எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

போர்க் குற்றங்களிலிருந்து இஸ்ரேலிய படைவீரர்களை அரசாங்கம் பாதுகாக்கும் -இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு

gaa-sa.jpgகாஸா மீதான படை நடவடிக்கை தொடர்பில் எந்தவொரு இஸ்ரேலிய படைவீரர் மீதும் போர்க்குற்றம் சுமத்தப்பட்டால் இது தொடர்பான விசாரணைகளிலிருந்து இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்குமென அந்நாட்டுப் பிரதமர் எஃகுட் ஒல்மேர்ட் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டைப் பாதுகாத்த அவர்களின் நடவடிக்கைக்காக இஸ்ரேல் அவர்களைப் பாதுகாக்கும் என்பதை இராணுவத்தினர் அறிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 நாட்களாக நடைபெற்ற காஸா மீதான தாக்குதல்களில் 1300 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ள நிலையில் இங்கு போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கு சுயாதீன விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஐ.நா. அதிகாரிகள் விரும்புகின்றனர். வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஒல்மேர்ட் நாட்டின் தேவைக்காக சாவின் விளிம்புக்கு தமது வாழ்வை அர்ப்பணித்த இராணுவ வீரர்கள் கடல்கடந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட படைவீரரும் தளபதிகளும் எம்மைப் பாதுகாத்துள்ளனர். இதற்காக எவ்வித விசாரணைகளிலிருந்தும் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கும் என்பதனையும் இவ்விடயம் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களுக்கு உதவும் என்பதையும் இராணுவ வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்ட அதிகளவான உயிரிழப்புக்களினால் இஸ்ரேலிய இராணுவ தந்திரோபாயங்கள் கடும் கண்டனங்களுக்குள்ளாகியுள்ளன. கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பொஸ்பரஸ் குண்டுகளை வீசியமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மனித உரிமைக் குழுக்கள் முறையிட்டுள்ளன.
வெண்ணிற பொஸ்பரஸை பயன்படுத்தியமையை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டபோதும் சர்வதேச சட்டங்களை தான் மீறவில்லையெனத் தெரிவிக்கின்றது.

போராட்ட களங்களில் புகையை உருவாக்குவதற்காக வெண்ணிற பொஸ்பரஸ் பயன்படுத்துவது சட்டரீதியாக்கப்பட்டுள்ள அதேவேளை, இஸ்ரேல் இதனை மக்கள் குடியிருப்புக்கள் மீது பயன்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்களும் செய்தியாளர்களும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் எகிப்திய மத்தியஸ்தர்களுக்கு 18 மாதகால போர்நிறுத்தமொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ள அதேவேளை, ஹமாஸ் ஒரு வருட போர்நிறுத்தத்தை பிரேரித்துள்ளது.நீண்டகால போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்தும் பேச்சுக்களுக்காக ஹமாஸ் தூதுக்குழு எகிப்தை சென்றடைந்துள்ளது.

கம்பளையில் திடீர் மண்சரிவு- 44 வீடுகள் பாதிப்பு;

28-01.jpgகம்பளை தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கம்பளவெல முஸ்லிம் கிராமத்தில் மகாவலி கங்கை ஓரமாக இடம்பெற்ற மண்சரிவில் 44 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை இடம் பெற்ற இந்த ஆற்றங்கரையோர மண்சரிவு காரணமாக 44 வீடுகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அக் குடும்பங்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கம்பொலவெல சிங்கள கனிஷ்ட பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற அமைச்சர் டி. எம். ஜயரத்ன ஸ்தலத்துக்கு விரைந்து தற்காலிகமாக பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு உலர் உணவுகளை வழங்க துரித நடவடிக்கை எடுத்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அனைவரும் கம்பொலவெல முஸ்லிம் பள்ளி வாசல் சூழலில் வசிப்பவர்களாவர். கம்பொலவெல பாதையும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் போக்குவரத்திற்காக மாற்று வழியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகாவலி கங்கை ஓரமாக உள்ள நிலப்பரப்பில் இந்த வீடுகள் அமைந்திருப்பதால் சட்டத்தையும் மீறிய நிலையில் பலர் மணல் அகழ்வு வேலையில் ஈடுபட்டதன் எதிரொலியாகவே இந்த மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளை இழந்தவர்களுக்கு அப்பிரதேசத்தின் அருகே காணிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜயரட்ன தெரிவித்தார். இந்த அனர்த்தத்தைக் கேள்விப்பட்டதும் மின்சக்தி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயும் அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

‘துரோகத்தை மூடி மறைக்கவே பிரணாப் கொழும்பு பயணம்’- வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை

22-vaiko.jpgதமிழ் இனத்தை அழிக்க முற்படும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை :

“விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச் செய்திகள் தாக்குகின்றன.

தன்னுடைய குடிமக்கள் மீது ‌விமான‌ங்ககளில் வந்து குண்டு வீசித் தாக்கும் மாபாதகத்தை, அடாஃல்ப் ஹிட்லருக்குப் பின்னர் உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத கொடூரத்தை, இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதைச் சொன்னதற்காகத்தான், இலங்கையின் ‘சண்டே லீடர்’ ஆங்கிலச் செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்த விக்கிரமதுங்க, ராஜபக்ச ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வார காலமாக முல்லைத்தீவு பகுதியில் சிங்கள வான்படையும், ராணுவமும் நடத்தும் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள்.

இத்தனை லட்சம் மக்கள் அவதிப்படும் முல்லைத்தீவில், இந்திய அரசு கொடுத்துள்ள குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைத்தான் சிங்கள ராணுவம் பயன்படுத்தி, இடைவிடாது எறிகணைகளை வீசுகிறது.

நேற்று, வல்லிபுனம் கோவிலுக்கும், மூங்கிலாறு பகுதிக்கும் இடையில், உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளிலும், சிங்கள ராணுவம் நடத்திய கோரத் தாக்குதலில், தாய்மார்கள், குழந்தைகள் உ‌ட்பட அப்பாவித் தமிழ் மக்கள் 500 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால், ‘இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி’ என்று ராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற 2,000-க்கும் அதிகமான மக்கள், முதலுதவி கூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுகச் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து உள்ளார்.

எனவே, தமிழ் இனத்தை அழிக்க முற்படும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கடந்த மூன்று மாத காலமாக போர் நிறுத்தம் என்று ஒப்புக்குக்கூட மத்திய அரசு சொல்லவில்லை. அதைவிட, ‘அது எங்கள் வேலை அல்ல என்று ஆணவத்தோடு சொன்ன பிரணாப் முகர்ஜி, இன்று திடீரென்று கொழும்பு செல்ல வேண்டிய மர்மம் என்ன?

உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுங்கும் நெஞ்சோடு, கண்ணீர் விட்டுக் கதறும், துயரம் சூழ்ந்து உள்ள இந்த நேரத்தில், திடீரென்று விடுதலைப் புலிகளுக்கு பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500 -க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததற்கு இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?

தமிழக மக்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக, அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, புதிதாக ஏதோ ஞானோதயம் ஏற்பட்டதைப் போல் பிரணாப் முகர்ஜி, கொழும்பு செல்லும் முன் கூறுகிறார்.

ஐந்தரை லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கும் முல்லைத்தீவில், இடைவிடாத தாக்குதலும், வான் குண்டுவீச்சையும் சிங்கள அரசு நடத்துகையில், அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் பேரழிவு ஏற்படும் என்பது, பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தமிழ் இனத்தையே கரு அறுக்கத்தானே ராஜபக்சே இந்தத் தாக்குதலை நடத்துகிறான்? அதனால்தான், அகங்காரத்தோடு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைய வேண்டும் என்று கொக்கரிக்கிறான்.

இப்பிரச்சனையின் பின்னணியை, உண்மை நிலையைத் தமிழக மக்கள், உணர வேண்டும் என்பதற்காக,சில சம்பவங்களை இதோ பட்டியல் இடுகிறேன்:

இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, ராணுவத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, இந்திய அரசு நான்கு ஆண்டுக்காலமாக, ஒரு கொடிய உள்நோக்கத்தோடு, ராணுவ உதவிகளைச் செய்து வந்து உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொறுப்பு ஏற்ற உடன், முதல் வேலையாக சிறிலங்காவுடன் ராணுவ ஒப்பந்தம் போட முனைந்ததும், அதைத் தடுப்பதற்குப் பல வழிகளிலும் நாம் போராடியதன் விளைவாக, அந்த ஒப்பந்தம் போடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை இந்தியா நிறைவேற்றும் என்று, அந்தச் சமயத்திலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் சொன்னதை, தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் இந்திய அரசு செய‌‌ல்படுத்தி வந்துள்ளது.

சிறிலங்கா ‌விமான‌‌ப்படைக்கு ராடா‌ர்களைக் கொடுத்து, சிங்கள ‌விமா‌னிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தந்து, இந்திய ‌விமான‌ப்படையின் தொழில்நுட்பப் பிரிவினரை இலங்கைக்கே அனுப்பிவைத்ததோடு, பலாலி ‌விமான தளத்தை இந்திய அரசின் செலவிலேயே பழுது பார்த்தும் கொடுத்தது.

சிறிலங்கா கடற்படையுடன் இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொண்டதோடு, சிங்களக் கடற்படையினருடன் இணைந்தே கடற்புலிகளின் படகுகள் மீதான தாக்குதலிலும் உதவி, புலிகளுக்குப் பொருட்கள் கொண்டுவந்த கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தி, புலிகளின் மரக்கலங்களைக் கடலில் மூழ்கடித்தது.

குறைந்த தொலைவு தாக்கும் ஏவுகணைகளையும், ராணுவத் தளவாடங்களையும் சிங்களத் தரைப்படைக்கும் வழங்கியது.

வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்து, சிங்கள அரசு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலிடம் கப்பல் கப்பலாக ஆயுதங்களும், போர் ‌விமான‌ங்களும் வாங்குவதற்கும் வழிசெய்து, சிங்கள ராணுவத்தினருக்கும், ‌விமான‌ப்படையினருக்கும் பயிற்சியும் கொடுத்தது.

1987 தொடங்கி 89 வரை, இந்திய ராணுவத்தை அனுப்பி, ஈழத் தமிழர்களின் உரிமைப் படை அணியான விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமன்றி, அப்பாவித் தமிழர்கள் பலர் சாவுக்கும் காரணமான இராணுவத் தாக்குதல் நடத்திய துரோகத்தைவிடக் கொடூரமான முறையில், வஞ்சகமாக இந்திய அரசு இலங்கைத் தீவில் தமிழர் இன அழிப்பு போரில் பங்காளியாகச் சேர்ந்து, இப்போது, படு நாசத்தையும் ஏற்படுத்தி விட்டது

அதனால்தான், கடந்த மூன்று ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் மத்திய அரசு துரோகம் செய்கிறது என்பதையும், அங்கு விழுகின்ற ஒவ்வொரு தமிழனின் பிணத்துக்கும், அவன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்று உள்ள கட்சிகளில் முக்கியமாக இன்று தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வும்தான் பொறுப்பாளி ஆவார்கள் என்று குற்றம் சாட்டி வந்து உள்ளேன்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை, இந்திய அரசு அவமதித்து உதாசீனப்படுத்தியது.

இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களின் காவல் அரணான விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க, சிங்கள அரசோடு சதித்திட்டம் வகுத்து இந்திய அரசு செயற்பட்டதும், தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் மட்டும் அல்ல, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களைக் காவு கொடுக்கின்ற வடிகட்டிய முட்டாள்தனமும் ஆகும்.

சிங்கள மண்ணில், பாகிஸ்தானும் சீனாவும் கால் பதித்து விட்டன.இந்தியாவின் தென்முனையில், இந்தியாவுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களை, அடிமை இருளிலே தள்ளுவதால், இயல்பாக ஏற்படும் தற்காப்பு அரணையும் உடைத்துவிட்டு, எதிர்காலத்தில் தென்முனையிலும் பகை நாடுகளின் ஆபத்தை வலியத் தேடி இந்திய அரசு உருவாக்குகிறது.

துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய ராணுவ டாங்கிகளையும், 3,000 ராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது.

இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான ராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அரசு செய்து வந்து உள்ள துரோகங்களையும் நினைக்கையில், இந்தக் கொடிய துரோகத்தை இந்தியா செய்து இருக்கவும் கூடும் என்ற எண்ணமே வலுக்கிறது.

மொத்தத்தில் ராஜபக்சே அரசு நடத்துகின்ற இன அழிப்பு போரை பின்னால் இருந்து இயக்கி வந்து உள்ள இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒரு கொடூரமான குறிக்கோளுடன், தீங்கான நோக்கத்துடன், ஆலகால விஷம் நிறைந்த வஞ்சக சதித்திட்டத்தைத் தீட்டி, அதனைச் செயல்படுத்துகிறது என்ற உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாகாண சபைகள் இவ் வாரம் கலைக்கப்படும்?

lanka-map-02.jpgஇந்த வாரத்தினுள் மேலும் இரு மாகாண சபைகள் கலைக்கப்படலாமென அரசுதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ் வாரத்தின் இறுதிப் பகுதியில் மேல் மாகாண மற்றும் ஊவா மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரச உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை தென்மாகாண சபையை சிறிது காலம் தாமதித்து கலைப்பதற்கும் அரசு உத்தேசித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்

vote.jpgமத்திய மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக மத்திய மாகாணசபை கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். கண்டி மஹிய்யாலையில் அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்திய மாகாண முஸ்லிம்களின் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகின்றது. இதனை நிரப்ப கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் முடியவில்லை. இவ்வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் சிறந்த சேவையை முன்னெடுப்பது எனது நோக்கமாகும். மத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

கிழக்கு மற்றும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளில் அரசு பெற்ற வெற்றி இம்மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான அறிகுறியாவவே உள்ளது. நாட்டில் யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எனவே நாட்டில் சகல இனமக்களும் சமாதானமாக வாழும் காலம் உருவாகும் என்றார்.

பிரபாகரனை தேடிக்கண்டுபிடிக்க இலங்கைக்கு உதவியளிக்கும் இந்தியா

army-1401.jpgவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தேடிக்கண்டு பிடிப்பதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உதவியளித்து வருவதாக “ஏசியன்ஏஜ்’ பத்திரிகை நேற்று முன்தினம் திங்கட் கிழமை தெரிவித்துள்ளது. பாக்கு நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மாத்திரமன்றி, விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் இறுதித்தளமாக இருந்த முல்லைத்தீவின் நகர் பகுதிக்குள் இலங்கை இராணுவம் பிரவேசித்ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத் தகவலை தெரிவித்துள்ளன. “இந்திய கடற்படை எமக்கு சிறப்பான விதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. அத்துடன், இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல்கள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான இந்தியாவின் உதவி மட்டுப்படுத்தப்படாத அளவுக்கு உள்ளது. மேலும் இந்திய இலங்கை முகவரமைப்புகள் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன’ என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன், இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிவழங்குவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் முல்லைத்தீவு காடுகளுக்குள் இருப்பதாக நம்பப்படுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. (கருணா) தெரிவித்துள்ளார். ஆனால்,கடல்வழியால் பிரபாகரன் சென்றிருக்கும் சாத்தியத்தை இங்கே பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை. பிரபாகரன் செக் தயாரிப்பான சிலின் 143 ரக விமானத்தில் சென்றிருக்கலாமெனவும் ஏனைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முல்லைத்தீவு நகரை படையினர் கைப்பற்றிய செய்தி தொடர்பாக மட்டக்களப்பு பகுதியிலுள்ள கிராமவாசிகள் நம்பிக்கொள்ளாமல் இல்லை. ஆனால், புலிகளின் கடைசி தளத்தில் இராணுவம் பிரவேசித்திருப்பது அமைதியைகொண்டு வருமா என்பது தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இராணுவ வெற்றியை தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெறும் வரை பிரச்சினை தொடர்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத மட்டக்களப்பு நகரைச்சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ஏசியன் ஏஜின் நிருபருக்கு கூறியுள்ளார். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாணாவிடின் பிரபாகரன் இருந்தாலோ இல்லாவிடிலோ எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் மேலும் கறியுள்ளார்.

“இராணுவ நடவடிக்கை முடிவுறும் நிலை ஆனாலும் மோதல் தொடரும்’

truck.jpgமரபு ரீதியான யுத்த ஆற்றலை இழந்திருக்கும் விடுதலைப் புலிகள் கெரில்லா உபாயத்தைப் பயன்படுத்திப் போரிடுவார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இராணுவத்தின் நடவடிக்கை முடிவுறும் நிலைக்கு வந்து விட்டது. ஆனால், மோதல் தொடரும் என்று கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத் தலைவரான கலாநிதி ஜயதேவ உயன்கொடவை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.

முன்னர் இருந்தது போன்று அரசியல் மற்றும் இராணுவ ரீதியான பலத்தை புலிகள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆதலால் அவர்கள் கெரில்லா தந்திரோபாயத்திற்கு திரும்புவார்கள் என்றும் உயன்கொட தெரிவித்துள்ளார்.  அதேவேளை, புலிகள் தற்போதும் கணிசமான அளவுக்கு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்பை கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் கெரில்லாப் போருக்கு நிதியுதவி பெற்றுக்கொள்ளக்கூடும் என்றும் முன்னாள் இலங்கை இராஜதந்திரியான நந்தகொடகே கூறியுள்ளார். மோதலின் ஆரம்ப நாட்களில் இருந்த பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றை நாம் எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விதியே எதிர்கால கெரில்லா போராளிகளுக்கு ஊக்குவிப்பளிப்பதற்கான முக்கியமான காரணியாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

risard.jpgமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் றிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் டிக்ஸன்தால ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது :- முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் வசிக்கும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசாங்கம், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான சம்பவங்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்வரை தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். கண்ணி வெடிகள் அகற்றும் பணியினை பாதுகாப்புத் தரப்பு மேற்கொள்ளும்வரை இவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் எவ்வித குறைவுமின்றி பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி எம்மைப் பணித்துள்ளார். மின்சாரம், குடிநீர், சுகாதாரம், பாடசாலை வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இன்னும் சில தினங்களில் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரலாமென்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய கவனம் செலுத்த முடிந்ததாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.

விடுதலைப்புலிகள் மீது கருணை கிடையாது – பிரணாப்

pranaf.jpgவிடுதலைப்புலிகள் இயக்கம் மீது எந்தவிதமான கருணையும் கிடையாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  இலங்கை பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த பிரணாப் இன்று இலங்கை புறப்பட்டார். புறப்படும் முன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகளுக்கும் அனைத்து வகையான தீவிரவாதங்களுக்கும் எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த விதமான தீவிரவாத இயங்கங்களிடத்திலும் கருணை கிடையாது. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கம்.  இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றார்.

பிரணாப் முகர்ஜியை இலங்கை வருமாறு நான்தான் அழைத்தேன்.

mahinda20-01.jpg
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கை வருமாறு நான்தான் அழைத்தேன். அதை ஏற்றுத்தான் அவர் கொழும்பு வருகிறார் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்

அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்குச் செல்கிறார். விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்துவதற்காக தான் செல்லவில்லை என்றும், புலிகள் மீது இந்திய அரசுக்கு ஒருபோதும் இரக்கம் பிறக்காது என்று அறிவித்துவிட்டே இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார் பிரணாப்.

இந்நிலையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய இறுதித் தீர்மானத்தை மதித்துதான் பிரணாப் இலங்கை வருகிறார் என்று செய்திகள் பரப்பப்பட்டன. மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் கருணாநிதியிடமும் இதே தகவலைத்தான் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இதையே முதல்வரிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் புலிகளுடனான போரில் தாங்கள் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்து நடக்க வேண்டியவை குறித்து விவாதிக்கவுமே பிரணாப் முகர்ஜியை நாங்கள் இலங்கைக்கு அழைத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கூறியுள்ளார். இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.