எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இந்திய விமானம் ஊடுருவியதாக வெளியான செய்தி பொய் – பிரதமர்

air.jpgகிளி நொச்சியை படையினர் கைப்பற்றும் போது இந்திய விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து நோட்டம்விட்டதாக வெளிவந்துள்ள செய்தியை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா மறுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் மேற்படி விடயம் தொடர்பான கேள்வியொன்றை கேட்டார்.

இந்திய விமானங்கள் கிளிநொச்சி வான்பரப்புக்குள் பறந்தவாறு நோட்டம்விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இலங்கை வான்பரப்புக்குள் இந்திய உளவு விமானங்களுக்கு வருவதற்கு அனுமதித்தது யார்? இவ்வாறான செய்தி பற்றி விளக்கமளிக்க முடியுமா என அனுரகுமார திஸாநாயக்க எம். பி. கேள்வி எழுப்பினார்.

பிரதமர் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பதிலளிப்பதற்காக எழுந்த பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க “பொய்யான செய்தி” எனக் கூறிவிட்டு அமர்ந்தார்.

வன்னிக்கான வழித்துணை சேவையில் மீண்டும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

கடந்த ஐந்து நாட்களின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் புதன்கிழமை அரச கட்டுப்பாடற்ற பகுதிக்கும் கட்டுப்பாட்டுப் பகுதிக்குமிடையில் வழித்துணை சேவையில் ஈடுபட்டது. படையினரும் விடுதலைப் புலிகளும் உறுதி மொழி வழங்கியதையடுத்தே வழித்துணை சேவையில் ஈடுபட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ரெரசி விஜேயவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன்,  புதன்கிழமை ஒன்பது அம்புலன்ஸுக்கு வழித்துணை வழங்கியதையடுத்து 47 நோயாளர்கள் சேவையைப் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இச்சேவை வியாழக்கிழமையும் வழங்கப்படும் பட்சத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான 40 உணவு லொறிகள் செல்லுமென அம்மாவட்ட செயலகங்களின் வவுனியா இணைப்பு கிளை அலுவலகங்கள் தெரிவித்தன. இது இல்லாதிருக்க உலக உணவுத் திட்டத்தின் லொறிகளும் வவுனியாவிலிருந்து வன்னிக்கு செல்லுமெனவும் தெரியவருகின்றது.

கடந்த சனிக்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வெளியான போதும் வன்னிக்கான வழித்துணை சேவை வழங்கப்படாததையடுத்து பாடசாலைகளுக்கான பரீட்சை முடிவுகள் தபால் மூலம் எடுத்துச் செல்லப்படவில்லை. இவையும் இன்று எடுத்துச் செல்லப்படலாமெனவும் தெரியவருகின்றது. பரீட்சை முடிவுகளை கடந்த சனிக்கிழமை கொழும்பு மற்றும் ஜெயவர்தனபுர கல்வி வலயப் பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் வழங்கிய நிலையில் ஏனைய கல்வி வலயங்களுக்கான பரீட்சை முடிவுகளை தபாலில் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

வேட்பு மனுத் தாக்கலின் பின் 8 தேர்தல் வன்முறைகள்

ballot-box.jpgதேர்த லைக் கண்காணிக்கும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்று புதன்கிழமை வரை 8 தேர்தல் வன்முறை சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இது குறித்து அவ்வியக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திகதியான டிசம்பர் 11 முதல் அறிவிக்கப் பட்டதையடுத்து  புதன்கிழமை வரை 8 தேர்தல் வன்முறைச் சம்பவங்களை பதிவு செய்துள்ளோம். இறுதி தேர்தல் வன்முறைச் சம்பவமாக புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் காரியாலயம் தாக்கப்பட்டு அங்குள்ள சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை இறுதியாக நாம் பதிவு செய்துள்ளோம். இத்தாக்குதலுடன் வடமேல் மாகாணத்தில் 3 வன்முறைகள் இடம் பெற்றுள்ள அதேசமயம் மத்திய மாகாணத்தில் 5 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளோம்.

தற்போதே வேட்பாளருக்கான இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தேர்தல் வன்முறை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதெனத் தெரிவித்தார்.

இலங்கையில் சமஷ்டித் தீர்வு முயற்சிகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும் – பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுநர் ராமதாஸ்

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மேசையில் விவாதிக்கக் கூடிய தேர்வுகளில் ஒன்றாக சமஷ்டி முறை கட்டமைப்பை உருவாக்குதல் அமையும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர். எஸ். ராமதாஸ் கூறியுள்ளார்.  “இந்து’ பத்திரிகைக்கு  செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் ராமதாஸ், சமஷ்டி முறைமை யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான மறைந்த அன்ரன் பாலசிங்கம் இருந்த போது இந்த யோசனைக்கு புலிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த யோசனை பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட வேண்டும். இந்தப் பாதையில் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இன நெருக்கடிக்கு தீர்வு காணும் முழு நடவடிக்கைகளிலும் விடுதலைப் புலிகள் உள்ளடக்கப்பட வேண்டும். விடுதலைப் புலிகளை அழித்ததன் பின்னர் இணக்கப்பாடு காண்பதென்பது முட்டாள்தனமானதாகும். தேர்வானது தமிழ் தாயக சுயாட்சியை கொண்டதாக இருக்க வேண்டும். இலங்கை அரசும் புலிகளும் பேச்சுவார்த்தையூடாக இதனை எட்ட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளை ராமதாஸ் பாராட்டியுள்ளார். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அவர் ஆட்சி நீடித்திருக்கவில்லை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையானது பல்லின, பல்மத, பல்கலாசார நாடென்பதை இலங்கைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியின் போது இதனை மனதில் கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் புலிகள் நம்பிக்கையானவர்களாக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்ட போது, நோர்வே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டது. புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது இதன் மூலம் இலங்கைத் தமிழரின் பிரதிநிதிகள் புலிகள் என்பதைக் காண முடிகிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார். இனநெருக்கடி தொடர்பாக இந்திய மத்திய அரசின் மனப்பாங்கு குறித்து ராமதாஸ் கவலை தெரிவித்தார். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது இப்பிரச்சினை தொடர்பாக அவர் கொண்டிருந்த உணர்வு தற்போதைய ஆட்சியாளரிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழரின் நியாயபூர்வமான உரிமைகள் என்ற ரீதியிலேயே இப்பிரச்சினை தொடர்பாக அக்கறை காட்ட வேண்டும். பயங்கரவாதமென்ற கோணத்தில் பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு என்று இந்திய அரசு காலத்துக்குக் காலம் கூறி வருகின்ற போதும் அதன் கொள்கை மாறவில்லை எனவும் வார்த்தைகள் செயலில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இப்பிரச்சினையின் பாரதூரமான நிலைமை குறித்து போதியளவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாகவும் ஆனால், முழுக் கொள்கையையும் சில அதிகாரிகளே தீர்மானிப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழீழம் உருவாக்கப்படுவது இந்தியாவுக்கு கேந்திர உபாய ரீதியான அனுகூலமாக அமையுமென குறிப்பிட்ட அவர், இலங்கை இந்தியாவின் நண்பனாக இல்லையெனவும் பாகிஸ்தான் அல்லது சீனா அல்லது அமெரிக்கா இலங்கைக்கு முன்னுரிமைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேசத்தை கட்டியெழுப்பும் நிதி பயன்படுத்தப்படும்’

ranjith-shiyambalapitiya.jpgவிடு தலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி அம்மக்களுடனான சகோதரத்துவத்தைப் பலப்படுத்துவதற்காகத் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி உபயோகப்படுத்தப்படுமென நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதே வேளை, தற்போதுள்ள சகல சவால்களுக்குள்ளும் இவ்வருடத்திற்கான அரச வருமானமாக 850 பில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று தேசத்தைக் கட்டியெழுப்பு வதற்கான வரி அறவீட்டுச் சட்டமூலத்தைச் சபையில் சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி நூற்றுக்கு ஒரு வீதமாக அறவிடப்படவுள்ளதுடன் ஆறரை இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட புரள்வுக்கே இவ்வரி அறவிடப்படுவதுடன் சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து இவ்வரி அறவிடப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேற்படி வரிச் சட்டமூலம் தொடர்பாக மேலும் விளக்கிய அமைச்சர்:-

இலங்கைக்கான அன்னியச் செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் சகல ஏற்றுமதிகளுக்கும் இவ்வரி விலக்குச் செய்யப்படவுள்ளது. அத்துடன் சகல அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கும் இவ்வரி விலக்குச் சலுகை வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும்போது விசேட வர்த்தகப் பொருட்கள் வரி முறைமை நடைமுறையிலுள்ளது.

இந்த வரிமுறைமையின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சகல அத்தியாவசியப் பொருட்களுக்கும் இவ்வரி விலக்கு உரித்துடையது. இதற்கு மேலதிகமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களுக்கும் இவ்வரிவிலக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கிணங்க, விவசாயிகளுக்கான உரவகை, எரிபொருள், சமையல் எரிவாயு, சகல மருந்துப் பொருட்கள் ஆகியவற்றிற்கும் இவ்வரி விலக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் அன்னிய செலாவணியைப் பெற்றுத்தரும் சேவைகளுக்கும் இவ்வரி விலக்கு வழங்கப்படும்.  நாட்டிலுள்ள வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்திற்குச் செய்யும் பங்களிப்பினைக் கருத்திற் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் ஆயுள் காப்புறுதித் திட்டங்களுக்கும் இவ்வரிவிலக்கு உரித்துடையதாகிறது. இலங்கையின். தேயிலைத்துறை தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதைக் கருத்திற்கொண்டு தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளிலும் இவ்வரி விலக்கு உட்படுகிறது.

பயங்கரவாதத்தினால் சீர்குலைந்து போயுள்ள வடக்கின் ரயில்சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் வடக்கிற்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் யாழ்.தேவி வடக்கிற்குச் செல்லும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை மீண்டும் புலிகள் மீட்டெடுப்பர் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர் நம்பிக்கை

kili-05.jpgவிடு தலைப் புலிகளின் தலைநகராக கருதப்பட்ட கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.இருப்பினும், புலிகள் மீண்டும் கிளிநொச்சியை மீட்பர் என்ற நம்பிக்கை அவர்களிடையே காணப்படுகின்றது என ஏ.என்.ஐ. செய்திகள் தெரிவித்தன. இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி கொட்டப்பட்டு போன்ற முகாம்களில் அகதிகளாகவுள்ள மக்களே இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.

அங்கு அகதியாக வாழும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; இந்தப் போரினால் அதிகமான கஷ்டங்களை அனுபவித்தவர்கள் பொதுமக்களே. அகதிகளாக இடம்பெயர்ந்து வந்த பின்னர் கூட அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாழ வேண்டியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டமான நிலையே. புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையேயான இந்த சிவில் யுத்தமானது ஆசியாவிலே மிக நீண்ட காலமாக இடம்பெற்று வருவதாகும். இது 1983 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமை புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பே. அவர்களின் முக்கிய பாதுகாப்பு அரணாகவும், பொருளாதார மத்திய நிலையமாகவும் கிளிநொச்சி காணப்பட்டது. ஆனால், தற்போது குண்டுகள் துளைத்த கட்டிடங்களுடனும் இடிபாடுகளுடனும் பாலைவனமாய் காணப்படுகின்றது. சிறுபான்மை தமிழருக்காக புலிகளால் கேட்கப்பட்ட தனிநாட்டின் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற இராணுவத்தினருக்கு பல மாதங்கள் தேவைப்பட்டன.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலைக்கு ஜனாதிபதி வன்மையான கண்டனம்

presidentmahinda.jpgசண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்க அவர்களின் படுகொலையை நானும் எனது அரசாங்கமும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  ஒரு துணிச்சல் மிக்க பத்திரிகையாளரும் பலவருடங்களுக்கும் மேலாக எனக்கு மிகவும் அறிமுகமான எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான திரு.விக்கரமதுங்கவின் அகால மரணம் எனக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.

இது எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான செயலாகும். எமது நாடு பயங்கரவாதத்திடமிருந்து தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான மிலேச்சத்தனமான செயல் நடைபெற்றிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

இக்காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விசாரித்து உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துமாறு நான் பொலிஸாரை பணித்துள்ளேன்.  கவலையான இச்சந்தர்ப்பத்தில் திரு.விக்கிரமதுங்க அவர்களின் குடும்பத்தாருக்கும் சண்டே லீடர் பத்திரிகை அலுவலக ஊழியர்களுக்கும் பத்திரிகைத்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறான கோழைத்தனமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடக சுதந்திரத்தையும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் உறுதியாகப் பாதுகாப்பதற்கு எனது அரசாங்கம் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. : த ஜெயபாலன்

lasantha-02.jpgஇலங்கை அரசாங்கம் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் தொடர்பாகவும் மிகுந்த விமர்சனத்தைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நாளாந்த நிகழ்வுகளாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தற்போது உள்ளது என்பதை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.

இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க பி.பகல. 2 மணியளவில் மரணமடைந்தார்.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெகிவளை – அத்துருகிரிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் லசந்த விக்கிரமதுங்க மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் கடுமையான காயமடைந்த அவர், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் “மோர்ணிங் லீடர்” வார ஏட்டின் ஆசிரியராகவும் லசந்த விக்கிரதுங்க உள்ளார்.

சண்டேலீடர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மூலம் தனது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ச வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ‘மிக்’ விமான கொள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக அவதூறான செய்திகள் வெளியிட்டதால் தனக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்த கோதபாய ராஜபக்ச லண்டே லிடர் வெளியீட்டாளர்களுக்கும் அதன் ஆசியிரயர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எதிராக வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கில் கோதாபய ராஜபக்ஷ பற்றிய செய்திகளை வெளியிடக் கூடாதென “சண்டே லீடர்’ பத்திரிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நீதிமன்றத்தின் இவ்வுத்தரவைக் கண்டித்த பாரிஸை தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (Reporters Without Border) ‘இலங்கையில் ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகள் பெரும் கவலையளிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளையும் ஒளி, ஒலிபரப்பு மற்றும் பிரசுரம் செய்யும் உரிமை ஊடகங்களுக்கு உண்டு.’ என அப்போது தெரிவித்து இருந்தது.

சண்டெ லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு 24 மணிநேரத்திற்கு முன் ஜனவரி 6 அன்று மகாராஜா நிறுவனத்தின் சிரச தொலைக்காட்சி தாக்குதலுக்கு உள்ளானது. மேலும் கடந்த ஆண்டு சண்டே லீடர் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டதும் தெரிந்ததே.

இலங்கையில் கடந்த இரு தசாப்தங்களில், 50 க்கும் அதிகமான ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் நேரடியாக தமது கருத்துக்களுக்காக கொல்லப்பட்டமை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக War of Words : Freedom of Expression in South Asia – May 2005 அறிக்கையில் Article 19  என்ற ஊடக உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
 
Reporters Without Border அமைப்பு நாடுகளை பத்திரிகைச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தியுள்ளது. 167 நாடுகளைக் கொண்ட 2005ம் ஆண்டு வரிசைப்படுத்தலில் இலங்கை 115வது இடத்தில் உள்ளமை இலங்கையில் ஊடகங்களின் நிலையை விளங்கிக் கொள்ள உதவும்.

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையைக் கண்டித்தும் ஊடகங்கள் ஊடகவியலாளருக்கு எதிரான தாக்குதலுக்கு மற்றுப்புள்ளி வைக்கவும் கோரும் அடையாளப் போராட்டம் ஒன்றை செய்வதற்கு தேசம்நெற் முயற்சிக்கிறது. மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ரயில் பாதை அருகில் சிறிய குண்டு வெடிப்பு

கல்கிசை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையோரத்தில் நேற்று இரவு சிறிய குண்டொன்று வெடித்துள்ளது. தெஹிவளை ரயில் நிலையத்திற்கும் கல்கிசை ரயில் நிலையத்திற்குமிடையில் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரிக்கு சமீபமாக ரயில் பாதை அருகில் இரவு 7.05 மணியளவில் இந்தச் சிறிய குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்த போது ரயில் பாதையில் ரயில் எதுவும் செல்லாத அதேநேரம், குண்டு வெடிப்பால் ரயில் பாதைக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. குண்டு வெடித்ததையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு படையினரும் பொலிஸாரும் வந்து சேர்ந்ததுடன் கரையோரப் பகுதியூடான ரயில் போக்குவரத்தையும் நிறுத்தினர். இதையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் தேடுதல்களையும் நடத்தினர். சில மணிநேரத்தின் பின் ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

ரோ உளவுப்படையைச் சேர்ந்த விமானம் கிளிநொச்சியை வான் வழி ஆய்வு செய்தது?

air.jpgகிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய அடுத்த நாள், இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று பாக்கு நீரினைப் பகுதியில் இரகசிய வான் வழி ஆய்வை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசின் உத்தரவுப்படி இந்த இரகசிய வான் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  ரோ உளவுப் பிரிவின் வான்வெளி ஆய்வு மையத்திற்குச் (Air Research Centre- ஏ.ஆர்.சி.) சொந்தமான விமானம் மூலம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த விமானம் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றுள்ளது. இந்த இரகசிய ஆய்வை, இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின்படி ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து ரோ உளவுப் பிரிவின் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதி நவீன கருவிகளுடன் கூடிய அந்த உளவு விமானம், இலங்கை கடற்கரைக்கு மிக அருகே தாழ்வாக பறந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. பின்னர் மீண்டும் சென்னை திரும்பாமல் வேறு ஒரு விமான நிலையத்திற்கு அந்த விமானம் போய் விட்டதாக தெரிவிக்கிறது

ஏ.ஆர்.சியிடம் போயிங், கல்ப்ஸ்ட்ரீம் மற்றும் எம்பிரேயர்ஸ் ரக விமானங்கள் உளளன. இந்த விமானங்களில் அதிக உயரத்தில் பறந்தபடி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் 40 ஆயிரம் அடி உயரம் வரைக்கும் பறக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சாட்டிலைட் கேமராக்களுக்கு இணையான துல்லியத்துடன் செயல்படக் கூடியவை. அடர்ந்த மேகக் கூட்டமாக இருந்தாலும் கூட அதைத் துளைத்துக் கொண்டு இலக்கை சரியாக கணித்து துல்லியமாக படம் பிடித்துக் காட்டும். 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும் கூட, தரையில் நடக்கும் ஒரு நபரையோ அல்லது ஒரு வாகனத்தையோ மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது இந்த வகை கேமராக்கள்.

ஏ.ஆர்.சியின் விமானங்களை ஓட்ட தனியாக பைலட்டுகள் உள்ளனர். இந்திய விமானப்படை விமானிகள் கூட இந்த வகை விமானங்களை ஓட்டுவதற்கு அழைக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக ரகசியமான பணி என்பதால் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமானப்படை விமானங்களை ஏ.ஆர்.சியின் விமானங்கள் பயன்படுத்திக் கொள்வது வழக்கம். இதற்கென தனியாக விமான நிலையம் எதுவும் கிடையாது.

சென்னைக்கு ஏ.ஆர்.சி. விமானம் வந்தது கூட ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. எங்கிருந்து வந்தது என்பது கூட விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் படவில்லையாம். இலங்கையின் கோரிக்கையின்படியே இந்த உளவு வான் வழி ஆய்வை ரோ உளவுப் பிரிவு மேற்கொண்டதாக நம்பப்படுகிறது.