வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்றவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் – சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிராசாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருந்து விட்டு இலங்கைக்கு வருபவர்களின் விபரங்களை, தகவல்களை சேகரிக்க வேண்டிய தேவை பொலிஸாருக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு வரும் தமிழ் மக்களை பொலிஸில் பதிவு செய்யுமாறு நேற்று முன்தினம் வெள்ளவத்தையில் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் பத்திரிகையொன்று பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டபோது, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு வந்து விடுதிகள், உறவினர் விடுகளில் தங்கியிருக்கும் போது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்நடமுறை நாடு முழுவதற்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழர்களை மீண்டும் பொலிஸ் பதிவுகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகாலச் சட்டத்தின் 23ஆம் பிரிவின் அடிப்படையில் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஜனநாயக தேசிய முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் நா.குமரகுரபரன் தெரிவித்துள்ளார்.
கொழம்பிற்குச் செல்லும் தமிழ் மக்கள் விடுதிகளிலோ, உறவினர் வீடுகளிலோ தங்கியிருக்கும் போது அப்பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னர் நடைமுறையில் இருந்தது. எனினும், போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் அப்பதிவு முறை நீக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இது நடைமுறைக்கு வந்து விடுமோ என்கிற அச்சமும, கவலையும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.