கிளிநொச்சியில் ஒன்பது வயது மாணவன் ஒருவன் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கள் கிழமை இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் தனியார் கல்வி நிலையமொன்றிற்கு சென்று திரும்பும் வழியில் 45 வயது மதிக்கத்தக்க நபரொருவர் இம்மாணவனை சைக்கிளில் பலாத்காரமாக பிடித்து ஏற்றிச் சென்றதாகவும், இரவாகியும் வீடு திரும்பாத அம்மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்து விட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் பின்னர் நேற்று திங்கள் கிழமை அம்மாணவன் கானகாம்பிகைக் குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் மீடகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயத்துடன், வாயிலும் மூக்கிலும் இரத்தம் சிந்திய நிலையில் சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மடாவட்ட நீதவான் சிவகுமாரின் உத்தரவின் பேரில் இம்மாணவனின் சடலம் வவனியா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் நபரொருவரால் கடத்தப்பட்ட நிலையில் குளத்தில் சடலமாக மீடக்கப்பட்டதான செய்தி கிளிநொச்சி பெற்றொர் மத்தியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பாரதிபுரம், கனகாம்பிகைக்குளம் பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த ‘தேசம் நெற்’ அப்பகுதி பாடசாலை அதிபர் ஒருவரிடம் கேட்ட போது இச்சமபவம் குறித்து வெளியாகியுள்ள விடயங்கள் பெற்றோர்கள் மத்தியில் வீணான பதற்றத்தையும் சந்தேகங்களையும் எற்படுத்தியுள்ளதாகவும், குறித்த மாணவன் பாடசாலை அல்லது தனியார் கல்விநிலையத்திற்கு சென்று வரும் வழியில் கனகாம்பிகைக் குளத்தில் மீன்பிடிப்பதை பொழுது போக்காக கொண்டவன் எனவும், இதன் போது அம்மாணவன் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
எனினும் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.