விஸ்வா

விஸ்வா

13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புளொட் தலைவர் சாட்சியம்

sitharthan.jpg13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நேற்று (ஒக்ரோபர் 25 2010) சாட்சியம் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

த சித்தார்த்தன் தனது சாட்சியத்தில் கூறியதாவது, ”யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படாதிருப்பதால் தமிழ் சமூகம் தாங்கள் செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகள் எல்லாமே வீணாகி விட்டதோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்நடவடிக்கையானது அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை எடுக்காமல் இருக்கும் தன்மையையே வெளிக்காட்டி நிற்கின்றது.

அத்துடன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையானது சிங்களக் குடியேற்றத்திற்கான முன்னேற்பாடுகள்தான் என மக்கள் மத்தியில் சந்தேகமும் நிலவி வருகின்றது. இந்நடவடிக்கையினை வன்னியில் ஏற்கனவே இருந்த இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் ஒரு கபட நோக்கம் கொண்ட செயலெனவும் மக்கள் கருதுகின்றனர்.

இதேவேளை 13வது திருத்தச் சட்டத்தினை ஆரம்பப் புள்ளியாக வைத்து அதிலிருந்து தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலம் செழிப்பாவதற்கும், நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கும் வழிவகுக்கும்.

கடந்த இரு தலைமுறையினர் அனுபவித்து வந்த துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும், வேதனைகளும், நெருக்கடிகளும் வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாதென்பதே எமது ஆத்மார்த்தமான விருப்பமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

புளொட் சர்வதேசக் கிளைகளின் மாநாடு : புளொட்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேசக் கிளைகளின் மாநாடு இம்மாதம் 30ம் 31ம் திகதிகளில் ஜெர்மனியின் ஸ்ரூட்காட் நகரில் நடைபெறவுள்ளது. இதன்போது கழகத்தின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

இம்மாநாட்டில் புளொட்டின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த அமைப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

முதல்நாள் நிகழ்வுகளாக மௌன அஞ்சலி, வரவேற்புரை, கிளைப் பொறுப்பாளர்களின் உரை என்பவற்றைத் தொடர்ந்து கழகத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டுக் கிளைகளின் பங்களிப்பு, அரசாங்கத்தின் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் கழகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வுகளாக தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் உதவிகள், வெளிநாட்டுக் கிளைகளின் செயற்பாடுகள், நாட்டில் கழகத்தின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

 நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்.

படிப்பனைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் 11ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரை மூன்று தினங்கள் ஒன்பது இடங்களில் அமர்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் நாள் அமர்வு ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு மக்களுக்காக புனித அந்தோனியார் தேவாலயத்திலும், வேலணை மக்களுக்காக மண்கும்பான் பிள்ளையார் ஆலய கல்யாண மண்டபத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் கரைநகர் மக்களுக்காக குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் மக்களுக்காக அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் நடைபெறும்.

இரண்டாம் நாள் அமர்வுகள் கோப்பாய் பிரதேச மக்களுக்காக நீர்வேலி கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்திலும், தெல்லிப்பழை, சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில் பிரதேச மக்களுக்காக அளவெட்டி மகாஜன சபை மண்டபத்திலும், கரவெட்டி, பருத்தித்துறை மக்களுக்காக நெல்லியடி முருகன் கோவிலிலும் நடைபெறும்.

மூன்றாம் நாள் அமர்வுகள் மருதங்கேணி மக்களுக்காக குடத்தனை தேவாலயத்திலும், சாவகச்சேரி மக்களுக்காக சாவகச்சேரி கலாசார மண்டபத்திலும் நடைபெறும். இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க இதுவரை 366 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத, சாட்சியமளிக்க விரும்பும் எவரும் முன்வந்து ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் குளத்தில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் ஒருவன் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கள் கிழமை இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனியார் கல்வி நிலையமொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இம்மாணவனை சைக்கிளில் பலாத்காரமாக பிடித்து ஏற்றிச் சென்றதாகவும், இரவாகியும் வீடு திரும்பாத அம்மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்து விட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் பின்னர் நேற்று திங்கள் கிழமை அம்மாணவன் கானகாம்பிகைக் குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் மீடகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயத்துடன், வாயிலும் மூக்கிலும் இரத்தம் சிந்திய நிலையில் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மடாவட்ட நீதவான் சிவகுமாரின் உத்தரவின் பேரில் இம்மாணவனின் சடலம் வவனியா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் நபரொருவரால் கடத்தப்பட்ட நிலையில் குளத்தில் சடலமாக மீடக்கப்பட்டதான செய்தி கிளிநொச்சி பெற்றொர் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பாரதிபுரம், கனகாம்பிகைக்குளம் பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த ‘தேசம் நெற்’ அப்பகுதி பாடசாலை அதிபர் ஒருவரிடம் கேட்ட போது இச்சமபவம் குறித்து வெளியாகியுள்ள விடயங்கள் பெற்றோர்கள் மத்தியில் வீணான பதற்றத்தையும் சந்தேகங்களையும் எற்படுத்தியுள்ளதாகவும், குறித்த மாணவன் பாடசாலை அல்லது தனியார் கல்விநிலையத்திற்கு சென்று வரும் வழியில் கனகாம்பிகைக் குளத்தில் மீன்பிடிப்பதை பொழுது போக்காக கொண்டவன் எனவும், இதன் போது அம்மாணவன் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

எனினும் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை அறுத்துச்செல்லும் கள்வர்கள்!

Gold_Chainகிளிநொச்சியில் பட்டப்பகலில் பெண்களில் கழுத்து நகைகளை அறுத்துச்செல்லும் கள்வர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் வேளையில் இவ்வாறான சம்பவம் ஒன்று கிளிநொச்சி உதயநகர் மேற்குப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

பிறபகல் ஒரு மணியளவில் உதயநகர் மேற்கிலுள்ள மக்கள் குடியிருப்பு ஒன்றின் ஒழுங்கையில் நின்றிருந்த இரு இளைஞர்கள் அவ்வழியால் வந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச்சங்கிலியை பிடித்து அறுக்க முயன்றுள்ளனர் அப்பெண் அக்கள்வர்களோடு போராடி சங்கிலியை அறுத்துக்கொண்டு செல்வதை தடுத்துள்ளார். இதனால் பெண்ணின் கழுத்தில் காயமேற்பட்டுள்ளது.

பெண்ணின் கூக்குரலைக்கேட்டு அயலவர்கள் ஓடி வருவதைக்கண்ட கள்வர்கள் சைக்கிளில் தப்பியோடி விட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே கிராமத்தில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றது.

ஒழுங்கையொன்றில் தனியாக நடந்து வந்த வயோதிபப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அவ்வீதியால் சைக்கிளில் வந்த நபரொருவர் அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். கிளிநொச்சியில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் முன்பின் அறிமுகமற்ற பலர் நடமாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ-9 பாதை திறப்பிற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம்.

Child_Protectionகுடாநாட்டில் ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின்பு அதிகளவிலான சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு 35 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கபட்டு உள்ளதாகவும், இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று திங்கள் கிழமை வரை 36 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 12 தொடக்கம் 15 வயது வரையான சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கவதாகவும், அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இவ்வாறான பெற்றோரை இழந்த சிறுவர்கள் தனிமையில் வாழ்வதாலும், பொருளாதார பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுப்பதாலும்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் பாதிக்கப்பட்ட, அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்கு பல்வேறு தரப்பினராலும் உளநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘இலங்கைத் தொழில் இல்லம்’ யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

‘இலங்கைத் தொழில் இல்லம்’ நேற்று திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் அலுவலகத்தில் தொழில் உறவுகள் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினி லொக்குகேயினால் இது திறந்து வைக்கபட்டது.

இந்த நிறுவனம் தனியார் துறை உட்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்ள உதவுதல், தொழில் வாயப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நோமுகப் பரீடசைகளுக்கு தயார் படுத்தல், சுயவிபரக்கோவையைத் தயாரித்தல், தொழில் பயிற்சிகளை வழங்குதல், தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கல்வித்துறைகளைத் தெரிவு செய்தல் முதலான வழிகாட்டல்களை வழங்கும். இலங்கையிலுள்ள பதினெட்டு மாவட்டங்களில் இந்நிறுவனம் எற்கனவே செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிலும் இந்நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் இரண்டாவது கிளையாக நேற்று யாழ்ப்பாணத்தில் இது திறக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நேற்றுத் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தொழில் இல்லக் கிளையில் 250 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புகளுக்காக பதிவுகளை மேற்கொண்டனர்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

Wells_Lack_of_Waterமுல்லைத்தீவு,  முள்ளியவளை பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பிரதேசங்களில் கடும் வரட்சி காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதோடு, பல கிணறுகள் மாசடைந்து துப்புரவாக்கப்படாமலும் காணப்படுகின்றன. இதனால் அங்கு மீள் குடியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் குறிப்பிட்ட சில கிணறுகளையே பயன்படுத்தி வருகிறனர் குடிநீரை இக்கிணறுகளில் எடுத்து வர நீண்ட தூரத்திற்கு செல்ல வேண்டிய சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடிநீரை பணம்கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவதையும் காணமுடிகிறது.

இதேபோல் கிளிநொச்சிப் பகுதிகளிலும் பல கிணறுகள் துப்புரவாக்கப்படாமல் உள்ளதால் மக்கள் குடிநீருக்கு வேறு இடங்களில் உள்ள கிணறுகளைத் தேடிச் செல்ல வேண்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வன்னியில் உள்ள பொதுமக்களின் கிணறுகள் பல மண் கிணறுகளாக காணப்படுவதால் அவை மாசடைந்து காணப்படுகின்றன. பொதுமக்களின் காணிகளில் நீர் இறைத்துக் கொடுக்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கட்டுக்கிணறுகளை மட்டுமே இறைத்துகொடுப்பதாகவும் மண்கிணறுகளை இறைத்துக் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். குடாக்கடலில் தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களால் தொல்லை.

Net_Fishingயாழ். குடாக்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் சிலர் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வருவதால் சிறுவலைகள் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாங்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

தடை செய்யப்பட்டுள்ள இழுவை டித்தொழில், தங்கூசி வலைத்தொழில், ‘டைனமைற்’ மூலம் மீன்பிடித்தல் ஆகியவற்றில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக குருநகர், பாசையூர், நாவாந்துறை, சாவல்கட்டு, பகுதி மீனவர்கள் இதனால் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த 19ம் திகதி மண்கும்பான கடற்பகுதியில் ‘டைனமைற்’ பயனபடுத்தி மீன்பிடித்த குருநகர் மீனவர்கள் சிலர் அவ்வழியில் ரோந்து வந்த கடற்படையினரல் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கையில் கைத்தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம்கார்டு’களை மட்டுமே வைத்திருக்க முடியும்.

Mobile_Simஇலங்கையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவர் ஐந்து ‘சிம் கார்டு’களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்கிற நடைமுறை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அமுலுக்ககு வரவுள்ளதாக தொலைபேசித் தொடர்புகள் சீராக்கல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்லிட்ட தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு விதிகளை கருத்தில் கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ‘சிம்’களை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் டிசெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் தாம் பயன்படுத்தும் ‘சிம்’களை தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளவேண்டும் எனவும் அவ்வாறு பதிவு கொள்ளப்படாதவர்களின் ‘சிம்’கள் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமிலுள்ள 23 பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ். தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பெண்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இப்பெண்களை அவர்களின் பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை தெல்லிப்பழையில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவினால் இவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களின் விடுதலைக்கான சான்றிதழ்களை அமைச்சர் டியூ குணசேகர வழங்கினார். தடுத்து வைக்கப்பட்ட பெண்கள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டவர்களாவர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டியூ குணசேகரா வவுனியா ஓமந்தை புனர்வாழ்வு நிலையத்தின் புனர்வாழ்வு முகாம் மூடப்படுவதாக தெரிவித்தார். அந்த முகாமில் இருப்பவர்களில் சுமார் 150 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்படுவதாகவும், ஏனையவர்கள் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மற்றும், புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா, அமைச்சின் செயலாளர் திசநாயக்க, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுகந்த ரணசிங்க, புனர்வாழ்வு அதிகார சபைத் தலைவர் சமரசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் மற்றும் புனர்வாழ்வு நிலைய அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக யாழ். அரச செயலகத்திற்கு நேற்று அமைச்சர் டியூ குணசேகர வருகை தந்த போது அங்கு காத்திருந்த தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெற்றோர், உறவினர், காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர் என்போர் அமைச்சரை சந்தித்து கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் உறவினர்களை விடுதலைசெய்யுமாறும், காணாமல் போனோர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரியே இவர்கள் அமைச்சரிடம் அழுது மன்றாடினர். பொதுமக்கள் கொண்டு வந்திருந்த மனுக்களை அமைச்சர் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதேவேளை, தடுப்பு முகாமில் உள்ளவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் குறித்த விபரங்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றை அமைச்சர் டியூ குணசேகர நேற்று யாழ். கேட்போர் கூடத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இன்று சனிக்கிழமை முதல் இந்த இணையத்தளத்தில் இவ்விபரங்களைப் பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.bcgrsrilanka.com என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் சுங்க அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

யாழ்.குடாநாட்டில் 30 வருடங்களுக்கு முன்னர் இயங்கிய சுங்க அலுவலகங்களை மீண்டும், இயங்கச்செய்ய சுங்கத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் ஐந்து இடங்களில் சுங்க அலுவலகங்கள் இயங்கியதாகவும், அவற்றையே மீண்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சுங்கத்துறைப் பணிப்பாளர் நாயகம் திருமதி சுதர்மா கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை ஆகிய இடங்களிலேயே முன்னர் சுங்க அலுவலகங்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திற்கான சுங்க அலுவலகம் ஜனவரி மாதத்தில்
யாழ்.தபாலகக்கட்டடத்தில் திறந்து வைக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பின்னர் காங்கேசன்துறை அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள சுங்கப்பணிப்பளர் நாயகம் யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்குப் பின்னர் சுங்க
அலுவலகம் திறக்கப்படுவதற்கான முதலாவது சந்தர்ப்பம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டில் மக்களது வாழ்க்கை சுமுக நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்துடனேயே சுங்க அலுவலகங்களை மீண்டும் நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.