சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன். – ரவூப் ஹக்கீம்

sri-lanka-parliament.jpgவடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. வடக்கில் கட்டம் கட்டமாகத் தேர்தலை நடத்த அரசாங்கம் எண்ணுகிறது. இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். ஆனால் அதற்கு முன்னதாக, தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் பங்கெடுக்கக் கூடியவாறான ஜனநாயக சூழலையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் எம்.பீ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம், நாட்டைக் கட்டியெழுப்புதல், வரி திருத்தச் சட்டம், உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழான பிரேரணை, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றின் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் எம்.பீ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேபோன்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்வோர் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்த உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் விவாதித்து நிறைவேற்றும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இது சிறுபான்மைக் கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, சிவிலியன்களை விடுவிப்பதற்கு புலிகள் இயக்கத்திற்கு அரசாங்கம் 24 மணித்தியாலத்தை வழங்கியிருக்கின்றது. அதுபோல் இந்தச் சட்டமூலத்தை வாபஸ்பெறுவதற்கு நான் அரசாங்கத்திற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குகின்றேன்.

மேலும், முஸ்லிம் பிரதேசங்களை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. புல்மோட்டை ஜின்னா நகர் பகுதிகளில் முஸ்லிம் பெயர் கொண்ட கிராமங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இது மேலும் நிலைமையைச் சிக்கலாக்கும். தயவு செய்து இதனைச் செய்யாதீர்கள்.’

பொருட்களின் வரி நீக்கத்தால் அரசுக்கு 999 மில். ரூபா நட்டம்

தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரியை 3% ஆக அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படாதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு வரிகளை நீக்கியதாலும், மட்டுப்படுத்தியதாலும் அரசாங்கத்திற்கு 9991 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகை ஒருவருடத்திற்கு சமுர்த்தி நிவாரணமளிக்க போதுமானதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்ட மூலம் அதிகார சபை (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பொது மக்களுக்குச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தேசிய வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இறக்குமதி வரி 25% அறவிடப்பட்டதால் 222 மில்லியன் வருவாய் இருந்தது. ஆனால், தற்போது தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், அரசாங்கத்திற்கு பல்வேறு விதமான செலவுகள் உள்ளன. இன்று (நேற்று 21) முற்பகல் 11 மணிவரை பாதுகாப்பு வலயத்திலிருந்து 39042 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு நிவாரணமளிக்க வேண்டும். இன்று சிகரட் மூலம் கிடைக்கும் வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இழக்கப்பட்டவற்றை ஈடு செய்து தேசத்தைக் கட்டியெழுப்பு முகமாகவே ஒரு வீதமாக இருந்த வரியை 3%ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் எந்தவித தாக்கமும் ஏற்படாது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

படையினரால் மீட்கப்படும் மக்களை தங்கவைக்கும் ஏற்பாடுகள் பூர்த்தி

puthu.jpgபாது காப்புப் படையினரால் தற்போது மீட்கப்பட்டு வரும் பெருந்தொகையான பொது மக்களை தங்க வைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள அதேசமயம், மருத்துவ நிபுணர்கள், மின்சார சபை அதிகாரிகள் அடங்கிய இரண்டு விசேட குழுக்கள் நேற்று உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 இதற்கு மேலதிகமாக வந்துள்ள மக்களின் நிலைமைகளை விசேடமாக அவதானிக்கவென ஜனாதிபதி செயலக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினமும், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று மற்றுமொரு குழுவுடன் சென்றுள்ளதுடன் இன்று இன்னுமொரு குழு செல்லவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொள்ளுப்பிட்டியில் உள்ள அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

மீட்டெடுக்கப்பட்ட மக்களை நிவாரண கிராமங்களுக்கு அனுப்பி வைக்கவென மேலதிகமாக 154 பஸ் வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 58 ஆயிரம் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதுடன் 6700 கூடாரங்களும் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அருணாச்சலம், கதிர்காமர், வலயம் – 01 ஆகிய மூன்று நிவாரணக் கிராமங்களிலும், தாண்டிக்குளம், புதுக்குளம், ஓமந்தை, ஆண்டி புளியங்குளம் மற்றும் முதலியார் குளம் ஆகிய ஐந்து பாடசாலைகளிலும் இவர்களை தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 30 ஆயிரத்திற்கும், 40 ஆயிரத்திற்கும் இடைப்பட்ட மக்களே எஞ்சியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எதிர்காலத்தில் வருகைதரவுள்ள மக்களையும் எந்த பாதிப்புக்களுமின்றி தங்க வைக்கவென ஆயிரம் ஏக்கர் காணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரயான்குளத்தில் – 600 ஏக்கர், மெனிக்பாம் – செட்டிக்குளம் பகுதிகளில் – 200 ஏக்கர், மதவாச்சி – செட்டிக்குளம் பகுதிகளில் 200 ஏக்கர் காணிகள் தற்பொழுது சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினால் 26,619 வீடுகள் சேதம்

போர்ச்சூழல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 26,619 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே. ஜெகநாதன் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 4,387 வீடுகளும், வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 7,777 வீடுகளும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 6,591 வீடுகளும், வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 7,864 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இவற்றில் இந் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 16,884 வீடுகள் முழுமையாகவும், 9,735 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் சேதமடைந்த வீடுகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

imf.jpgதற் போதைய உலக நிதிநெருக்கடியை சமாளித்து, சர்வதேச நிதிக்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு உலக நாடுகள் அனைத் தும் மேலதிக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, ஐ எம் எப் எனப்படும் சர்வதேச நாணயநிதியம் கோரியிருக்கிறது.

நிதி நிலைமையில் சிறிது முன்னேற்றம் காணப்படுவதாகவும், நிதி நிலைமை தொடர்பான நம்பிக்கை அதிகரிக்கத்துவங்கியிருப்பதாகவும், ஐஎம்எப் அமைப்பின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம் இதுவரை உலகநாடுகள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தனித்தனியான சிறு நடவடிக்கை களாகவும், எதிர்வினைகளாகவும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் சிக்கலுக்குள்ளான நிதிச்சுமைகள் குறித்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி, அவற்றின் மதிப்பு நான்கு டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிதி நெருக்கடி காரணமாக சில நிறுவனங்கள் மூடப்படவேண்டியோ அல்லது வேறுநிறுவனங்கள் அவற்றை தம்வசப்படுத்திக் கொள்ளவேண்டிய நிலையோ உருவாகியிருப்பதாக்வும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:வைத்திய நிபுணரின் கொலையைக் கண்டித்து கடைகள் பூட்டு

வவுனியா கற்குழி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் முன்னால் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்ட பெண் நோயியல் வைத்திய நிபுணரின் கொலையைக் கண்டித்தும், அவரது இறப்புக்கு அனுதாபம் தெரிவித்தும் வவுனியாவில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கறுப்பு வெள்ளை கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்துடன் கடைவீதியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பொலிஸ், இராணுவ தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சோதனை நடவடிக்கைகளும் சில இடங்களில் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளத்தி்ல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் மொகமட் சுல்தான் மீரா மொகிதீனின் (52) உடலுக்குப் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர், வைத்தியசாலை ஊழியர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தினால் பல்வேறு அபிவிருத்திகளுக்கு நிதிஒதுக்கீடு

muththu-sivalingam.jpgசாமிமலை நகருக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு பெருந்தோட்ட கட்டமைப்பு பிரதியமைச்சரும், இ.தொ.கா தலைவருமான முத்து சிவலிங்கம் 55 இலட்சத்து 153 ரூபாயை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளார்.

நீர் விநியோகத் திட்டத்தை வெகு விரைவில் திறந்து வைக்கவிருக்கிறார். கெளரவில, பார்குரோ, மின்சிங்லேன் ஆகிய தோட்டங் களின் வீடமைப்புத் திட்டத்தையும் வெகுவிரைவில் திறக்கவிருக்கிறார். சாமிமலை கொழும்புத் தோட்டம், ஸ்டொக்கம் ஆகிய தோட்டங்களுக்கு மின்சார விநியோ கத்திற்கு 2 இலட்சத்து 97 ஆயிரத்து 900 ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்.

கடவளை தமிழ் வித்தியாலய கட்டிடங்களுக்கு 69 இலட்சத்து 24 ஆயிரத்து 64 ரூபாய் ஒதுக்கியுள்ளதோடு திறப்பு விழாவும் வெகு விரைவில் நடைபெறும். பின்னோயா, கீழ்ப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தின் மின்சாரத்திற்கு 11 இலட்சத்து 13 ஆயிரத்து 900 ரூபா யையும், சென்ன தமிழ் வித்தியால கட்டிடத் திறப்பு விழாவிற்கும் 93 இலட்சத்து 52 ஆயிரத்து 155 ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்.

மஸ்கெலியா பகுதிக்கு பிலரத்தோல் டிவிஷனின் மின்சாரமும், மின்சார தூண்களுக்கும் 34 இலட்சத்து 35 ஆயிரத்து 900 ரூபாயையும், டங்கல்ட் தோட்டத்திற்கு மின்சாரம் பெறவும், செலவீனத்திற்கு 72 இலட்சத்து 48 ஆயிரத்து இருநூறு ரூபாயையும், கிளன்டில் மஸ்கெலியா டிவிசன் நீர் விநியோகத்திற்கு 55 இலட்சத்து நூற்றி ஐம்பத்திமூன்று ரூபாயையும், மஸ்கெலியா குயின்ஸ் லன்ட் டிவிசன், பிரவுன்சிக் கட்டிட நிர்மாணத்திற்கு 41 இலட்சத்து 4 ஆயிரத்து முன்னூற்றி தொண்ணூற்றி ஏழு ரூபாயையும் ஒதுக்கியுள்ளார்

பணமோசடியில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல்

பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் நெருக்கமான நண்பர் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பல கோடி ரூபா பணத்தை பொது மக்களிடமிருந்து மோசடியாகப் பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரையும் இன்று 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ நித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் முன்னாள் இராணுவ வீரர் எச்.பீ. நாரத லக்ஷ்மன் வனராஜ, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கருணாரத்ன பண்டார மற்றும் நெலும் அதிகாரி ஆகியோர்களாவர்.

மினுவாங்கொட பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இம்மூவரும் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் அவரின் உதவியுடன் இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகவும் கூறி நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ளவர்களிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளனர் என கல்கிரியாகம பொலிஸார் கல்கிரியாகம நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

பிரபாகரன் மீது தனிப்பட்ட வெறுப்பில்லை: பிரியங்கா

23-priyanka.jpgராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அரசியல் ரீதியாக தண்டிக்க வேண்டும். அதேசமயம், அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பிரியங்கா காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

சிஎன்என்: மக்கள் உங்களை இந்திரா காந்தியாக பார்க்கிறார்கள்..

பிரியங்கா: மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

சிஎன்என்: நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள்..

பிரியங்கா: எப்போதும் பிரியங்காவாகவே இருக்க விரும்புகிறேன்.

சிஎன்என்: உங்களுக்குள் உங்கள் தந்தை ராஜீவ் காந்தியின் சாயல் இருப்பதாக நினைக்கிறீர்களா..

பிரியங்கா: அவர் எனது தந்தை. இந்திரா காந்தி எனது பாட்டி. அவர்களுடைய பாதிப்பு எனக்குள் இருக்கிறது. இருப்பினும் அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு தனியான மனுஷியாக காணப்பட விரும்புகிறேன்.

சிஎன்என்:உங்களது குருவாக யாரை நினைக்கிறீர்கள்.

பிரியங்கா: எனது குடும்பத்தில், எனது தாயார் உள்பட மூன்று காந்தியுமே எனக்கு குருக்கள்தான்.

சிஎன்என்: உங்களது குடும்பத்தினரைத் தவிர வேறு யாரை உதாரண புருஷராக நினைக்கிறீர்கள்..

பிரியங்கா: மகாத்மா காந்தி.

சிஎன்என்: அதனால்தான் நளினியை மன்னிக்கும் மனப்பக்குவம் கிடைத்ததா..

பிரியங்கா: நளினியும், நானும் மனிதர்கள். மனித குலத்தின் இயல்பே, ஒருவரை ஒருவர் மன்னிப்பதுதான்.

சிஎன்என்: பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

பிரியங்கா: இது ஒரு தனிப்பட்ட, அரசியல் பிரச்சினை. அதை நான் அரசியல் ரீதியாக அனுக விரும்புகிறேன். இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த கோணத்தில் பார்த்தால், பிரபாகரனை மன்னிக்க முடியாது. ஆனால் மனிதாபிமான கோணத்தில் பார்த்தால், அவர் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்புணர்ச்சியும் இல்லை. அவருக்கு எதிராக கோபமோ, துவேஷமோ இல்லை, நிச்சயமாக இல்லை.

சிஎன்என்: கருணாநிதி போன்ற காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள், பிரபாகரனுக்கு ஆதரவாக பேசியுள்ளனரே..

பிரியங்கா: தான் பேசியதை கருணாநிதி வாபஸ் பெற்று விட்டாரே..

சிஎன்என்: கருணாநிதியின் பேச்சை சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டிக்க வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளாரே..

பிரியங்கா: இது அரசியல் பிரச்சினை. அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

சிஎன்என்: ராஜீவ் அரசியலுக்கு வந்ததை சோனியா விரும்பவி்லை. சோனியா அரசியலுக்கு வந்தபோது காங்கிரஸ் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருந்தது. நீங்களும் அதேபோன்ற சூழலில்தான் அரசியலுக்கு வருவீர்களா..

பிரியங்கா: அப்படியெல்லாம் இல்லை. நான் சற்று வித்தியாசமான பெண். எனக்கு எப்போது வர வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் வருவேன் என்றார் பிரியங்கா.

விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் போர் குற்றவாளி: மன் மோகன் சிங்

manmohan1.jpgவிடுதலைப் புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என இந்திய பிரதமர் மன் மோகன் சிங் “டைம்ஸ் நவ்” தொலைகாட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலி இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் ” விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி . அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை”என தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியிந்தார்” என பிரதமர் மன் மோகன் சிங் டைம்ஸ் நவ் தொலக்காட்சிக்கு தெரிவித்திருந்தார். “பிரபாகரன் நல்ல நண்பன் ” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்திற்கே மன்மோகன் சிங் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“கருணநிதியின் கருத்து அவரது தனிப்பட கருத்தாகும். ஆனால் காங்கிரஸின் நிலைப்பாடானது விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி ” என காங்கிரஸ் கட்சி பேச்சாளர் கபில் சிபால் தெரிவித்தார்.