எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மூடப்பட்டது

ya.jpgஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் நடவடிக்கைகளால் கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு தமது பிரதான அலுவலரை நாடு திரும்புமாறு ஐநா செய்லாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னேயை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு வர வேண்டும் என்றும் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ரணில்‘. பொறுப்பு வாய்ந்தவர் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம்’ – ஜீ. எல். பீரிஸ்

gl.jpgபயங்கர வாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை Incidents Report  வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க செனட் சபைக்கு தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் குறித்த குழு 2009 டிசம்பர், மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டுள்ள ’Sri Lanka Recharting U.S Strategy after The War” என்ற அறிக்கையை மேற்கோள்காட்டியே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. நாடு என்றதும் கட்சி, நிறம், பேதம் எதுவும் இன்றி வெளிநாட்டுக் கொள்கையை மதித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.

ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது நெருங்கிய நண்பனாக எம்மை வரவேற்றது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றிகண்டவர்கள் என பாராட்டியதுடன் இந்த நாட்டை மீண்டும் முழுமையாக கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று எதிர்க் கட்சி உறுப்பினர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தோம். அவர்கள் இந்தியாவுக்காக குரல் கொடுத்தார்கள். தாங்கள் எதிர்க் கட்சி என வேறுபட்டு பேசவில்லை. இந்தியா கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கையை மதிக்கிறோம். அதனடிப்படையிலேயே செயற்படுகிறோம் என்றார்கள். இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிக்கும் இலங்கையிலுள்ள எதிர்க் கட்சிக்கும் வேறுபாடு இதுதான். இவ்வாறு செயற்படக் கூடாது. இறுதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் மீது குற்றம் சுமத்தி அவர்களை வேட்டையாடும் எண்ணத்தில் இவை முன்வைக்கப்பட்டனவா?

யுத்தம் என்ற இருட்டிலிருந்து இலங்கை இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிக்கிறது. முதலீடுகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன.அரசியல் இருக்கலாம். எனினும் எதிர்க் கட்சியினர் அதிலிருந்து விடுபட்டு எமது வெளிநாட்டு கொள்கையின்படி நடந்துகொள்ள வேண்டும். யுத்தம் என்ற சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து வரும் எங்களுக்கு எமது வெளிநாட்டு கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் உதவுகின்றன. கட்சி, நிறம் பற்றி பாராமல் சிந்தியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

“2008 ஆம் ஆண்டுகளில் தான் நான் அமெரிக்கா சென்றேன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் பற்றி நான் எப்படி அமெரிக்க செனட் சபைக்கு கூற முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பினார்.நீங்கள் கூறியதாகத்தான் செனட் சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதோ என் கையில் இருக்கிறது என ஜீ. எல். பீரிஸ் கையிலுள்ள ஆவணமொன்றையும் காட்டினார்.

சாத்வீகப் போராட்டத்துக்கு இடையூறு இல்லை; பேராசிரியர் பீரிஸ்

g.jpgகொழும் பிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டத்தினால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

 அதேசமயம், அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் அரசு இடையூறு ஏற்படுத்தாதென அவர் மேலும் கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று பிற்பகல் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்த பீரிஸ், எந்தவொரு குழுவினரும் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை என்று கூறினார்.

இதற்கிணங்க ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த அரசாங்கம் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது. நைஜீரியாவில் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத்

najad.jpgஅமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். நைஜீரியாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான டி 08 மாநாட்டில் பங்கேற்க வந்த வேளை ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

நைஜீரியா வந்த ஈரான் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அபுஜாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவின் பிசாசுப் படைகளை பூமியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது.

பலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு விரைவில் முடிவுகட்டப் போகின்றோம். விரைவில் எமது வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்றும் ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார். சுமார் 150 மில்லியன் முஸ்லிம்கள் நைஜீரியாவில் உள்ளனர். இம்மக்கள் ஈரான் நிலைப்பாட்டையும் ஈரான் ஜனாதிபதியையும் பெரிதும் பாராட்டினர்.

ஐ. நா வின் தலைமைப் பதவியை நைஜீரியா அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இங்கு டி 08 மாநாடு ஆரம்பமானது. எகிப்து, பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. சுமார் 930 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக ஆத்திரமடைந்த ஐ. நா. அண்மையில் நான்காவது பொருளாதாரத் தடையை ஈரான் மீது கொண்டுவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஈரான் எதிரிகளின் விமானத் தாக்குதலுக்குட்படாத இடத்தில் மற்றொரு அணு உலையை அமைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளது. தனது நாட்டுக் கப்பல்கள் சர்வதேசக் கடற் பரப்பில் சோதனை செய்யப்பட்டால் ஈரான் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவித்தது தெரிந்ததே.

விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்

uno-vimal.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பாக் கி மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென நியமித்திருக்கும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுக் காலையில் ஆரம்பித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக இவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதேவேளை ஐ.நா. வின் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்கும் படி கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்களான புவாட் முஸ்ஸம்மில், நிமல் பிரேமவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்களது சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலையில் கைவிட்டனர். இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் நேற்றும் இயங்கவில்லை. இப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுக் காலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருக்கும் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி ஊர்வலம் நடாத்தி, சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இருப்பினும் ஐ.நா. செயலாளர் நாயகம் எமது கோரிக்கைக்குத் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறியதாலேயே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாமே குதிக்கத் தீர்மானித்து அதில் ஈடுபட்டிருக்கின்றேன்.

எமது நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக இப்படியான போராட்டங்களைத் தேசப்பற்றுள்ளவர்களும், தாயகத்தின் மீது அன்பு கொண்டவர்களும் நாடு பூராவும் முன்னெடுக்க வேண்டும். அதேநேரம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் அந்தந்த நாடுகளிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அதேநேரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த நிபுணத்துவ குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் வாபஸ்பெறச் செய்வதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன். நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படையினருக்குமாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றேன் என்றார்.

uno-vimal.jpg

துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்தான் – எஸ். ஸ்ரீதரன்

parliament.gifஎல்லாள மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு  மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். ஆனால் அரசாங்கம் இந்து மற்றும் தமிழ் கலாசாரங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆகியவற்றை அழித்தொழிக்கின்றது. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவுத் தூபியைக் கூட தகர்த்தெறிந்துள்ளீர்கள். இவ்வாறான தமிழர் விரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடத்தில் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதை விடுத்து மேலும் மேலும் காயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெவித்தார்.

மாலைதீவு அரசியல் நெருக்கடி நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தவினால் சுமுக தீர்வு – அமைச்சரவை மீண்டும் சத்தியப்பிரமாணம்

p.jpgமாலை தீவில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டையடுத்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினரையும், எதிர்க் கட்சியினரையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்து ஜனாதிபதி இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அந்நாட்டுப் பாராளுமன்றமான மஜ்லிஸ் பிரதம நீதியரசர், நான்கு எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்ததாகவும், ஜனாதிபதி அங்கு செல்வதற்கு முன்னர் ஆளுந்தரப்புக்கும் எதிர்த்தரப்புக்குமிடையில் எந்தவிதக் கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

மாலைதீவு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி தீர்த்து வைத்தமை தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செய்தியாளர் மாநாட்டைக் கூட்டித் தெளிவுபடுத்திய அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போதும் இதுபற்றி அறிவித்தார்.

கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர் நேற்று முன்தினம் 4.30 அளவில் மாலைதீவு ஜனாதிபதி நசீட் இராஜினாமாச் செய்த அமைச்சரவைக்கு மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து வைத்ததாக செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார். இது முற்றிலும் மாலைதீவின் உள்விவகாரம் என்றபோதிலும், கட்சிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒத்துழைப்பையே ஜனாதிபதி வழங்கினார் என்று கூறிய அமைச்சர், அரசியல் நெருக்கடி சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதையடுத்து சகல தரப்பினரையும் இராப்போசன விருந்துக்கு ஜனாதிபதி அழைத்திருந்தாரென்றும் கூறினார். சார்க் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலும், நீண்டநாள் நட்புறவைக் கொண்ட நாடு என்பதாலும் ஜனாதிபதி அந்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூமை அவரது இல்லத்திற்குச் சென்று ஜனாதிபதி சந்தித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மாலைதீவில் நிலவிய அரசியல் குழப்ப நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுமையாக தீர்த்து சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து சுமுக நிலைக்கு கொண்டுவந்தது மட்டுமல்லாமல் புதிய அமைச்சரவையையும் சத்தியப்பிரமாணம் செய்ய வைத்ததை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகக் கூறினார்.

சார்க் நாடுகளில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான நெருங்கிய நட்பின் அடிப்படையில் ஜனாதிபதியின் இந்த செயல் அமைந்திருந்தது என்றும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு

Maithiripala_Sirisenaலிற்றில் எய்ட் க்கு அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகளை வடக்கு கிழக்கில் உள்ள மற்றும் மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்துணர்வு எட்டப்பட்டது. யூன் 21 2010ல் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் முடிவில் இவ்வுடன்பாடு எட்டப்பட்டது. இந்நிகழ்வில் டொக்டர் நிமால் காரயவாசம் லிற்றில் எய்ட் யை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தார். சுகாதார அமைச்சிரன் சார்பில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். சுகாதார அமைச்சின்  பொதுச்செயலாளர் டொக்டர் ருபேரு பொதுச் சுகாதார அமைச்சின் இயக்குநர் அஜித் மென்டிஸ் ஆகியோரும் சமூகமளித்து இருந்தனர்.

இப்பரிந்தணர்வுன்படி லிற்றில் எய்ட் ஆல் அன்பளிப்புச் செய்யப்படும் மருந்துவகைகளை விநியோகிக்கும் செலவீனத்தை சுகாதார அமைச்சே பொறுப்பேற்பது என்றும் மருந்துவகைகளின் விநியோகத்தின் போது அவை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் விநியோகிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்த லிற்றில் எய்ட் பிரதிநிதிகள் உடன் இருப்பார்கள் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.

கடந்தகாலங்களில் மருந்துவகைகளை விநியொகிப்பதற்கான பாரிய செலவை லிற்றில் எய்ட் பொறுப்பேற்க வேண்டி இருந்தது. இப்புரந்தணர்வு உடன்பாடானது அச்செலவுகளை முழுமையாக நீக்க உதவியுள்ளது.

இதுவரை தனிப்பட்ட பொது அமைப்புகளால் அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துவகைகள் தனியாக வைக்கப்படுவதே வழமை. இம்மருந்துவகைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு வழிமுறைகள் இருக்கவில்லை. (இது பற்றிய விரிவான கட்டுரையொன்று தேசம்நெற் இல் வெளிவர உள்ளது.) ஆனால் லிற்றில் எய்ட் ஆல் வழங்கப்படும் மருந்துவகைகள் மக்களை (நோயாளிகளை) சென்றடைவதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த உறுதியளித்து உள்ளது.

லிற்றில் எய்ட் க்கு 2009 டிசம்பர் 31 வரை 1.52 மில்லியன் US $ பெறுமதியான மருந்துவகைககள் Medicine Without Borders அமைப்பினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இதன் முழுப் பட்டியலை அருகில் உள்ள இணைப்பில் காணலாம். http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Medicin_log_Sri_Lanka_09.pdf

MWB_in_Vavuniya_Hospitalஅதன் பின் மேலதிக மருந்துப் பொருட்களையும் Medicine Without Borders, லிற்றில் எய்ட் க்கு வழங்கி இருந்தது. இதுவரை இவ்வமைப்பு லிற்றில் எய்ட் க்கு வழங்கிய மருந்துவகைகளின் சந்தைப் பெறுமானம் 3 மில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்கள். Medicine Without Bordersயைச் சேர்ந்த Mr. Hans Frederik Dydensborg, Mr. Thomas Buck and Miss Sugi Thiruchelvam ஆகியோர் இம்மருந்து வகைகளை லிற்றில் எய்ட் க்கு பெற்றுத் தருவதில் முக்கிய பங்கெடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://littleaid.org.uk/meeting-with-the-health-minsiter

லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது

Panangoda_Internet_Centreலிற்றில் எய்ட் வடக்கு கிழக்கில் தமிழ் சார்ந்த உதவித் திட்டங்களை மேற்கொள்ளும் அதேசமயம் தெற்கிலும் சில உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றது. யூன் 22 2010ல் காயமடைந்த படைவீரர்களுக்கான இணைய மையம் ஒன்றை லிற்றில் எய்ட் ஏற்பாடு செய்து வழங்கி உள்ளது. பனாங்கொட இராணுவ முகாமில் காயமடைந்துள்ள படைவீரர்களுக்கே இந்த இணைய மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படுகின்றது.

இதேநாள் காயப்பட்ட படைவீரர்களுக்கான பரா விளையாட்டப் போட்டிகளும் நடைபெற்றது. இதற்கு லிற்றில் எய்ட் பிரதிநிதிகளான ரி கொன்ஸ்ரன்ரைன் நிமால் காரயவாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர்.

Panangoda Internet Centre - formal Hand Overலிற்றில் எய்ட் ஆல் வழங்கப்பட்ட உதவிகளுக்கு லெப் கேணல் போகொல்லாகமா தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்ட படை வீரர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்களுக்கு இது தொடர்பான மேலதிக பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

முன்னாள் குழந்தைப் போராளிகள்லிற்றில் எய்ட் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இசைக் கருவிகளை வழங்கியும் வெவ்வேறு உதவிகளை மேற்கொண்டு இருந்தனர். அம்பேபுச தடுப்பு முகாமில் இருந்து அம்முன்னாள் போராளிகள் பின்னர் பம்பலப்பிட்டி இந்துக் கல்லுரிக்கு மாற்றப்பட்டு இருந்தமை அறிந்ததே. http://littleaid.org.uk/sites/littleaid.org.uk/files/Ambepusse_Project_Little_Aid.pdf

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இந்திய அமைச்சர்களுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினர்.

Selvam Adaikalanathan TNA_TELOஇந்தியா விஜயம் செய்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் நேற்று (July 7 2010)  இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்தைகளை நடத்தினர். இதன்போது, தமிழ்மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உரிய தீர்வினைப் பெற இந்தியா உதவ வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் தமது படைக்கட்டுமானங்களுக்காக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பு செய்வதைத் தடுக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. வடபகுதியில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களை வடபகுதியில் குடியேற்றும் திட்டத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என கூட்டமைப்பு இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

போரினால் பாதிப்பற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது, தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்வது என்கிற இரு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும்  தாம் கவனத்தில் எடுப்பதாக கூட்டமைப்பிடம் இந்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்தியா முன்வந்துள்ளதாகவம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மன்னார் – இராமேஸ்வரம், ஊடான கடல்வழிப் போக்குவரத்து, யாழ்ப்பாணத்திற்கான  புகையிரதப் பாதை,  காங்கேசன்துறை அபிவிருத்தி முதலான இந்தியாவின் கரிசனைகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவுடன் ஒத்துழைக்கும் எனவும் கூட்டமைப்பு இந்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளது.

இத்தகவல்களை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கூட்டமைப்பின் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க கூட்டமைப்பின் குழுவினர் கடந்த ஞாயிறு (july 04 2010) இந்தியா புறப்படுவதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.