வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. வடக்கில் கட்டம் கட்டமாகத் தேர்தலை நடத்த அரசாங்கம் எண்ணுகிறது. இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்கக் கூடியவாறான ஜனநாயக சூழலையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் எம்.பீ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் எம்.பீ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதேபோன்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்வோர் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்த உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் விவாதித்து நிறைவேற்றும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இது சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, சிவிலியன்களை விடுவிப்பதற்கு புலிகள் இயக்கத்திற்கு அரசாங்கம் 24 மணித்தியாலத்தை வழங்கியிருக்கின்றது. அதுபோல் இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன்.
மேலும், முஸ்லிம் பிரதேசங்களை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. புல்மோட்டை ஜின்னா நகர் பகுதிகளில் முஸ்லிம் பெயர் கொண்ட கிராமங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இது மேலும் நிலைமையைச் சிக்கலாக்கும். தயவு செய்து இதனைச் செய்யாதீர்கள்.’