எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நிவாரண கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என பொய்யான தகவல் – வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ்

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியு ள்ள செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் குடிநீர் விநியோகம் சரியான முறையில் நடைபெறுகின்றது.

அதில் எந்தவித குறைபாடுகளும் இல்லை என வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். தனது அதிகாரிகளை அனுப்பி நிவாரண கிராமங்களுடைய தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்தபோது குடிநீருக்குத் தட்டுப்பாடு இல்லை என அறிக்கை வந்துள்ளது என கூறினார்.

பொதுத் தேர்தலின் பின்னர் இங்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என வெளியான தகவல்கள் முற்றுமுழுதாக பொய்யானது என குறிப்பிட்ட அரச அதிபர், செட்டிகுளம் நிவாரண கிராம ங்களில் இன்னமும் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப் பட்டுள்ளன. அடுத்த சில வாரங்களிலும் மேலும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பழைய இடங்களுக்கு திரும்புவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

நிலாவெளி முதல் முசல்பிட்டி வரை சூரியன் இன்று உச்சம்

ஏப்ரல் மாத உஷ்ணம் நிலவுகின்ற இக்காலப்பகுதியில் இன்று (12ம் திகதி) இலங்கையின் முசல்பிட்டி, கெப்பித்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

புவிச் சுழற்சியின் அடிப்படையில் இக்காலப் பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சத்தில் சூரியன் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது எனவும் அவ்வதிகாரி கூறினார். ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் இன்று முசல்பிட்டி, கெபத்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சஞ்சரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடி, மின்னல் குறித்து எச்சரிக்கை

lightning.jpgஇடைப் பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால் இடி, மின்னல் தாக்கம் குறித்து முன்னெடுச்சரிக்கையுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையமும், வானிலை அவதான நிலையமும் நாட்டு மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இடி, மின்னல் தாக்கம் காரணமாக இம் மாதத்தின் முதல் பத்து தினங்களிலும் சுமார் ஐவர் உயிரிழந்துள்ளனர்.  இது தொடர்பாக வானிலை அவதான நிலைய த்தின் வானிலையாளர் சமிந்த பெரேரா, குறிப்பிடுகையில், தற்போது இடைப் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலம் ஆரம்பமாகியுள்ளதால் தான் இடி, மின்னல் மோசமாக காணப்படுகின்றது.

இதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது திறந்த வெளியில் நடமாடுவது, விளையாடுவது, நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பது, வீட்டில் மின்சார பொருட்களைப் பாவிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, உயரமான பச்சை மரங்களுக்கு கீழ் நிற்பது என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவது மிக, மிக அவசியம் என்றும் அவர் கூறினார்.

அமைச்சுப் பதவிகளையும், சுயநல நலன்களையும் மாத்திரம் கருத்திற் கொண்டு சிறுபான்மை பிரதிநிதிகள் செயற்படுவார்களாயின் எதிர்காலத்திலும் பாதிக்கப்படப் போவது சிறுபான்மை சமூகத்தினரே – புன்னியாமீன்

sandanaya.pngவிகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 20 தேர்தல் மாவட்ட முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகிவிட்டன. இம்முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 117 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 46 ஆசனங்களும்,  இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 12 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 05 ஆசனங்களும் கிடைத்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய மொத்தம் 196 பிரதிநிதிகளுள் 180 பிரதிநிதிகள் மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களும்,  திருகோணமலை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளனர். தேர்தல்  முடிவுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள 34 வாக்கெடுப்பு நிலையங்களிலும், திருகோணமலையில் அமைந்துள்ள 01 வாக்கெடுப்பு நிலையத்திலும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதையடுத்து அகில இலங்கை ரீதியான பெறுபேறுகள் மற்றும் தேசியபட்டியல் பிரதிநிதிகள் விபரங்களும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.

இம்முறை தேர்தலில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தினையே வாக்காளர்களிடம் எதிர்பார்த்திருந்தது. விகிதாசார தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. 1977ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.க. ஆறில் ஐந்து பாராளுமன்றப் பலத்தைப் பெற்றது. அச்சமயம் இலங்கையில்  நடைமுறையிலிருந்த தேர்தல் முறை பெரும்பான்மை தேர்தல் முறையேயாகும். தமது அறுதிப் பெரும்பான்மை பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே 1982ம் ஆண்டில் ஐ.தே.க. மக்கள் தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 06 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொண்டது. விகிதாசார முறையின் கீழ் 1988, 1994, 2000, 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின்போது மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எந்தவொரு கட்சியினாலும் பெற முடியவில்லை. இக்கட்டத்தில் சிலசந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ளவும் கட்சிகள் போராடியதை அவதானிக்க முடிந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் ஜனாதிபதி இம்முறை தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தினை எதிர்பார்த்தது அபரிமிதமான எதிர்பார்ப்பு என்றாலும் பிழையாகாது.

இம்முறை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும்போது தற்போது வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஆளும் ஐ.ம.சு.முன்னணி 117 ஆசனங்களைப் பெற்று இலகுவாக அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட்டது. 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை வென்றால் அது அறுதிப் பெரும்பான்மையாகிவிடும். இந்நிலையில் மேலும் 6 ஆண்டுகளுக்கு ஆளும் ஐ.ம.சு.முன்னணியால் நெருக்கடிகளின்றி அரசாங்க அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

தற்போது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளிவராத கண்டி மாவட்டத்தில் 08 பிரதிநிதிகளும்,  திருகோணமலை மாவட்டத்தில் 02 பிரதிநிதிகளும் தெரிவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் ஆளும் கட்சியின் ஆசனப் பலம் 127ஆக அதிகரிக்கலாம். தற்போதை வெளிவந்துள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின்படி ஆளும் கட்சிக்கு 17 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடிய வாய்ப்புண்டு. அவ்வாறாயின் ஆளும் கட்சியின் பலம் 144ஆக அதிகரிக்கலாம். (முழுமையான முடிவுகள் வெளிவந்த பிறகு இந்த எண்ணிக்கை சற்று கூடிக் குறைய வாய்ப்புண்டு. எனவே, மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெற்றுக்கொள்ள ஆளும் கட்சிக்கு 06 அல்லது 07 அங்கத்தவர்களே தேவைப்படலாம்.

கடந்த கால அனுபவங்களுடன் ஒப்புநோக்கும்போது இந்த சிறிய எண்ணிக்கையினை ஆளும் கட்சியினால் பெற்றுக் கொள்வது கடினமான செயல் என எதிர்பார்க்க முடியாது. எனவே, விரைவில் ஆளும் கட்சி மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை தனதாக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

ஆளும் கட்சியினால் மூன்றிலிரண்டு பாராளுமன்றப் பலம் எதிர்பார்க்கப்பட்டதன் பிரதான நோக்கம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டேயாகும். குறிப்பாக ஆளும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட இத்தகைய மாற்றங்களை மூன்று கட்டங்களின் கீழ் நோக்க முடியும்.
 
01. இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பினூடாக ஒரு தீர்வினை வழங்குதல். இவ்வாறு வழங்குமிடத்து சர்வதேச நெருக்கடிகளிலிருந்து தவிர்ந்து கொள்ள இடமுண்டு. 

02. தற்போது இலங்கையில் காணப்படக்கூடிய தேர்தல் முறையில் மாற்றத்தினை ஏற்படுத்துதல். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் எந்தவொரு ஆளும் கட்சியாலும் கூடிய பெரும்பான்மையினை தக்கவைத்துக் கொள்ள ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைய வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்ட நிலையை மாற்றியமைப்பது. 

03. ஜனாதிபதி ஆட்சிமுறையினை மாற்றியமைத்தல். 1994ம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைக்க வேண்டுமென வாக்குறுதிகளை வழங்கியே வந்துள்ளனர். 2010ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளது 2ஆவது பதவிக்காலத்துக்காகும். அரசியலமைப்பு விதிகளின்படி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படக்கூடிய ஒருவருக்கு 06 ஆண்டுகளைக் கொண்ட 02 பதவிக்காலங்களுக்கு மட்டுமே செயற்படலாம். எனவே, இத்தடவை ஜனாதிபதி இம்முறையினை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.

மேற்குறிப்பிட்ட 03 விடயங்களில் இனப்பிரச்சினைக்கான அரசியல் ரீதியான தீர்வென்பது விசாலமான ஆய்வுக் கருப்பொருளாகும். இது பற்றி மற்றுமொரு கட்டுரையில் விரிவாக ஆராய்வோம். தவிர,  தேர்தல் முறையினை மாற்றியமைத்தல் என்ற விடயத்தை எடுத்துநோக்குமிடத்து 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பெரும்பான்மை தேர்தல் முறையின் கீழே இலங்கையில் சகல தேர்தல்களும் நடைபெற்றுவந்துள்ளன. இத்தேர்தல் முறையின் கீழ் ஒரு தேர்தல் தொகுதியில் கூடிய வாக்குகளைப் பெற்றவர் பிரதிநிதியாக செயல்படுவார். இலங்கையைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர,  ஏனைய பிரதேசங்களில் சிறுபான்மை சமூகத்தினர் வாழ்ந்தாலும்கூட,  செறிவாக வாழ்வதில்லை. தொகுதி ரீதியாக நோக்குமிடத்து அவர்கள் பெரும்பான்மை சமூகத்தினருடன் இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். இதனால்தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர,  ஏனைய பிரதேசங்களில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி சோல்பரி யாப்பின் கீழ் இரட்டை அங்கத்தவர் தொகுதி அல்லது பல அங்கத்தவர் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. விகிதாசார முறையுடன் ஒப்புநோக்கும்பொழுது பெரும்பான்மை முறையின் கீழ் சிறுபான்மை பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடிய நிலை கணிசமாக உண்டு.

விகிதாசார தேர்தல் முறையில் பல குறைபாடுகள் உள்ளது என்பது உண்மை. இருப்பினும்,  விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மைக் கட்சிகளுக்கும்,  சிறிய கட்சிகளுக்கும் தமது பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிகழ்த்தகவு உண்டு. எனவேää தேர்தல் முறையை மாற்றியமைத்தல் எனும் போது தற்போதைய உத்தேச ஏற்பாடாக ஜெர்மனியில் காணப்படக்கூடிய தேர்தல் முறையினை ஒத்ததாக ஒரு முறையினை அறிமுகஞ் செய்யும் ஏற்பாடே காணப்படுகின்றது. குறிப்பாக அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் முறையில் 160 பிரதிநிதிகள் நேரடியாக தொகுதி வாரியாகவும் மீதமான பிரதிநிதிகள் மாவட்ட அல்லது தேசிய ரீதியாக வாக்குகள் பெறக்கூடிய விகிதாசாரத்துக்கமைய விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்படலாம் எனக் கருதப்படுகின்றது.

கடந்த தேர்தலுடன் ஒப்புநோக்கும்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். நடைபெற்ற தேர்தலின்படி கொழும்பு மாவட்டத்தில் ஆளும்.ஐ.ம.சு.முன்னணி சார்பில் ஏ.எச்.எம். பவுஸியும்,  ஐ.தே.முன்னணி சார்பில் பிரபா கணேசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

நுவரெலியா மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான், வி. ராதாகிருஸ்ணன், பி. ராஜதுறை ஆகியோரும்,  ஐ.தே.மு. சார்பில் பி. திகாம்பரம், ஜெயரத்னம் ஸ்ரீரங்கா ஆகியோர் உட்பட ஐவர் தெரிவாகினர்.  யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா,  சுரேஸ் பிரேம்சந்திரன்,  அப்பாதுறை விநாயகமூர்த்தி,  பீ.சரவனபவண்,  சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோரும்,  ஐ.ம.சு.மு. சார்பில் டக்ளஸ் தேவானந்தா,  சிலுவெஸ்திரி உதயன், முருகேசு சந்திரகுமார் ஆகியோரும்,  ஐ.தே.மு. சார்பில் விஜயகலா மகேஸ்வரனும் தெரிவாகியுள்ள அதேநேரத்தில்,  வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் அ. அடைக்கலநாதன்,  எஸ். நோகராதலிங்கம்,  சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் ஐ.ம.சு.மு. சார்பில் அப்துல் ரி~hத் பதியுதீன்,  ஜுனைஸ் பாரூக் ஆகியோரும் ஐ.தே.மு. சார்பில் நூர்டீன் மசூரும் தெரிவாகியுள்ளனர். கேகாலை மாவட்டத்தில் ஐ.தே.முன்னணி சார்பில் கபீர் ஹசீம் தெரிவாகியிருந்தார்.

திகாமடுலை தேர்தல் மாவட்டத்தில் ஐ.ம.சு.மு. சார்பில் ஏ.எல்.எம். அதாஉல்லாää ஐ.தே. முன்னணியில் எம்.எச்.எம். ஹரீஸ்,  பைசல்காசிம் ஆகியோர் வெற்றிபெற்றனர். இம்மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் வெற்றியீட்டியுள்ளவர் பீ.எச்.பி.பியசேன. இவர் ஒரு பெரும்பான்மை சமூகத்தவரே. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் சீனிதம்பி யோகேஸ்வரன், பொன்னம்பலம் செல்வராசா, அரியநேத்திரன் பாக்கிய செல்வம் ஆகியோரும்,  ஐ.ம.சு.மு. சார்பில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும், ஐ.தே.மு. சார்பில் பசீர சேகு தாவூத் தெரிவாகியுள்ளனர்.

அதேநேரம், கம்பஹா,  களுத்துறை, மாத்தளை, காலி, மாத்தறை,  ஹம்பாந்தோட்டை குருணாகல்,  புத்தளம், பொலனறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி தேர்தல் மாவட்டங்களிலிருந்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியாவது தேர்ந்தெடுக்கப்படாமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உத்தியோகபற்றற்ற தகவல்களின்படி  ஆகக்கூடிய வாக்குகளைப்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு போனஸ் ஆசனத்தையும் சேர்த்து இரண்டு ஆசனங்கள் கிடைக்குமெனவும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனமும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு கிடைக்கும் இரண்டு ஆசனங்களும் விருப்புவாக்குகளில் முன்னணியில் நிற்கும் அமைச்சர் புஞ்சிநிலமே, எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருக்குக் கிடைக்கலாம் என்றும்  ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய ஆசனம் எம்.எஸ்.தௌபீக்குக்கு கிடைக்கும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குரிய ஆசனம் அதன் முதன்மை வேட்பாளர் இரா.சம்பந்தனுக்கு கிடைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நான்கு உறுப்பினர்களுள் இரண்டு உறுப்பினர்கள் பெரும்பாhன்மை சமூகத்திலிருந்தும் மீதமான இரு உறுப்பினர்களும் சிறுபான்மை சமூகத்தினரிலிருந்தும் தெரிவாக்கப்படுகின்றனர்.

கண்டி மாவட்டத்திலும் தேர்தல் முடிவுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு எட்டு ஆசனங்களும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு நான்கு ஆசனங்களும் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது. ஆளும் ஐ.சு.மு. சார்பில் பைசர் முஸ்தபாவும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ரவூப் ஹக்கீம்,  அப்துல் காதர்,  எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எதிர்வரும் 20ஆம் திகதி நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் 34 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முடிவு சிலநேரங்களில் மேற்குறிப்பிட்ட முடிவினை மாற்றியமைக்கலாம். எவ்வாறாயினும் 12 அங்கத்துவர்களைக் கொண்ட கண்டி மாவட்டத்தில் 4 முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என ஊகிக்கப்படுகின்றனர்.

எவ்வாறாயினும், ஆளும். ஐ.ம.சு.முன்னணி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை வைத்து தேர்தல் முறையினை மாற்றியமைக்க முற்படுமிடத்து தெரிவு செய்யப்பட்டுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் கட்சி,  இன வேறுபாடுகளுக்கப்பால் நின்று சிறுபான்மையினரின் நலவுரிமையினைப் பேணக் கூடிய வகையில் நடக்க வேண்டியது எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதிய ஒரு தூரதிருஸ்டி பயணத்தின் முதற்படியாக இருக்கலாம். குறிப்பாக தொகுதி வாரியான தெரிவு முறைக்கப்பால் விகிதாசார முறையில் கட்சிகள் பெறக்கூடிய வாக்கு வீதத்துக்கமைய தெரிவு செய்யப்படக்கூடிய பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதில் இவர்கள் கூடிய ஆர்வமிக்கவர்களாக இருத்தல் வேண்டும். 2010 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் போட்டியிட்டாலும்கூடää இரு கட்சி முறை மாதிரிக்கமையவே தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. இதனை கூடிய கரிசனையில் கொள்ளுதல் வேண்டும்.

2010 ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு முடிவுகளை அவதானிக்கும்போது இலங்கையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள சிறுபான்மையினரின் ஒத்துழைப்பு அவசியமில்லை என்ற நிலை உருவாக்கம் பெற்றது. பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை மிகவும் ஆழமான முறையில் மீளாய்வு செய்வோமாயின் இலங்கையில் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் சிறுபான்மையினர் அவசியமில்லை என்ற ஒரு நிலையே மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தப் போக்கு தற்போது அழுத்தமான முறையில் கவனத்திற் கொள்ளப்படாவிடின் எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதான கட்சிகள் பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளவே திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

எனவே,  தெரிவு செய்யப்பட்டுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் தத்தமது சுயநல நோக்குகளை மாத்திரம் கருத்திற் கொள்ளாது அல்லது நாட்டின் அரசியல் நிலைமைகளுக்கப்பால் சென்று வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கமைய செயல்படாது இருக்க வேண்டியது ஒரு கட்டாயக் கடமையாகின்றது. மாறாக தத்தமது அமைச்சுப் பதவிகளையும் அல்லது தத்தமது சுயநல நலன்களையும் மாத்திரம் கருத்திற் கொண்டு இவர்கள் நடப்பார்களாயின் எதிர்காலத்தில் பாதிக்கப்படப் போவது சிறுபான்மை சமூகத்தினர் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வரலாற்று உண்மைக்கு இவர்கள் காலத்தால் பதில் அளித்தே ஆக வேண்டும்

24வது வயதில் நாமல்

namal.jpgஅம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ. ம. சு. மு. சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ நேற்று 24வது வயதில் காலடி பதித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ 1,47,568 வாக்குகளைப் பெறும் போது அவருக்கு வயது 23 ஆகும். நேற்று அவர் தனது 24வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.

தந்தையின் வழியில் அரசியலுக்குள் கால்பதித்துள்ள இவர், அவரைப் போலவே 24வது வயதில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறார்.

யாழ் மக்களின் விருப்புத் தெரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!!! : த ஜெயபாலன்

Minister Douglas Devananda’s Posterதமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னர் துரோகி ஒட்டுப்படை என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு கிடைத்துள்ள விருப்பு வாக்கு 28 ஆயிரத்து 585. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் யாழ். மாவட்டத்தில் ஈபிடிபி போட்டியிட்டு மூன்று ஆசனங்களை பெற்றுள்ளது. யாழ். மாவட்ட ஈபிடிபி அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரீன் (உதயன்), (13128) முன்னாள் யாழ். எம்.பி. முருகேசு சத்திரகுமாரும் (8105) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் தஞ்சம் பெற்றிருந்த முருகேசு சந்திரகுமார் வன்னி யுத்த முடிவில் இலங்கைக்குத் திரும்பி இருந்தார். இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தில் 8வது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். தேர்தலுக்கு முன்னர் அவர் தேசம்நெற்க்கு வழங்கிய விசேட செவ்வியில் ஈபிடிபி 5 ஆசனங்கள் வரை வென்றெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டு இருந்தார். தற்போது 3 ஆசனங்களைப் பெற்றுள்ள ஈபிடிபி தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தைப் பெறலாம் என நம்புகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஐவர் தெரிவாகியுள்ளனர். மாவை சேனாதிராசா (20501), சுரேஷ் பிரேமச்சந்திரன் (16425) அப்பாத்துரை விநாயகமூர்த்தி (15311), ஆர். சரவணபவன் (14961) சிவஞானம் சிறிதரன் (10057) ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் துணைவியார் திருமதி விஜயகலாவும் (7160) பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Minister Douglas Devanandaதமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாவட்டத்தில் கூடிய ஆசனங்களைப் பெற்ற போதும் விருப்பு வாக்குகளைப் பொறுத்தவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டாவதாக வந்த மாவை சேனாதிராஜாவிலும் பார்க்க 8000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இவ்வளவு தொகையான வாக்குகளைப் பெற முடிந்தமைக்கான காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்கு வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி இருந்தமையே. தீவுப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்ட மூன்று கூட்டங்களில் கலந்து கொண்ட போதும் அம்மக்கள் தங்கள் ஆதரவை அமைச்சருக்கு வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான ஆதரவு ஏனைய எந்தக் கட்சி வேட்பாளருக்கும் கிடைத்திருக்கவில்லை. அதற்கு அவர் அமைச்சராக இருந்ததால் ஏற்பட்ட அணுகூலங்கள் முக்கிய காரணம்.

வேலனை, ஊர்காவற்துறை, சரவணை ஆகிய இடங்களில் கூட்டங்களில் கலந்துகொண்ட அமைச்சர் மக்களின் உடனடித் தேவைகளைக் கேட்டறிந்து சிலவற்றை அங்கேயே தீர்த்து வைத்தார். நல்ல தண்ணீர் வரவில்லை என்பதனை மறுநாளே தண்ணீர் வர ஏற்பாடு, பாடசாலைக்கான தளபாடங்களுக்கு 50000 ரூபாய்கான காசோலை, மீன்பிடி சங்கத்திற்கு 2 00 000 ரூபாய்க்கான காசோலை என்பன உடடினயாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சரிடம் தங்கள் குறைகளை எழுத்தில் வைத்து பெருமளவு கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டது.

Minister Douglas Devananda’s Campaign Meetingகூட்டத்தின் முடிவில் கலந்து கொண்டவர்கள் வற்புறுத்தப்பட்டனரா என்று கேட்ட போது அனைவருமே தாங்கள் சுயவிருப்பில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தனர். பத்திரிகைகளில் அமைச்சரைப் பற்றி மோசமான செய்திகள் வரும் போது நீங்கள் எவ்வாறு அவரை ஆதரிக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு ”பத்திரிகைகள் என்ன எழுதுகின்றன என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அமைச்சர் மாதத்தில் ஒரு தடவையாவது வந்து எம்மைச் சந்திக்கின்றார். நாங்கள் ஆபத்தில் இருந்த போது எங்களுக்கு அனைத்தையும் அவர் செய்துள்ளார். அதனால் எமது வாக்கு அமைச்சருக்கே” என உறுதிபடத் தெரிவித்தனர்.

Angajan Ramanujan’s Campaignஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவுப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட முதலாம் வேட்பாளர் அங்கஜன் ராமானுஜன் ஆதரவாளர்களும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களை விசாரித்ததில் அப்பகுதி வாக்காளர்கள் தங்கள் வாக்கு ‘ஐயாவுக்கு’ (அமைச்சருக்கு) எனத் தெரிவித்ததாக பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் அங்கஜன் ராமனுஜனின் தந்தைக்கு தெரிவித்ததைக் கேட்கக் கூடியதாக இருந்தது. அங்கஜன் ராமானுஜன் தொழிலதிபர் ஒருவருடைய மகன். அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றவர். யாழ்ப்பாணத்தில் மிகப் பெரும் பணச் செலவில் போட்டியிட்டவர். இருப்பினும் மக்களின் ஆதரவை அவரால் வென்றெடுக்க முடியவில்லை.

குறிப்பாக புலம்பெயர்ந்த மக்களின் ஊடகங்களின் பலத்தில் தங்கியிருந்த தமிழ் தேசியத்திற்கான முன்னணி தோல்வியைச் சந்தித்து உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி மட்டுமல்ல கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் அனுப்பப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அனைவருமே தோல்விகண்டனர்.

தாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடித்து வன்னி மக்களை யுத்தச் சுழலுக்குள் கைவிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு விருப்பு வாக்குகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது அவர்களுக்கு ஏற்பட்ட பலத்த அடியே.

Minister Douglas Devanandaகுறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு லண்டனில் போராட்டப் பீரங்கிகளாக விழங்கிய ‘அம்பிகை சீவரத்தினம் – அங்கையற்கன்ணி’ இரட்டையர்களில் அங்கையற்கன்ணி யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தார். இவரை விடவும் கனடா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பல ஈபிடிபி ஆதரவாளர்கள் யாழ் வந்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு இருந்தனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தத கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற போதும் அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதியல்ல. அவர் மீதும் அவரது கட்சி மீதும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. அது தொடர்பாக அமைச்சரும் அவரது கட்சியும் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் பல உள்ளது. முன்னர் இருந்த நிலையைவிட மக்கள் கூடிய ஆதரவை வழங்கி உள்ளனர். அதனால் அவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது. தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற சாவகச்சேரி படுகொலை தொடர்பில் ஈபிடிபி சம்பந்தப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது. அதனை போட்டி வேட்பாளர் சரவணபவனின் பத்திரிகையே வெளியிட்டு இருந்த போதும் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்.

ரோஹித, மிலிந்த, பேரியல், அமீர் அலி உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பி.க்கள் தோல்வி

ஆறாவது பாராளுமன்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களாக அங்கம் வகித்த பலர், ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாது இப் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.  ஆறாவது பாராளுமன்றத்தின் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக அங்கம் வகித்த ரோஹித்த போகொல்லாகம, விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, நீதியமைச்சர் மிலிந்த மொறகொட, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ. மஜீத், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி உள்ளிட்டோர் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. க்களான மொஹமட் மஹ்ரூப், சபீக் ரஜாப்டீன், சாஹல ரத்னாயக்க, ஜோன் அமரதுங்க உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர்.

ஜே.வி.பி. யில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டு, பின்னர் ஆளும் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க தோல்வியடைந்துள்ளதுடன் ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிட்ட ஜே.வி.பி. யின் முன்னாள் எம்.பி. க்கள் பலரும் இத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் போட்டியிட்ட சகலரும் படுதோல்வி

Pathmini Sithambaranathanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர்.

எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.க்களான எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர். கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களான சிவநாதன் கிஷோரும் ரி.கனகரட்ணமும் இம்முறை வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவர்களும் படுதோல்வியடைந்தனர்.

இதேநேரம், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான செல்வி கே.தங்கேஸ்வரி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவரும் தோல்வியடைந்தார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் புதுமுகங்களாக ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோரும் மட்டக்களப்பில் பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று நன்றிக்கடனோடு மக்கள் வாக்களிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருப்பதையே பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிப்படு த்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டளஸ் அழகப் பெரும தெரிவித்தார். அதேநேரம் எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டு ஏற்பாடுகளில் மக்கள் அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாகவே வாக்களிப்பு மந்தமாக இடம்பெற்றதாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

பொதுத் தேர்தல் முடிவுகள் குறி த்து மேற்கண்டவாறு குறிப்பிட்ட அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் கூறுகையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.மு. பெற்ற வாக்குகளை விடவும் அதிக ப்படியான வாக்குகளை பல தொகு திகளில் இம் முன்னணி பெற்றிருக் கின்றது.

இதனை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஐ.ம.சு. முன்னணியினதும் வேண்டுகோளை ஏற்று நன்றிக் கடனோடு நாட்டு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

இதேநேரம் இத்தேர்தலில் எதிரணியினர் பாரிய தோல்வியைத் தழுவுவதற்கு அவர்கள் தங்களது பொறுப்புக்களிலிருந்து விலகிச் செயற்பட்டதே காரணமாகும். இதற்காக அவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் மக்கள் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக இத்தேர்தலில் வாக்களித்தனர். அதற்குரிய வாய்ப்பு எமது ஜனாதிபதியினாலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

தமிழ் மக்களின் கரத்தைப் பற்றிப்பிடிக்க ராஜபக்ஷவுக்கு இதுதான் சந்தர்ப்பம் அமெரிக்கா கூறுகிறது

2010 General Election SLஇலங்கையில் புதிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் கரங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பற்றிப்பிடிக்க வேண்டுமென்ற கருத்தை அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. “ராஜபக்ஷவின் நிர்வாகமானது தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். உண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சமீபத்தில் அவர் (ராஜபக்ஷ) விஜயம் மேற்கொண்டிருந்தார் என்று அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
நம்பிக்கையான எதிர்காலத்துடன் தாங்கள் வாழப்போகிறார்கள் என்று அவர்கள் (தமிழர்கள்) கருதுவது மிக முக்கியமானதாகும். இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 1 இலட்சம் பேர் தற்போதும் முகாம்களில் உள்ளனர். அவர்கள் தமது வீடுகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பிளேக் கூறியுள்ளார். இந்த விடயங்கள் யாவும் வென்றெடுக்கப்பட்டால் மனித உரிமைகளுக்கு அதிகளவில் மதிப்பளிப்பதாக அமையும். அத்துடன் கடந்த கால உரிமை மீறல்கள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாடுகள் சில இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவை யாவும் நான் கூறும் இந்த நல்லிணக்கம் தொடர்பாக விடயங்களைக் கையாள்வதில் பாரியளவுக்குப் பங்களிப்பைச் செலுத்தும் என்று நினைக்கிறேன் என்றும் பிளேக் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் சமாதானம் ஏற்படுமென உண்மையான எதிர்பார்ப்பைத் தான் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “இப்போது உண்மையான வாய்ப்புக்கிட்டியிருப்பதாக நான் நினைக்கிறேன். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியிருந்தார். அவ்வாறு பெற்றுக்கொள்வதானது இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும்%27 என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் (ராஜபக்ஷ) கூறியுள்ளார். இந்த 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும். வடமாகாணம் உட்பட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும். நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனை இப்போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அவரின் (ஜனாதிபதியின்) கட்சியானது பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளுமென தோன்றுகிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர் பெற்றுக்கொள்வாரென்பது தொடர்பாக இப்போது கூறுவது உரியகாலத்திற்கு முந்தியதாக அமையுமென நான் கருதுகிறேன். ஆனால் கட்சியிலிருந்து மாறுவோர்கள் சிலரிடமிருந்து அவர் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியமும் காணப்படுகிறது. ஆதலால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டத்தை அவர் எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் பிளேக் கூறியுள்ளார். அதேசமயம் இலங்கை சட்டத்தின் பிரகாரம் பொன்சேகா மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தான் எதிர்பார்ப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார்.

இலங்கையில் குடும்ப செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பாக அவர் கவலைப்படுகிறாரா என்று கேட்கப்பட்டபோது நாட்டில் இந்த மாதிரியான குடும்ப அலுவல்கள் இருந்து வருவது நீண்டகால பாரம்பரியமாக இருப்பதாக பிளேக் கூறியுள்ளார். “ராஜபக்ஷவுக்கு முன்னர் பண்டாரநாயக்காக்கள் மற்றும் பல குடும்பங்கள் இந்த மாதிரியான தன்மையில் இருந்துள்ளன. இலங்கை விடயத்தில் இது அசாதாரணமானதொன்றல்ல என்று நான் நினைக்கிறேன். தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம்பெற்றது என்பது தொடர்பாக அதாவது நீதியான முறையில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்ற அபிப்பிராயத்தை இலங்கை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று பிளேக் கூறியுள்ளார்.