மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் றிஷாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் டிக்ஸன்தால ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது :- முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் வசிக்கும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்கள் அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரசாங்கம், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபிமான சம்பவங்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவரும் மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்வரை தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். கண்ணி வெடிகள் அகற்றும் பணியினை பாதுகாப்புத் தரப்பு மேற்கொள்ளும்வரை இவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் எவ்வித குறைவுமின்றி பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி எம்மைப் பணித்துள்ளார். மின்சாரம், குடிநீர், சுகாதாரம், பாடசாலை வசதிகள் மற்றும் ஏனைய வசதிகள் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
இன்னும் சில தினங்களில் முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரலாமென்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்ய கவனம் செலுத்த முடிந்ததாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கூறினார்.