இந்தியா விஜயம் செய்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் நேற்று (July 7 2010) இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்தைகளை நடத்தினர். இதன்போது, தமிழ்மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உரிய தீர்வினைப் பெற இந்தியா உதவ வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கம் தமது படைக்கட்டுமானங்களுக்காக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பு செய்வதைத் தடுக்கும் படியும் கோரப்பட்டுள்ளது. வடபகுதியில் சுமார் ஒரு இலட்சம் வரையிலான படையினர் நிலைகொண்டுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களை வடபகுதியில் குடியேற்றும் திட்டத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என கூட்டமைப்பு இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிப்பற்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது, தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்வது என்கிற இரு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் தாம் கவனத்தில் எடுப்பதாக கூட்டமைப்பிடம் இந்திய அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே 50 ஆயிரம் வீடுகளைக் கட்டித்தர இந்தியா முன்வந்துள்ளதாகவம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மன்னார் – இராமேஸ்வரம், ஊடான கடல்வழிப் போக்குவரத்து, யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை, காங்கேசன்துறை அபிவிருத்தி முதலான இந்தியாவின் கரிசனைகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவுடன் ஒத்துழைக்கும் எனவும் கூட்டமைப்பு இந்திய அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளது.
இத்தகவல்களை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள கூட்டமைப்பின் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க கூட்டமைப்பின் குழுவினர் கடந்த ஞாயிறு (july 04 2010) இந்தியா புறப்படுவதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தார் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.