வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ள பொதுமக்களின் பிள்ளைகளுக்கான இரண்டு தற்காலிக பாடசாலைகள் திங்கட்கிழமை முதல் வவுனியா மனிக்பாம் முகாமில் இயங்கவுள்ளன. மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்களுக்கு கல்விகற்கக் கூடிய விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்குத் தேவையான சீருடைத் துணிகள், பாடநூல்கள், பாடசாலை உபகரணங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதுடன் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களும் அன்றைய தினமே தற்காலிக கொட்டில்களுக்கு வழங்கப்படும் என வவுனியா கல்வி வலய பணிப்பாளர் திருமதி வீ. ரஞ்ஜனி எ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.
மனிக்பாம் முகாமில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக தற்காலிக கொட்டில்களில் மேற்படி பாடசாலைகள் இயங்கவுள்ளன.
கல்வி அமைச்சின் அனுமதி மற்றும் நிதி கிடைத்தவுடன் தற்காலிக பாடசாலைகள் விரைவில் அமைக்கப் பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார். திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகின்றபோதும் முகாமிலுள்ள மாணவர்கள் சீருடையின்றி வர்ண ஆடை யுடனேயே பாடசாலைக்குச் சமுகமளிக்கலாமென்றும் அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் சீருடைத் துணிகளை முகாமுக்குள்ளேயே தைக்கக்கூடியவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு தைத்துக் கொடுக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. முகாமுக்குள் 15 ஆசிரியர்கள் இருக்கின்றபோதும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து வேறு பகுதிகளில் தங்கியுள்ள சுமார் 255 ஆசிரியர்களுள் சிலரையும் மனிக்பாம் முகாம் பாடசாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மேலும் வன்னியிலிருந்து சுமார் 85,000 மாணவர்களும், 2500 ஆசிரியர்களும் வரவேண்டியுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தரவுகள் தெரிவிக்கின்றன.