விஸ்வா

விஸ்வா

நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு யூரேன் (U-turn)

TNAநல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் சாட்சியங்களை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். நல்லிணிக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்கத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீ ஆனந்தசங்கரி ஆகியோரின் வழியைக் கடைப்பிடிக்க முடிவெடுத்து உள்ளது. வழமையாக காலம் கடந்து ஞானோதயம் பெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தடவை குறித்த காலத்திற்குள் தன்நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் சிபார்சுகள் நடைமுறைக்கு வரும் சாத்தியம் இல்லாத போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாட்சியங்கள் வரலாற்று ஆவணமாக அமையும் என கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்கு முன்னதாக லண்டனில் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த வீ ஆனந்தசங்கரி நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் தோன்றிச் சாட்சியளிக்க ததேகூ தயங்கலாம் எனவும் அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். சில சமயம் நேரில்சாட்சியம் அளிக்காமல் எழுத்தில் தங்கள் சாட்சியங்களை எழுதி அனுப்பி விட்டு இருந்துவிடுவார்கள் எனவும் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

சாட்சியங்களில் தெரிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று சனிக்கிழமை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற விடயங்கள், தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் இன்னல்கள், தமிழ் மக்களின் வரலாறு, அவர்களின் அபிலாசைகள் ஆகிய விடயங்கள் கூட்டமைப்பின் சாட்சியங்களில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ததேகூ நேரடியாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருந்த போதும் ஏன் அவர்களை விடுவிக்கும்படி ததேகூ கோரவில்லை போன்ற கேள்விகள் ததேகூ பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி கேட்கப்படும். மேலும் புலிகளுக்கும் ததேகூ க்கும் இருந்த உறவு பற்றியும் பல சிக்கலான கேள்விகள் கேட்கப்படலாம்.

கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் மீண்டும் ஆரம்பம்! பிரபா கணேசன்.

Praba_Ganesan_MPகொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோருகின்ற நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பு செட்டியார்தெரு தமிழ் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது.  மேலும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடமோ மக்கள் பிரதிநிதிகளிடமோ சென்று முறைப்பாடு செய்ய அஞ்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தைரியமாக செயற்பட்டால் தான் இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் செட்டியார்தெரு வாத்தகரை கடத்திச் சென்று கப்பம் கோரியவர்களை குற்றப்புலனாய்வப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும், இவ்வாறு கப்பம் கோருபவர்களை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முன்வரவேண்டும் எனவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலங்களில் தமிழ் வர்த்தகர்களை கடத்திச் சென்று கப்பம் கோரும் சம்பவங்கள் தங்களது கடும் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னியில் கைவிடப்பட்ட தங்களது உடமைகளை மீட்டு வருவதில் சிக்கல்கள் ஏற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Wanni_IDP_Homeவன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது தமது உடமைகளை கைவிட்ட மக்கள் அவற்றை மீட்கும் விடயத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி உட்பட வன்னியின் மேற்குப் பகுதிகளிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் போது தங்களது உடமைகளையும் முடிந்தவரை எடுத்துச் சென்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அவர்களின் உடமைகள் விசுவமடுவிலிருந்து உடையார்கட்டு, சுதந்திரபுரம், இரணைப்பாலை என பல இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போர் நடைபெற்ற மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பகுதிகளில் பொதுமக்களின் வாகனங்கள் உட்பட குறைந்தளவு பொருட்களே கொண்டு செல்லப்பட்டன . வன்னியில் மீள்குடியேற்றம் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களால் கைவிடப்பட்ட பொருட்களை மீட்டுவர முயன்று வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் படையினரின் பாதுகாப்பு அனுமதி தேவை. இதனை அரசாங்க அதிபர்களுக்கூடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

Wanni_IDP_Homeகிளிநொச்சி மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட போதும் பொதுமக்கள் தங்களது உடமைகள் வைக்கபட்டுள்ள பகுதிகளில் சென்று பார்வையிட்ட போது வீட்டுக்கூரைகள் உட்பட பல பொருட்கள் காணாமல் போன நிலையில் வெறும் கையுடன் திரும்பி வந்தனர். ஒருசில பொருட்கள் மட்டும் அவர்களால் மீட்டு வரப்பட்டன. தற்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் உடமைகளை மீட்டுவர அப்பகுதிகளுக்குச் செல்கின்ற போது அவர்களின் உடமைகளை எடுத்து வருவதற்கு அங்குள்ள படையினர் தடைவிதிப்பததாக மக்கள் கூறுகின்றனர்.

முல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் விவசாயிகளின் நீர்இறைக்கும் இயந்திரங்கள், மண்வெட்டி போன்ற தங்களால் கைவிடப்பட்ட விவசாய உபகரணங்களை எடுத்துச்செல்ல அங்கிருக்கும் படையினர் அனுமதி மறுப்பதாகவும், இரும்புப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனக் கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களின் விவசாய உபகரணங்களை எடுத்து வரவே மிகச் சிரமப்பட்டு MoD எனப்படும் பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெறப்பட்டு, குறித்த இடங்களுக்கு தமது பொருட்களைக் கொண்டு வர வாகனங்களையும் வாடகைக்கு அமர்த்தி செல்கின்ற போதும்  அங்குள்ள படையினர் தங்களின் பொருட்களை எடுத்துச் செல்ல இடம்கொடுப்பதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

50 வருடங்களாக வசித்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளுக்கு காணிகளுக்கான உரிமம் இல்லை.

Douglas_Devanandaசங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி ஊரத்தி, சங்கானை மத்தி ஆகிய பிரதேசங்களில் 50 வருடங்களாக வாழ்ந்து வரும் சுத்திகரிப்பு தொழிலாளிகளான மக்களுக்கு இன்னமும் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை எனவும், வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்கி உதவுமாறும் குறிப்பிட்ட மக்கள் வடமாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“சங்கானை மத்தியில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வாழ்நது வருகின்றோம். எம்முடன் வாழ்ந்த 21 குடும்பங்களுக்கு 1979 இல் உள்ளுராட்சி சபையின் விசேட ஆணையாளராக அப்போதிருந்த இராசு தணிகாசலம் என்பவரால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள எமக்கு காணி உரிமம் எவையும் வழங்கப்படவில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்குமாறு மாகாணசபை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். ஆனாலும், தீர்வு எதுவும் இது வரை எட்டப்படவில்லை. எனவே சங்கானை மத்தி, அராலி ஊரத்தியிலுமுள்ள 65 சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காணிகளை பகிர்ந்து வழங்கி, அவற்றுக்கான உரிமங்களையும் வழங்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்” என இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் பனை விதை நடுகை துரிதம்.

Panai_Marangalயாழ். மாவட்டத்தில் ஐந்து இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 21 குழிகளில் பனை விதைகளை நடும் பயனாளிகளுக்கு உலக உணவுத்திட்டத்தின் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் இத்திட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக உலக உணவத்திட்ட நிறுவனம் 100 மெற்றிக் தொன் உலருணவை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பனை வளத்தை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பனை விதை நடுகைத் திட்டத்திற்காக பல இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பனைசார் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை நிலையங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்காக வெடி பொருட்கள் அகற்றல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்வதற்காக அப்பகுதிகளில் காணப்படும் வெடிபொருட்களை அகற்றும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீள்குடியமர்த்துவதற்கு வசதியாக துரிதமாக அப்பகுதிகளிலுள்ள மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க ‘ஹலோட்ரஸ்ற்’ மற்றும், இராணுவ பொறியியல் பிரிவு என்பன வெடிபொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளன எனவும், விரையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதுமலையில் இடம்பெற்ற கொள்ளை பிடிபட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் இளம் பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் 24 மணிநேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. இக்கொள்ளை தொடர்பாக இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.சுதுமலை வடக்கில் வசித்துவரும் மருத்துவர் ஒருவர் மானிப்பாய் மத்திய சந்தைப் பகுதியில் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவரது வீட்டிலிருந்து ஆறு இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகை மற்றும்,  20 ஆயிரம் ருபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தது. 

இவர் தமது மருத்துவ நிலையத்திற்கு வந்துவிட்டு மாலையில் வீடு சென்றபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த நிலையில் இப்பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தமையை அவதானித்துள்ளார். பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த மானிப்பாய் பொலிஸார் மருத்துவரின் வீட்டின் ஒரு பகுதியில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்திவரும் 25 வயதான இளம் பெண் மீது சந்தேகம் கொண்டனர்.

அவரை விசாரணை செய்ததில் அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பெண்ணைக் கைது செய்துள்ள பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அவர்களது பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். 300 ஆண்களும், 200பெண்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ.திசநாயக்க அவர்களின் தலைமையில் வவுனியாவில் வைத்து இவர்கள் பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழில் மோசடி!

UK_Visa_Advertயாழ்ப் பாணத்தில் இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றும் நபர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் நான்கு பேரிடம் வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய நபரொருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.

UK_Visa_Advertலண்டனுக்கு அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் நான்கு மாணவர்களிடம் 18 இலட்ச ரூபா பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது. ஒக்ரோபர் 02 இல் கைது செய்யப்பட்ட இந்நபர் ஒக்ரோபர் 04ல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். வழக்கை விசாரணை செய்த நீதவான் குறிப்பிட்ட நபரை  75 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த க. அம்பிகைகுமார் என்பவரே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  நால்வரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றவராவார். மூவரிடம் ஐந்து இலட்ச ரூபாவும், ஒருவரிடம் மூன்று இலட்ச ரூபாவும் இவர் பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேலும் ஒருவர் வெளிநாட்டுக்கு கல்வி பயில அனுப்புவதாகக் கூறி மூவரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்ட பச்சிலைப் பள்ளி மக்கள் வெடிபொருட்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

landmines.jpgகிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப் பள்ளி பிரதேசச் செயலர் பிரிவில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் வெடிபொருட்கள் குறித்து அவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பளை நகரம், புலோப்பளை கிழக்கு, புலோப்பளை, முள்ளியடி, தம்பகாமம், தர்மக்கேணி, சோரன்பற்று, மாசார், இயக்கச்சி, ஆகிய கிராமங்களில் மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் தென்பட்டால் அவற்றைக் கைகளால் தொடமாமல் உடனடியாக பிரதேசச் செயலகம் அல்லது பிரதேசசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.  இதே வேளை, குப்பைகளை எரிக்காமல் குழிகளில் வெட்டிப் புதைக்குமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. போரினால் இப்பிரதேசங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

._._._._._.

கிளிநொச்சி பச்சிலைப் பள்ளியில் ஒன்பது கிராமங்களில் மீள்குடியேற்றம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட ஒன்பது கிராமங்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேர் Oct 14 2010 வியாழக்கிழமை மீள்குடியமர்த்தப்பட்டனர்.

இடம் பெயர்ந்து வுவனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உணவல்லாத பொருட்கள் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன.  மீள்குடியேறும் இம்மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்குவதற்காக சுகாதார திணைக்களத்தினால் நடமாடும் சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, வெள்ளிக்கிழமை கிளிநொச்சி கரைச்சிப் பிரிவிலுள்ள மக்கள் மீள் குடியேறுவதற்கான பதிவுகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி கட்டத்தில் இடம்பெற்றது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கயிருந்து பின்னர் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வசித்து வந்த பலர் இன்று கரைச்சிப் பிரிவலுள்ள தங்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியமர்வதற்காக பதிவுகளை மேற்கொண்டனர்.