எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை சிங்கள அரசியல்வாதிகளிடம் காணவில்லை’- பிரிட்டனின் காடியன்

kili-02.jpgசிங்கள வரை பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் தன்னாட்சிக்காக போராடும் புலிகள் இயக்கத்திற்கு கிளிநொச்சியை இழந்திருப்பது பாரிய பின்னடைவாகும். ஆனால், நேற்று அந்த நகரத்தைக் கைப்பற்றுவதில் இராணுவம் அடைந்திருக்கும் வெற்றியானது விடுதலைப் புலிகளின் மறைவை வெளிப்படுத்துவதாக அமையப்போவதில்லை. புலிகளின் அரசியல் தலைமையகமான கிளிநொச்சி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் அமைந்துள்ளது. இதன் மீது வான்வழித் தாக்குதல்களை எப்போதுமே கொழும்பு நடத்திக்கொண்டிருந்தது. ஒருவருடத்திற்கு முன்னர் சு.ப.தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திற்கு குண்டு வீசப்பட்டது. வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் அரசாங்கத்துடனும் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவரான தமிழ்ச்செல்வனின் அலுவலகம் குண்டு வீச்சுக்கு இலக்காகி இருந்தது.

தரை மார்க்கமாக இராணுவத்தின் முன்னேற்றமானது அங்கிருந்த புலிகளை ஒட்டுமொத்தமாக வாபஸ்பெறவைத்தது. ஆனால் இயக்கத்தின் இராணுவ தலைமையகமும் அதன் தளங்களும் அந்தப்பகுதிக்குக் கிழக்கே முல்லைத்தீவில் மறைவான இடத்தில் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பது ஒருபோதும் தெளிவாக அறியப்படாதது. கிளிநொச்சியை கைப்பற்றியதானது அச்சமூட்டக்கூடிய வகையில் மனித உயிர்களுக்கு விலை செலுத்திய விடயமாகும். காஸாவுடன் ஒப்பிடக்கூடியவை. தணிக்கைகள், அந்தப் பகுதிகளுக்குப் பத்திரிகையாளர்கள் செல்ல அனுமதிக்கப்படாமை என்பனவும் நடைமுறை விடயங்களாகும். பல நாட்களாக விமானத் தாக்குதல்கள், ஆட்லறித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொதுமக்களும் புலிகளும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காடுகளுக்குள் இடம்பெயர்ந்தனர். இரு தரப்பிலும் 100 க்கணக்கான படையினர் கொல்லப்பட்டனர். பலமாதங்கள் எடுத்த இந்நடவடிக்கை நேற்று தனது இலக்கை எட்டியுள்ளது.

காஸாவைப்போன்றே இதுவும் சமச்சீர் அற்ற போர் முறைமையாகும். கொழும்புக்கு துரிதமாக தற்கொலை குண்டுதாரியை அனுப்பியதன் மூலம் அரசாங்கத்தின் வெற்றிப் பிரகாசத்தை புலிகள் எடுத்துக் கொண்டுவிட்டனர். இச்சம்பவத்தில் விமானப்படை தலைமையகத்தைச் சேர்ந்த இரு படையினர் கொல்லப்பட்டனர். இது எப்போதுமே புலிகளால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாயமாகும். கிளிநொச்சியை இழந்த பின்னர் அதிகளவில் இதனை அவர்கள் மேற்கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. அதேவேளை, ஆனையிறவைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் அரசாங்கம் உள்ளது. யாழ்ப்பாண வீதிக்கான புலிகளின் கடைசி அரணாக ஆனையிறவு உள்ளது. அது வீழ்ச்சி கண்டால் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான யாழ்ப்பாணத்துக்கான விநியோகத்தை மீள சுலபமாக்கிவிடும். தற்போது கடல் மற்றும் வான் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்துக்கான விநியோகம் இடம்பெறுகிறது.

இதனைக் கைப்பற்றுவது விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக பாதிக்கும் என்பது நிச்சயம். ஆனால், தமிழ் சொந்த சமூகங்களின் மத்தியில் அவர்களின் செல்வாக்கு இருக்கும் வரை கெரில்லா இயக்கங்கள் தலைமறைவாகி மீண்டும் வெளிக்கிளம்பும் ஆற்றலைக் கொண்டுள்ளன. விடுதலைப் புலிகளை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அழைக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் புலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், பலருக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல்லின பல்கலாசார மக்கள் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் மக்கள் மிக மோசமான முறையில் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்நிலையில் உடனடியாக புலிகளுக்கு நிதி உதவி வழங்குவதை புலம் பெயர்ந்த தமிழர்கள் முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தியமில்லை.

நியாயமான அரசியல் தீர்வே இலங்கைக்கு தேவைப்படுகிறது. இராணுவத் தீர்வு இருக்க முடியாது. நேற்று இராணுவம் ஈட்டிய வெற்றியானது கொழும்பில் வெற்றிக்களிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு, நிதி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய அமைப்புப் பொறுப்புகளை ஏற்கனவே தன்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது ஊடகத்துறை அமைச்சையும் தன்வசமாக்கியுள்ளார். நாட்டின் செய்தியாளர்கள் மீது இறுக்கமான கட்டுப்பாட்டை அவர் வைத்திருக்கும் சாத்தியம் தென்படுகிறது. இனிவரப் போகும் பல மாதங்களில் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளவதற்கான மனப்பான்மை சிங்கள அரசியல் வாதிகளிடம் இல்லை. பயங்கரமான புதுவருடத்தையே இலங்கை எதிர்கொள்கின்றது. இவ்வாறு பிரிட்டனின் காடியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஜனவரி 6 இல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ind-pan.jpgகிளிநொச்சி நகரத்தை அரச படை கைப்பற்றியுள்ளது கவலையளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு பிரிவு செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை; இலங்கையில் பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் நீடித்து வரும் இனச்சிக்கல் இனப் போராக மாற்றமடைந்து கிளிநொச்சி நகரத்தை இராணுவம் கைப்பற்றி விட்டதாக வந்துள்ள செய்தியை கவலை தரத்தக்க செய்தியாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கருதுகிறது.

சில நாடுகளின் இராணுவ உதவிகளுடன் போராடி இலங்கை இராணுவம் பயங்கரவாதிகளாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கப் போவதாகக் கூறிய போதிலும் அரசு நடத்திய கண்மூடித்தனமான வான், தரைப்படைத் தாக்குதல்களால் நிராயுத பாணிகளான தமிழ் மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டார்கள். இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற மூர்க்கத்தனத்தையே இது காட்டுகிறது. 2009 ஆம் ஆண்டு புத்தாண்டு விழாப் பிரார்த்தனையிலும் விழாவிலும் ஈடுபட்டிருந்த மக்கள் மீதும் குண்டு வீசப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியதாகும். போர் கொடூரத்தையும் இலங்கைத் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக் கண்டும் கேட்டும் கலங்கிப் போன இந்தியத் தமிழர்கள் அரசுடன் பேசி போர் நிறுத்தம் கண்டு தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற எழுச்சி கொண்டு குரல் கொடுத்தனர்.

முதல்வர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலமும் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் டில்லியில் பிரதமரைச் சந்தித்து முறையிட்ட பின்னரும் தமிழ் மக்களின் உணர்வையும் வேதனையையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது. முதல்வர் தலைமையில் பிரதமரைச் சந்தித்த அனைத்துக் கட்சிக் குழு மிகக் குறைந்தபட்ச கோரிக்கையாக வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பிடக் கேட்டும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில் நடக்கும் தமிழ் இனப் பேரழிவுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் இந்திய அரசுக்கு எவ்விதக் கவலையுமில்லை. தமிழ் மக்களின் மதிப்புக் குரலை அலட்சியப்படுத்தி விட்டது. இருப்பினும் கிளிநொச்சியைப் பிடித்ததால் இராணுவ வெற்றி எனக்கூறும் அரசை இன்றுடன், இத்துடன், போரை நிறுத்துமாறு இந்திய அரசு பகிரங்கமாக வற்புறுத்த வேண்டும். இலங்கை அரச உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்கி நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டத்தை அறிவிக்க வேண்டுகின்றோம். தமிழக மக்களின் உணர்வுகளையும் வேதனையையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். இதர இயக்கங்கள் மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவு தருவது என்றும் மாநில செயற்குழு முடிவு செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யாழ். அரச அதிபரின் சேவைக்காலம் நீடிப்பு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக பதவி வகிக்கும் கே. கணேஷின் பதவிக்காலத்தை பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் ஆறு மாதகாலத்துக்கு நீடித்துள்ளது. அவரது பதவிக் காலம் ஜூன் முப்பதாம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அறுபத்தேழு வயதான கே. கணேஷ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட பின்னர் இரு தடவைகள் அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பணியாற்றும் அரசாங்க அதிபர்களில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரே வயதில் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் வாகனப்பதிவுக்கான புதிய அறிவித்தல்

cars.jpg2009 ஆம் ஆண்டிற்கான மோட்டார் வாகனப் பதிவிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்பாக புதிய அறிவிப்பை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பிற்கிணங்க, குறித்த வாகனத்தின் தெளிவான இரு வர்ணப் புகைப்படங்களை வாகன உரிமையாளர் சமர்பிக்கவேண்டும். ஒரு புகைப்படம் வாகனத்தின் முன் பகுதியும், மற்றையது வாகனத்தின் இடது அல்லது வலது புறத்தையும் தெளிவாகக் காட்டும் வகையில், தபால் அட்டை அளவினைக் கொண்ட படமாக இருக்கவேண்டும்.

அத்துடன், புகைப்படத்தின் மறுபக்கத்தில் வாகனத்தின் அடிச்சட்ட இலக்கத்தை தெளிவாகக் குறிப்பிட்டு, வாகன உரிமையாளரின் அடையாள அட்டை இலக்கத்துடன் அந்தப் புகைப்படம் உரிமையாளரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார

மன்னார் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் நிறுவனத்தை வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை

மன்னார் நானாட்டான் மடுக்கரையிலுள்ள லீட்ஸ் எனப்படும் சர்வதேச தொண்டு நிறுவனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மடுக்கரை கிராமத்தில் சுமார் 4 வருடங்களாக லீட்ஸ் எனும் நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தமது கிராமத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தினால் எவ்விதப் பயனும் தமக்கோ அல்லது கிராமத்திற்கோ இல்லை என்று மடுக்கரை மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த பல வருடங்களாக மடுக்கரை மக்களின் குடிநிலக்காணிகளிலிருந்தும் அக்கிராமவாசிகளின் பயிர் செய்கைக்குரிய காணியிலிருந்தும் மணல் அகழ்ந்து அதனை கூட்டெருவாகத் தயாரித்து அதனை மன்னார் நகரப்பகுதியில் லீட்ஸ் நிறுவனம் விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள மடுக்கரை மக்கள், இவ்விதம் லீட்ஸ் நிறுவனம் தமது கிராமத்தின் வளத்தை சுரண்டுவதோடு, தமது விவசாய நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, மடுக்கரையில் இருந்து மனனாருக்கு லீட்ஸ் நிறுவனத்தினால் ஐந்து உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட கூட்டெருவினை அங்கிருந்து கொண்டு செல்லாது தடுத்து நிறுத்திய மடுக்கரை மக்கள் மீது முருங்கன் பொலிஸார் கடுமையாகத் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், இது தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளளனர். இதேவேளை, மடுக்கரை விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மன்னார் அரசாங்க அதிபர் ஏ.நிக்கிலாஸ்பிள்ளை ஆகியோர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படை வீரர்களை நேரில் சந்தித்து இராணுவத் தளபதி நன்றி தெரிவிப்பு

kilinochchi-victory.jpgகிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்கு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேக வன்னிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்ற அவர் வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்துப் படைப்பிரிவுகளினதும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது கிளிநொச்சி வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய இராணுவ வீரர்களுக்கு இராணுவத்தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.எதிர்கால இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்பட்டதாகவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது

புலிகள் மீதான தடை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

0301-ltte.jpgவிடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமெனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவைக் கைப்பற்றிய பின்னர் புலிகள் அமைப்பை தடை செய்யவதென ஜனாதிபதி முன்னர் முடிவு செய்திருந்ததாகவும் இப்போது கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட்டதையடுத்து அதற்கு முன்பாக புலிகளை தடை செய்யும் சாத்தியம் இருப்பதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி “லங்கா டிசன்ற்’ நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகளை தடை செய்தால் அந்த அமைப்புடன் ஏதாவது தொடர்புகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சர்வதேச அமைப்புகளையும் தடை செய்வதற்கு ஏதுவான சட்ட மூலமும் நிறைவேற்றப்படுமென அந்த அமைச்சர் கூறியுள்ளார். 1979 இல் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு புலிகள் அமைப்பு மீது முதலாவது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 1994 இல் சமாதானப் பேச்சு வார்த்தை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தடையை நீக்கியிருந்தார். பின்னர் 1998 மார்ச் 21 இல் மீண்டும் அவசர கால ஒழுங்கு வீதிகளின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2001 டிசம்பரில் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் 2002 பெப்ரவரி 22 இல் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக புலிகள் மீதான தடையை நீக்கியது

அரச அலுவலகங்களில் நாளை தேசிய கொடியை பறக்க விடஅரசாங்கம் வேண்டுகோள்

kilinochchi-victory.jpg கிளிநொச்சியின் வெற்றிக்காக போராடிய படையினருக்கு நன்றி தெரிவித்தும் களமுனையில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் நோக்குடனும் நாளை 5 ஆம் திகதி திங்கட்கிழமை சகல அரசாங்க அலுவலகங்கள், கட்டிடங்களில் தேசியக் கொடி பறக்கவிடப்பட வேண்டும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. காலை 8.30க்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.

காலை 8.35 மணிக்கு நாட்டிற்காகவும் உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்தும் இரண்டு நிமிட நேரம் மெளனஞ்சலி செலுத்த வேண்டும். இயலுமானவரை மதத் தலைவர்களின் பங்களிப்புடன் மத அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றியும், களமுனையில் பெற்ற வெற்றியின் முக்கியத்துவம் பற்றியும் நிறுவனங்களின், திணைக்களங்களின் தலைவர்கள் உரை நிகழ்த்த வேண்டும். இந்த நடைமுறையை தனியார் துறை நிறுவனங்களும் கடைப்பிடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று வடக்கு, கிழக்கிலிருந்து மேல்மாகாணத்தில் வதிபவர்கள் குறித்த கணக்கெடுப்பு

police.jpgவடக்கு,  கிழக்கு பகுதியிலிருந்து மேல் மாகாணத்தில் 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வதிபவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை பொலிஸ் திணைக்களம் இன்று மேற்கொள்கின்றது. மேல் மாகாணத்திற்கு உட்பட்ட சகல பொலிஸ் பிரிவுகளிலும் இன்று காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இந்த கணக்கெடுப்பு பதிவுகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வதிபவர்களே இந்த பதிவுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

எனவே தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மேல் மாகாணத்தில் வதிபவர்கள் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் அனைவரும் தமது பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் நிலையங்களில் குறிப்பிடப்படும் நிலையங்களுக்குச் சென்று கணக்கெடுப்புக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களம் ஏற்கனவே மேற்கொண்ட கணக்கொடுப்பு நடவடிக்கை போன்றதே இந்த கணக்கெடுப்பு என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் குறி ப்பிட்டார். கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கு அந்தந்த பொலிஸ் பிரிவுகளினால் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடனே இந்த கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த எஸ்.எஸ்.பி. ரஞ்சித் குணசேகர, பதிவுக்கு வரும் மக்கள் எந்தவித தங்குதடையும், தாமதங்களுமின்றி அவசர அவசரமாக தகவல்களை வழங்கிச் செல்ல சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த விசேட நடவடிக்கை – மேலதிக பொலிஸார் கடமையில்

check1.jpgகொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

கிளிநொச்சி முழுமையாக மீட்கப் பட்டுள்ளதையடுத்து புலிகள் கொழும்பிலும் அண்டிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தலாம் என்பதாலேயே கொழும்பு நகரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மீட்கப்பட்ட நேற்று முன்தினம் விமானப்படை தலைமையகத்தின் முன்பாக தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ரயில், மற்றும் பஸ்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறினார். கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென முக்கிய இடங்கள் மற்றும் வீதிகளில் வீடியோ கெமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.