விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிசீலித்து வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமெனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவைக் கைப்பற்றிய பின்னர் புலிகள் அமைப்பை தடை செய்யவதென ஜனாதிபதி முன்னர் முடிவு செய்திருந்ததாகவும் இப்போது கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட்டதையடுத்து அதற்கு முன்பாக புலிகளை தடை செய்யும் சாத்தியம் இருப்பதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி “லங்கா டிசன்ற்’ நேற்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
விடுதலைப் புலிகளை தடை செய்தால் அந்த அமைப்புடன் ஏதாவது தொடர்புகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகள் சர்வதேச அமைப்புகளையும் தடை செய்வதற்கு ஏதுவான சட்ட மூலமும் நிறைவேற்றப்படுமென அந்த அமைச்சர் கூறியுள்ளார். 1979 இல் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு புலிகள் அமைப்பு மீது முதலாவது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 1994 இல் சமாதானப் பேச்சு வார்த்தை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தடையை நீக்கியிருந்தார். பின்னர் 1998 மார்ச் 21 இல் மீண்டும் அவசர கால ஒழுங்கு வீதிகளின் கீழ் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2001 டிசம்பரில் பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கம் 2002 பெப்ரவரி 22 இல் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக புலிகள் மீதான தடையை நீக்கியது