்தர்கள் என்பதால் மாதம் தவறாமல் அவர்களுக்கு நிச்சயம் சம்பளம் கிடைக்கும். மற்றுப்படி காற்றில் அடிபட்ட பட்டம் போல் அவர்களுடைய வாழ்வு 2009 ஜனவரியில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டுள்ளது.

சங்கத்தில் வேலை செய்தவருக்கு இப்போது வேலையில்லை. அச்சகத்தில் வேலை செய்த கணவருக்கும் வேலையில்லை. அவர்களுக்குள்ள ஒரே சந்தோசம் அவர்களுக்குப் பிறந்த குழுந்தை சுகநலமாகப் பிறந்தது என்பது தான். மட்டுப்படுத்தப்பட்ட அரச உதவியில் தமது சொந்த இடங்களுக்கு எப்போது திருப்பிச் செல்வோம் என்ற ஏக்கத்தில் தினம் தினம் காலத்தை ஓட்டுகின்றனர்.

அரசாங்கத்தின் மீள் குடியேற்றம் என்பது அனுமான் வாலைப் போல் தொடரும் மீளாத்துயராகவே நீண்டு செல்கின்றது. தங்கள் சொந்த இடங்களில் இருந்து வேரறுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் சிதறவிடப்பட்டுள்ள இம்மக்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வேரூன்றி வாழவே விரும்புகின்றனர். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காதவரை அரசின் மீள்குடியேற்றம் மீளாத்துயராகவே அமையும். இது அவர்களின் வாழ்நிலையை மேலும் மேலும் மோசமாக்கும்.

Rehabilitation_Wanniதமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் தங்கள் வாழ்வியலை அழித்துவிட்டதாக எண்ணும் வன்னி மக்கள் தங்கள் வாழ்வு பல ஆண்டுகளுக்கு பின் தள்ளப்பட்டு விட்டதாக உணர்கின்றனர். இப்படியெல்லாம் இல்லாமல் இருந்திருந்தால் எங்கள் பிள்ளைகளும் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்க முடியும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அந்த ஆசிரியையானவர். தங்களை கிளிநொச்சிக்கு செல்ல அனுமதித்தாலும் முதலில் தானும் கணவரும் சென்று நிலைமைகளைப் பார்த்து கண்ணி வெடி, மிதிவெடிப் பயங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே பிள்ளைகளைக் கூட்டிச் செல்ல முடியும் என்கிறார் அந்த ஆசிரியை. அதுமட்டுமல்ல மீண்டும் பலவந்தமாக பிள்ளைகளை பிடித்து இயக்கத்தில் சேர்ப்பார்களோ என்ற பயமும் அவரிடம் இன்னமும் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற அரசின் பிரச்சாரத்தை அவரால் முழுமையாக நம்பமுடியவில்லை.

ஆனாலும் தங்கள் சொந்த இடத்திற்குச் சென்றும் மீண்டும் தங்கள் வாழ்வை தாங்களே மீள்நிர்மாணம் செய்ய ஆரம்பிக்கும் நாளுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

மேனனின் இலங்கை வருகையும் அவரது அரசியல் பார்வையும்

sivashankar.jpgஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஜனவரி 31) தமிழ் நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்த அவருடன் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பாக உரையாடியதாக மேனன் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

வன்னி மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்தியா உதவி வரவதாகவும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக அனைத்தத் தரப்பினரும் உடன்படக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள இந்திய ராஜதந்திரி. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளே பலமடைய வேண்டும் என்ற எண்ணப்பாட்டை சிவசங்கர் மேனன் கொண்டிருந்ததாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து இருந்தன. சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியலைப் பலவீனப்படுத்தி இலங்கைத் தேசிய அரசியலை முன்னிலைப்படுத்துகின்ற ஒரு போக்கை சிவசங்கர் மேனன் ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

நாம் இந்தியர் என்பது போல் நாம் இலங்கையர் என்ற பொது அரசியல் அடையாளத்தை நோக்கி இலங்கை நகர்வதையே சிவசங்கர் மேனன் போன்றவர்கள் விலியுறுத்துவதாக தொரியவருகின்றது.

பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் முற்பகுதியில்! தமிழ் பகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் இடம்பெறும்!!

இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் மற்பகுதியில் பெரும்பாலும் ஏப்ரல் 9ல் நடைபெறும் என தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. இது தொடர்பான அறிவித்தல்கள் பெப்ரவரி 5 அல்லது 9ம் திகதிகளில் வெளியாகலாம் எனவும் தெரியவருகின்றது.

உலகின் மிகப்பெரும் அமைச்சரவையைக் கொண்ட சிறிய நாடுகளில் ஒன்றான இலங்கையின் தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்கான பொது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகள் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

இத்தேர்தல்கள் தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் தீர்வு எதனையும் முன்வைக்கமாட்டாது போனாலும் தமிழ் அரசியல் தலைமைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தேர்தலாக இது அமைய உள்ளது. அதனால் இத்தேர்தல் தமிழ் பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைய உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்கம் குறித்த அனைத்துலக மாநாடு

இலங்கை எதிர்நோக்கும் சிக்கல்களுக்கும், வாய்ப்புகளுக்கும், மக்களாட்சிக்கும், அமைதிக்குமான தேடலையொட்டிய அனைத்துலக மாநாடு 2010, ஜனவரி, 21ம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை Hotel Radisson  மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கனடியத் தமிழர் அமைப்பகத்தால் (Canadian Tamils Forum) ஏற்பாடு செய்யப்பட்டது.
 
தமிழரின் வாழ்வியல் பாதுகாப்பு பற்றி வரலாற்று அடிப்படையில் ரொறொன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர், அருட்தந்தை யோசப் சந்திரகாந்தன் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் 1920களிலிருந்து தமிழர்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்படுவதை எதிர்த்து சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலமும் ஓங்கிக் குரலெழுப்பினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இவர் கூற்றுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அருணாசலம் தமிழ் பேரவையை உருவாக்கியதையும் அவரின் அண்ணா இராமநாதன் டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லையென்று எச்சரித்ததைப் புள்ளிவிபரங்களுடன் ஈழவேந்தன் கேள்வி நேரத்தின் போது சுட்டிக்காட்டினார்.
பெண்களும் குழந்தைகளும் சிங்கள இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுவீடன் நாட்டுப் பேராசிரியர் பீற்றர் சால்க் விளக்கினார். படிப்படியாக இலங்கையில் சட்ட ஒழுங்கு முறைமை சீரழிந்ததை  கனடா நாட்டின் பழமைவாதக் கடசியைச் சேர்ந்த சங் கொங்கல் நுணுக்கமாக விளக்கினார்.
 
கனடியச் சட்டத்தரணி ஜோன் லீகே கனடாவில் சட்ட ஒழுங்குகள் எவ்வாறு கனடாவின் பூர்வீகக்குடிகளை முன்பு கையாண்டிருந்தது என்றும் பின்பு அவ்வாறான அணுகுமுறைகள் எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதை விளக்கினார். அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கனடா எவ்விதம் தீர்மானகரமான  பங்கை வழங்க முடியும் என்பதைப் பற்றியும் பேசினார். அரச அதரவோடு நடைபெறும் அடக்குமுறையை மக்களாட்சிக் கிளர்ச்சியூடாக எவ்விதம் எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்தார் அமெரிக்கப் பேராசிரியர் றோபேட் ஓபேஸ்ற்.
நாடு கடந்த தமிழீழ அரசின் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பொறுப்புகள் பற்றி பேராசிரியரும், கவிஞருமான சேரன் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து அவையோரை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து   ஜேர்மன் நாட்டுப் பேராசிரியர் ஜோன். நீல்சன் நிகழ்த்திய உரை நடைமுறையில் இவ்வாறான அரச உருவாக்கம், அதற்கான சொல்லாடல்கள் எச்சரிக்கையாகக் கையாளப்பட வேண்டியதன் அவசியங்களை முன் நிபந்தனைகளாகத் தர்க்கித்தது சுவையான விவாதத்தைக் கிளப்பியது.
 
அமெரிக்கச் சட்டத்தரணி ஜெயலிங்கம் ஜெயப்பிரகாஸ் நாடு கடந்த தமிழீழ அரச கட்டுமானத்தை உருவாக்குது பற்றிய ஆளுகைத் திட்டம் கொண்டுள்ள விதி முறைகள் குறித்துப் பேசினார். வேறு கூட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததனால் மாநாட்டின் இடைநடுவின் போது பேசிய NDP கட்சியின் தலைவர் ஜாக் லேற்றன் தனது உரையின் போது இம்மாநாடு எடுக்கும் முடிவுகள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதுணை புரியும் என்று கூறினார். கனடிய பழமைவாதக்கட்சியின் மத்திய அரசாங்கத்துக்கான அமைச்சர் யேசன் கனி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் அவருடைய செயலாளர் ஒருவரை மாநாட்டுக்கு அனுப்பித் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார். மாநாட்டுக்கு வருகை தந்திருந்த மக்களில் பலர் மாநாட்டில் இடம்பெற்ற உரைகள், கலந்துரையாடல்கள் குறித்துப் பெரிதும் திருப்தி கொண்டிருந்ததை  அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

டக்ளஸ் ராஜினாமா? : “வேண்டாம்…” – மக்கள் ஹர்த்தால்

douglas.jpgநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார். இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை. இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜிநாமா செய்யத் தீர்மானித்தனர்.
 
இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்” ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா பத்திரிகைக்கு சீல்

lankairida.jpgஜேவிபியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘லங்கா” சிங்கள வாரப் பத்திரிகை காரியாலயம் சற்று முன் குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று மாலை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த  குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான லங்கா பத்திரிகையில் சத்மெத லங்கா (உண்மைக்கு மத்தியில் இலங்கை) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு அதன் ஆசிரியர் சிறிமல்வத்தவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் காலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே பத்திரிகை ஆசிரியர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பஹ்ரைன் தீ விபத்தில் இலங்கைப் பெண்கள் மூவர் பலி!

பஹ்ரெய்னில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இலங்கைப் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே. ரு{ஹணகே தெரிவித்துள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியொட்டுள்ளது. பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும்,  இவர்கள் மூவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும்,  சுவாசப் பிரச்சினை காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்

flag.jpgபெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்தார்.

பொலிஸாரினதும் முப்படையினர்களதும் கண் காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விசேடமாக இடம் பெறவுள்ளன. இதேவேளை “தேசத்தின் மகுடம்” கண்காட்சியும் கண்டி பள்ளேகலையில் அன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாட்டு மக்களின் நன்றியுணர்வை உலகுக்கு எடுத்துக்காட்டிய வெற்றி – மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் ஜனாதிபதி

mahindaநாட்டு மக்களின் நன்றி மனப்பான்மையை உலகுக்கு எடுத்துக் காட்டும் வெற்றி இதுவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீண்டுமொருமுறை தம்மீது நம்பிக்கை வைத்து மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்த நாட்டு மக்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் தேசிய ரீதியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் இதுவெனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்கள் சகலரும் இவ்வெற்றியில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இத்தேர்தலை நீதியும் சுதந்திரமானதாகவும் நடத்த முடிந்துள்ளமையையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இதனால் இத் தேர்தல் முடிவை எவரும் மாசுபடுத்த முடியாது. தற்போது நாம் வெற்றியடைந்தாயிற்று. இவ்வெற்றியினூடாக நாட்டு மக்கள் தமது நன்றி மனப்பான்மையை உலகுக்குக் காட்டியுள்ளனர்.

தோல்வியில்லாத இடத்திலிருந்தே உண்மையான வெற்றி உருவாகிறது. இதனடிப்படையில், இவ்வெற்றி நம் அனைவரினதும் வெற்றியாகும். இதனை அமைதியாகக் கொண்டாடுமாறு நான் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் சகலருக்கும் சமமானது. சட்டம் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகிறது. சட்டத்தை மதிக்கின்ற அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த நாடொன்றை நாம் எதிர்கால சந்ததிக்காக உருவாக்குவோம். இத் தேர்தலில் வாக்களித்த சகலருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்தார்களோ அதனை நான் இனங்கண்டுள்ளேன்.

தேர்தல் ஆணையாளர் மற்றும் செயலக அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தோர், சகல ஊடக நிறுவனங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.