வட பகுதியில் பல இடங்களை புலிகளிடமிருந்து மீட்டு அவர்களை தோற்கடித்துள்ளதாக கூறும் அரசாங்கம், அதனை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியின் சகல இடங்களிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;புலிகளைத் தோற்கடித்து வடபகுதியின் பெருமளவான பிரதேசங்களை மீட்டுள்ளதாக அரசு கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டு அந்த வெற்றிகளை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியிலும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாகவே புத்தளம் மாவட்டத்தில் பத்துதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனது வாகனசாரதியும் கூட தாக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆயுதங்களை பறித்த காடையர் குழுவொன்று அதனை பயன்படுத்திய சம்பவங்களும் உள்ளன.
எனினும், சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்த போது உயர்மட்ட அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டின் தென்பகுதியில் நாலாபுறங்களிலும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசிடம் நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது இவ்வாறிருக்க, அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காக அரச சொத்துகள் உட்பட அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றது. தேர்தல் வெற்றி என்றால் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். உண்மையில் மக்கள் எம்முடன் இருப்பதே காரணமாகும்.
இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பில் எனக்கோ அல்லது எனது கட்சிக்கோ எதிராக எதுவித முறைப்பாடும் பொலிஸில் செய்யப்படாத நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசுக்கு எதிராக நான் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். இவரை நான் பொலிஸ் சேவையில் இருக்கும் போதே நன்கறிவேன். இவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணிதிரண்டிருப்பதால் மாகாண சபை தேர்தலில் எமக்கு வெற்றி என்றார