எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

‘தேசத்துரோகத்துக்குரிய தண்டனையை நீதித்துறை தீர்மானிக்க வேண்டும்’ – லக்ஷ்மன் ஹுலுகல்ல. “உண்மைகளை கூறுவது தனது கடமை” -பொன்சேகா

sa-pon.jpgமுன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்ச்சியாக தேசத் துரோகமான அறிக்கைகளை விடுத்து வருகிறார். அவருக்கு என்ன தண்டனை வழங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதித்துறையினரின் பொறுப்பாகுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

பி. பி. ஸியின் ‘ஹார்ட்டோக்’ நிகழ்ச்சிக்கு இரகசியமாக தொலைபேசியில் பேட்டி கொடுத்த பொன்சேகா,  ‘புலிகளுக்கெதிரான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவ அதிகாரிகள் சிலர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்திருக்கலாம்’ எனக் கூறியுள்ளார். பி.பி. ஸி ‘ஹார்ட்டோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீபன் ஸக்கூர் இதனை இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்’.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த லக்ஷ்மன் ஹுலுகல்ல மேலும் கூறியதாவது; ‘பி.பி.ஸியுடன் இரகசியமாக செய்து கொண்டதாக கூறப்படும் தொலைபேசி பேட்டியின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும், பாதுகாப்பு படையினரையும் மட்டுமன்றி முழு நாட்டையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டார்’ என்றார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான எந்தவொரு சுதந்திர விசாரணையின் போதும் தான் இது பற்றி சாட்சியமளிக்கவும் தயாராக இருப்பதாக ஜெனரல் பொன்சேகா தனது இரகசிய தொலைபேசி பேட்டியில் மேலும் கூறியிருந்ததாக தொகுப்பாளர் ஸ்டீபன் ஸக்கூர் மேலும் கூறியிருக்கிறார்.

“இவ்வாறான தேசத்துரோகத்தனமானதும், ஆத்திரமூட்டும் வகையிலானதுமான கூற்றை ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் காட்டிக்கொடுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருக்கிறார்” என்றும் ஹுலுகல்ல சுட்டிக்காட்டினார். மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படைகளில் இருந்த அதிகாரிகளும் ஏனையவர்களும் மிகுந்த கடமையுணர்வுடனும் தியாக சிந்தையுடனும் செயற்பட்டனர் என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறுகிறார்.

அவர்கள் மேற்கொண்ட தியாகங்களினால் இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது. அதற்கான தலைமைத்துவமும் வழிகாட்டலும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

அவர்கள் மீது பொறாமை கொண்டிருந்த ஜெனரல் பொன்சேகா அவர்களை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் வஞ்சம் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவ்வாறான அறிக்கைகள் அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் கடுமையான செயற்பாடுகளின் மூலம் பெறப்பட்டயுத்த வெற்றியை குறைத்து மதிப்பிடவைக்கும்.

தனது முன்னைய கூற்றுக்களை ஜெனரல் பொன்சேகா மறுத்துள்ள போதிலும் இறுதியாக பி.பி.ஸிக்கு வழங்கிய இறுதியான தொலைபேசி பேட்டியை அவர் எந்த வகையிலும் மறுக்க முடியாது. ஏனெனில் அது அவரது சொந்த குரலிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெனரல் பொன்சேகா முன்னர் உண்மையான இராணுவத் தளபதியாக நடந்துகொண்ட போதிலும் அதன் பின்னர் அவர் தேசத்துரோகமாக நடந்துகொண்டதால் இலங்கை சமூகத்திடம் இருந்த நன்மதிப்பை இழந்ததுடன் கெட்ட பெயரையும் சம்பாதித் துக்கொண்டுள்ளார் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின்டயசிரி கூறியுள்ளார்.

நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுப்பதன் மூலம் தனிப்பட்ட ரீதியில் லாபம் பெற ஜெனரல் சரத் பொன்சேகா முயற்சி செய்வதாகவும் கோமின் டயசிரி மேலும் கூறினார்.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” – கோட்டாபாய ராஜபக்ஷ

இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ”அவர் தூக்கிலிடப்படுவார்” என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ”தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக” தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ”ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்” என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.

அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ”அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.” என்று கூறீனார்.

 “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா

 இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த “உண்மைகளை கூறுவது தனது கடமை” என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, ” பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.” என்று கூறியிருந்தார்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது பிபிசியின் சிங்கள சேவையின் சந்தன கீர்த்தி பண்டாரா, அவரைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலர் பிபிசியிடம் தெரிவித்திருந்த விடயங்கள் குறித்துக் கேட்டபோது மேற்கண்ட கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தார் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

kahiliya.jpgவிடுதலைப் புலிகளின் நிதி தொடர்பான விபரங்களை வழங்குவது தொடர்பாக கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் அளித்த உதவிக்காக அவருக்கு மன்னிப்பு வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்தால் அது தொடர்பாக தான் ஆச்சரியப்படமாட்டேன் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அத தெரணவின் 360 நிகழ்ச்சியின்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கே.பி.வெளியிட்ட தகவல் மூலம் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் பலவற்றை அதிகாரிகளால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தச் சொத்துகளின் பெறுமதி குறித்துக் கண்டறியப்பட்டதா அல்லது இலங்கைக்கு அவை கொண்டுவரப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது அதனை வெளிப்படுத்தும் நிலைப்பாட்டில் தான் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். ஆயினும் உரிய வேளையில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனுக்கு விசேடமான பதவி ஏதாவது வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இது தொடர்பாக தீர்மானிப்பது உயர்மட்ட அதிகாரிகளைப் பொறுத்தது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நாட்டுக்கு எதிராக கே.பி. மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக அவர் தண்டனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் வலியுறுத்துவது தொடர்பாக அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, “அவருக்கான தண்டனையை அவர் தற்போது பெற்றுக்கொண்டிருக்கிறார். தனது சொந்த மனச்சாட்சிக்கு எதிராகப் போராடுவது அதிகளவுக்குப் போதுமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மன்னர் போன்று வாழ்ந்தவர் கே.பி. இப்போது அவர் தனது சகல சிறப்புரிமைகளையும் இழந்துவிட்டார். தனது தோழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று சிலர் கூறக்கூடும். ஆனால், இப்போது நாட்டுக்காக அவர் அதிகளவுக்குச் செய்கிறார் என்பதையிட்டு நாம் திருப்தியடைவது அவசியமானதாகும். அவர் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியா பயணம் – உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவும் ஏற்பாடு

india.jpgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியாவின் தலைநகரான புதுடில்லிக்குப் பயணமானார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபாபட்டேல், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவிருக்கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இவ்விஜயத்தின் போது முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடப் படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிகாரியொருவர் கூறினார்.

இஸ்ரேலை கண்டித்து சபையில் அஸ்வர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை

ahm-azwar.jpgபலஸ் தீனத்துக்குச் சென்ற துருக்கி உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் கண்டிப்பது தொடர்பாக சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்று இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பலஸ்தீன அகதிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேலிய படையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய தாக்குதலினால் பத்தொன்பது பேர் உயிர் இழந்தனர். இரு இலங்கையர்கள் உட்பட ஏராளமான பிரயாணிகள் காயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை மக்களின் கண்டனத்தை தெரிவித்து சபை ஒத்திவைப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதுடன் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை இன்னும் சில தினங்களில்

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் ஆரம்பிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதையொட்டி மலைய கத்தின் மேற்கு பகுதியில் அடிக்கடி கடும் காற்று வீசும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாக வேண் டிய காலம் சில வாரங்கள் தாமதமடைந்துள்ளன.

இதற்கு வளிமண்டலத்தில் திடீர் திடீரென ஏற்பட்ட மாற்றங்களே காரணம். என்றாலும் இன்றோ, நாளையோ தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகும். இதன் விளைவாக மேல், தென், மத்திய சப்ரவமுவ மாகாணங்களில் அடிக்கடி மழை அதிகம் பெய்யும். அத்தோடு வடக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் ஓரளவு மழை பெய்ய முடியும். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதி கூடிய மழை மாலிபொடவில் 73.5 மி.மீ. பதிவாகியுள்ளது.

தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலயத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 50 கிலோ மீற்றர் வரை காணப்படுகின்றது. இது அடிக்கடி 60 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரிக்கின்றன. இதேநேரம் தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மன்னார் குடா, வட கிழக்கு ஆகிய கடற்பரப்புக்களில் அதிக கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது என்றார்.

அவசரகாலச் சட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற் கான பிரேரணை 68 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்க் கூட்டமைப்பு, ஐ. தே. க, ஜனநாயக தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. ஐ. தே. க எம்.பி. ஏ. ஆர். எம். ஏ. காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

கிளிநொச்சியில் இரு பெண்கள்மீது பாலியல் துஸ்பிரயோகம் ஆறு இராணுவத்தினர் கைது!

யூன் 6ல் கிளிநொச்சி ரெட்பானா பகுதியில் இரு குடும்பப் பெண்கள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் மேற்கொண்ட முறையீட்டை அடுத்தே யூன் 7ல் ஆறு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் யூன் 8ல் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் யூன் 14ல் அடையாள அணிவகுப்பிற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதணைக்காக வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.

தனங்கிளப்பில் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர்! மூவர் படுகாயம்!

தென்மராட்சி தனங்கிளப்பு சுண்டிக்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் நேற்று (June 7 2010) மாலை 5:15 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனங்கிளப்பைச் சேர்ந்தவரும், பண்டத்தரிப்பில் வசித்தவருமான கனகசபை பிரகாஸ் (வயது 29) சாவகச்சேரியில் வசித்தவரும் மந்திகை வைத்தியசாலை ஊழியருமான சுப்பிரமணியம் பொன்சேகர் (வயது38) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தனங்கிளப்பு பகுதியில்  மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதியில் மக்களின் நலன் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று இன்று காலை சுண்டிக்களம் பிள்ளையார் கோவிலடியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அப்பகுதி மக்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். குப்பைகளை ஓரிடத்தில் குவித்து எரித்தபோது திடீரென குண்டு வெடித்தது. இதன்போது கனகசபை பிரகாஸ் என்பவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைமைகளின் தவறுகளுக்காக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை பின் தள்ளிவிட வேண்டாம்! : ஈபிடிபி

Douglas_D_and_Rajaparksa_MJune 7 2010 தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்ததன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாலை 6 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப் படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமவுரிமையும் உள்ள அரசியல் ஏற்பாட்டை நோக்கி செல்வதன் ஊடாகவே அரசயிலுரிமைப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படுவது சாத்தியமாகும் என ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதுவரை காலமும்  கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இத்தலைமைகளின் தவறான வழிநடத்தல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை ஒரு போதும் பின் தள்ளிவிட வேண்டாம் எனவும். சகல தரப்பினராலும் ஏற்கக் கூடிய தீர்வுத்திட்ட யோசனையையே தாம் முன்வைத்து வருவதாகவும், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பி உறவுக்கரம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதியிடம் இப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த ஈ..பி.டி.பி யின் விஷேட பிரதிகள் தமிழ் மக்களின் அரசிலுரிமை பிரச்சினை குறித்து எமது நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகம் மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் யோசனைகளையே தாம் வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பசில் ராஜபக்ஷ ஜீ.எல்.பீரிஸ் மைத்திரிபால சிறிசேன பௌசி ஆகியோரும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார். பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார். யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் ஈ.பி.டி.பி யின் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி – கூட்டமைப்பு சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது!!!

TNA_Government_08June10தமிழ் தேசியக்கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது! : விஸ்வா

நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (07-06-2010) மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியமர்த்தல் ஆகியவிடயங்களுடன், இனப்பிரச்சினைக்கான நிரந்தர திர்வு, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் கலந்துரையாடலின் போது கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டன.  இவற்றிற்கு சாதகமான பதில்கள் எவற்றையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

போர் காரணமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ள பொது மக்களின் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்தல் தொடர்பாக கேட்டபோது, இவற்றைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், இரண்டு நெல் அறுவடைகளின் பின்னர் மக்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வர் எனவும், விவசாயத்திற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது பற்றிப் பேசப்பட்ட போது, ஏற்கனவே இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போதும் அவர்களில் ஒருவர் மாத்தறைப் பகுதியில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

லண்டனில் உள்ள அமைப்புகள் சில தற்போது ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும். இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் அவர்களும் குறிப்பிட்ட அமைப்புக்களில் இணைந்து நாட்டுக்கு எதிராக  செயற்படும் நிலை எற்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை கூறவில்லை. இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் விடயங்கள் பேசப்பட்ட போது, விடுதலைப்புலிகள் கேட்டவற்றை கேட்கக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவை தொடர்பான விபரங்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட ஏனைய உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

இதே வேளை, இப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாக அமைந்ததாகவும், ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் பின்னர் மீண்டும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்தை நடத்த விரும்பவதாக தம்மிடம் கூறியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி முதலில் ஜனாதிபதிடம் பேசியதாகவும், அதன் பின்பே அரசியல் விடயங்கள் பேசப்பட்டன என்றும், தாங்கள் கலந்துரையாடிய விடயங்களுக்கு எந்தவொரு இணக்கப்பாடான பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை எனவும், பேச்சக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TNA_Government_08June10கூட்டமைப்பும் ஜனாதிபதியும் உடன்பட்ட விடயங்கள் : வி அருட்செல்வன்

வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரம் மிகவும் சுமுகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பயங்கரவாத சம்பவ காலத்தில் சாதாரண மக்களால் கைவிட்டுச் செல்லப் பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உரிமையை உறுதிசெய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் பதிலளித்தார்.

அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக் கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார். இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம். தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிaர்கள். தமிழ் மக்களுக்கு சமமாக வாழும் உரிமையை பெற்றுத் தரவும், சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

TNA_Government_08June10தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம் மற்றும் கல்வி, மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படங்கள்: ஏசியன் ரிபியூன் – நன்றி