விரைவில் ஏனைய மாகாண சபைகளையும் கலைத்து தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
முதலில் இரண்டு மாகாண சபைகளையோ அல்லது மூன்றையும் ஒரே தடவையிலோ கலைக்கப்படலாம். தமிழ்- சிங்கள புதுவருடத்திற்கு முன்னர் தேர்தலை நடத்தும் வகையில் இம் மாகாணசபைகள் கலைக்கப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லையெனவும் தேவையேற்படின் விரைவில் பொதுத் தேர்தலும் நடத்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கும் செய்தியாளர் மாநாடென்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் காமினி லொக்கே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம். பி. ஆகியோர் கலந்து கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்ததாவது,
வடமாகாணம் முழுமையாக மீட்கப்பட்ட பின் அங்கும் தேர்தல் நடத்தப்படும். எனினும் கிழக்கைப் போன்று ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அப்பகுதியின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும். பல பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. முதலில் மக்களின் பாதுகாப்பான இயல்பு வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். அதனையடுத்து முதலில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலே நடத்தப்படும் அதன் பின்னர் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும்.
கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது போன்று வடக்கும் அபிவிருத்தி செய்யப்படும். கல்வித்துறையைப் பொறுத்தவரை கிழக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று வடக்கிற்கும் கல்வித்துறை அபிவிருத்திக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு பாடசாலைகளுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கணனி இயந்திரங்கள் உட்பட பெரும்பாலான வளங்களை புலிகளே உபயோகித்துள்ளனர் என்பதால் வளங்களில் பின்னடைவு காணப்பட்டது. இவையனைத்துமே மீளக்கட்டியெழுப்படும்.
புலிகள் ஆசிரியர்களையும் பலவந்தமாகத் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்ள முற்பட்டதையடுத்து பெரும்பாலான ஆசிரியர்கள் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களை மீள அவர்கள் கற்பித்த பாடசாலைகளுக்கே நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.