யாழ்.குடாநாட்டில் 30 வருடங்களுக்கு முன்னர் இயங்கிய சுங்க அலுவலகங்களை மீண்டும், இயங்கச்செய்ய சுங்கத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் ஐந்து இடங்களில் சுங்க அலுவலகங்கள் இயங்கியதாகவும், அவற்றையே மீண்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சுங்கத்துறைப் பணிப்பாளர் நாயகம் திருமதி சுதர்மா கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை ஆகிய இடங்களிலேயே முன்னர் சுங்க அலுவலகங்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திற்கான சுங்க அலுவலகம் ஜனவரி மாதத்தில்
யாழ்.தபாலகக்கட்டடத்தில் திறந்து வைக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பின்னர் காங்கேசன்துறை அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள சுங்கப்பணிப்பளர் நாயகம் யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்குப் பின்னர் சுங்க
அலுவலகம் திறக்கப்படுவதற்கான முதலாவது சந்தர்ப்பம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். குடாநாட்டில் மக்களது வாழ்க்கை சுமுக நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்துடனேயே சுங்க அலுவலகங்களை மீண்டும் நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.