எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்குவதற்கு இடமளியேன் – ஜனாதிபதி

mahinda1402.jpgஇலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்கு வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கோ, தெற்கோ, தமிழரோ ஏனைய இனத்தவரோ அனைவரும் ஒருதாய் மக்கள், அவர்களை சகோதரர்களாக மதித்து அம்மக்களுக்கான சகல தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சில சக்திகள் சர்வ தேச நாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனை நாம் முற்றாக மறுக்கிறோம். நாட்டின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தாம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஹோமாகம பமுனு ஆரச்சி பவுண்டேசன் நிறுவனத் தினரால் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள ஹோமாகம பொது வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையி லேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வரும் தமிழ் மக்களுக்கு மானசீக துன்புறுத்தலைப் படையினர் மேற்கொண்டு வருவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளே இவ்வாறு செய்தாலும் படையினர் ஒரு போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள் எனப்பது உறுதி.

இவ்வாறு பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரும் மக்களுக்கான சகல வசதிகளையும் குறைவின்றிப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் அதிககவனம் செலுத்திவருகிறது. அத்துடன் இவ்வாறு வரும் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது டாக்டர்களும் தாதியர்களும் அங்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில சர்வதேச அமைப்புக்கள் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென இங்கு வந்து, பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து அம்மக்களுக்கு எந்த வித உதவியையும் செய்யாமலேயே மீண்டும் நாடு திரும்பிவிடுகின்றனர். அங்கு சென்று இலங்கை மக்களை அந்நாடுகளில் கண்காட்சிப் பொரு ட்களாக்கப் பார்க்கின்றனர்.

சுனாமி அனர்த்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் எமக்கு உதவியளித்தன என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. எனினும் பெரும்பாலான சர்வதேச அமைப்புக்கள் உதவி என்ற பெயரில் எமது மக்களுக்கு உபயோகிக்க முடியாத பழைய உடைகளையும், காலாவதியான உணவுகளையும் வழங்கியிருந்தன. அவற்றை நாம் தீமூட்டியதையும் இங்கு நினைவு கூரவேண்டியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது சர்வதேச அழுத்தங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது. தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும்வரை எவரும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது.  மேற்படி வெற்றியானது அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை மேலும் வலுப்படுத்துவது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கும் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவு – ஆலோக் பிரசாத்

alokprasad-pillaiyanbatticalo.jpgஇந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அடங்கலான தூதுக்குழுவினர் நேற்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இந்திய தூதுவர் தனது விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அரசஅதிபர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து உரையாடினர். இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கம் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இந்நிகழ்வுகளில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு முதல்வர் மற்றும் மட்டு. மேயர் ஆகியோரினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்குமென்று தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், கிழக்கு மாகாணம் ஜனநாயக ரீதியில் இன்று செயற்படுவதையிட்டு இந்தியா தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றது.கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென கடந்த காலங்களில் இந்தியா சிறிய உதவிகளை செய்தது. மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பஸ் வண்டிகளை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்புக்கும் திருமலைக்குமிடையில் அதி நவீன புகையிரத வண்டியொன்றை வழங்கி சேவையில் ஈடுபடச் செய்ய உள்ளோம். அதேபோன்று இருபது தொழில் கல்வி நிலையங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்தியா உதவுமென மேலுமவர் தெரிவித்தார்.

அம்பாறைக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர், அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கரவை அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடினார் அம்பாறை நகர அபிவிருத்திக்கு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அரச அதிபர் இங்கு விளக்கமளித்துள்ளார். இந்திய அரசாங்கம் அம்பாறை உட்பட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திசெய்ய பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது கூறினார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்போரை அமைச்சர் ரிஷாட் சந்திப்பு

srilanka_displaced_.jpgமீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தற்போது வவுனியா மாவட்டத்துக்கு வருகை தரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சர் அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

செட்டிகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் கிராமத்துக்குச் சென்று அங்கு தற்காலிகமாக வசிக்கும் மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்.  அதேவேளை, அக்கிராமத்தை அண்டிய பகுதியில் மற்றும் இரு கிராமங்களை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் இடம் பெறுவதால் அதனது முன்னேற்றம் குறித்தும் அப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.

இதேவேளை, வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான சுகாதார வசதிகளை உடன் பெற்றுக் கொடுக்குமாறும் போதுமானளவு வைத்தியர்களை ஈடுபடுத்துமாறும் அமைச்சர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.

அமைச்சருடன் யூ.என்.எச்.சி.ஆர். இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அமீன் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.

‘இலங்கையில் தினமும் 40 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு.’ ஐநா : த ஜெயபாலன்

வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர்.

UN_Logoபுலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் இதனால் சிலர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் நேற்று (பெப் 16) ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச அமைப்பொன்று குற்றம்சாட்டியது இதுவே முதற் தடவையாகும். ஏற்கனவே புலிகள் மக்களைத் தடுத்த வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியேறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள உத்தியோகபூர்வமான அறிவிப்பாக இது அமைந்து உள்ளது.

ஐநா வின் இக்குற்றச்சாட்டு புலிகளுக்கு மீகுந்த அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதுடன் புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசியல் முன்னெடுப்புகளுக்கும் இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெப் 16 ஐநா வின் நாளாந்த செய்திக் குறிப்பில் இலங்கையில் தினமும் 40 பேர் கொல்லப்படுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகம் பாதுகாப்பு கவுன்சிலிடம் தனது அவதானத்தை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் ஆசிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஐநா செயலாளர் நாயகம் இலங்கை ஜனாதிபதியுடனும் உரையாடி இருந்தார். பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு இவ்வுரையாடல் பற்றியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐநா உள்ளுர் பணியாளர்கள் 15 பேர் மற்றும் அவர்களில் தங்கியிருப்போர் 75 பேர் யுத்தப் பகுதிகளை விட்டு வெளியேறாமல் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது. ஐநா பணியாளர்களில் ஒருவரையும் புலிகள் பலாத்காரமாக தங்கள் படையணியில் சேர்த்து உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஐநா அவ்விளைஞரை உடனடியாக விடுவிக்கும் படி கோரியுள்ளதுடன் பொது மக்களை பலாத்காரமாக தங்கள் படைகளில் சேர்பதை நிறுத்துமாறும் கோரியுள்ளது.

குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கும் படியும் ஐநா புலிகளைக் கேட்டுக் கொண்டு உள்ளது. இலங்கை அரசும் புலிகளும் மனிதாபிமானமான தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன் மூலமே பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களது உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஐநா கேட்டுக் கொண்டு உள்ளது.

வன்னியில் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அதனை மீறி வெளியேறுபவர்களை சுட்டுக் கொல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ள ஐநா தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்கத் தவறி உள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு சட்டரீதியானது. அப்படி இருந்தும் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை அரசு தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனை ஐநாவின் நேற்றைய அறிக்கை கண்டிக்கத் தவறியுள்ளது.

மேலும் பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்ககும் வரை அந்த வலயங்களுக்குள் மக்கள் செல்வதற்கு அச்சம் இருக்கும் என்பதையும் ஐநா கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் ஐநா வினதோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளினதொ பொறுப்பில் வரும்பொது தான் மக்கள் நம்பிக்கையுடன் அப்பகுதிகளுக்குச் செல்லத் தயாராவார்கள்.

மேலும் வன்னியில் உள்ள பெரும்பாலான மக்கள் புலிகளுடன் ஏதோவிதத்தில் தொடர்புடையவர்களாகவும் இருந்திருப்பர். அதனால் அவர்களுடைய பாதுகாப்புக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் பொறுப்பெற்க வேண்டும். மேலும் சரணடைபவர்கள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் மாவீரர் குடும்பங்கள் ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். இல்லையேல் பயங்கரவாதத்தை களையெடுக்கிறோம் புலிகளைக் களையெடுக்கிறோம் என்ற பெயரில் பல நூற்றுக் கணக்காணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் கொல்லப்படுவார்கள் என்பது உறுதி.

தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை கொலை செய்யவும் துணிந்துள்ளமை மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர். வன்னி மக்களின் வாழ்வு இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே ஊசலாடுகிறது.

புலம்பெயர் நாடுகளில் வன்னி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்களிலும் பார்க்க புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுக்கும் நடவடிக்கைகளே தீவிரமாக உள்ளது. ‘போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் செய்வார்கள். இழப்புகள் இல்லாமல் போராட்டம் இல்லை’ என்றெல்லாம் விளக்கமளிக்கும் புலம்பெயர் உறவுகள் உயிருக்கு ஊசலாடும் அந்த மக்களின் காதிலும் பூ வைக்க முயற்சிக்கிறார்கள்.

ஈழம் சென்று மருத்துவம் செய்ய தயார்: தமிழக மருத்துவ மாணவர்கள்

medicine-01.jpgஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
 
இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா,  இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார்.

புலிகளின் 130மி.மீ.ரக 2 பீரங்கிகள் நேற்று மீட்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் 130 மி. மீ. ரக பீரங்கி இரண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் நேற்றுக்காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலித்தீன்களால் சுற்றி மிகவும் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பீரங்கிகளை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, விசுவமடு பிரதேசத்திலுள்ள தென்னந்தொப்பு ஒன்றிலிருந்தும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றிலிருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் உட்பட வெடி பொருள்களை மீட்டெத்துள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பொது எதிரியாக தாலிபான்கள் செயல்படுகின்றனர்: அமெரிக்க சிறப்புத் தூதர்

holbrooke_.jpgபாகிஸ் தானின் ஸ்வாட் பிராந்தியத்தில் செயல்படும் தாலிபான்கள், இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு பொது எதிரியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்ப்ரூக் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், அந்த இரு நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறன்று புதுடெல்லி வந்தார். திங்கட்கிழமையன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுச் செயலர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹோல்ப்ரூக், தனது பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் பயணம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்தியாவுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகத் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்தியா, அமெரி்க்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைமைக்கும், தலைநகரங்களுக்கும், மக்களுக்கும் தாலிபான்களால் நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் யாழ். குடாவில் 25 கிராமங்களில் மீள் எழுச்சி வேலைத்திட்டம்

world-bank-01.jpgகிராம மட்டங்களிலான அடிப்படை மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்து அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மூலம் உச்ச பயனை அம்மக்களுக்கு வழங்குவதன் அவசியம் உணரப்பட்டு வரும் நிலையில், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தத்தமது பணிகளை நல்ல முறையில் முன்னெடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சி அடைவதுடன் இப்பணிகளை தொடர்ந்து மேம்படுத்தி பரவலாக்குவது தொடர்பில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்குத் தான் தயாராக இருப்பதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விசேட செயலணியின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிதி அனுசரணையூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராமங்களுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளால் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் வட மாகாணத்தின் அனைத்து துறைகளையும் தனித்தனியாக இனங்கண்டு அவற்றை துரிதகதியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது இதற்கு கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் பங்களிப்புகள் இன்றியமையாதவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலின் போது மீள் எழுச்சித் திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு உட்படாத பல்வேறு விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இவற்றை வெவ்வேறு திட்டங்களின் மூலம் முன்னெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மீள் எழுச்சித் திட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் இத்திட்டத்திற்கு உட்பட்டுள்ள 25 கிராமங்களின் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவிலியன்களை பாதுகாப்பாக குடியமர்த்த செட்டிக்குளத்தில் மேலும் 100 ஏக்கர் காணி

vanni.jpgவன்னியில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி படையினரிடம் புகலிடம் தேடி வரும் சிவிலியன்களை பாதுகாப்பான முறையில் குடியமர்த்துவதற்கென வவுனியா செட்டிக்குளத்தில் மேலும் நூறு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இக்காணியில் புதிதாக தற்காலிக கொட்டில்கள், மலசலகூடங்கள் மற்றும் பாடசாலை என்பனவற்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மோதல்கள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருக்கும் அகதிகளின் நலன்களை கண்டறியும் விசேட மாநாடு நேற்று அமைச்சர் ரிஷாட் தலைமையில் வவுனியாவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வட மாகாண ஆளுநர் டிக்ஷன்தால, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ், பொலிஸ் அதிகாரிகள், படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தங்களுக்குத் தேவையான உணவை தாமே சமைத்துக் கொள்வதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட இடம் பெயர்ந்த மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் 100 குடும்பங்கள் ஒரு வலயம் என்ற ரீதியில் பிரித்து விடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இவர்களுக்கென வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு இவர்கள் தாமே உணவு தயாரிக்கவுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவில் தங்கியிருக்கும் வன்னியைச் சேர்ந்த அகதிகளுக்கு தேவையான அனைத்து கருமங்களும் உடனுக்குடன் முன்னெடுக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அகதிகளின் சுகாதாரம், குடிநீர், மலசலகூட வசதிகள் என்பன குறித்து இம் மாநாட்டின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் அதிகரிப்பு

justice.jpgஅடிப் படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 156 மனுக்கள் கூடுதலாக தாக்கல்செய்யப்பட்டுள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2007 இல் அடிப்படை உரிமைமீறல் தொடர்பாக 456 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்குக் கிடைத்துள்ள அதேசமயம் 2008 இல் 621 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 398 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே, அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக 2008 இல் உயர்நீதிமன்றத்துக்கு தாக்கல்செய்யப்பட்ட சில மனுக்கள் மீது சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதையும் சட்டத்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இந்த வருடத்தில் இந்தமாதம் ஆறாம் திகதிவரை அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பாக 84 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.