சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

கொழும்பின் கொள்கை இலக்குக்கு ஆதரவாகவே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி

imf.jpgஇலங்கையின் வட பகுதியில் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் சண்டையை நிறுத்துமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இருந்து இரு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ள அதேசமயம், இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடன் தொகைக்கு எத்தகைய கட்டுப்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைக்குமென கடந்த வியாழக்கிழமை ஐ.நா.விலுள்ள இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் டேவிட் ஹோவ்லே; கடன் தொகையானது “அரசாங்கத்தின் கொள்கை இலக்குகளுக்கு’ பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ குறிப்பிட்டுள்ளார்.

நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது. விசேடமாக வட இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்டது.

கடன் வழங்குவது தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் நிபந்தனைகள் எத்தகையதாக அமையுமென பொறுத்திருந்து பார்க்குமாறும் பேச்சாளர் ஹோவ்லே பதிலளித்திருக்கிறார். வெள்ளை மாளிகையில் மார்ச் 12 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சந்தித்திருந்தார். அச்சமயம் வெள்ளை மாளிகைக்கு சில கட்டிடங்களுக்கு அப்பாலிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தின் அடித்தளத்திலுள்ள மண்டபத்தில் சர்வதேச நாணய நிதியம் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தாண்டி இன்னர்சிற்றி பிரஸ் அங்கு சென்றபோது ஹோவ்லே செய்தியாளர் மாநாட்டை முடித்துவைக்கும் தறுவாயில் இருந்தார். இலங்கை தொடர்பான கேள்வியை கடைசியாகவே அவர் எடுத்தார். அன்றைய தினம் வேலைப்பளு கூடிய நாள் என்று சிலர் கூறினர். இணையத்தளத்தினூடாகவே சில கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பற்றாக்குறையானது சுமார் 1/2 மணிநேர கேள்விகள், பதில்களை ஏப்பம் விட்டிருப்பதாக தென்படுகிறது.

இது இவ்வாறிருக்க ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வாஷிங்டன் பயணத்தின் போது, இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் பேசப்படவில்லை. இதனை ஐ.நா. அமைதி காக்கும் படைத் தலைவர் அலெய்ன் லீ ரோய் இன்னர்சிற்றி பிரஸுக்கு புதன்கிழமை தெரிவித்திருந்தார். பான் கீ மூன் இருதடவை சண்டையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன் இலங்கையின் மனிதாபிமான நெருக்கடிக்கு அவர் முக்கியத்துவம் அளித்திருப்பதாக அவரின் அலுவலக பேச்சாளர் கூறியிருந்தார். இத்தகைய நிலையிலேயே அமெரிக்க விஜயத்தின்போது பான் கீ மூன் இலங்கை தொடர்பாக ஒரு வார்த்தை தானும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இது இவ்வாறிருக்க இலங்கைக்கான கடனுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள் என்று சர்வதேச நாணய நிதியப் பேச்சாளர் கூறியிருக்கிறார்.

இலங்கை ரூபாவுக்கு (பெறுமதியை தக்கவைக்க) ஆதரவாக இக்கடன் தொகையை பயன்படுத்தக்கூடாது என்பது நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், மனிதப் பேரவலம் தொடர்பாக அழைப்பு விடுக்கப்படும் என்று ஐ.நா. தரப்பிலுள்ளவர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் உருவாக்கியுள்ள முகாம்கள் தொடர்பாக அந்த நிபந்தனைகள் இருக்குமென சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதனை சர்வதேச நாணய நிதியத்தின் ராடாரில் காணவில்லையெனவும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

kelaniya-sri-lanka.jpgகளனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்க விரும்புவதாகவும் இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.  மாணவர்கள் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்த பின்னரே அதனை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

அண்மையில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து பல்கலைக்கழக மண்டபம், விஞ்ஞான கூடங்கள் போன்ற பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு 7 இலட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனைத் திருத்துவதற்கு காலம் எடுப்பது மீண்டும் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கமுடியாதிருப்பதற்கு ஒரு காரணமாகும்.

இந்த சேதங்களை ஏற்படுத்தியவர்களிடம் இருந்து இந்த நஷ்டத்தைப் பெறுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. இச்சம்பவத்தில் மாணவர்கள் நடந்து கொண்டமை, அவர்களின் நடத்தைகள் குறித்து பெற்றோருக்கு தெளிவு படுத்தியுள்ளோம். மாணவர்களின் இந்தப் பிரச்சினைக்கு பெற்றோர்களே பொறுப்பு எனவும் கூறியுள்ளோம்.

மாணவர்களிடையேயான மோதல்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை எனவும் துணைவேந்தர் கூறினார். எனவே மாணவர்கள் மீண்டும் மோதல்களில் ஈடுபடாதிருக்கவேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.பி.எல்: புதிய அட்டவணை கோருகிறது இந்திய அரசு

i-p-l-logo.jpgஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய அட்டவணையை தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி, மே 24ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன.

இதையடுத்து, அட்டவணையை மாற்றுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, ஐபிஎல் நிர்வாகம் புதிய அட்டவணையை கடந்த 7ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

ஆனால், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், டெல்லி உட்பட பல்வேறு மாநில அரசுகள், போட்டி அட்டவணைகள் தொடர்பாக ஆட்சேபம் வெளியிட்டன. தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்றும், கூடுதல் படையினர் தேவை என்றும் தெரிவித்தன. சில மாநில அரசுகள், ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன. ஒரு சில மாநிலங்கள், தேர்தல் முடிந்த பிறகுதான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன.

ஆகவே, அதன் பிறகு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நிர்வாகம் இந்த மாதம் 7ஆம் தேதி சமர்ப்பித்த அட்டவணைப்படி போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் தெரிவித்துள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு, புதிய அட்டவணையைத் தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தில் முனைப்புக்காட்டுமளவுக்கு அரசு அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை -லியம் பொக்ஸிடம் ஹக்கீம் தெரிவிப்பு

rauff_hakeem.jpgயுத்தத்தில் முனைப்புக்காட்டுமளவுக்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லையென பிரிட்டிஷ் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸிடம் சுட்டிக்காட்டியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இதன் காரணமாக சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் அழைப்பின் மீது இங்கு வந்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ், நேற்று முன்தினம் மாலை ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவைச் சந்தித்தவேளையிலேயே ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

ரவூப் ஹக்கீமுடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகுதாவூத், அரசியல் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் குழுவிடம் கேட்டறிந்து கொண்டார். நாட்டின் தற்போதைய அரசியல் கள நிலைமைகளை லியம் பொக்ஸிடம் விளக்கிக்கூறியதாக தெரிவித்த ரவூப் ஹக்கீம், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த அரசினால் கவனத்தில்கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.

அரசாங்கம் யுத்தத்தின் மீதே கூடுதல் முனைப்புக்காட்டுவதாகவும் தென்னிலங்கையில் யுத்தவெற்றியை காட்டி பெரும்பான்மை சமூகத்தை தவறானபாதையில் இட்டுச்செல்ல முனைவதாகவும் குறிப்பிட்ட அவர், அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதில் எந்தவிதமான அக்கறையையும் காட்டமுற்படவில்லையெனவும் அரசுக்கு அரசியல் தீர்வில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக்கூறியுள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாமல் மீளக் குடியமர்த்துவதில் அரசு கவனம் செலுத்துவதாகவும் இதன் பின்விளைவுகள் குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் இதற்கு உரிய தீர்வைக் காண்பதில் அரசு கவனம் செலுத்தத் தவறிவருவதாகவும் ரவூப் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

போர்நிறுத்த உடன்படிக்கையை நியாயப்படுத்துகிறார் ரணில்

ranil.jpgபோர் நிறுத்த உடன்படிக்கையின் மூலமாக வடக்கையும் கிழக்கையும் பிரபாகரனுக்கு தாரைவார்த்துக் கொடுத்திருந்தால் 2005 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி இருப்பேன் எனத் தெரிவித்திருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அன்று போர்நிறுத்த உடன்படிக்கையினூடாக நாட்டின் இறைமையை அரசாங்கத்தால் பாதுகாக்க முடிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரபாகரனை தனிநாட்டுக்கோரிக்கையிலிருந்து கீழிறங்கச் செய்ய முடிந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கெஸ்பாவையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்கிரமசிங்க கூறியதாவது;

நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் பொறுப்பு எமது படைத்தரப்பினருக்கு மட்டுமே உரித்தானது என்பதை அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஏற்றுக் கொண்டார். அதனூடாக வடக்கு, கிழக்கு கடற் பிரதேசத்தையும் முழு நாட்டினதும் அதிகாரத்தை எமது அரசாங்கத்தால் பாதுகாத்து உறுதி செய்ய முடிந்தது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் மூலம் ஒருநாடு ஒரு அரசாங்கம் என்பதை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு அன்று முதல் தனிநாடு என்ற கோட்பாடு கைவிடப்பட்டது.

விடுதலைப்புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது உலகின் ஏனையநாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவே காணமுடிகிறது. உலகின் ஏனைய நாடுகள் தீவிரவாத அமைப்புகளுடன் செய்து கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் அரசுகளும்தீவிரவாத அமைப்புகளும் தத்தமது பிரதேசங்களை தற்காலிகமாக வேறுபடுத்திக் கொண்டன. இங்கு அவ்வாறு நடக்கவில்லை, முழு ஆட்புல ஒருமைப்பாட்டையும் அரசிடமே உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவுக் கடல் எல்லையின் உரிமை தமது அமைப்பிடமே இருப்பதாகக் கூறி வந்த விடுதலைப்புலிகள் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அந்த உரிமை அரசுக்கே உரியது என்பதை ஏற்றுக்கொண்டனர்.

வடக்கு, கிழக்கு கடல் எல்லையின் உரிமையை போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நான் தாரை வார்த்துக் கொடுத்ததாகக் கூறி இன்றைய அரசிலுள்ளவர்களும் சில தீய சக்திகளும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றனர். அது உண்மையாக இருந்தால் விடுதலைப்புலிகள் 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களை வாக்களிக்க விட்டு என்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் புலிகள் அதனைச் செய்யவில்லையே. என்னை எப்படியும் தோற்கடிக்கவேண்டு மென்பதற்காகவே அந்த தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுத்து நிறுத்தி என்னைத் தோற்கடித்து மகிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்தனர்.

அன்று நாம் போர்நிறுத்த உடன்படிக்கையை செய்ததன் காரணமாகவே நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடிந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை தவறானது-மஹிந்த சமரசிங்க

mahinda-samara-sinha.jpgஇலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் நேற்று விடுக்கப்பட்ட அறிக்கை தவறானது என இலங்கை மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது..

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் அண்மைக்காலமாக 2800 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் 7000 பேர் வரை காயமடைந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டி இருந்தார். இந்த கூற்று தவறானது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் எமது நாட்டு தூதுவருடன் கலந்தாலோசித்து இருக்கலாம்.  கடந்த மாதம் ஜெனிவாவில் இடம்பெற்ற கூட்டத்தொடருக்கு நான் கலந்து கொண்ட சென்ற வேளையில் ஐ. நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கமளித்தேன் அப்பொழுது கூட அவர் இது தொடர்பில் எவ்வித கலந்தாலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை. இது ஒரு தலைபட்சமாக விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கை ஆகும்.

இந்த அறிக்கையை வெளியிடமுன் இலங்கை மனித உரிமை தொடர்பான இலங்கைக்கான பிரதிநிதி ஒருவரும் உள்ளார் அவராவது இவ்விடயம் தொடர்பில் எம்முடன் கலந்தாலோசித்து தகவல்களை பெற்றிருக்கலாம். கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக 2224 நோயாளர்கள் வன்னியிலிருந்து திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அவர்களுக்கு திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது அவர்களுடன் 971 பொது மக்களும் அழைத்து செல்லப்பட்டார்கள். இதை அவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.சிறுவர்களை விடுதலைப்புலிகள் படையில் சேர்த்துள்ளனர் இது சர்வதேச யுனிசெப் நிறுவனமும் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்தது.

மேலும் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட வலையத்தினுள் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் ஏதேனும் நடைபெறவில்லை என சர்வதேசத்த்திற்கு இராணுவ தளபதி,பாதுகாப்பு செயலாளர் மற்றும் அரசினால் உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பயங்கரவாதத்திலிருந்து சிலியன்களை பாதுக்காப்பதே எமது நோக்கம் அதற்காகவே நாம் பயங்கவாதத்திற்கு எதிராக படை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். சிலியன்களை கொல்வது எமது நோக்கம் அல்ல எனவே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையை நாம் மறுக்கிறோம் என இலங்கைக்கான மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் ஈரானுக்கு ஏற்றுமதி- அமைச்சர் டி.எம்.ஜயரத்ன தகவல்

dmjayarathna.jpgஇலங்கையின் தேயிலை மற்றும் இறப்பருக்கு ஈரானில் சந்தை வாய்ப்புக் கிட்டவுள்ளதாகவும் விரைவில் அதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப் படவுள்ளதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் மஹ்மூத் றஹீம் கோஜியை அண்மையில் அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கையின் தேயிலை உற்பத்தி தெடர்பாக ஆராயவும் தேயிலை உற்பத்தியில் பங்கெடுத்துக்கொண்டு அவற்றை கொள்வனவு செய்யவும் ஈரான் விரும்புவதாகவும்  அந்நாட்டின் தூதுவர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்ப ஈரானிய வர்த்தகப் பிரமுகர்கள் குழு ஒன்றுடன் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றும் விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான விழுமியங்களுக்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும்

navanethem.jpgவன்னியில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெறுகின்ற மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன என்பதுடன் மனிதாபிமான விழுமியங்களுக்கு இருதரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வன்னியில் இருதரப்பிற்கும் இடையிலான மோதல்களின் போது போர் குற்றச் செயல்கள் நடைபெற்று வருகின்றன என்பதனால் தொடர்புடைய தரப்பினர் போர்நிறுத்தமொன்றை அமுல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அப்பாவி பொதுமக்களை கருத்திற்கொண்டு போர்நிறுத்தமொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பிரதேசங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தாம் விரும்பிய இடத்திற்குச் செல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னி மக்களுக்கு அனுமதியளிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 2700 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவுக்கு இலங்கை குறித்து நாளாந்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தலைவராக டி.எஸ்.டி. சில்வா தெரிவு

sl_cricket.jpgஇலங்கை கிரிக்கட் நிறுவன இடைக்கால நிருவாக சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடைக்கால நிருவாக சபையின் புதிய தலைவராக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான டி.எஸ்.டி. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால நிருவாக சபையின் செயலாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர புதிய இடைக்கால நிருவாக சபையின் உறுப்பினர்களாக சிதத் வெத்தமுனி, சுஜீவ ராஜபக்ஷ, லலித் விக்ரமசிங்க, ரனில் அபேனாயக்க மற்றும் முன்னாள் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் வைத்து வழங்கினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சனத்தொகை 2012இல் 700 கோடியை எட்டிவிடும்

world-map.jpg2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியாகிவிடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும்.

2010 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் நிருபர்களுக்கு தெரிவித்துள்ளார்.

2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.