விஸ்வா

விஸ்வா

மட்டக்களப்பில் வெள்ளை வானில் ஒருவர் கடத்தப்பட்டார்!

White_Van_Abductionமட்டக் களப்பில் நீண்ட நாட்களுக்குப்பின் வெள்ளை வான் கடத்தல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. Sep 15ம் திகதி மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் (வயது30) என்பவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளை நிற வானில் குறித்த நபரின் வீட்டுக்கு வந்தவர்கள் அவரை வெளியே அழைத்து பலவந்தமாக வானில் தூக்கிச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தல் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சகாயமணி என்பவர் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் 25 பேர் நாடாளுமன்றில் தனித்து இயங்கப்போவது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unp_logo.jpgஐக்கிய தேசியக் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயேற்சைக் குழுவாக இன்னும் சில தினங்களில் இயங்கத் தொடங்குவர் எனவும், இது தொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  ஐ.தே.க. உட்பூசல் உக்கிரம்: 25 அதிருப்தி எம்.பிகளுடன் மேலும் பலர் இணைவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தனியாக இயங்கப்போவதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் போது கட்சியின் இளம் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பால் தாங்கள் திருப்தியடையவில்லை என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சி மறுசீரமைப்புக் குழு ஒரு மாதத்துக்கு முன்னரே சிபார்சுகளை கையளித்து விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.  கட்சியின் தேசிய மாநாடு யூலை மாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்போடப்பட்டது. இப்பொது டிசெம்பர் மாதத்தில் நடைபெறும் என ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இயங்கவிருப்பதை யாராலும் தடுக்க முடியாது எனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை ஆராய்கிறது

Amnesty_International_Logoபடிப்பினை கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியங்களை மேற்கொள்ள சர்வதேச மன்னிப்புச்சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தாம் எவ்வித முடிவினையும் மேற்கொள்ளவில்லை என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கபட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதா இல்லையா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக  சர்வதேச மன்னிப்பச்சபையின் ஊடக அதிகாரி தோமஸ் யோகோம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ளுமாறு கோரும் அழைப்பு எதுவும் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபைக்கும், மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.

Chavakachcheri_Jumma_Mosqueயாழில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 1990 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெயர்ந்து வாழும் யாழ். முஸ்லிம்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவ்விபரங்களை நூல் வடிவில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவம் யாழ். மானிப்பாய் பெரிய முகைதின் ஜூம்மா பள்ளிவாசல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதமளவில் இந்த நூல் வெளியீடு நடைபெறவள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உலாமாக்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள். கலை இலக்கியவாதிகள் சகலரும் தமது விபரங்களை அனுப்பி வைக்கலாம் என குறித்த பள்ளிவாசல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

வடமராட்சிக் கிழக்கில் மேலும் 356 குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட உள்ளன.

வடமராட்சிக் கிழக்கில் முதற்கட்டமாக 356 குடும்பங்களைச் சோந்த 1092; பேர்  மீள் குடியமர்த்தப்பட்டு உள்ள நிலையில் மேலும் 3500 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆயிரம் பேர் விரைவில் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நலன்பரி நிலையங்களிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்கம் மக்கள் மீள்குடியமாத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை.

Univercity_of_Paradeniyaகண்டி பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 கொழும்பு பல்கலைக்கழக்த்திற்கள் பிராவேசிக்க முற்பட்ட ஐந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களைத் தாக்கினர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மூவரைக் கைது செய்து கொழுப்பு நீதிமன்றில் கறுவாத்தோட்ட பொலிஸாhர் ஒப்படைத்திருந்தனர். அவர்கள் மீதான விசாரணைகளின் போது அவர்களை நீதவான் கண்டித்ததன் பின்னர் பிணையில் விடுதலை செய்தார்.

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

Linganathan_giving_speechவவுனியா நகரசபையின் மாதாந்த கூட்டத்தை அதன் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் நேற்று (14 செப்ரம்பர் 2010) செவ்வாய் கிழமை இடை நிறுத்தியதைக் கண்டித்து நகரசபை உறுப்பினர்கள் பத்துப்பேரும் இணைந்து நகரசபைத் தலைவருக்கு எதிராக போராட்டத்திலீடுபட்டனர். வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் இன் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நகரசபை மைதானத்தில் கடும் வெயிலில் இரண்டு மணிநேரம் இப்போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இது பற்றி தேசம்நெற் இணையத்திற்கு கருத்துத் தெரிவித்த நகரசபை உறுப்பினர் ஜி ரீ லிங்கநாதன் குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையைக் கூடப் பின்பற்ற நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் விசேட நகரசபைக் கூட்டத்தை கூட்டும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதும் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.

மேலும் நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டு அதற்கு முன்னதாகவே ஆயுதம் தாங்கிய பொலிசாரையும் அங்கு வரவழைத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிப்பதுமல்லாமல் ஆயுதம் தாங்கிய பொலிஸாரை வரவழைத்து நகரசபை உறுப்பினர்களை அச்சுறுத்தவும் முற்பட்டு உள்ளார். அதுவே நகரசபை உறுப்பினர்கள் சீற்றமடைவதற்குக் காரணமானது. இவ்வாறான ஜனநாயக விரோதப் போக்குகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.

செப்ரம்பர் 14 கூட்டத்தில் நகரசபைத் தலைவர் மீது நகரசபை உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிப்பதாகவும் நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாகவும் இருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறக்கணித்த நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் 72 நிமிடங்களாக தன்னைப் பற்றிய சுயபுராணத்தில் ஈடுபட்டதாகவும் இது கூட்டத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை வைத்த நகரசபை உறுப்பினர்களை ஏமாற்றுவதாக அமைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் இடையே குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர் செ சுரேந்திரன் நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதனுக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்.  இந்நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் இ சிவகுமாரன் வழிமொழிந்தார். இதனைப் பொறுக்காத நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறினார்.

நகரசபை உறுப்பினர்கள் நகரசபை மைதானத்தில் தங்க போராட்டத்தை ஆரம்பித்ததும் ஊடகங்களில் செய்தி பரவியது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களைச் சந்தித்து சமரசம் செய்ய முற்பட்டனர். அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக தங்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் 10 நகரசபை உறுப்பினர்களுக்குப் 10 000 மக்களைக் கொண்டு வந்து போராடுவோம் என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்தித்து இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதாக சிவசக்தி ஆனந்தனும் வினோதரலிங்கமும் நகரசபை உறுப்பினர்களுக்கு உறுதி அளித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒரு மாதத்திற்குள் அதனைச் செய்யத் தவறினால் தாங்களும் நகரசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடுவோம் என சிவசக்திஆனந்தன் தெரிவித்ததாக ஜி ரி லிங்கநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ளது. அதன் தலைவர் எஸ் என் ஜி நாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுக்கு நெருக்கமானவர். எஸ் என் ஜி நாதனை மாற்றாக இன்னுமொருவரை நியமிக்க தமிழரசுக் கட்சியின் பெயர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை. அப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோவிற்கோ ஈபிஆர்எல்எப் சுரோஸ் அணிக்கோ விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

வவுனியா நகரசபை கடந்த 10 மாதங்களாக செயற்படாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உள்முரண்பாடுகள் காரணமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அண்மைய போராட்டமும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர்களே தமது கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்),  இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் நேர்காணலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மிகக் காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறினால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவார்கள் என்றும் அவர்களுக்கு என்று அரசியல் அந்தஸ்தோ கெளரவமோ இல்லையென்றும் பியசேன குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணம் ஒன்றே பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குலையாமல் வைத்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகளால் வவுனியா நகரசபை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு இடைஞ்சலாகவே ஆகியுள்ளது.

கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இன்று கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களும், விதை நெல்லும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்சவினால் இவை வழங்கப்பட்டன. இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புகளுக்கு 101 இரு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும். விதைநெல் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சா டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினையடுத்து யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். அபிவிருத்தித்திட்ட மீளாய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா திட்டமிட்டபடி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா ஏற்கனவே திட்டமிட்டபடி ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று தினங்களுக்கு கிளிநொச்சியில்  நடைபெறும் என யாழ்.மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்விலக்கிய விழாவுக்கான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து திருமறைக்கலாமன்றமும், யாழ்.மத்தியகல்லூரியும் சில நிகழ்ச்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.  இவ்விழாவில் ஆளுநர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் பேராளர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக விபரங்களை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 0213266990 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழாவிற்குச் சென்று கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த குடும்பத்தினர் விபத்தில் சிக்கினர். இருவர் பலி!

நல்லூர் திருவிழாவிற்கு வந்து விட்டு வானொன்றில் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்வர்கள் விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். கடந்த சனிக்pகிழமை (Sep 11 2010) அதிகாலையில் சிலாபம் மாரவில பகுதியில் இவ்விபத்து இடமபெற்றுள்ளது.

யாழ். சங்கிலியன் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கமலராசன் என்பவரின் குடும்பமே இவ்விபத்தில் சிக்கியது.

இதல் கமலராசனின் மகன் சந்தோஸ் (வயது 05) அவரின் மாமனார் மாணிக்கம் தம்புலிங்கம் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். காயமடைந்த மூவர் மாரவில வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கபட்டுள்ளனர்.

கமலராசன் என்பவர் கட்டாரிலில் தொழில் செய்து விட்டு கடந்தசில மாதங்களுக்கு முன்பு இலங்கை திரும்பியிருந்தார். கடந்த 14ம் திகதி இவரது யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்த போது இவரின் குடும்பத்தினரது 147 பவண் தங்க நகைகள் கள்வர்களால் கொள்ளையிடப்பட்டன. இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் மேந்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இவ்விபத்தும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்க்கது.