விஸ்வா

விஸ்வா

வன்னியில் வீசும் கடும் காற்றினால் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் கூடாரங்கள் பல சேதம்!

Rehabilitation_Wanniவடக்கில் வன்னிப் பகுதிகளில் கடும் காற்று வீசிவருவதால் தரப்பாள் கூடாரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மீளக்குடியமர்த்தப்பட்டு தங்கள் காணிகளில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியுள்ள மக்களும், இன்னமும் தங்கள் காணிகளில் குடியேற அனுமதியின்றி வேறு இடங்களில் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ள மக்களும் இக்கடும் காற்றினால் அவல நிலைக்குள்ளாகி வருகின்றனர். பல கூடாரங்கள் காற்றினால் சேதமுற்றுள்ளன. கூரைகளின்றி வெறும் கட்டடங்களுக்கு மேல் தரப்பாள்களை மூடி அதற்குள் குடியிருக்கும் மக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான  வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருவதால் எதிர்வரும் மழைக்காலத்தில் இம்மக்கள் பல இடர்பாடுகளை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பது பல தடவைகள் அரச அதிகாரிகளுக்கும், வீடமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை எதுவித துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

நீர்வேலி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிழந்தார். நீர்வேலி இராசபாதையில் நேற்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றது. யாழ். நகரிலிருந்து சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தோடு மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரான அனலைதீவைச் சேர்ந்த கு. நிர்மலன் (வயது-25) என்பவரே உயிழந்தார். அவரோடு பயணித்த இன்னொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸலிம்களுக்கு வழங்குமாறு கோரிக்கை

வடக்கில் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரம் வீடுகளை முஸ்லிம் மக்களுக்கு வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடமும், மீள்குடியேற்ற அமைச்சிடமும் மன்னார் முஸ்லிம் மீள்குடியேற்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1990ஆம் ஆண்டு வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பலர் வடபகுதிக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். மேலும் வடபகுதியிலுள்ள முஸ்லிம்களின் சனத்தொகை 10 வீதமாகும். எனவே, இந்திய அரசு வடபகுதியில் அமைக்கத் திட்டமிட்டிருக்கும் 50 ஆயிரம் வீடுகளில் ஐயாயிரத்தை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய. இலங்கை அரசுகளை மன்னார் மீள்குடியேற்ற அமைப்பு கோரியுள்ளது.

கிழக்கு மாகாண காடுகளில் களவாக புதையல் தோண்டப்படுகின்றன!

கிழக்கு மாகாணத்திலுள்ள அடர்ந்த காடுகளில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளும், கஞ்சா செடிகளை உற்பத்தி செய்கின்ற நடவடிக்கைகளும் மற்றும், மரங்களை வெட்டிக் கடத்துகின்ற நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கன்றன.

கிழக்குக் காடுகளுக்குள் காணப்படும் புராதன சின்னங்களைத் களவாகத் தோண்டியெடுத்து விற்பனை செய்வதைத் தடுக்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடபட்டு வருகின்றனர். அதேவேளை, தொல்பொருள் சின்னங்கள் உள்ள இடங்கள் குறித்த வரைபடங்களைத் தயாரிக்கும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சில உள்ளுர்வாசிகளின் உதவியுடன் காட்டுப் பகுதிகளுக்குள் சென்று சதாதிஸ்ஸ என்ற மன்னனின் ஆட்சிகால தொல்பொருள் சின்னங்களைத் தோண்டி எடுத்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த குழுவினர் அண்மையில் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.  காடுகளுக்குள் கஞ்சா உற்பத்தி செய்து பதப்படுத்தி அக்கரைப்பற்று வழியாக கொழும்பிற்கு கடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச் செயல்களையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட காட்டுப் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிக்காட்டுவான் இறங்குதுறையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சலுகை! உள்ளுர் பயணிகள் புறக்கணிப்பு!

யாழ்.குறிகாட்டுவான் இறங்குதுறையில் நயினாதீவிற்குச் செல்வதற்காக வரும் தென்பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸாரும் இருர்ணுவத்தினரும் தனிப்பட்டவகையில் சலுகை அளிப்பதாகவும் நெடுந்தீவு, நைனாதீவு பயணிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் நெடுந்தீவு, நயினாதீவு பயணிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து குறிக்காட்டுவான் செல்லும் பஸ்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படயினர் ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர். இவ்வாறு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் படையினர் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தாமதமின்றி செல்வதற்கு முன்னுரிமை வழங்கி வருவதோடு, அவை குறிக்காட்டுவான் வரை செல்வதற்கும் அனுமதிக்கின்றனர். நயினாதீவு, நெடுந்தீவு செல்லும் பயணிகள் பஸ்கள் இறங்குதுறை வரை செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இத்தீவுப்பகுதிகளிலிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்ய செல்பவர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் செல்பவர்களும் இதனால் பெரிதும பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளில் சகல மக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை படையினர் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வன்னி மக்களின் வாழ்விடங்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிருபமா ராவிடம் கோரிக்கை!

Suresh_Piremachandranவன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதைத் தடுக்க வேண்டும் எனவும், இரணுவம் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முன் மக்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்கள் வசித்த காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும அவர்கள் பாம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர். இதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் கொழும்பில் இந்தியத்தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாமளுமன்ற உறுப்பினர்களின் குழ இவ்விடயங்கள் குறித்து நிரபமா ராவிடம் தெளிவு படுத்தியது.

வன்னியில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதி முகாம்களிலும், இடைத்தங்கள் முகாம்களிலும் தங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர், திருமுறிகண்டி. விசுவமடு முதலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால தங்ககங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் இராணுவத் தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு வருகின்றன என கூட்டமைப்பினர் விளக்கினர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூட்டமைப்பினரிடம் நிருபமா ராவ் தெரிவித்ததாக கூட்டமைப்பின் நாமாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்தியா அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான உதவிகள் குறித்த மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த நிருபமா ராவ் இவ்வீடுகளை அமைப்பதற்காக 20 ஆயிரம் இந்தியப் பணியாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி நீதிமன்ற மாடியிலிருந்து குதித்ததில் படுகாயம்.

தனது மூன்று வயது மகனைக் கொலை செய்த வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றக் கட்டட மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். நேற்று (01-09-2010) யாழ்.மேல் நீதிமன்றத்தில் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.

2003ம் அண்டு பருத்தித்துறை வல்லிபுரக் கோவில் பகுதியில் வசித்து வந்த குறிப்பிட்ட நபர் தனது மூன்று வயது மகனை இரு கால்களிலும் பிடித்தத் தூக்கி நிலத்திலடித்து கொலை செய்தமைக்காகவும், அவரது மனைவியின் கையை வெட்டியமைக்காகவும கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் மகனைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதோடு  மனையிவின் கையை வெட்டியதற்காக 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டது. தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டம் எனவும் நீதிமன்றம் தீhப்பளித்தது.

இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்பு குறித்த கைதி யாழ். மேல்நீதிமன்றத்தின் இரண்டாம் மாடியிலிருந்து நிலத்தில் குதித்து படுகாயமடைந்தார். வடமராட்சி வல்லிபுரம் கோவிலடியைச் சேர்ந்த இராஜராஜன் இராஜகுமார் (வயது37) என்பவரே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மாடியிலிருந்த குதித்தவராவார்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு!

LTTE_Aircraftவிடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முல்லைத்தீவில் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விமானப் பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இறுதிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால். அம்பலவன் பொக்கணைப் பகுதிகளில் கொள்கலன்களில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விமானப் பாகங்கள் இலகுரக விமானங்களுக்குரியவை என இலங்கை விமானப்படையினர் தெரிவிக்கின்றனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இவற்றிற்குத் தீவைத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கில் இராணுவ முகாம்கள் மீண்டும் பலப்படுத்தப்படுகின்றன!

Check_Pointகிழக்கில் மீண்டும் இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிவடைந்து அமைதி நிலை தோன்றியதற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

படைமுகாம்களைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சில காலமாக கைவிடப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளும் மீண்டும் திறக்கப்பட்டு முன்னர் போல் வாகனங்கள் சோதனையிடப்படுவதோடு, பொதுமக்களும் சோதனையிடப்படுகின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  இரு பெண் பொலிஸார் உட்பட மூவர்  மட்டக்களப்பு ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடமிருந்த ரி-56 ரக துப்பாக்கியை பறித்துச் சென்ற சம்பவம், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளமை மற்றும், அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்ட உரப்பசளைகள், அரிசி மூடைகள் எனபன லொறிகளில் கடத்தப்பட்ட சம்பவம். மரங்கள். கஞ்சா போன்றவை கடத்தப்படுகின்ற சம்பவங்கள் என்பவற்றைத் தொடர்ந்தே இப்பாதுகாப்பு மற்றும் வீதிச் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

500 விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்!

வவனியா தடுப்பு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் விடுதலைப் புலிகள் எதிர்வரும் 4ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது சிறைச்சாலை மறுசிரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகர, பிரதி அமைச்சர் விஜிதமுனி தலைமையில் வவனியா பம்பைமடு புனர்வாழ்வ நிலையத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக புனர்வாழ்வ ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வவனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த 500பேர் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைப்பக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட 180 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ள 500 முன்னாள் போராளிகளில் 17  தாய்மார், இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், சிறுவர்கள், உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் என பிரிகேடியர் சுதந்த ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

Related News:

புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!

 முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்

சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 738 தமிழ் கைதிகள் இந்தவாரம் விடுதலை