எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நா சுப்பிரமணியனின் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் – ஒரு பார்வை : என்.செல்வராஜா, (நூலகவியலாளர்)

Eelathu_Tamil_Naval_Ilakkiyam_Cover“ஈழத்திலும் ஈழத்தவர் புலம்பெயர்துறையும் நாடுகளிலும் உருவாகும் தமிழிலக்கிய ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலக்கிய நெங்சங்களுக்கு” காணிக்கையாக்கி வெளியிடப்பட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூல் அண்மையில் நான் இலங்கை சென்றிருந்த வேளையில் என் கைகளுக்கெட்டியிருந்தது.

1978ம் ஆண்டு இதே தலைப்பில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் யாழ்ப்பாணம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் வழியாக ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் இரண்டாவது பதிப்பாக வெளியிடப்படுகின்றது. இப்பதிப்பு 1978ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் செல்நெறிகளை இனம்காட்டும் பின்னிணைப்புகளுடன் வெளியிடப்படுவதாக தலைப்புப் பக்கத்திலேயே விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். முதல் 143 பக்கங்கள் மூல நூலாகவும்  144ம் பக்கம் முதல் 309ம் பக்கம் வரை (நூலின் பாதிப்பகுதி) பின்னிணைப்புகளாகவும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
மூல நூல் எனக்கொள்ளப்படுவது, நூலாசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்கள் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் வழிகாட்டலில் 1970-1972 காலப்பகுதிகளில் தனது முதுகலைமாணிப் பட்டத்திற்காக மேற்கொண்ட ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் உருவானதாகும். ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றை ஐந்து முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தி இவ்வாய்வை இவர் மேற்கொண்டுள்ளார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஈழத்திலே தமிழ்நாவல்கள் எழுதப்படுவதற்கான சூழலை விளக்கி அதன் ஆரம்ப முயற்சிகளை மதிப்பிடுவதாக ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம் என்ற முதலாம் இயல் அமைகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுக் காலப்பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் பற்றி சமுதாய சீர்திருத்தக்காலம் என்ற இரண்டாம் இயல் ஆராய்கின்றது. அக்காலப்பகுதியை அடுத்து எறத்தாழ 25 ஆண்டுக்காலப்பகுதி எழுத்தார்வக் காலம் என்ற தலைப்பிலும், அடுத்துள்ள 15 ஆண்டுக்காலம் சமுதாய விமர்சனக் காலம் என்ற தலைப்பிலும் வகைப்படுத்தப்பட்டு அவ்வக்காலகட்டத்தில் வெளியான ஈழத்து நாவல்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. பின்னைய ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது பிரதேசங்களை நோக்கி என்ற இறுதி இயலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

காணிக்கைப் பதிவு தந்த நம்பிக்கையினாலும், தலைப்புப் பக்கம் தந்த உந்துதலினாலும் ஆர்வத்துடன் பின்னிணைப்பைத் தட்டிப்பார்த்தேன். நூலின் அரைப்பங்கை பின்னிணைப்புகள் ஆக்கிரமித்துள்ளன. அனைத்தும் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவுகள். முதலாவது பின்னிணைப்பு 1977க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. 1978 முதல் 1988 வரையிலான காலகட்டத்து ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் வளர்ச்சி முதற்பிரிவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இது தனிக்கட்டுரையாக ஏழு பகுதிகளில் மல்லிகை இதழில் ஏப்ரல் 1988 முதல் மார்ச் 1989 வரையிலான காலப்பகுதியல் வெளிவந்திருந்தது.

முதலாவது பின்னிணைப்பின் இரண்டாவது பிரிவு 1988க்குப் பின் தாயகத்திலும், புகலிடத்திலும் எழுந்த ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் பற்றிய விரிவான ஆய்வாக அமைகின்றது.
இரண்டாவது பின்னிணைப்பு ஆசிரியரின் தனிக்கவனத்தைப் பெற்ற இருநாவல்கள் பற்றிய ஆய்வுரையாக அமைகின்றது. மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம், தேவகாந்தனின் கனவுச் சிறை ஆகிய இரண்டு நாவல்கள் பற்றிய இக்கட்டுரை 2005இல் வெளிவந்த ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பான கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வுகள், பார்வைகள், பதிவுகள்: தொகுதி 2இல் ஏற்கெனவே பிரசுரமாகியுள்ளது.

மூன்றாவது பின்னிணைப்பில் ஈழத்துத் தமிழ்நாவல்களின் விரிவான பட்டியல் ஒன்று பிரசுரமாகியுள்ளது. ஆசிரியர் பெயர். நாவலின் தலைப்பு, (சில இடங்களில்) வெளியீட்டாளர் விபரம், வெளியிட்ட ஆண்டும் பக்கமும், தகவல் தெரியாதவிடத்து கேள்விக்குறிகள் (?) என்றவாறாக இப்பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

முதலாவது பகுதியில் 1977 வரையிலான நாவல்களின் விபரங்களும், இரண்டாவது பகுதியில் 1977க்குப் பின்னைய நாவல்களின் விபரமும் இடம்பெற்றுள்ளன. இது 2007 வரை நீளுகின்றதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் மேலதிகமான தகவல் ஒன்றையும் குறிப்பிடப்படவேண்டும். நூலாசிரியர் நா.சுப்பிரமணியன்  1885-1977 காலப்பகுதியில் வெளியான 407 நாவல்கள் பற்றிய விபரங்களைத் தொகுத்து, சில பதிவுகளுக்கு (நூல்தேட்டத்தில் நான் குறிப்பிடுவதுபோன்று) குறிப்புரையுடன் ஒரு நூலை எழுதியிருந்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் யாழ்ப்பாண வளாக நூலக வெளியீட்டு இலக்கம் 2 என்ற தொடரில் தமிழ் நாவல் நூற்றாண்டு நினைவாக, கல்லச்சுப் பிரதியுருவில் (ஊலஉடழளவலடநன) ஈழத்துத் தமிழ் நாவல்கள்: நூல்விபரப்பட்டியல் 1885-1976 என்ற தலைப்பில் பெப்ரவரி 1977இல் வெளிவந்திருந்தது. ஆக்கியோன் பெயர் வரிசை ஒழுங்கில் தொகுக்கப்பெற்றிருந்த இந்நூற்பட்டியலில் முதற்பகுதியில், நூல் வடிவில் வெளியான 212 நூல்களில் இடம்பெற்ற 220 நாவல்களும், இரண்டாவது பகுதியில் ஊடகங்களில் வெளியானதும் நூலுருப்பெற்றமை பற்றிய தகவல் அறியமுடியாததுமான 94 நாவல்களும் இடம்பெற்றிருந்தன. ஈழத்துத் தமிழ் நாவல் பற்றி எழுதப்பட்டு ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள், மற்றும் நூல்களின் விபரங்களும் பின்னிணைப்பில் காணப்பட்டன. (பார்க்க: நூல்தேட்டம் தொகுதி 2, பதிவு இலக்கம் 1006).

நூலின் நான்காவது பின்னிணைப்பும் ஒரு தேர்ந்த பட்டியலாகும். இதில் ஈழத்துத் தமிழ் நாவல் தொடர்பான ஆய்வுகள் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் 1977 வரை வெளியான விமர்சன நூல்கள், கட்டுரைகள் என்பன ஒரு பிரிவாகவும், 1977க்குப் பின்னர் வெளியான நூல்களும் ஆய்வேடுகளும், திறனாய்வுகள் மற்றும் “பட்டியல் முயற்சிகள்”, அணிந்துரைகள், அறிமுக உரைகள் மற்றும் மதிப்புரைகள் முதலியனவும் இடம்பெற்றுள்ளன. இங்கு திரு. நா.சுபபிரமணியம் அவர்களின் தீவிரமான தேடலில் அகப்படாத இரண்டு விடயங்கள் பற்றியும் நான் இங்கு குறிப்பிடவேண்டும்.
அவர் இன்று புலம்பெயர்ந்து வாழும் கனேடிய மண்ணில் 2005ம் ஆண்டில் தமிழர் தகவல் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட “தமிழர் தகவல்” ஆண்டுமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். தமிழர் தகவல்- எஸ்.திருச்செல்வம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு கனடாவில் வெளிவரும் ஒரு மாத இதழ். (மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு. தமிழர் தகவல் 14ஆவது ஆண்டு மலர்; (P.O.Box 3, Station F.Toronto, Ontario, M4Y 2LA, Canada)பெப்ரவரி 2005, ப.124-129.) அதில் ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் மேற்கொண்ட படைப்பாக்க முயற்சிகள் பற்றி விரிவான தகவல்களை வழங்கியிருந்தேன். இந்த நூலில் அந்தக்கட்டுரை பற்றிய எவ்வித குறிப்பும் இல்லாததால், திரு. நா.சுப்பிரமணியனுக்கு தமிழர் தகவல் ஆண்டு மலர் கிடைக்கவில்லை போலுள்ளது. இதே கட்டுரை பின்னாளில் இலங்கையில் ஞாயிறு தினக்குரலில் 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு இதழ்களில் தொடராகவும் வெளியிடப்பட்டது. கோலாலம்பூரில் வல்லினம் சஞ்சிகையும், மலேசிய நண்பன் பத்திரிகையும் இக்கட்டுரையை மீள்பதிப்புச் செய்திருந்தன.

புலம்பெயர்ந்த ஈழத்தவரின் நாவல்களில் பல மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை நூலகத்தில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது பற்றி எனது மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் தொகுப்பில் அவற்றை நேரில் பார்வையிட்டுத் தொகுக்கப்பட்ட விரிவான விபரங்கள் உள்ளன. ஆசிரியரின் விரிந்த தேடலில் நிச்சயம் மலேசிய நூல்தேட்டம் தொகுதி கிட்டும் என்று நம்புகின்றேன். மலாயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தவருள் ஒருவரான புலோலியூர் க.சுப்பிரமணியம் எழுதிய நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நூல் பற்றி, சுப்பிரமணியன் தனது பின்னிணைப்புப் பட்டியலில் பக்கம் 267இல் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் புலோலியூர் க.சுப்பிரமணியம் (எஸ்.கே.சுப்பிரமணியம்) மலேசிய மண்ணில் வாழ்ந்த காலத்தில் எழுதிய பிற நாவல்கள் பற்றிய வேறு பதிவுகள் எதுவும் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. மலேசியாவில் முசயைn டுiஉநளெiபெ டீழயசன இல் அங்கத்தவராயிருந்த இந்நாவலாசிரியர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர்.
நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவல் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது. (நூலகப் பதிவிலக்கம்: 35334) இந்நாவலின் முன்னுரையில் ஆசிரியர் தன்னுடைய முன்னைய நூலான பலசுந்தரம் அல்லது சன்மார்க்கஜெயம் என்ற நூலின் தொடர்ச்சியே இந்நூல் என்று குறிப்பிடுகின்றார். பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் இரண்டு பாகங்களில் வெளிவந்திருந்தது. மலேசியாவில் பினாங்கு, சி.அரிகிருஷ்ண நாயுடு பதிப்பகத்தினர் இந்நூலின் இரண்டாவது பாகத்தை 1918 இல் வெளியிட்டிருக்கிறார்கள். (அச்சகம்: எட்வார்ட் பிரஸ், இல. 80, ஊhரடயை ளுவசநநவ, பினாங்கு). முதல் 21 அத்தியாயங்கள் முதலாம் பாகத்திலும், 22ம் அத்தியாயத்திலிருந்து 36ம் அத்தியாயம் வரை இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகின்றன.
அந்நாவலில்; நீலாக்ஷி ஒரு பிரதான பாத்திரமாகச் சித்திரிக்கப்படுகின்றார். துர்அதிர்ஷ்டவசமாக பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் நாவலின் இரண்டாவது பாகத்தையே மலாயாப் பல்கலைக்கழகத்தில் என்னால் பார்வையிட முடிந்தது. இந்நூலின் முதலாம் பாகத்தை எங்கும் காணமுடியவில்லை. மலேசிய தமிழ் நாவல் இலக்கியம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் பொதிந்தனவாக அமைய ஆரம்பித்துவிட்டன என்பதற்கு இந்நாவல் எடுத்துக்காட்டாகவுள்ளது. ஒழுக்கம் நேர்மை ஆகியவற்றால் வரும் உயர்வைப்பற்றி விளக்கும் இந்நாவலில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய மலாயா நாடு கதைக்களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகர உருவாக்கம், கிறிஸ்தவ சமயப் பரம்பல், இலங்கை – இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சியே நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு என்ற நாவலாக அமைந்துள்ளது.

மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது. இந்நாவலின் முதற்பாகம் வெளிவந்திருக்கக்கூடிய ஆண்டு விபரம் பற்றிய தகவல்களை அறியமுடியவில்லை. அதனால் இன்றையளவில் மலேசிய நாவல் இலக்கிய வரலாற்றில் வெளிவந்த இரண்டாவது நாவல் என்ற நிலையையே இது எய்தியுள்ளது. இன்றளவில் மலேசியாவின் முதல் நாவல் 1917இல் வெளியான “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி” என்ற நாவலாகும். இது ஒரு இந்தியரால் எழுதப்பட்டது.

ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு பற்றி ஆராயப்புகும் நா.சுப்பிரமணியன் செங்கை ஆழியான் போன்றோருக்கு ஈழத்தமிழ் நாவல் வரலாறு இலங்கை என்ற பிரதேச வரம்புக்குள் மட்டும் அடங்கிவிடக்கூடியது அல்ல என்பதை இலக்கிய உலகம் வலியுறுத்தவேண்டியுள்ளது. ஈழத்தவரின் முதலாவது புலப்பெயர்வு 1870களில் மலாயாவை நோக்கி ஏற்பட்ட காலம்முதலாக ஈழத்தமிழர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வைத்து நாவல்களை எழுதியிருக்கிறார்கள். இன்றைய புகலிடத்தில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்பக்களை ஈழத்து படைப்புக்களாகவும், அவர்களை இன்னமும் (புலம்பெயர்ந்த) ஈழத்துப் படைப்பாளிகளாகவும் குறிப்பிட்டுவரும் இலக்கிய ஆய்வாளர்கள் முன்னைய தலைமுறையினரான இவர்களின் படைப்புக்களையிட்டும் அக்கறை கொள்ளவேண்டும். இவர்களையும் நாம் ஈழத்துப் படைப்பாளிகளாகவே ஏற்று அவர்களுக்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு இடத்தை வழங்கவேண்டும்.

மலேசிய இலக்கியத்துக்கு உயிர்கொடுத்த எம்மவர்கள் பற்றிய எனது விரிவான ஆய்வில் பல படைப்பாளிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இவர்களின் பெயர்களை இன்றளவில் வெளிவந்த கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பட்டியல்களில் தேடினால் எமக்கு ஏமாற்றமும் எரிச்சலுமே மிஞ்சும்.

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் ஆசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியம் அவர்களுக்கு மற்றுமொரு தகவலையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். நூல்தேட்டம் என்ற பெயரில் 2002ம் ஆண்டுமுதல் ஒரு பாரிய தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியல் இதுவாகும். ஏழாவது தொகுதிக்கான தொகுப்புப்பணிகள் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு தொகுதியிலும் 1000 நூல்கள் என்றவாறாக இதுவரை (உங்கள் நூல்களும் உள்ளிட்ட) 7000 நூல்கள் வரை பதிவாக்கியிருக்கின்றேன். பதிவுகள் பிரதான பதிவு தூவிதசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டும், பாடவாரியாகப்; பதியப்பட்டுமுள்ளது. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை நூலின் சிறப்பம்சமாகும்.

நூல்தேட்டம் தொகுப்பின் 800ஆவது பிரிவு இலக்கியத்துக்கானதாகும். இதில் மற்றைய பாடத்துறைகள் போன்றே நாவல்களுக்கென்றும் தனியான பிரிவொன்றை ஒதுக்கி, குறிப்புரையுடன் நூல்பற்றிய நூலியல் விபரங்களை முழுமையாகத் தந்திருக்கின்றேன். இவை அனைத்தும் நான் நேரில்சென்று நூலகங்களிலும், தனியார் இருப்புகளிலும் பார்வையிட்ட நூல்கள். (எவ்விதமான கேள்விக்குறிகளும் பதிவகளில் இல்லை) எனது ஆதங்கம் என்னவென்றால், பலநூறு நூல்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்துள்ள நீங்கள் – நூல்தேட்டம் பற்றி எதுவுமே அறியாதிருப்பது நம்பமுடியாததாக உள்ளது. இரண்டாம் பதிப்பாக புத்தாக்கங்களையும் உள்ளடக்கி நீங்கள் வெளியிட்டுள்ள “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” என்ற நூலில் ஓரிடத்தில்கூட இதுபற்றிப் பிரஸ்தாபிக்கவில்லை என்பது மனதை நெருடுகின்றது. நீங்கள் வெளியிட்டுள்ள நூலை என்னைப் போன்றவர்களுக்காகக் காணிக்கையாக்கியிருக்கும் உங்கள் உணர்வை மதிக்கிறேன். நீங்களும் 1977இல் ஒரு பட்டியலை நாவல்களுக்காகத் தொகுத்தவர். தொகுப்பின் உழைப்பும், வலியும் உங்களுக்குப் புரியாததல்ல. நாவல்களையும், மற்றும் சிறுகதை கவிதை இலக்கியவடிவங்களையும் மாத்திரமல்லாது ஈழத்தின் முழுமையான நூலியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் நோக்குடன் தனிமனித முயற்சியாகத் தமிழ் நூல்களையும் பரந்த புவியியல் பரப்பை உள்ளடக்கித் தொகுத்துவரும் என்போன்றவர்களுக்கு எமது பணிபற்றிய சிறிய குறிப்பும் பேருவகைதரும் மருந்தாகும். “இருட்டடிப்பு” என்ற சொல்லை அறவே வெறுப்பவன் நான். ஆவணப்படுத்தலில் அதனை கிட்டவும் நெருங்கவிடக்கூடாது. படைப்பாளியினதும் படைப்பினதும் நம்பகத்தன்மையை வரலாறு கேள்விக்குள்ளாக்க அது வழிசமைத்துவிடும். (உங்கள் தகவலுக்காக: நூல்தேட்டம் இலங்கையில் அச்சிடப்படுகின்றது. இலங்கையின் அனைத்து பிரதான நூலகங்களிலும் புத்தகசாலைகளிலும் கிடைக்கும். நீங்கள் வாழும் கனடாவில் ஸ்கார்பரோவில், உலகத்தமிழர் நூலகத்திலும் ஒரு தொகுதி பேணப்படுகின்றது).

நன்றி : தினக்குரல்

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தில் மரணம்!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக வந்தவர் விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (July 01 2010) ஏழாலைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழாலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பி.றொபின் (வயது36) என்பவரே மரணமடைந்தவர்.

நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவரது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் மரண விசாரணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இவர் லண்டனிலிருந்து அண்மையில் யாழப்பாணத்திற்கு உறிவினரைப் பார்ப்பதற்காக வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

”இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த மக்களுக்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்க வேண்டும்.” ததேகூ சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!

Sivasakthi_Anandan_TNA”இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்”, என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ”இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும். அத்தோடு போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கும் நட்ட ஈடு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ஜே.வி.பியினருக்கு பொது மன்னிப்பு வழங்கியதைப் போல தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் முக்கியமானவர்கள் விடுதலை செய்ய்ப்பட்டுள்ளனர் ஆனால்,  அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளின்றி பல வருடங்களாக சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட வேண்டும்” எனவும் சிவசக்தி ஆனந்தன் அவரது உரையில் குறிப்பட்டுள்ளார்.

வடமராட்சிக் கிழக்கு கிராம மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

வடமராட்சிக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த எற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, போக்கறுப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளனர். தங்கள் மீள்குடியமாவக்காக இதுவரை இம்மக்கள் பதிவு செய்யாமலிருந்தால் குடத்தனையில் இயங்கும் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் உடனடியாக தங்கள் பெயர் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15ஆம் திகதி மேற்படி பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோட்டம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் முகாமிலிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவை மாவட்டத்திலுள்ள வெலிகந்த கந்தகடுவ பகுதியிலுள்ள புனர்வாழ்வு முகாம் ஒன்றில் தொழில் பயிற்சிகளைப் பெற்று வந்த  முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் காரணமாக பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயெ கடந்த 30ஆம் திகதி அங்கிருந்து அவர் தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு முகாம்களிலுள்ளவர்களில் காயமுற்றவர்கள், நோயாளிகள் இராணுவப் பாதுகாப்புடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வழமையானது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இவர் தப்பிச்சென்றுள்ளார்.

தப்பிச் சென்றவர் கிளிநொச்சியைச் சேர்ந்த 27 வயதான நித்தியானந்தன் ராசா என்பவர் எனவும், இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக செயற்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் இராணுவம் திடீர் சோதனை

தமிழர்கள் அதிகம் வசிக்கும் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்றுக் காலை இராணுவத்தினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளவத்தை கடற்கரை வீதிப் பகுதிகள் சோனையிடப்பட்டதோடு,  காலி வீதியில் வானங்களும் இடை மறிக்கப்பட்டு  சோதனையிடப்பட்டன. இச்சோதனை நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் சிறிது பதற்றமடைந்த போதிலும் இந்நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சாத்தியமான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் – சபையில் அமைச்சர் டக்ளஸ்

dagi.jpgநடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்தி அவர் களின் வாழ்வாதாரத்திற்கான சகல ஏற்பாடுகளையும் விரைவுபடுத்த வேண்டுமென தெரிவித்த அமைச்சர், சரணடைந்தோர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் அனைவரையும் விடு விக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றிய அமைச்சர் வடக்கின் மீள்கட்டமைப் பிற்காக நிதியுதவி வழங்கியுள்ள இந்திய அரசாங்கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரி வித்ததாவது, தமிழ் மக்களுக்கான அமைதி, சமாதானம், ஜனநாயகம், வாழ்வியல் மற்றும் அரசியல் சமவுரிமை ஆகியவையே எமது இலட்சியமாகும். அதற்கான கனவுகள் இன்று நனவாகி வருகின்றன.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாக செயற்படும் ஒரு சூழலில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை குறித்து சிந்திக்க முடியும்.

அத்தகைய சூழலொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கித் தந்துள் ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறு வதுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மைக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலரும் ஜனாதிபதிக்கு இந்தச் சபையில் நன்றி கூறியதை வர வேற்கிறேன்.

மனிதராலும் இயற்கையாலும் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்களின் மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் 7 வீத வளர்ச்சியை நோக்கி அதிகரித்துள்ளது. கைத்தொழில் துறையினரை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். ஏனைய பிரதேசங்களைப் போலவே யுத்தப் பாதிப்பு தேசங்களையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

புத்தாக்குதல்களுக்கு ஊக்விப்பு வழங்தல், வாராந்தச் சந்தைகளை ஆரம்பித்தல், கைத்தொழில் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பனை வளம் எமது அமைச்சின் கீழ் உள்ளது. அதன் மூலம் அதனை நம்பியுள்ள கைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கற்பகம் விற்பனைக் கிளைகளை நாடளாவிய ரீதியில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். கைதடி ஆராய்ச்சி நிறுவனத்தை மீளத் திறப்பதுடன் அதன் தலைமை அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சபையில் பேசுவதற்கு காதருக்கு தனது நேரத்தை கொடுத்தார் பிரதமர் தி.மு.

cadar.jpgஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதருக்கு வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்ற அக்கட்சி நேரம் ஒதுக்காததால், பிரதமர் டி.எம். ஜயரட்ன தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 15 நிமிடங்களை வழங்கினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்கவை உரையாற்றுமாறு சமாநாயகர் அழைத்தார்.

அப்போது குறுக்கிட்ட காதர் எம்.பி, தமது கட்சியில் தமக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கவில்லையென்று சபாநாயகரிடம் முறையிட்டார். அப்போது, எந்தக் கட்சி  என்று எதிர்க் கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க, காதர் எம்.பி.யிடம் கேட்க, கோபமடைந்த அவர், ‘எமது கட்சி தான், உங்கள் கட்சி அல்ல’ என்று பதிலளித்ததோடு ஐ.தே.க தலைமை தொடர்பாகவும் காரசாரமாக விமர்சித்தார்.

அசின் நடிப்பதற்கு தடை?

asin.jpgஇலங்கை யில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை சென்ற நடிகை அசினுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் அசின் நடிப்பதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தென்னிந்திய திரைத்துறையினர் புறக்கணித்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை.

மேலும் தமிழ் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், நடிகர் நடிகைகள் யாரும் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என்றும் பிலிம்சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவை இப்போது நடிகை அசின் மீறி இருக்கிறார்.

சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ரெடி என்ற இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக, அசின் இலங்கை சென்று இருக்கிறார்.  முதலில் மொரீஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பு இது. ஆனால் ராஜபக்சே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சல்மான்கானுக்கு கூறியது. மேலும் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படாத வடக்கு இலங்கையின் சில பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

கேரளாவை சேர்ந்த அசின், உள்ளம் கேட்குதே என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பு வரை மலையாளம், தெலுங்கில் இரண்டாம் நிலை நாயகியாக ஓரிரு படங்களில் நடித்திருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, போக்கிரி, கஜினி, தசாவதாரம் ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி ஆனார். பிற மொழி படவுலகிலும் அவரை கவனிக்க ஆரம்பித்தனர்.  கஜினி (இந்தி) படத்தின் மூலம் மும்பை பட உலகுக்கு அசின் அறிமுகமானார். அவர் நடித்து அடுத்து வெளி வந்த லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்தி படம் படுதோல்வி அடைந்தது.

வேறு புதிய படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா இருந்த அசின் கவனம் மீண்டும் தமிழ் பட உலகம் பக்கம் திரும்பியது. விஜய் நடிக்கும் காவல்காரன் என்ற படத்தில், அவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு மீண்டும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இந்தி பட உலகில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று கருதிய அவர், காவல்காரன் படத்தின் இயக்குநர் சித்திக்கிடம் கேட்டுக் கொண்டு, அந்த படத்தின் கால்ஷீட் தேதிகளை இந்தி படத்துக்கு கொடுத்து விட்டார். போகவேண்டாம் என்ற விஜய்யின் வேண்டுகோளையும் புறக்கணித்தார்.

தமிழ் நடிகர்-நடிகைகள் யாரும் இலங்கை சென்று நடிக்கக் கூடாது என்ற கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, அசின் இலங்கை சென்று இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்து, ராதாரவி கூறியதாவது:

“கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்வோம்?” என்றார்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி: நடிகை விஜயசாந்தி கைது

vijaya.jpgதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை விஜயசாந்தி நேற்று கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

வன்முறையை தூண்டும் வகையில் விஜயசாந்தி பேசியிருக்கிறார். இதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படியும் தேர்தல் ஆணையம் பொலிஸாருக்கு தெரிவித்திருந்தது. இதனையடுத்து விஜயசாந்தி கைது செய்யப்பட்டார். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

ஆந்திராவில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 12 சட்ட சபை தொகுதிகளுக்கும் எதிர்வரும் 27ந் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணைக்குழு அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 30ந் திகதி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி. நடிகை விஜயசாந்தி முன்னிலையில் பல்வேறு கட்சித் தொண்டர்கள் தெலுங்கானா கட்சியில் சேரும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயசாந்தி தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கடுமையாக விமர்சித்து, தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக பேசினார். இது பற்றி தேர்தல் ஆணைக் குழுவுக்குப் புகார்கள் வந்தன.  இதையடுத்து தேர்தல் ஆணைக்குழு விஜயசாந்திக்கு விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பியது. அதில் தேர்தல் விதி அமுலில் இருக்கும் போது அதை மீறி வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருக்கிaர்கள். உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இதற்கு 4ம் திகதிக்குள் (இன்று) நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் விஜயசாந்தி வீடு உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி பொலிசுக்கும் விஜயசாந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி பஞ்சாரா ஹில்ஸ் பொலிஸார் விஜயசாந்தி மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்தனர். அவரை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் விஜயசாந்தியை கைது செய்ய பொலிஸார் முயன்றனர். ஆனால் தொண்டர்கள் நடத்திய அமளியால் கைது நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டார்.